முனிவர் ஒருவர் தனது கடும் தவத்தின் காரணமாக பல சித்திகள் கைவரப்பெற்றார். அதனால் அவருக்கு தன்னால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற கர்வம் வந்தது. நல்ல குணங்களும் தவ வலிமையும் கொண்ட முனிவரின் கர்வத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார் இறைவன். சன்னியாசி உருவத்தில் முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்தார் இறைவன். முனிவரிடம் சுவாமி தாங்கள் செய்த தவ வலிமையால் பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன் என்றார் சன்னியாசி. சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார் முனிவர். அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது. சுவாமி தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா எனக் கேட்டார் சன்னியாசி. ஏன் முடியாது இப்போது பாருங்கள் என்று நீரை கையில் எடுத்து மந்திரித்து யானையை நோக்கி வீசினார் முனிவர். உடனே அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது. என்ன ஆச்சரியம் உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே என பாராட்டினார் சன்னியாசி. சன்னியாசியின் புகழுரைகள் சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. மீண்டும் சுவாமி இப்போது தங்களால் இறந்து போன யானையை மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா? எனக் கேட்டார் சன்னியாசி. என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள் என்று முன் போலவே நீரை கையில் எடுத்து மந்திரித்து கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார் முனிவர். யானைக்கு உயிர் வந்தது.
முனிவரிடம் சுவாமி உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ன எனக் கேட்டார் சன்னியாசி. தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்றார் முனிவர். சுவாமி தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால் தாங்கள் பெற்ற பலன் என்ன? இறைவனை கண்டீர்களா? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது? தங்களின் சித்து விளையாட்டு இறைவனை எளிதாக அடைய தங்களுக்கு உதவியக இருந்ததா? என்று கேட்டார் சன்னியாசி வடிவில் இருந்த இறைவன். இந்த சித்திகள் எதற்கும் பயன்படாது என்பதை உணர்ந்த முனிவர் கர்வம் அழிந்த நிலையில் சன்னியாசியின் கால்களில் விழுந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.
இறைவனின் அருளை பெற்ற பக்தன் இறைவனிடம் விலை மதிக்க முடியாத ஞானம் வைராக்கியம் பக்தி இவைகளை மட்டுமே கேட்டு பெற்றால் ஆனந்தமாக வாழலாம். கர்மாக்கள் விரைவாக அழிந்து இறைவனிடம் செல்லலாம். அதனை விடுத்து இறைவனே விட சித்திகளே பெரிது சித்திகள் வேண்டும் என்று அதன் பின்னால் சென்றால் எந்த பலனும் இல்லை. கர்வம் மிகுந்து மேலும் பிறவிகளே அதிகரிக்கும்.
