துணையாக இறைவன்

ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்கள். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும் அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன் இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு அவனது தந்தை ஒப்புக்கொண்டார். ரயில் நிலைய நடைமேடையில் நின்று சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூறிவிட்டு மகனே வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால் இது உனக்கானது என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் சரி என்று காகிதத்தின் மீது கவனத்தை வைக்காமல் ரயிலில் கிளம்பினான். முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும் திரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் இரவு சூழ ஆம்பித்தது. அந்நியர்கள் வருவதும் போவதுமான இருக்க மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்கினான். எதிரே அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும் சிறுவனுக்கு மேலும் பயத்தை கொடுத்தது. ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடித்தது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி மூலையில் பதுங்கிக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் எழுந்தது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை சட்டைப் பையில் காகிதம் வைத்தது நினைவுக்கு வந்தது. கையால் நடுங்கியபடியே அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்து படித்தான். அதில் பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் என்று எழுதி இருந்தது. கற்பனை செய்ய முடியாத நம்பிக்கை அவன் மனதில் துளிர்த்தது. இப்போது அவனது மனதில் பயம் காணாமல் போய் இருந்தது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து கம்பீரத்துடன் அமர்ந்தான்.

இது போலவே நம்முடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ள நம்மை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பினார். அப்போது​ நம்முடன் நம்பிக்கை ஒரு காகிதத்தில் நான் உன்னுடன் இருக்கிறேன் உன்னோடு பயணம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருக்கிறார். சொன்னது போலவே நமது இதயக் கமலத்தில் வீற்றிருந்து நமக்கு துணையாகவும் வருகின்றார்.

மனிதர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது தன்னுடன் இருக்கும் இறைவனை மறந்து விடுகிறார்கள். தன்னுடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் இது இறைவன் கொடுத்தது என்பதையும் மறந்து விடுகிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலும் தெரிந்தும் பல தவறுகளை செய்து விடுகின்றார்கள். செய்த தவறுக்கு தண்டனையாக துன்பம் என்று வரும் போது மட்டுமே இறைவனை நினைக்கிறார்கள். அந்த நினைப்பிலும் நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த துன்பம் கொடுத்தாய் இறைவா என்று நினைக்கிறார்கள். தவறு செய்யும் போது நம்முடன் இறைவன் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டால் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். தண்டனைகளும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும் போதும் நம்முடன் இருக்கும் இறைவனை நினைத்துக் கொண்டால் துன்பம் என்ற ஒன்றே வராது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.