ஒரு ஞானியிடம் சென்ற சிலர் நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்து என்னிடம் திரும்ப கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள் என்றார்.
ஞானி சொன்னது போலவே அவர்களும் செய்து திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தார்கள். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. தித்திக்கும்னு சொன்னீங்க ஆனா கசக்குதே என்றார்கள்.
ஞானி பார்த்தீர்களா பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது தவறான செயல்களையும் தீய பழக்கங்களையும் துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமலோ அல்லது இந்த தீய குணங்களை விட்டு விடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துவிட்டு அதனை கடைபிடிக்காமல் தீய குணங்களிலேயே இருந்து எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் எந்த கோயிலுக்கோ குளத்துக்கோ புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்த பயனும் வந்து விடப் போவதில்லை. மனங்களிலும் குணங்களிலும் அன்பு வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும். புனிய நீராடல் என்பது தனக்குள் இருக்கும் தீய குணங்களை நல்ல எண்ணங்களால் நீராடி நமது உள்ளத்தை புனிதப்படுத்துவது ஆகும் என்றார்.
