இராமானுஜரின் சிறு வயதில் யாதவ பிரகாசர் என்பவர் குருவாக இருந்தார். இவர் தன்னுடைய பல்லலாக்கில் ஒரு நாட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கை இராமானுஜர் உட்பட அவரது சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். யாதவ பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டின் அரசர் அவரை வரவேற்று வணங்கி தன்னுடைய மகளை ஒரு பிரம்மராட்சசன் என்ற பேய் பிடித்திருப்பதாகவும் அந்த பேயை ஓட்டி தனது மகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். யாதவ பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று அரசனின் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவ பிரகாசர் அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சனைப் பார்த்து இந்த உடம்பை விட்டு ஓடிப்போ என்றார்.
யாதவ பிரகாசரைப் பார்த்து சிரித்த பிரம்ம ராட்சசன் நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா? என்று பேச ஆரம்பத்தது. நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாக பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலில் வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அந்த பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் சிதறும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாய். அதில் புண்ணியத்தை நிரம்ப பெற்றாய். அதில் கிடைத்த ஞானத்தை வைத்து இந்த ஜென்மாவில் மனித பிறப்பெடுத்து வேதம் கற்றுக் கொண்டு பிராமணனாக குருவாக நிற்கிறாய். நான் யார் தெரியுமா? அந்தணனாக பிறப்பெடுத்து அந்தணனாக வாழ்ந்து கோயிலில் வேதம் சொல்லி யாகம் கொண்டிருந்தேன். இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் சொல்லில் மந்திரத்தை தவறாக சொல்லியும் பெயரளவிற்கு செயலில் யாகத்தையும் செய்து கொண்டு மனம் போன போக்கில் தவறுகள் செய்து கொண்டு வாழ்ந்தபடியால் பிரம்மராட்சசனாக பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு. ஆகவே நீ சொன்னால் நான் போக மாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ என்றான் பிரம்மராட்சசன். யாதவ பிரகாசர் என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டு செல்வாய் என்று கேட்டார். உன்னுடைய பல்லக்கை சுமந்து கொண்டு வரும் இராமானுஜர் தனது காலை எனது தலையில் வைத்து நீ போ என்றால் நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டு சென்று விடுவேன் என்றது. யாதவபிரகாசரும் இராமானுஜரை அழைத்து பிரம்மராட்சனின் தலைமீது காலை வைக்க சொன்னார். உடனடியாக பிரம்மராட்சனும் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு சென்று விட்டான்.
கோயில் பிரசாதம் கொடுக்கப்பட்டு அதில் சிந்திய உணவை சாப்பிட்ட ஒரு உடும்பே புண்ணியத்தைப் பெற்று அதன் பலனாக ஞானத்தை பெற்று குருவாக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார். உடும்பு பிறப்பை விட மேன்மையாக பிறப்பு மனிதப் பிறப்பு. இவர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கும் இறைவனுக்கு பிரசாதம் படைப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் உண்டான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் தர்மப்படி வாழ்ந்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு கோயிலின் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்தாலே விரைவாக இந்த பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைந்து விடலாம்.

