சரணடைதல்

ஒரு சமயம் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சியில் கிருஷ்ணன் தனது துணிகளை சலவைத் தொழிலாளி ஒருவனிடம் கொடுத்து சுத்தம் செய்து கொடுக்கும் படி கேட்டிருந்தார். அடுத்த நாள் தமது துணிகளை அந்த சலவை தொழிலாளியிடம் கேட்ட போது கிருஷ்ணரிடம் அவரது துணிகளையே அவரிடம் தர மறுத்தான். இதனை தொடர்ந்து உபன்யாசம் சென்றது. உபன்யாசம் முழுவதையும் அந்த கூட்டத்தில் கேட்ட ஒரு சலவை தொழிலாளி ராமானுஜரிடம் வந்து கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று மிகத் தூய்மையாக புதியது போல் துவைத்து ராமானுஜரிடம் காட்டி பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாரப் பாராட்டுவார்.

ஒரு நாள் சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் நீங்கள்தான் என்னைப் பாராட்டுகிறீர்கள். ஆனால் ரங்கநாதர் பாராட்ட வில்லையே என்றான். அதனை கேட்ட ராமானுஜர் சலவைத் தொழிலாளியை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக துணிகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்து கொடுக்கிறான். ஒருநாள் அவனிடம் பேசுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். ரங்கநாதர் சலவைத் தொழிலாளியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார். அதற்கு சலவைத் தொழிலாளி கிருஷ்ணாவதாரத்திலே உங்களுக்கு துவைத்த உங்களுடைய துணிகளைத் தர மாட்டேன்னு சொன்ன அந்த சலவைத் தொழிலாளியை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும் என்றான். அதற்கு ரங்கநாதர் அவனை மன்னித்து அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டாய். உனக்காக நீ ஏன் ஒன்றும் கேட்க வில்லை எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி உங்களை குருவாக நான் ஏற்றுக் கொண்டேன். முக்திக்கு வழிகாட்டி என்னை இறைவனிடம் அழைத்துச் சென்று விடுவீர்கள் என்று நம்புகிறேன். இதனைக் கேட்ட ராமானுஜர் மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.

உண்மையான பக்தர்கள் குருவிடம் முழுமையாக சரணடைந்து விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.