புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.
பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.
