அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.
முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.
முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.
