ஸ்ரீரங்கம் வெள்ளையம்மாள்

750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. ஸ்ரீரங்கத்தையும் ஸ்ரீஅரங்கன் திருக்கோவிலையும் காக்க ஸ்ரீரங்க படைகளும் மக்களும் பல நாள் துலுக்கர்களுடன் போரிட்டனர். கோயிலுக்குள் புகுந்து விட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான பொன் வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். மதிப்பு மிக்க பொக்கிஷங்களைத் தேடி அங்கேயே சில காலம் தங்கி விட்டார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் தப்பி பிழைத்த ஸ்ரீரங்கத்து மக்கள். அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்க சம்மதித்து தளபதிக்கு செய்தி சொல்லி அனுப்பினாள். அன்று வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு இருட்டில் தனியாகச் சென்றாள். ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் கோயிலைக் கைப்பற்ற கொடூரமாக போரிட்ட களைப்பில் அதிகமாக மது அருந்தி மயங்கிக் கிடந்தனர். இதனால் பலரை எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.

ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்த தளபதி யாரது என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான். வணக்கம் தளபதியாரே கும்பிட்டாள் வெள்ளையம்மாள். நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே என்று அவளருகே வந்தான். தளபதியே இது அரங்கனின் வீடு. இங்கே என் அருகே நீங்கள் வராதீர்கள். என் இல்லம் வாருங்கள். இப்போது ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றாள். என்ன செய்தி என்றான் தளபதி. இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள். என்று கேட்டாள். எதிரிகளை வெற்றிகொண்டு செல்வங்களையும் பெண்களையும் மற்றும் அழகிகளையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம் என்றான் தளபதி. வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டாள். விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம் என்றான் தளபதி. நானும் அதற்காகவே வந்தேன். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும் முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அதனை சொல்ல வேண்டுமானால் ஒரு நிபந்தனை அதை நிறை வேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன் என்றாள் வெள்ளையம்மாள். எங்கே இருக்கிறது என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன் என்றான் தளபதி.

புதையலை நான் தனியாக சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன் பிறகுதான் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றாள். இவ்வளவு தானா சரி வா நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். நீ ஆசைப்பட்ட நகைகளைநீயே எடுத்துக் கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று சந்தோஷமாக சிரித்தான். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள் என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள். இங்கே தான் இருக்கிறது. ஆனால் மேலே போக வேண்டும் என்று அண்ணாந்து பார்த்தாள். சீக்கிரம் வா போகலாம் உடனே நான் புதையலைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்பட்டான். சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக் கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி அற்புத தரிசனம் வெள்ளையம்மா இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போது தான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள் என்று கேட்டான். அதோ அங்கே பாருங்கள் என்று கை நீட்டி ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தை காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான். கீழே தான் பொக்கிஷம் இருக்கிறதா பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய் என்று சொல்லி வாய் மூடுவதற்குள் சிணுங்கலாய் பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே தங்களது படைத் தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல் ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி குவிந்த கரத்துடன் நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள். அவளுடைய உயிர் பிரிந்தது.

தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப் பெற்றனர். மேலும் ஸ்ரீரங்கத்தை காக்க வெளியிலிருந்து வந்த படைகளும் சேர்ந்து கொண்டன. தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள் பொன் பெண்களை அப்படியே விட்டு உயிர் பிழைத்த வீரர்கள் தப்பிஓடினர். ஸ்ரீரங்கமாநகரையும் கோவிலையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாக அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம் இப்போது வெள்ளைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளையம்மாள் தனது உயிர் பிரியும் தறுவாயில் இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும் போது கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும் திருக்கொட்டாரத்தில் இருந்து தீர்த்தம் மலர் மாலைகள் திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.