ஞானம்

கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.

விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.

இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.

நான் யார்

அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.

முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.

முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.

ஞானமடைய எளிய வழி

புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.

பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.

துறவு

மிகப் பெரிய துறவியொருவர் தம்முடைய சீடரிடம் துறவு பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டார். அதனை சீடர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாமன்னர் ஜனகரிடம் அனுப்பி வைத்தார். சீடருக்கோ வியப்பு ஏற்பட்டது. குருவே தாங்களோ மிகப் பெரிய துறவி சற்குரு. அவரோ நாடாளும் மன்னர் குடும்பஸ்தர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்று கேட்டார். அந்தத் துறவி தமது சீடரிடம் நாம் சந்நியாசி அவர் குடும்பஸ்தர் என்பதையெல்லாம் தாண்டி அவரிடம் நீ கற்றுக் கொள்வதற்கு உனக்கு ஒன்று இருக்கிறது. பணிவுடன் தலைவணங்கி அவரிடம் அதைக் கற்றுக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாவிட்டாலும் குருவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அந்த சீடர் மிதிலைக்கு சென்றார். அரசவைக்குள் மன்னர் ஜனகர் இருந்தார். அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆடல் பாடல் என்று களைகட்டியது. அவையில் இருந்தோர் அனைவரும் நடனத்தில் மயங்கி அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். மன்னர் ஜனகர் இந்தக் கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்தார். அந்தக் காட்சியைப் பார்க்கவே சீடருக்கு பிடிக்காமல் இருந்தது. ஜனகர் சிரித்துக் கொண்டே அந்த சீடரிடம் இங்கு காண்பதைக் கொண்டு தவறான முடிவுக்கு வந்து விடாதே. ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் தான் உனது குரு உன்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். அதை மட்டும் கற்றுக் கொள்ள ஒரு நாள் இந்த அரண்மனையில் தங்கியிருந்து விட்டு பின் நீ புறப்பட்டு செல்லலாம் என்றார்.

அரண்மனையில் உள்ள ஒரு அறையில் சீடர் தங்கினார். அவர் தங்கியிருந்த அறை மிகவும் அழகானதாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. விருந்து முடிந்ததும் தூங்குவதற்கு படுக்கையில் சாய்ந்தார். மேலே பார்த்த போது திடுக்கிட்டார். அந்த அறை முழுவதும் மேல் பகுதியில் சீடரின் தலைக்கு மேலே ஒரு கூர்மையான வாள்கள் வெறுமனே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். எந்த நேரத்திலும் நூல் அறுந்து ஏதோஒரு வாள் தனது கழுத்தில் விழும் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு அன்று இரவு முழுவதும் விழித்துக் கொண்டு அந்தக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். பொழுது விடிந்ததும் ஐனகர் வந்தார். அவரிடம் இந்த அறை வசதியாக இருந்ததா? படுக்கை சுகமாக இருந்ததா? இரவு நன்றாக உறங்கினீர்களா? என விசாரித்தார். அதற்கு அந்த சீடர் எல்லாமே வசதியாகத் தான் இருந்தது. ஆனால் தலைக்கு மேலே மெல்லிய நூலில் உறையில்லாத வாள் தொங்கிக் கொண்டிருக்க எப்படி நான் அமைதியாக உறங்க முடியும்? என்று பதில் அளித்தார். அரசர் அவரிடம் நீங்கள் இங்கே வரும் போது மிகவும் களைப்பாக இருந்தீர்கள். எனவே படுத்ததும் அசதியில் தூங்கிக் போயிருக்கலாம். ஆனால் ஏன் தூங்க முடிய வில்லை. தூங்கினால் வாள் அறுந்து நமது மீது விழுந்தால் என்னாகும் என்ற சிந்தனையில் பயத்தில் தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் உங்கள் சிந்தனை ஓடியது. இதனால் நீங்கள் தூங்காமல் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருந்தீர்கள். இந்த எச்சரிக்கைக்கு நடுவில் இந்த உலகம் மற்றும் இதில் இருக்கும் சுகதுக்கங்கள் ஒன்றையும் நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள். இந்த சிந்தனை இல்லாத மனம் தான் துறவு. இதுதான் எனது போதனை.

நான் எனது அரசவையில் அமர்ந்து கொண்டிருந்தாலும் அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தாலும் இந்த சுகபோகங்களுக்கிடையே நான் எனது தலைக்கு மேலே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் உறையில்லாத மரணம் என்ற வாளைப் பற்றிய கவனத்தில்தான் எப்போதும் இருக்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது. ஒரு நொடிப்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதுபோல் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள். எந்த நேரத்திலும் வரக்கூடிய அந்த மரணம் குறித்து நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். எனவே நான் இந்த அரண்மனையில் வாழ்ந்தாலும் கூட நானும் ஒரு துறவி தான் என்று சொல்லி சீடரை அனுப்பி வைத்தார்.

ஞான குரு

கேள்வி: ஒருவனுக்கு உண்மையான ஆன்மிக தேடல் இருந்தால் அதற்கான குரு நாதர் அவனைத் தேடி ஒரு நாள் வருவார் என்று சொல்வதெல்லாம் உண்மையா? ஆன்மிக தேடல் கொண்ட ஒருவனை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞான குருவால் உணர முடியுமா?

புத்தர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு

புத்தர் ஒரு கிராமத்திற்கு உபதேசம் கொடுக்க ஒருநாள் மாலை நேரத்தில் வந்திருந்தார். கிராமத்து மக்கள் அனைவரும் கூடி விட்டனர். புத்தர் அந்த சின்ன கிராமத்திற்கு வருவார் என்று அந்த கிராமத்து மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள். இருப்பினும் புத்தர் யாருக்காகவோ காத்திருந்தார். அங்கிருந்த செல்வந்தர் ஒருவர் புத்தரின் அருகில் வந்து ஐயா நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்? இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்து விட்டார்கள். இனி வருவதற்கு எவருமில்லை. உங்களது உபதேசத்தை ஆரம்பிக்கலாமே என்றார். புத்தர் புன்னகைத்தார். பிறகு அனைவருக்கும் கேட்கும்படி சொன்னார். இந்த இடத்திற்கு உபதேசம் செய்ய யாருக்காக வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் அவருக்காக காத்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும். எனக்கான கடமை இது. நீங்கள் அனைவரும் எனது உபதேசத்தை கேட்பீர்கள். ஆனால் அதில் உள்ள உண்மையை தேடுவீர்களா என்றால் அது கேள்விக் குறிதான். ஒரு ஜீவன் ஞானத்தேடலில் இந்த ஊரில் இருக்கிறது. அதன் உயிர் அலை இன்னும் இங்கு வரவில்லை ஆகவே காத்திருக்கிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் அங்கிருந்தோர் சங்கடப்பட்டனர். ஏனெனில் அந்த கிராமத்தில் உள்ள பணக்காரர்கள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பக்திமான்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தாகள். பிறகு யாருக்காக புத்தர் காத்திருக்கிறார்? என்று வருபவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவசர அவசரமாக ஒரு ஏழை குடும்பத்துப் பெண் வந்து அந்த கூட்டத்திற்குள் அமர்ந்து கொண்டாள். அவளது எஜமான் அந்த செல்வந்தர் கூட்டத்தின் முன் வரிசையில் தான் அமர்ந்திருந்தார். புத்தரை பார்க்க போக வேண்டும் என்று அவள் அவரிடம் அனுமதி கேட்டதும் நான் சொன்ன வேலையை முடித்து விட்டு பிறகு எங்கு வேண்டுமானாலும் போ என்று அலட்சியமாக சொல்லி விட்டார். வேலையை முடித்து விட்டு இப்போதுதான் வந்திருக்கிறாள். அந்தப் பெண்ணை பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு புத்தர் தனது உபதேசத்தை ஆரம்பித்தார். உடனே அந்த செல்வந்தர் புத்தரிடம் இவளுக்காகவா இத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்தீர்கள்? இவள் எனது வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி என்றார் அலட்சியமாக. அதற்கு புத்தர் தனது புன்னகை மாறாமல் பதிலளித்தார். இவள் படிக்காதவள் ஒரு ஏழை கூலித் தொழிலாளி என்பதை யாம் அறிவோம். நான் பக்கத்து கிராமத்தில் இருக்கும்போது யாரோ என்னை அழைப்பதை போல உணர்ந்தேன். இனம் புரியாத ஒரு ஆன்மிகத் தேடல் அந்த அழைப்பில் மறைந்திருப்பதையும் உணர்ந்து கொண்டேன். இந்த கிராமத்தில் இவள் மட்டுமே எனது உபதேசத்தை கேட்டு கடைபிடித்து அதை உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருக்கிறாள். இவளுக்காகத்தான் நான் இந்த கிராமத்திற்கே வந்தேன். இந்த பெண்ணினுடைய ஞானத்தேடல் என்னை இங்கே வரவழைத்து விட்டது என்றார் புத்தர். பிறகு தனது உபதேசத்தை அந்த பெண்ணை பார்த்தபடியே ஆரம்பித்தார். அந்த பெண்ணும் கும்பிட்ட கரத்துடன் கண்கள் கசிய புத்தரை பார்த்தபடியே அவர் சொல்வதை கேட்டு அதன் ஆழ்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டாள்.

ஆன்மிக ஞானத்தேடலுக்கு ஆண் பெண் அல்லது உயர்வு தாழ்வு அல்லது வயது என்ற எந்த விதமான வேறுபாடுகளும் இல்லை. ஞானத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் திறந்த அமைதியான மன நிலையே வேண்டும். அவரே சிறந்த சீடர். ஞான குருநாதர் என்பவர் எப்போதுமே ஆன்மிக தேடல் உள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடி அவர்களுக்குத் தேவையானதை கொடுத்துக் கொண்டே இருப்பார் அவரே ஞான குரு.

புனித நீராடல்

ஒரு ஞானியிடம் சென்ற சிலர் நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. எனக்காக ஒரு உதவி செய்யுங்கள் என்று சொல்லி அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் தண்ணீரில் மூழ்க வைத்து எடுத்து என்னிடம் திரும்ப கொண்டு வந்து என்னிடம் கொடுங்கள் என்றார்.

ஞானி சொன்னது போலவே அவர்களும் செய்து திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தார்கள். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. தித்திக்கும்னு சொன்னீங்க ஆனா கசக்குதே என்றார்கள்.

ஞானி பார்த்தீர்களா பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது தவறான செயல்களையும் தீய பழக்கங்களையும் துர் குணங்களை மாற்றிக் கொள்ளாமலோ அல்லது இந்த தீய குணங்களை விட்டு விடுகிறேன் என்று பிரார்த்தனை செய்துவிட்டு அதனை கடைபிடிக்காமல் தீய குணங்களிலேயே இருந்து எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் எந்த கோயிலுக்கோ குளத்துக்கோ புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்த பயனும் வந்து விடப் போவதில்லை. மனங்களிலும் குணங்களிலும் அன்பு வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும். புனிய நீராடல் என்பது தனக்குள் இருக்கும் தீய குணங்களை நல்ல எண்ணங்களால் நீராடி நமது உள்ளத்தை புனிதப்படுத்துவது ஆகும் என்றார்.

குரு பக்தி

திருப்பதியில் அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது மோர் விற்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அந்த வழியாக சென்றாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று ஆசை தோன்றியது. ஆனால் குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர் விற்பவளைக் கூப்பிட்டால் பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால் மோர் ஆசையைத் துறந்து பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். சீடர்களின் கூட்டத்தை பார்த்ததும் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து மோர்க்காரப் பெண்மணி இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்து ராமானுஜருக்கு வணக்கத்தை செலுத்தினாள். ராமானுஜர் சீடர்களின் ஆசையை பார்த்து கண்ணசைக்க ஆசையில் இருந்த சீடர்களுக்கு மோர் பானையைப் பார்த்ததும் எனக்கு எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும் நிறைந்த மனத்துடன் ராமானுஜரை பார்த்தாள். குரு பக்தியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட காரணத்தால் மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள். ராமானுஜர் அந்தப் பெண்மணியைப் பார்த்து அம்மா நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண் மோருக்கு பணம் வேண்டாம் சாமி. அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போறேன்? அதற்கு பதிலாக பெருமாள் இருக்கக் கூடிய பரமபதத்தை அடையணும் மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. மகிழ்ச்சியுடன் செல்வேன் என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்கிற ஆசை தோன்றியது ஆச்சரியம். இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு கவலைப்படாதம்மா உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். மகழ்ச்சியுடன் சென்று வா என்றார். அந்தப் பெண்மணி விடவில்லை. உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமி. ஆனா அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் அந்த வழியில் செல்கிறேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். அம்மா நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சீடர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் ஏழுமலைக்குச் சொந்தக்காரன் ஒருவர் இருக்கிறார் அவரிடம் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவருக்குத் தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. சாமி மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும் மோட்சம் வேணும்னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் திறந்து எதுவும் பதில் சொல்லவில்லையே என்றாள்.

பெருமாளுக்கு நிறைய வேலை இருக்கும். அதனால் இதை ஒரு குறையா சொல்லிக் கொண்டு இருக்காதே. உன் மனதில் படுவதை நீ கேட்க வேண்டும் என்று நினைப்பதை அவரிடம் கேட்டுக் கொண்டே இரு. ஒருநாள் நிச்சயம் உனது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் என்றார் ராமானுஜர். ராமானுஜரின் வார்த்தையை கேட்டதும் உங்களை நம்புகிறேன். உங்களது வார்த்தையை நம்பகிறேன். உங்களைப் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு சாமி எனக்கு மோட்சம் தர வேண்டும் என்று சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செய்து நீங்கள் ஒரு ஓலை எழுதிக் கொடுங்கள் என்றாள். உங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்வார் என்று நம்புகிறேன் ஆகவே கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அபரிமிதமான நம்பிக்கையோடு கேட்பதால் அவள் கேட்பதை மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர் ஒரு சீடரிடம் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும் சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை என்றாலும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். உண்மையாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா இல்லை அந்தப் பெண்மணியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா? என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு ஓலையில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருமலை என்று குறிப்பிட்டுவிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டு அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். மோர் விற்பனை செய்யும் பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய் என்று சிபாரிசு செய்து ஓலையில் எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். பெண்மணியை மேலும் கீழும் பார்த்து இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள். ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர் அர்ச்சகர். உடனே தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். பிறகு உனக்கு மோட்சம் தந்தேன் என்று அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமாள் அசிரீரீயாக அருளினார். அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர்கள். மோர் விற்கும் பெண்மனியை தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டார்கள்.

தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.

அரசாட்சி முறை

பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

விளக்கம்: உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு தண்டனைகளை தாங்கும் பக்குவத்தை கொடுத்து பின் தண்டனைகளையும் கொடுத்து மீண்டும் அவர்கள் அந்த தவறை செய்யாதபடி அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. – திருக்குறள்

விளக்கம்: குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அது நிகழாதவாறு தகுந்த தண்டனை வழங்குவதே அரசனின் கடமை ஆகும்ஆகும்

கோர்ட்டில் ஒரு திருடன் திருட்டு வழக்கிற்கான நிறுத்தப்பட்டான். அவனிடம் நீதிபதி திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வருகிறாயே நீ திருந்தவே மாட்டியா? என்று கேட்டார். எத்தனை தடவை திருடினாலும் அதே தண்டனையே கொடுக்கறீர்கள் நீங்கள் சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா? என்றான் திருடன். நீதிபதி யோசித்தார். அவனின் கேள்வி நியாயமாகப்பட்டது. திருடனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்த நீதிபதி அவருக்கு சில கட்டளைகளை கொடுத்தார்.

நீதிபதியின் கட்டளைப்படி ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த பத்துப் பேரை திருடனின் ஜெயில் அறையில் வைத்தார். திருடனிடம் வந்த ஜெயிலர் இந்த அறையில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த அறைக்கு அருகில் ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு என்றார். திருடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். ஜெயிலர் மற்ற பத்து பேரைத் தனியாக அழைத்தார். திருடன் வேலை செய்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு சாப்பிட கேண்டின் செல்லும் வழியில் அவனிடம் உள்ள பணத்தை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினமும் இந்த வேலையைச் செய்யணும். யார் எப்ப எப்படி பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது என்றார். அவர்கள் ஜெயிலரின் கட்டளையை ஏற்றார்கள். முதல் நாளே திருடன் பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் உணவு தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் சிறிதளவு உணவு சாப்பிடக் கொடுத்தார்கள். அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டு பரிதாபப்பட்டாலும் வேறு வழியில்லை. அவனின் பணத்தை திருடா விட்டால் ஒன்பது பேருக்கும் உணவு கிடைக்காது. பத்து பேர் பட்டினியில் கிடப்பதை விட ஒருத்தன் பட்டினி கிடப்பது பரவாயில்லை என்று அனைவரும் அமைதியாக இருந்து விட்டார்கள். தினமும் இப்படியே நாள் கடந்தது. தினமும் அவர் எவ்வளவு வேலை பார்த்து சம்பாதித்தாலும் அவனுக்கு கிடைத்தது உயிர் வாழத் தேவையான ஒரு வேளை சிறிதளவு உணவு மட்டும். அவன் விடுதலை ஆகும் நாள் வந்தது.

நீதிபதி அன்று திருடன் இருக்குமிடம் வந்தார். நீ கேள்வி கேட்டபடி சட்டத்தையோ தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றார். ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு வினாடியில் திருடிக்கொண்டு செல்வது எவ்வளவு அக்கிரமம்னு இப்போது புரிகிறது. இனி திருட எனக்கு மனசு வராது என்றான் திருடன். மற்ற பத்து திருடர்களும் திருடன் பசியில துடிப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. செத்தாலும் இனிமேல் திருட மாட்டோம் என்றார்கள்

நீதிபதி திருமந்திரம் மற்றும் திருக்குறளில் வள்ளுவர் சொன்னதை இங்கு செய்தார்.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

சித்திகள்

முனிவர் ஒருவர் தனது கடும் தவத்தின் காரணமாக பல சித்திகள் கைவரப்பெற்றார். அதனால் அவருக்கு தன்னால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற கர்வம் வந்தது. நல்ல குணங்களும் தவ வலிமையும் கொண்ட முனிவரின் கர்வத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார் இறைவன். சன்னியாசி உருவத்தில் முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்தார் இறைவன். முனிவரிடம் சுவாமி தாங்கள் செய்த தவ வலிமையால் பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன் என்றார் சன்னியாசி. சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார் முனிவர். அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது. சுவாமி தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா எனக் கேட்டார் சன்னியாசி. ஏன் முடியாது இப்போது பாருங்கள் என்று நீரை கையில் எடுத்து மந்திரித்து யானையை நோக்கி வீசினார் முனிவர். உடனே அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது. என்ன ஆச்சரியம் உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே என பாராட்டினார் சன்னியாசி. சன்னியாசியின் புகழுரைகள் சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது. மீண்டும் சுவாமி இப்போது தங்களால் இறந்து போன யானையை மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா? எனக் கேட்டார் சன்னியாசி. என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள் என்று முன் போலவே நீரை கையில் எடுத்து மந்திரித்து கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார் முனிவர். யானைக்கு உயிர் வந்தது.

முனிவரிடம் சுவாமி உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். தாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ன எனக் கேட்டார் சன்னியாசி. தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்றார் முனிவர். சுவாமி தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால் தாங்கள் பெற்ற பலன் என்ன? இறைவனை கண்டீர்களா? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது? தங்களின் சித்து விளையாட்டு இறைவனை எளிதாக அடைய தங்களுக்கு உதவியக இருந்ததா? என்று கேட்டார் சன்னியாசி வடிவில் இருந்த இறைவன். இந்த சித்திகள் எதற்கும் பயன்படாது என்பதை உணர்ந்த முனிவர் கர்வம் அழிந்த நிலையில் சன்னியாசியின் கால்களில் விழுந்தார். இறைவன் அவருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

இறைவனின் அருளை பெற்ற பக்தன் இறைவனிடம் விலை மதிக்க முடியாத ஞானம் வைராக்கியம் பக்தி இவைகளை மட்டுமே கேட்டு பெற்றால் ஆனந்தமாக வாழலாம். கர்மாக்கள் விரைவாக அழிந்து இறைவனிடம் செல்லலாம். அதனை விடுத்து இறைவனே விட சித்திகளே பெரிது சித்திகள் வேண்டும் என்று அதன் பின்னால் சென்றால் எந்த பலனும் இல்லை. கர்வம் மிகுந்து மேலும் பிறவிகளே அதிகரிக்கும்.

நம்பிக்கை

தினமும் நான்கு காலப் பூஜைகளுக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும் தீவிரமான சிவ பக்தன் ஒருவன் இருந்தான். சிலைகளையும் படங்களையும் எங்கு பார்த்தாலும் அப்படியே நின்று பக்தியில் உருகுவான். இப்படிச் சிலைகளிலும் ஓவியங்களிலுமே பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமானை நேரில் தரிசனம் செய்ய அவன் ஆசைப்பட்டான். ஒரு சிற்பியிடம் சொல்லி அற்புதமாகச் சிவபெருமான் சிலை ஒன்றைச் செய்து வாங்கி வந்தான். சிவனே உயிரோட்டமாக வந்திருப்பது போன்ற அற்புதமான சிலை அது. தன் வீட்டுப் பூஜையறையில் அந்தச் சிலையை வைத்துப் பூஜைகளை ஆரம்பித்தான். நீண்ட காலம் அவன் சிவபெருமானை நினைத்து பூஜை செய்தான். காலங்கள் கடந்தும் சிவ பெருமானின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவன் தன்னுடைய பூஜையை நிறுத்தினார். சிவபெருமானை வழிபடுவதை நிறுத்தினான். தான் ஆசையாகச் செய்து வாங்கிய சிவன் சிலையைத் தூக்கிப் பரண் மேல் வைத்தான். இவ்வளவு நாட்களைச் சிவபூஜையில் வீணடித்ததற்குப் பதிலாக பெருமாளை வணங்கியிருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. உடனே இன்னொரு சிற்பியைத் தேடிப் பிடித்து பெருமாள் சிலை ஒன்றைச் செய்து வாங்கினான். தன் வீட்டுப் பூஜையறையில் பெருமாள் சிலையை வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தான். பெருமாள் சிலையின் முன்பாக ஊதுவத்தி ஏற்றி வைத்தான். அதன் நறுமணம் அறை முழுவதும் பரவியது. அப்போதுதான் அவன் பரணில் இருந்த சிவபெருமான் சிலையைப் பார்த்தான். பெருமாளுக்கு ஏற்றிய ஊதுவத்தியின் நறுமணத்தைச் சிவன் சிலை நுகரக்கூடாது என்று அந்தச் சிலையின் மூக்கைத் துணியால் இறுக்கமாக மூடினான்.

சிவபெருமான் அடுத்த நொடியே அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்துபோன அவன் சிவபெருமானை வணங்கிவிட்டு இத்தனை நாட்கள் நான் பூஜித்தபோது காட்சியளிக்காத நீங்கள் இப்போது காட்சி தருவது ஏன்? என்று கேட்டான். நான் கல்லாகவும் மண்ணாகவும் மலையாகவும் நீராகவும் காற்றாகவும் ஆகாயமாகவும் இருப்பவன். இந்த கல்லே நான்தான். ஆனால் நீயோ வெளியே இருந்து ஏதோ ரூபம் சிலைக்குள் வந்து காட்சி கொடுக்க போகிறது என்று எண்ணி பூஜித்து வந்தாய். இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் கல் சிலையாக நினைத்தாய். இன்றுதான் இந்தச் சிலையாகவே நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ அப்படி உணர்ந்த அந்த நொடி நான் உன் கண்முன் வந்துவிட்டேன் என்றார் இறைவன்.

இறைவனைக் காண வேண்டுமெனில் அனைத்தும் இறைவனே என்ற எண்ணமும் உறுதியான சரணாகதி மற்றும் நம்பிக்கையே முக்கியம்.