வீணையுடன் அனுமன்

திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர். அங்கே ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர். யாழிசை வல்லுனர்களே இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்று கேட்டார் அனுமன். உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர். யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சரியான போட்டிதான் எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்டார் அனுமன். இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள் நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.

அனுமன் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை. மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை. பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. அனுமன் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத் துவங்கியது. நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது. இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது. இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டு விட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள். உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார். இரு முனிவர்களும் அனுமனின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்து விட்டது. கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை. எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே. இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர். அனுமன் மீண்டும் இசைக்க பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன் முனிவர்களே வித்யா கர்வம் கூடாது. கர்வம் நானே பெரியவன் என்ற பெருமையை கொடுப்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் அழித்து விடும். அடக்கமே சிறந்த குணம். இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள் என்று கூறினார்.

அனுமன் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லும். அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார்.  இவருக்குப் பிடித்த ராகத்தின் பெயர் ஹனுமத்தோடி என்று புராண வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இடம் குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ அனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.

சரணடைதல்

ஒரு சமயம் ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சியில் கிருஷ்ணன் தனது துணிகளை சலவைத் தொழிலாளி ஒருவனிடம் கொடுத்து சுத்தம் செய்து கொடுக்கும் படி கேட்டிருந்தார். அடுத்த நாள் தமது துணிகளை அந்த சலவை தொழிலாளியிடம் கேட்ட போது கிருஷ்ணரிடம் அவரது துணிகளையே அவரிடம் தர மறுத்தான். இதனை தொடர்ந்து உபன்யாசம் சென்றது. உபன்யாசம் முழுவதையும் அந்த கூட்டத்தில் கேட்ட ஒரு சலவை தொழிலாளி ராமானுஜரிடம் வந்து கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று மிகத் தூய்மையாக புதியது போல் துவைத்து ராமானுஜரிடம் காட்டி பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாரப் பாராட்டுவார்.

ஒரு நாள் சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் நீங்கள்தான் என்னைப் பாராட்டுகிறீர்கள். ஆனால் ரங்கநாதர் பாராட்ட வில்லையே என்றான். அதனை கேட்ட ராமானுஜர் சலவைத் தொழிலாளியை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக துணிகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்து கொடுக்கிறான். ஒருநாள் அவனிடம் பேசுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். ரங்கநாதர் சலவைத் தொழிலாளியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார். அதற்கு சலவைத் தொழிலாளி கிருஷ்ணாவதாரத்திலே உங்களுக்கு துவைத்த உங்களுடைய துணிகளைத் தர மாட்டேன்னு சொன்ன அந்த சலவைத் தொழிலாளியை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க வேண்டும் என்றான். அதற்கு ரங்கநாதர் அவனை மன்னித்து அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டாய். உனக்காக நீ ஏன் ஒன்றும் கேட்க வில்லை எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி உங்களை குருவாக நான் ஏற்றுக் கொண்டேன். முக்திக்கு வழிகாட்டி என்னை இறைவனிடம் அழைத்துச் சென்று விடுவீர்கள் என்று நம்புகிறேன். இதனைக் கேட்ட ராமானுஜர் மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார்.

உண்மையான பக்தர்கள் குருவிடம் முழுமையாக சரணடைந்து விடுவார்கள்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

ஒரு யானைப் பாகன் தனக்கு 100 ஏக்கர் நிலம் வேண்டும். 50 யானைகளுக்கு சொந்தக்காரனாக வேண்டும். சுற்று வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு பெரிய வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காக இறைவனுக்கு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்தான். பல நாட்கள் செய்த கடுமையான பூஜைகளின் பலனாக இறைவன் அவனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அவன் தன்னுடைய நீண்ட நாள் ஆசைகளை வரிசைப்படுத்தி அனைத்தும் வேண்டும் என கேட்டான். இறைவனும் சிரித்தபடி 50 யானைகளை காட்டி இது போதுமா? என்றார். அவன் மகிழ்ச்சியாக தலையாட்டினான். 100 ஏக்கர் நிலத்தை காட்டி இது போதுமா? என்றார். அதற்கு அவன் நிலத்தில் இன்னும் நான்கு கிணறுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றான். பெரிய மாளிகையை காட்டினார். வீடு முழுவதும் தங்கம் மற்றும் நவரத்தினங்களால் அலங்கரித்து வேண்டும் என்றான். அவன் கேட்ட அனைத்தையும் கொடுத்த இறைவன் நீ எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என கேட்டார்.

நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான செல்வம் என்னிடம் இருக்கிறது. என்னால் செய்ய முடியாதது இப்போது எதுவும் இல்லை. என்ன உதவி வேண்டும் நீங்கள் சொல்வதை செய்து முடிக்கிறேன் என்றான். நீ இறந்த பின் மேலே வரும்போது உன்னிடம் இருக்கும் யானையின் வாலின் முடியில் ஒன்றை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும் என்றார். இதற்கு ஏன் சாகும்வரை காத்திருக்க வேண்டும் இப்போதே பிடுங்கித் தருகிறேன் என்றான். இல்லை இப்போது எனக்கு தேவையில்லை என்றார் இறைவன். அதற்கு அவன் இறந்த பின் ஒரு துரும்பை கூட எங்கும் கொண்டு போக முடியாதல்லவா என்றான். பிறகு ஏன் உனக்கு இவ்வளவு பேராசை? என்று இறைவன் கேட்க அவர் கொடுத்த அத்தனை சொத்துக்களையும் திருப்பி கடவுளிடமே கொடுத்துவிட்டு என்றும் அழியாத எங்கு சென்றாலும் தன்னுடன் வரக்கூடிய இறை அருளை சேர்க்க பூஜைகள் தானங்கள் தர்மங்கள் செய்வது எப்படி என்ற சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்தான் யானைப் பாகன்.

பூதப்ருத் நம

திருவரங்கத்தில் ஓர் ஏழை வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பதினாறு குழந்தைகள். திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம் வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார். தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன் குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார். அரங்கனுக்கு அன்றாடம் தொண்டுசெய்யும் அடியார்களெல்லாம் அரங்கனின் பிரசாதத்தில் ஒரு துளி கிட்டுவதே பேரருள் என எண்ணிப் பெற்றுச் செல்ல இவர் எந்தத் தொண்டும் செய்யாமல் பிரசாதம் மட்டும் நிறைய வேண்டுமெனக் கேட்பதைக் கோயில் பணியாளர்கள் விரும்பவில்லை. உரத்தகுரலில் அர்ச்சகர்கள் இவரை விரட்டுவதால் தினமும் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்ப்படும். ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன் வரிசையில் வந்து நின்று விட்டார் அந்த வைணவர். கோயில் பணியாளர்கள் அந்த வைணவரை விரட்டிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் அங்கே வந்த ராமாநுஜர் அக்காட்சியைக் கண்டார். அந்த வைணவரை அழைத்து நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் நீர் பிரசாதம் பெற வேண்டும் என்பதற்காகவே இரவு பகலாக இங்கே கோயிலில் வந்து நின்றிருப்பதால் தானே இத்தகைய கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது? என்றார் ராமானுஜர். அதற்கு வைணவர் அடியேன் வேதம் கற்கவில்லை திவ்யப் பிரபந்தங்களும் கற்கவில்லை. எனவே பாராயண கோஷ்டியில் இணைய இயலாது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தான் ஓரிரு வரிகள் தெரியும். இப்படிப்பட்ட நான் என் பதினாறு குழந்தைகளுக்கு உணவளிக்க வேறென்ன வழி? என்று ராமானுஜரிடம் கேட்டார்.

ராமானுஜர் வைணவரைப் பார்த்து உமக்குத் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியும் என்று சொல்கிறீர்களே அதைச் சொல்லுங்கள் கேட்கிறேன் என்றார். உடனே வைணவர் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று சொல்லத் தொடங்கி பூதப்ருத் என்ற ஆறாவது திருநாமத்தைத் தாண்டி அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. மீண்டும் விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ எனத் தொடங்கி பூதப்ருத் என்ற திருநாமத்துடன் நிறுத்தி அடியேனை மன்னிக்க வேண்டும் என்று ராமானுஜரின் திருவடிகளில் விழுந்தார். அந்த ஏழையின் மேல் கருணைகொண்ட ராமானுஜர் பூதப்ருத் நம என்ற ஆறாவது திருநாமத்தை அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? அதுவே போதும். பூதப்ருதே நம என்று தொடர்ந்து ஜபம் செய்து வாருங்கள். உணவைத் தேடி நீங்கள் வரவேண்டாம். உணவு உங்களைத் தேடிவரும் என்றார். அடுத்தநாள் முதல் அரங்கனின் கோயிலில் அந்த ஏழை வைணவரைக் காணவில்லை. அவர் எங்கு சென்றார் எனக் கோயில் பணியாளர்களிடம் ராமானுஜர் விசாரித்த போது வேறு எங்காவது அன்னதானம் வழங்கியிருப்பார்கள். அங்கு சென்றிருப்பார் என கூறினார்கள். அன்று முதல் கோயிலில் ஒரு விசித்திரமான திருட்டு நிகழத் தொடங்கியது. அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரசாதத்தில் ஒரு பகுதி மட்டும் தினமும் காணாமல் போக ஆரம்பித்தது. இத்தனைப் பணியாளர்கள் இருக்கையில் யாருக்கும் தெரியாமல் உணவைத் திருடிச் செல்லும் அந்த மாயத்திருடன் யார் என யாருக்கும் புரியவில்லை. இச்செய்தி ராமானுஜருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ராமானுஜர் எவ்வளவு நாட்களாக இது நடக்கிறது? என கேட்டார். நீங்கள் அந்த ஏழையைக் கோயிலுக்கு வரவேண்டாம் என்று சொன்ன நாள் தொடங்கி இது நடக்கிறது. வைணவரையும் அன்று முதல் காணவில்லை. எனவே அந்த வைணவருக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்றார்கள் கோயில் பணியாளர்கள். அந்த வைணவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தேடிக் கண்டறியுங்கள் என உத்தரவிட்டார் ராமாநுஜர். கோயில் பணியாளர்களும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.

சிலநாட்கள் கழித்துக் கொள்ளிடத்தின் வடக்குக் கரைக்கு ராமானுஜர் சென்ற போது அந்த வைணவரும் அவரது பதினாறு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் அங்கே ஒரு மரத்தடியில் குடியிருப்பதைக் கண்டார். ராமானுஜரைக் கண்டதும் அந்த வைணவர் ஓடி வந்து அவர் திருவடிகளை வணங்கி சுவாமி அந்தப் பையன் தினமும் இருமுறை என்னைத் தேடிவந்துப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கிறான். நானும் பூதப்ருதே நம என தினமும் ஜபம் செய்து வருகிறேன் என்றார். எந்தப் பையன்? என்று வியப்புடன் கேட்டார் ராமானுஜர். அவன் பெயர் அழகிய மணவாள ராமானுஜதாசன் என்று சொன்னான் என்றார் அந்த ஏழை. கோயிலுக்கு அருகில் இருந்து இறைவனுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று இவ்வளவு தூரம் தள்ளி வந்து இந்த மரத்தடியில் தங்கினேன். ஆனால் உங்களது தெய்வீகப் பார்வை என் இருப்பிடத்தைக் கண்டறிந்து விட்டது. தினமும் பிரசாதம் என்னைத் தேடி தினமும் வருகிறது என்றார். அழகிய மணவாளன் எனப் பெயர் பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான் என உணர்ந்து கொண்டார் ராமானுஜர். நான் உங்களுக்கு உணவு கொடுத்து விடவில்லை. பூதப்ருத் என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள். பூதப்ருத் நம என ஜபம் செய்த உமக்கு பூதப்ருத் ஆன அரங்கன் தானே வந்து சத்துள்ள உணவளித்து மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான் என்று அந்த ஏழையிடம் சொல்லி அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் ராமானுஜர்.

பெரிய பாவம் எது? ஏன்?

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்து தங்களின் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை அடைய வழி காட்டுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். ஒருவன் ஞானியிடம் சுவாமி நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு பரிகாரம் உண்டா? இந்த பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஏதேனும் வழிகள் இருக்கிறதா? என்று வருத்தத்தோடு கேட்டான்.

அடுத்தவன் ஞானியிடம் நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள் சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். என்னை தண்டிக்கும் அளவுக்கு இவை ஒன்றும் பெரிய பாவங்கள் இல்லை. ஆகவே எனக்கு விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற வருத்தம் கூட இல்லாமல் கேட்டான்.

ஞானி முதல் கேள்வி கேட்டவனிடம் நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா என்றார். இரண்டாவது கேள்வி கேட்டவனிம் நீ போய் ஒரு கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார். இருவரும் அவ்வாறே செய்தனர். முதல் நபர் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். இப்போது ஞானி இருவரிடமும் தாங்கள் இந்த கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ சரியாக அந்த இடத்திலேயே திரும்பப் போட்டு விட்டு வாருங்கள் என்றார். முதல் நபர் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன் இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்? என்று கேட்டான்.

ஞானி சொன்னார். இந்த காரியம் முடியாதல்லவா? அவன் பெரிய தவறு செய்தான். அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் கேட்டு வந்திருக்கிறான். கல்லை எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு வந்தது போல அதற்கான வழியை செய்து விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. செய்த தவறை உணர்ந்து வருத்தப்பட்டு அந்த தவறுக்கும் மேலான நன்மைகளை செய்தால் மட்டுமே உனக்கு நன்மை நடக்கும். அதுவரை உனக்கு பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை என்பது மிகவும் கடினம் என்றார்.

எங்கிருந்து வந்தோம். எங்கே செல்வோம்

குருவே இந்த வாழ்கை பற்றி ஒரு சந்தேகம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் பிறப்பதற்கு முன் எங்கிருந்து வந்தேன். நான் இறந்த பின் எங்கே செல்வேன். இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் என்னால் இரவு தூங்க முடியவில்லை. இந்த கேள்விக்கு சற்று விளக்கமாக நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டான். குரு சீடனிடம் புத்தக அறைக்கு சென்று ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி அதை எடுத்து கொண்டு வா என்றார். சீடன் அந்த அறைக்கு சென்றான். அங்கு வெளிச்சம் எதுவும் இல்லாமல் இருள் நிறைந்து காணப்பட்டது. உடனே சீடன் குருவே இங்கு வெளிச்சம் எதுவும் இல்லை எப்படி நான் அந்த புத்தகத்தை தேடி எடுப்பேன் என்று கேட்டான். குரு ஒரு தீப விளக்கை சீடனிடம் கொடுத்து இப்போது சென்று புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா என்றார். சீடனும் குரு கூறிய புத்தகத்தை விளக்கு வெளிச்சத்தில் தேடி எடுத்து வந்து குருவிடம் கொடுத்தான். குருவே தாங்கள் இன்னும் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றான் சீடன். குரு சீடன் கையில் வைத்திருந்த விளக்கின் தீபத்தை அணைத்தார்.

சீடனை இந்த புத்தகத்தை எப்படி எடுத்து கொண்டு வந்தாய் என்று கேட்டார். அதற்கு சீடன் இந்த விளக்கில் உள்ள வெளிச்சத்தின் உதவியால் கொண்டு வந்தேன் என்றான். சீடனே அது இரண்டாவது முறை முதல் முறை என்ன செய்தாய் என்று கேட்டார். முதல் முறை நான் அந்த அறைக்கு செல்லும் போது அங்கு வெளிச்சம் இல்லை அதனால் புத்தகத்தை எடுக்க இயலாமல் தடுமாறினேன் என்றான். சீடனே முதல் முறை உன்னால் புத்தகத்தை எடிக்க முடியவில்லை இந்த விளக்கின் ஒளியால் தான் இந்த புத்தகத்தை உன்னால் எளிதில் எடுக்க முடிந்தது அல்லவா என்றார். ஆம் குருவே என்றான் சீடன் இந்த விளக்கின் நெருப்பு எங்கிருந்து வந்தது என்று கேட்டார் குரு. சீடன் தெரியாது என்றான். அந்த விளக்கின் நெருப்பை அணைத்த பிறகு அந்த விளக்கின் வெளிச்சம் எங்கே சென்றது என்று கேட்டார் சீடன் தெரியாது என்றான். விளக்கிலிருந்த தீபம் இந்த பிரபஞ்ச பஞ்சபூத சக்தியிலிருந்து வந்தது. தீபத்தை அணைத்ததும் அந்த தீபம் பஞ்ச பூத சக்தியிடமே ஓடுங்கியது.

மாயை என்ற தெரியாத இருள்களுக்கு நடுவே நமது ஆசைகள் மற்றும் வினைகளின் காரணமாக இந்த மனித வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்குள் இறை நம்பிக்கை மற்றும் அந்த இறையிடம் சரணாகதி அடைந்தால் இந்த ஆசைகள் வினைகள் மாயை என்ற இருள் மறைய ஆரம்பித்து ஒரு வெளிச்சம் தோன்றும். அந்த வெளிச்சத்தில் பார்த்தால் புத்தகம் கிடைத்தது போலவே இறைவனை தரிசிக்கலாம். அந்த இறைவனது திருவடிதான் நாம் இறுதியாக சென்று சேரும் இடம். நாம் வந்ததும் அந்த திருவடியிலிருந்துதான். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே மீண்டும் சென்று சேருவோம். இறைவனது திருவடியை தவிர வேறு கதி என்று ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை. ஆகவே எங்கிருந்து வந்தோம் எங்கே போவோம் என்ற சிந்தனையை தூக்கி எறிந்து உனக்குள் தீபத்தை ஏற்றி இந்த வெளிச்சத்தில் இறைவனை தரிசித்து அவரது திருவடியை சேர்ந்தால் இறப்பு பிறப்பு இல்லாத பேரின்ப இறைவனது திருவடியில் லயித்திருக்கலாம் என்று சொல்லி முடித்தார்.

அகந்தை

நான்கு பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து தங்களில் யார் முதலில் சொர்க்கத்துக்கு போவோம் சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

முதலில் சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்கு உண்டு என்றான்.

2 ஆவது வேதபாலன் என்ற பக்தன் சொன்னான். வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம். நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

3 ஆவது குகநாதன் என்ற பக்தன் சொன்னான். கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது. வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு. அதன்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

4 ஆவது சுந்தரானந்தன் சொன்னான். நான் உங்களை மாதிரி வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல. நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன். இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு வயதான மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். தன் வேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் என்று கூறிக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நால்வரும் எழுந்து அவள் பின்னால் சென்று அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை. நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று நீ உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர். நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லை. நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி. நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. நீங்கள் சொல்வதில் உள் அர்த்தம் இருக்கிறதா? எங்களுக்கு புரியும் படி சொல்லுங்கள் என்று பக்தர்கள் கேட்டார்கள். அதற்கு வயதான மூதாட்டி வெளிப்படையாக தானே பேசுகிறேன். நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல. நான் என்ற அகந்தையை பற்றி. அந்த நான் போய்விட்டால் அதாவது நான் என்ற அகந்தை அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் வயதான மூதாட்டி. நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் உண்மை உணர்ந்து நான் என்ற அகந்தையை எப்படி விடுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

விஸ்வம் – விஷ்ணு சகஸ்ரநாமம்

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு 2 ஆவது ஸ்லோகமான விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வம் என்றே திரும்பக் கூறினான். பிராமணர் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி மறுநாள் மீண்டும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் அடுத்த நாளும் அப்படியே தொடர்ந்தது. பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே வேதங்களை நன்றாக படித்து ஓதி வளர்ந்தார்கள்.

இந்த இரண்டு பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம் புகழ் மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது. தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நன்கு வேதம் படித்த பண்டிதர்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சிந்தித்து பார்த்தார் அவருக்கு விடை கிடைக்கவில்லை.

வசிஷ்ட முனிவரை அதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூறினார். அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு பொருளையும் அவன் உணர்ந்து விட்டான். மனதாலும் உடலாலும் ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாசு தேவனை இந்த வார்த்தை குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் உணர்ந்து கொண்டால் பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மொத்த ஸ்லோகத்தை படித்தால் உணர வேண்டியதை ஐத்ரேயன் முதல் ஸ்லோகமான விஸ்வத்திலேயே உணர்ந்து விட்டதினால் வேறு வார்த்தையை அவன் சொல்வதில்லை. அதிலேயே லயித்து இருந்தான்.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம் புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடன் உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து அவனுடைய மகிமையை தன் மனைவியிடமும் கூறினார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது.

வசிஷ்டரிடம் விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையை கேட்டுத் தெரிந்து கொண்ட வேத வியாசர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார். இதனை யுத்தகளத்தில் பீஷ்மர் தருமருக்கு உரைத்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு சொன்ன ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம். நாமம் என்றால் பெயர். சகஸ்ரநாமப் பகுதி மட்டும் ‘அனுஷ்டுப்’ என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது.

இறைவனின் விருப்பம்

ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ஒரு குயவன் பானை செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள் சட்டிகள் குடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குயவனுக்கு அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அது ஒரு நொடிகூட ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. துறவி அந்த குயவன் இருந்த இடத்திற்குச் சென்று தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்த குயவன் சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பருகிய துறவி இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா? என்று கேட்டார். இல்லை சுவாமி இது ஒரு காட்டாடு. வழி தவறி வந்தது. நான் பிடித்து கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக? என்று துறவி கேட்டார். அதற்கு குயவன் பண்டிகை வரப்போகிறது. அந்த நாளில் இறைவனுக்கு பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன் என்றான். துறவி வியப்பு மேலிட பலியா? என்றார். ஆமாம் சுவாமி தெய்வத்துக்கு திருவிழா வரும்போது பலி கொடுப்பது இறைவன் விரும்புவார். இதனால் இறைவன் மகிழ்ந்து வரம் கொடுப்பார் என்றான். குயவன் இப்படிச் சொன்னதும் துறவி தன் கையில் வைத்திருந்த தண்ணீர் மண் சட்டியை ஓங்கி தரையில் போட்டார். அது துண்டு துண்டாகச் சிதறியது. பின்னர் சிதறிய பாகங்களை எடுத்து குயவனிடம் கொடுத்தார். குயவன் கோபத்தில் என்ன சுவாமி இது என்றான். உனக்குப் பிடிக்குமே என்றுதான் இப்படி உடைத்துக் கொடுக்கிறேன் என்றார் துறவி. உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை கேலி செய்கிறீர்களா? நான் செய்த பானையில் என் உழைப்பு இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன். இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்குச் சென்னது? என்றான்.

துறவி மென்மையாக சிரித்தபடியே ஆண்டவன் படைத்த ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு மட்டும் யார் சொன்னது? அதை ஏற்று மகிழ்ந்து இறைவன் வரம் தருவான் என்று எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதை விரும்புவாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? இறைவன் படைத்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். அவரது வார்த்தைகளைக் கேட்ட குயவன் தெளிவு பெற்றவனாக ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு துறவிக்கு தனது வணக்கத்தை செலுத்தினான்.

மனித தர்மம்

ஒரு ஊருக்கு ஒரு சாமியார் சென்றார். அவர் பொய் பேசாதவர்கள் வீட்டில் கொடுக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்வார். காரணம் பொய் பேசுபவர்களின் உணவை உட்கொண்டால் அவர்களுடைய பொய் சொல்லும் குணம் வந்து தன்னுடைய தவபலன் போய் விடும் என்று கருதி அவ்வாறு இருந்தார். இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது இருக்கிறார்களா என்று அந்த ஊரில் உள்ளவர்களிடம் கேட்டார். அவர்கள் அந்த ஊரின் செல்வந்தரான ஒருவரை சுட்டிக் காட்டினார்கள். அவர் மிகவும் நல்லவர் சாது சிவபக்தர் லட்சாதிபதி அவருக்கு நான்கு பிள்ளைகள் என்று அவரது வீட்டை காட்டினார்கள். செல்வந்தரைப் பற்றி ஊரில் சாமியார் விசாரித்தார். அவருக்கு எத்தனை குழந்தைகள் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று விசாரித்து விட்டு அதன் பின் அவரது வீட்டிற்கு சென்றார். அவரது இல்லத்திற்கு சாமியார் சென்றார். அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த செல்வந்தர் உடனே எழுந்து ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர வைத்தார். இங்கு நீங்கள் உணவு அருந்தவேண்டும் என வேண்டினார். அவருடைய அன்பு பணிவு அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் சாமியாருக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணி அவரை சோதனை செய்ய ஆரம்பித்தார்.

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார்? அதற்கு செல்வந்தர் ரூபாய் 22,000 இருக்கிறது என்றார். குழந்தைகள் எத்தனை பேர்? என்று கேட்டார். ஒரே மகன்தான் இருக்கிறான் என்றார். உனது வயது என்ன? என்று கேட்டார். எனக்கு வயது 4 என்றார். சாமியாருக்கு கோபம் வந்தது. உன்னைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே? நீ பேசுவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு சாப்பிட்டால் அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை என்று சாமியார் எழுந்தார்.

சாமியார் காலில் விழுந்த செல்வந்தர் சாமி நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து விட்டு பின்பு முடிவு செய்யுங்கள் என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது. உங்கள் கணக்குப் புத்தகத்தில் உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டுகிறது. நீங்கள் எப்படி 22,000 ரூபாய் என்று சொன்னீர்கள்? என்று கேட்டார். அதற்கு செல்வந்தர் சுவாமி ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் என்னுடையது ஆகுமா? இதோ பாருங்கள் நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து என்று சொன்னேன் என்றார்.

ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தேன் அவர்கள் உங்களுக்கு நாலு பிள்ளைகள் என்று சொன்னார்கள். நீங்கள் ஏன் ஒரு பிள்ளை மகன் என்று சொன்னீர்கள் என்று கேட்டார். சுவாமி எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். ஆனால் என்று சொல்லி மகனே நடேசா என கூப்பிட்டார். அப்பா நான் விளையாடுகிறேன். சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்றான். மகனே வடிவேலா என கூப்பிட்டார். நண்பர்களுடன் வெளியே செல்கிறேன். பிறகு வந்து நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்றான். மகனே சிவராஜா என கூப்பிட்டார். இருக்கின்ற பணத்தை எல்லாம் தானம் கொடுங்கள் இதற்கு உதவி செய்ய என்னை வேறு கூப்பிடுகிறீர்களா என்று பதில் மட்டும் வந்தது. மகனே குமரேசா என கூப்பிட்டார். மகன் ஓடி வந்தான். அப்பாவையும் எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் தந்தையே செய்து முடிக்கிறேன் என்று நின்றான். சுவாமி அந்த மூவரும் என் புதல்வர்களா? நான் செய்யும் தர்மத்திற்கு முரணாக இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டுமே என்னுடைய தர்மத்திற்கு துணையாக இருக்கிறான். இவனை என் பிள்ளை என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன் என்றார்.

உன் வயது 4 என்றாயே அதற்கான விளக்கத்தையும் நீயே சொல் என்றார் சாமியார். சுவாமி ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால் அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும் எனக்குச் சொந்தமான வயது 4 வருடம் தான் என்று நான் கருதுகிறேன் சரியா சுவாமி என்று வணங்கி நின்றார்.

நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை

  1. தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.
  2. தாய் தந்தை செய்யும் தர்மத்திற்கு உதவி செய்பவர்களும் அவர்களின் தர்மக் கருத்தை கேட்கின்றவர்களும் உண்மையில் மகன் மகள் ஆவார்கள்.
  3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

ஆகவே உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார். இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.