எங்கிருந்து வந்தோம். எங்கே செல்வோம்

குருவே இந்த வாழ்கை பற்றி ஒரு சந்தேகம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் பிறப்பதற்கு முன் எங்கிருந்து வந்தேன். நான் இறந்த பின் எங்கே செல்வேன். இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் என்னால் இரவு தூங்க முடியவில்லை. இந்த கேள்விக்கு சற்று விளக்கமாக நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டான். குரு சீடனிடம் புத்தக அறைக்கு சென்று ஒரு புத்தகத்தின் பெயரை சொல்லி அதை எடுத்து கொண்டு வா என்றார். சீடன் அந்த அறைக்கு சென்றான். அங்கு வெளிச்சம் எதுவும் இல்லாமல் இருள் நிறைந்து காணப்பட்டது. உடனே சீடன் குருவே இங்கு வெளிச்சம் எதுவும் இல்லை எப்படி நான் அந்த புத்தகத்தை தேடி எடுப்பேன் என்று கேட்டான். குரு ஒரு தீப விளக்கை சீடனிடம் கொடுத்து இப்போது சென்று புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா என்றார். சீடனும் குரு கூறிய புத்தகத்தை விளக்கு வெளிச்சத்தில் தேடி எடுத்து வந்து குருவிடம் கொடுத்தான். குருவே தாங்கள் இன்னும் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றான் சீடன். குரு சீடன் கையில் வைத்திருந்த விளக்கின் தீபத்தை அணைத்தார்.

சீடனை இந்த புத்தகத்தை எப்படி எடுத்து கொண்டு வந்தாய் என்று கேட்டார். அதற்கு சீடன் இந்த விளக்கில் உள்ள வெளிச்சத்தின் உதவியால் கொண்டு வந்தேன் என்றான். சீடனே அது இரண்டாவது முறை முதல் முறை என்ன செய்தாய் என்று கேட்டார். முதல் முறை நான் அந்த அறைக்கு செல்லும் போது அங்கு வெளிச்சம் இல்லை அதனால் புத்தகத்தை எடுக்க இயலாமல் தடுமாறினேன் என்றான். சீடனே முதல் முறை உன்னால் புத்தகத்தை எடிக்க முடியவில்லை இந்த விளக்கின் ஒளியால் தான் இந்த புத்தகத்தை உன்னால் எளிதில் எடுக்க முடிந்தது அல்லவா என்றார். ஆம் குருவே என்றான் சீடன் இந்த விளக்கின் நெருப்பு எங்கிருந்து வந்தது என்று கேட்டார் குரு. சீடன் தெரியாது என்றான். அந்த விளக்கின் நெருப்பை அணைத்த பிறகு அந்த விளக்கின் வெளிச்சம் எங்கே சென்றது என்று கேட்டார் சீடன் தெரியாது என்றான். விளக்கிலிருந்த தீபம் இந்த பிரபஞ்ச பஞ்சபூத சக்தியிலிருந்து வந்தது. தீபத்தை அணைத்ததும் அந்த தீபம் பஞ்ச பூத சக்தியிடமே ஓடுங்கியது.

மாயை என்ற தெரியாத இருள்களுக்கு நடுவே நமது ஆசைகள் மற்றும் வினைகளின் காரணமாக இந்த மனித வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்குள் இறை நம்பிக்கை மற்றும் அந்த இறையிடம் சரணாகதி அடைந்தால் இந்த ஆசைகள் வினைகள் மாயை என்ற இருள் மறைய ஆரம்பித்து ஒரு வெளிச்சம் தோன்றும். அந்த வெளிச்சத்தில் பார்த்தால் புத்தகம் கிடைத்தது போலவே இறைவனை தரிசிக்கலாம். அந்த இறைவனது திருவடிதான் நாம் இறுதியாக சென்று சேரும் இடம். நாம் வந்ததும் அந்த திருவடியிலிருந்துதான். எங்கிருந்து வந்தோமோ அங்கேயே மீண்டும் சென்று சேருவோம். இறைவனது திருவடியை தவிர வேறு கதி என்று ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை. ஆகவே எங்கிருந்து வந்தோம் எங்கே போவோம் என்ற சிந்தனையை தூக்கி எறிந்து உனக்குள் தீபத்தை ஏற்றி இந்த வெளிச்சத்தில் இறைவனை தரிசித்து அவரது திருவடியை சேர்ந்தால் இறப்பு பிறப்பு இல்லாத பேரின்ப இறைவனது திருவடியில் லயித்திருக்கலாம் என்று சொல்லி முடித்தார்.

அகந்தை

நான்கு பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து தங்களில் யார் முதலில் சொர்க்கத்துக்கு போவோம் சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

முதலில் சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்கு உண்டு என்றான்.

2 ஆவது வேதபாலன் என்ற பக்தன் சொன்னான். வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம். நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

3 ஆவது குகநாதன் என்ற பக்தன் சொன்னான். கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது. வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு. அதன்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

4 ஆவது சுந்தரானந்தன் சொன்னான். நான் உங்களை மாதிரி வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல. நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன். இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு என்றான்.

இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு வயதான மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். தன் வேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் என்று கூறிக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நால்வரும் எழுந்து அவள் பின்னால் சென்று அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை. நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று நீ உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர். நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லை. நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி. நீங்கள் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. நீங்கள் சொல்வதில் உள் அர்த்தம் இருக்கிறதா? எங்களுக்கு புரியும் படி சொல்லுங்கள் என்று பக்தர்கள் கேட்டார்கள். அதற்கு வயதான மூதாட்டி வெளிப்படையாக தானே பேசுகிறேன். நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல. நான் என்ற அகந்தையை பற்றி. அந்த நான் போய்விட்டால் அதாவது நான் என்ற அகந்தை அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் வயதான மூதாட்டி. நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் உண்மை உணர்ந்து நான் என்ற அகந்தையை எப்படி விடுவது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

விஸ்வம் – விஷ்ணு சகஸ்ரநாமம்

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு 2 ஆவது ஸ்லோகமான விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வம் என்றே திரும்பக் கூறினான். பிராமணர் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி மறுநாள் மீண்டும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் அடுத்த நாளும் அப்படியே தொடர்ந்தது. பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே வேதங்களை நன்றாக படித்து ஓதி வளர்ந்தார்கள்.

இந்த இரண்டு பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம் புகழ் மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது. தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நன்கு வேதம் படித்த பண்டிதர்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சிந்தித்து பார்த்தார் அவருக்கு விடை கிடைக்கவில்லை.

வசிஷ்ட முனிவரை அதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூறினார். அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு பொருளையும் அவன் உணர்ந்து விட்டான். மனதாலும் உடலாலும் ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாசு தேவனை இந்த வார்த்தை குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் உணர்ந்து கொண்டால் பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மொத்த ஸ்லோகத்தை படித்தால் உணர வேண்டியதை ஐத்ரேயன் முதல் ஸ்லோகமான விஸ்வத்திலேயே உணர்ந்து விட்டதினால் வேறு வார்த்தையை அவன் சொல்வதில்லை. அதிலேயே லயித்து இருந்தான்.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம் புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடன் உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து அவனுடைய மகிமையை தன் மனைவியிடமும் கூறினார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது.

வசிஷ்டரிடம் விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையை கேட்டுத் தெரிந்து கொண்ட வேத வியாசர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார். இதனை யுத்தகளத்தில் பீஷ்மர் தருமருக்கு உரைத்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு சொன்ன ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம். நாமம் என்றால் பெயர். சகஸ்ரநாமப் பகுதி மட்டும் ‘அனுஷ்டுப்’ என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது.

இறைவனின் விருப்பம்

ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் ஒரு குயவன் பானை செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள் சட்டிகள் குடங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குயவனுக்கு அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அது ஒரு நொடிகூட ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. துறவி அந்த குயவன் இருந்த இடத்திற்குச் சென்று தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்த குயவன் சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிப் பருகிய துறவி இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா? என்று கேட்டார். இல்லை சுவாமி இது ஒரு காட்டாடு. வழி தவறி வந்தது. நான் பிடித்து கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக? என்று துறவி கேட்டார். அதற்கு குயவன் பண்டிகை வரப்போகிறது. அந்த நாளில் இறைவனுக்கு பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன் என்றான். துறவி வியப்பு மேலிட பலியா? என்றார். ஆமாம் சுவாமி தெய்வத்துக்கு திருவிழா வரும்போது பலி கொடுப்பது இறைவன் விரும்புவார். இதனால் இறைவன் மகிழ்ந்து வரம் கொடுப்பார் என்றான். குயவன் இப்படிச் சொன்னதும் துறவி தன் கையில் வைத்திருந்த தண்ணீர் மண் சட்டியை ஓங்கி தரையில் போட்டார். அது துண்டு துண்டாகச் சிதறியது. பின்னர் சிதறிய பாகங்களை எடுத்து குயவனிடம் கொடுத்தார். குயவன் கோபத்தில் என்ன சுவாமி இது என்றான். உனக்குப் பிடிக்குமே என்றுதான் இப்படி உடைத்துக் கொடுக்கிறேன் என்றார் துறவி. உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? இல்லை கேலி செய்கிறீர்களா? நான் செய்த பானையில் என் உழைப்பு இருக்கிறது. அதை உடைக்க நான் எப்படி சம்மதிப்பேன். இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்குச் சென்னது? என்றான்.

துறவி மென்மையாக சிரித்தபடியே ஆண்டவன் படைத்த ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு மட்டும் யார் சொன்னது? அதை ஏற்று மகிழ்ந்து இறைவன் வரம் தருவான் என்று எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதை விரும்புவாள்? எந்த தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? இறைவன் படைத்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருளையே அவனுக்கு படைப்பாயா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தார். அவரது வார்த்தைகளைக் கேட்ட குயவன் தெளிவு பெற்றவனாக ஆட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு துறவிக்கு தனது வணக்கத்தை செலுத்தினான்.

மனித தர்மம்

ஒரு ஊருக்கு ஒரு சாமியார் சென்றார். அவர் பொய் பேசாதவர்கள் வீட்டில் கொடுக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்வார். காரணம் பொய் பேசுபவர்களின் உணவை உட்கொண்டால் அவர்களுடைய பொய் சொல்லும் குணம் வந்து தன்னுடைய தவபலன் போய் விடும் என்று கருதி அவ்வாறு இருந்தார். இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது இருக்கிறார்களா என்று அந்த ஊரில் உள்ளவர்களிடம் கேட்டார். அவர்கள் அந்த ஊரின் செல்வந்தரான ஒருவரை சுட்டிக் காட்டினார்கள். அவர் மிகவும் நல்லவர் சாது சிவபக்தர் லட்சாதிபதி அவருக்கு நான்கு பிள்ளைகள் என்று அவரது வீட்டை காட்டினார்கள். செல்வந்தரைப் பற்றி ஊரில் சாமியார் விசாரித்தார். அவருக்கு எத்தனை குழந்தைகள் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று விசாரித்து விட்டு அதன் பின் அவரது வீட்டிற்கு சென்றார். அவரது இல்லத்திற்கு சாமியார் சென்றார். அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த செல்வந்தர் உடனே எழுந்து ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர வைத்தார். இங்கு நீங்கள் உணவு அருந்தவேண்டும் என வேண்டினார். அவருடைய அன்பு பணிவு அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் சாமியாருக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணி அவரை சோதனை செய்ய ஆரம்பித்தார்.

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார்? அதற்கு செல்வந்தர் ரூபாய் 22,000 இருக்கிறது என்றார். குழந்தைகள் எத்தனை பேர்? என்று கேட்டார். ஒரே மகன்தான் இருக்கிறான் என்றார். உனது வயது என்ன? என்று கேட்டார். எனக்கு வயது 4 என்றார். சாமியாருக்கு கோபம் வந்தது. உன்னைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே? நீ பேசுவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு சாப்பிட்டால் அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் சாப்பிடுவதில்லை என்று சாமியார் எழுந்தார்.

சாமியார் காலில் விழுந்த செல்வந்தர் சாமி நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து விட்டு பின்பு முடிவு செய்யுங்கள் என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது. உங்கள் கணக்குப் புத்தகத்தில் உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டுகிறது. நீங்கள் எப்படி 22,000 ரூபாய் என்று சொன்னீர்கள்? என்று கேட்டார். அதற்கு செல்வந்தர் சுவாமி ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் என்னுடையது ஆகுமா? இதோ பாருங்கள் நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து என்று சொன்னேன் என்றார்.

ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தேன் அவர்கள் உங்களுக்கு நாலு பிள்ளைகள் என்று சொன்னார்கள். நீங்கள் ஏன் ஒரு பிள்ளை மகன் என்று சொன்னீர்கள் என்று கேட்டார். சுவாமி எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். ஆனால் என்று சொல்லி மகனே நடேசா என கூப்பிட்டார். அப்பா நான் விளையாடுகிறேன். சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்றான். மகனே வடிவேலா என கூப்பிட்டார். நண்பர்களுடன் வெளியே செல்கிறேன். பிறகு வந்து நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்றான். மகனே சிவராஜா என கூப்பிட்டார். இருக்கின்ற பணத்தை எல்லாம் தானம் கொடுங்கள் இதற்கு உதவி செய்ய என்னை வேறு கூப்பிடுகிறீர்களா என்று பதில் மட்டும் வந்தது. மகனே குமரேசா என கூப்பிட்டார். மகன் ஓடி வந்தான். அப்பாவையும் எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் தந்தையே செய்து முடிக்கிறேன் என்று நின்றான். சுவாமி அந்த மூவரும் என் புதல்வர்களா? நான் செய்யும் தர்மத்திற்கு முரணாக இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டுமே என்னுடைய தர்மத்திற்கு துணையாக இருக்கிறான். இவனை என் பிள்ளை என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன் என்றார்.

உன் வயது 4 என்றாயே அதற்கான விளக்கத்தையும் நீயே சொல் என்றார் சாமியார். சுவாமி ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால் அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும் எனக்குச் சொந்தமான வயது 4 வருடம் தான் என்று நான் கருதுகிறேன் சரியா சுவாமி என்று வணங்கி நின்றார்.

நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை

  1. தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.
  2. தாய் தந்தை செய்யும் தர்மத்திற்கு உதவி செய்பவர்களும் அவர்களின் தர்மக் கருத்தை கேட்கின்றவர்களும் உண்மையில் மகன் மகள் ஆவார்கள்.
  3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

ஆகவே உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார். இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

காயத்ரீ மந்திரம்

ஒரு பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூணூல் தயாரிப்பை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் ஊர் மக்களும் பிராமணர்களுக்கு ஓரளவு உதவி வந்தார். பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்தது. காயத்ரியை ஒருமனதாக எண்ணி ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார். அவரது மனைவி பெண்ணின் திருமணத்திற்கான பொருளை அரசனிடம் பெற்று வரும்படி பிராமணரைத் தூண்டி விட்டார். அவரும் மன்னனிடம் சென்றார். மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக் கொண்டே அவர் வந்த காரியம் பற்றி கேட்டார். பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும் அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார். நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்டார். கூசிக் குறுகிய பிராமணரோ தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும் சமாளித்துக் கொள்கிறேன் என்று கூறினார். மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்து வரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத் தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க வைக்க பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசு போதவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன். மேலும் பொற்கட்டிகள் வெள்ளிக் கட்டிகள் நகைகள் ரத்தினங்கள் என இட இட தராசுத் தட்டு தாழ்ந்தே இருந்தது. தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான். சமயோசிதமான மந்திரியோ பிராமணரே இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் என்றார். அதே போல் நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்து வருங்கள் என்றார்.

பிரமணருக்கோ அரசரிடமே பொன் போதவில்லை. நாளை வரச் சொல்கிறார். நாளை மேலும் நிறைய கிடைக்கும் அதனை எப்படி கொண்டு செல்வது என்று அடுத்த நாள் கிடைக்கும் பொன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தார். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும் அவருக்கு தொலைந்தே போனது. மன்னன் எவ்வளவு பொருள் தருவான். பெண்ணின் திருமண செலவு போக நமக்கும் நிறைய இருக்குமே. அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? என்று பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை. காலை எழுந்ததும் அவசரம் அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒரு வழியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக் கொண்டு மன்னனைக் காண விரைந்தார். அரசவையில் மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத் தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். சில பொற்காசுகளை வைத்ததும் பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்து விட்டது. அவற்றிலிருந்து சில பொற்காசுகளை எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர். ஒரு பொற்காசு திருமணத்திற்கு போதாது என்று திருமணத்திற்கு தேவையான பொற்காசுகளை கொடுத்தனுப்பினான் மன்னன்.

பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம். மந்திரியிடம் முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்? என்று கேட்க மந்திரியோ மன்னா இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவர் சாது. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் காயத்ரீ தேவையை மட்டுமே சிந்தித்துக் கொண்டு காயத்ரீ மந்திரத்தை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தார். தன்னுடைய பெண்ணின் திருமண தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜெபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கொடுத்தாலும் அதற்கு நிகராக தராசு தட்டு சரிசமமாகாது. அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது அவர் நவரத்னம் எவ்வளவு கிடைக்கும் பொன் எவ்வளவு கிடைக்கும் பொருள் எவ்வளவு கிடைக்கும் என்ற சிந்தனையில் காயத்ரி தேவியை சிந்திக்காமல் வாயால் மட்டுமே மந்திரத்தை சொல்லிக் கொண்டு பூணூலை செய்தார். மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. எனவே இன்று அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்து விட்டது என்றார் மந்திரி.

எண்ணம்

ஒரு அரசர் இருந்தார் தன் மந்திரியுடன் ஒரு நாள் மாலை நேரம் நதி அருகே நடைபயிற்சி சென்றார்கள். அப்போது அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காயை பார்த்த அரசர் தொங்குவதை பார்த்த அரசர் மந்திரி அந்த வெள்ளரிக்காய எடுத்து வாருங்கள் சாப்பிடலாம் என்றார். மந்திரி வெள்ளரிக்காயை பறிக்க சென்றார். அங்கே அமர்ந்திருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்லை குமட்டிக் காய். அதனை தின்றால் வாந்தி வரும் என்றான். இதனை சோதிக்க அரசர் மந்திரியை பறித்து சாப்பிட சொன்னார். வேறு வழி இல்லாமல் மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு வாந்தி வந்தது. உடனே அரசர் இதற்கு என்ன தீர்வு? என்று குருடனை பார்த்து கேட்டார். அதற்கு குருடன் அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி வாயில் போட்டால் வாந்தி நிற்கும் என்றான். அதன்படி செய்ய மந்திரியின் வாந்தி நின்றது. அரசர் குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே? எப்படி சரியா தீர்வு சொன்னாய்? என்று கேட்டார். அதற்கு குருடன் இந்த நாட்டில் எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார் என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே ஒரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. காலை உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லிவிட்டு அரசர் சென்றார்.

சிறிது நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான். இது உண்மையான வைரமா போலியா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று அரசருக்கு குழப்பம். யாருக்கும் அதற்கான விடை தெரியவில்லை. அரசருக்கு குருடனின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து வர கட்டளையிட்டார். குருடனும் வந்தான். அவனிடம் பிரச்சனையை சொல்லி பதில் கேட்டார். அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மதிய வெயிலில் வைத்தான். சிறிது நேரம் கழித்து அதை கையில எடுத்து பாரத்து அரசே இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்லி சமாளித்து அனைத்து வைரத்தையும் இனாமா கொடுத்து விட்டு அங்கிருந்து நகன்றான். அரசருக்கு ஆச்சரியம் எப்படி கண்டு பிடித்தாய் என்று குருடனிடம் கேட்டார். அதற்கு குருடன் சொன்னான். அரசே வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரித்தேன் என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே இன்னொரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில மேற்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. மதிய உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லி அவனை அனுப்பினார்.

அரசர் தன் மகனுக்கு திருமணம் செய்ய வரன் தேட ஆரம்பித்தார். பக்கத்து நாடுகளில் இருந்து பலர் இளவரசியை கொடுக்க தயாராக இருந்தாங்க. அரசருக்கு குழப்பம். யாரை தேர்ந்தெடுப்பது? அரசருக்கு குருடனின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து வர கட்டளையிட்டார். குருடனும் வந்தான். அவனிடம் இளவரசியாக யாரை தேர்ந்தெடுப்பது என்று பிரச்சனையை சொல்லி பதில் கேட்டார். அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு அரசரோட பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்றான். அரசர் ஆச்சரியத்துடன் காரணம் கேட்டார். அதற்கு குருடன் அந்த அரசர் உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு அரசர் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அவன் போர் செய்ய விரும்பினால் இரண்டு பக்கமும் அவனுக்கு அடி விழும். ஆகவே அமைதியாக இருப்பான். எல்லை பிரச்சினை வராது என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே இன்னொரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில தெற்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. இரவு உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லி அவனை அனுப்பினார்.

ஒரு நாள் அரசர் அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார். நான் ஒன்று கேட்கிறேன். சரியா காரண காரியதோட பதில் சொல். என்றார். குருடனும் இயன்ற வரை சொல்கிறேன் என்றான். நமது நாட்டில் சிலர் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்தவராக இருப்பார் இந்த அரசர் என்று என்னை மறைமுகமாக அழைக்கிறார்கள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இயன்றால் காரணத்தை சொல் என்றார். குருடன் அமைதியாக சிரித்தபடி சொல்ல மறுத்தான். அரசர் அவனை சொல்லும்படி அழுத்தம் கொடுத்தார். குருடன் அமைதியாக சொன்னான். நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்கிறேன். நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான். அரசருக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னை பார்த்தா இப்படி கணித்தாய்? என்று வருத்ததுடன் கேட்டார். அதற்கு குருடன் முதல் நாள் குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது காலை உணவு. உண்மையான அரசராக இருந்தால் கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார். பின்பு கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செய்தேன். நீங்கள் மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது மதிய உணவு. உண்மையான அரசராக இருந்தால் கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார். மூன்றாவது ஒரு ராஜ்ஜியமே உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு வழி சொன்னேன். நீங்க மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது இரவு உணவு. உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார். ஆனா உணவை தாண்டி உங்க எண்ணம் போகவில்லை. உலகத்துலேயே பெரிய விஷயம் உணவுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதனால் நாட்டில் உள்ள சிலர் உங்களை அப்படி அழைக்கிறார்கள் என்றான். அரசர் வெட்கி தலை குனிந்தார்.

நாம் யார் என்பதை நம்மிடம் உள்ள பணமோ சொத்தோ பதவியோ தீர்மானிப்பதில்லை. நமது எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

ஆமை அன்னங்கள்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கித்ராபூரில் கோபேஷ்வர் கோயில் தூணில் ஒரு ஆமை மற்றும் இரண்டு அன்னங்கள் இந்த சிற்பத்தில் உள்ளது. எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும் என்ற கருத்தை இந்த சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு ஏரியில் கம்புக்ரீவா என்ற ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஆமைக்கு சகட மற்றும் விகட என்ற இரண்டு அன்னங்கள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்கள் மூவரும் ஒவ்வொரு நாளும் ஏரியின் கரையில் சந்தித்து சூரிய அஸ்தமனம் வரை தங்களது கருத்தைப் பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தார்கள். ஓராண்டு மழை பெய்யாமல் ஏரி வறண்டு போகத் தொடங்கியது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதைக் கண்டு மூவரும் கவலைப்பட்டார்கள். ஆமையும் அன்னங்களும் தங்களது கருத்தை ஒருவருக்கோருவர் பரிமாறிக் கொண்டார்கள். ஏரியில் உள்ள நீர் அனைத்தும் விரைவில் வற்றிவிடும். வற்றினால் ஆமை பெரிய மிருகங்களிடம் எளிதாக சிக்கிக் கொள்ளும். நீர் வற்றினால் இந்த ஏரியில் ஆமை தொடர்ந்து வாழ முடியாது. அன்னங்களுக்கும் உணவு கிடைக்காது. இனி இங்கு வாழ்வது மிகவும் கடினம். ஆகவே தண்ணீர் நிறைந்த மாற்று ஏரியைத் தேடி பிறகு அங்கு செல்லலாம் என திட்டமிட்டனர். பிரச்சனையை ஆமை அறிந்திருந்தது.

ஆமை தொடர்ந்தது. நீங்கள் முதலில் பறந்து சென்று வேறொரு ஏரியைக் கண்டு பிடியுங்கள். பின்பு நீங்கள் இருவரும் ஒரு குச்சியை பிடித்துக் கொள்ளுங்கள். நான் அந்த குச்சியை எனது வாயால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறேன். அன்னை அங்கே அழைத்துச் சென்று விடுங்கள். பின்பு மூவரும் எப்போதும் போல் அங்கு மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று சொன்னது. இரண்டு அன்னமும் சம்மதித்து அன்னங்கள் தொலைதூர இடங்களுக்கு பறந்து சென்று ஒரு ஏரியை கண்டு பிடித்தார்கள். பின் திட்டப்படி ஆமை இருக்கும் இடம் ஒரு குச்சியுடன் வந்தார்கள். அப்போது அன்னம் ஆமையிடம் எல்லாம் சரியாகத் தெரிகிறது. உங்கள் வாயை சென்று சேரும் வரை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசக்கூடாது. இல்லையெனில் நீங்கள் விழுந்து விடுவீர்கள் என்றது. ஆமை குச்சியை வாயால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. அவர்கள் பறக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் மலைகள் பள்ளத்தாக்குகள் கிராமங்கள் காடுகள் ஆகியவற்றின் மீது பறந்து இறுதியாக ஒரு நகரத்தின் மீது வந்தனர். அவர்கள் நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது இந்த விசித்திரமான காட்சியைப் பார்க்க ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். குழந்தைகள் கத்தவும் கைதட்டவும் தொடங்கினர். அதோ பார் இரண்டு பறவைகள் குச்சியின் உதவியால் ஆமையைச் சுமந்து செல்லும் அபூர்வக் காட்சி இது என்று வியந்து பாராட்டினர். ஆமை தான் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்து இந்த கை தட்டல்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆமை தனது நண்பர்களிடம் என்ன ஆச்சு? என்று வாயைத் திறந்தது. ஆமை வாயைத் திறந்த நொடியே கீழே விழுந்து இறந்தது. ஆமை பூமியில் விழுவதை அன்னங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தாங்கள் மட்டும் ஏரிக்கு சென்றது. கதையின் நீதி: எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும்.

குருவே இறைவன்

ஒரு சீடனின் வீட்டுக்கு இறைவனும் சீடனின் குருவும் வருகை தந்தனர். இறைவனையும் குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக இறைவனின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான். உடனே இறைவன் அவனைத் தடுத்து முதலில் நீ உன் குருவை வணங்கு என்று சொன்னார். சீடன் குருவினை பணியச் சென்ற போது சீடனே நான் உனது வீட்டிக்கு இறைவனை அழைத்து வந்திருக்கிறேன். அதனால் நீ இறைவனைத்தான் முதலில் வணங்க வேண்டும் என்று சொன்னார். குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் இறைவனின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். அப்பனே உன் வாழ்க்கையில் இறைவனை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார். ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும். ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக என்றார் இறைவன். சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். சீடனே நான் தான் இறைவனை அடைய வழி காட்டினேன் என்றாலும் அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். ஆகவே நீ முதலில் இறைவனிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது என்றார் குரு. மீண்டும் இறைவனிடம் சென்றான் சீடன். அப்பனே உனது குரு சொல்வது எல்லாம் சரிதான். இறைவன் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்கிறேன். அதன் பின் சிந்தித்து செயல்படு என்றார்.

ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன். ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத் தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே இறைவனை விட குருவே உயர்வானவர். இறைவன் வேறு குரு வேறு இல்லை குருவே இறைவன் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் இறைவன். சீடன் குருவை முதலில் வணங்கி பின் இறைவனை வணங்கி இருவரின் அருளையும் பெற்றான்.

இறைவனை எளிமையாக சென்று அடையும் வழி

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார் ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?

புதிய சீடன் – இறைவனை அறிவதும் அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம் என்றான்.

குரு – சரி இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ? இல்லை ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன். என்றான் நல்லது உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே.

குரு – இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ளவும் அடையவும் உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய் அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான் இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தானம் தர்மம் ஆகிய செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும் போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில் இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.