திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

திலீபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தார். பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். அம்பு பட்டவுடன் மான் ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினியாக வடிவெடுத்தது. அந்தப்பெண் அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட திலிபச்சக்கரவர்த்தி அவளருகே ஓடிவந்தார். அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும் என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா என்ன செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்தது என்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என அவளை வாழ்த்தினார்.

மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும். இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார்.

மகிழ்ந்த ரிஷிபத்தினி உடனே கிளம்பினாள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி அன்னையே என்னைப் போலவும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும் மீண்டும் திலீபச்சக்கரவர்த்தியை சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் கோவில் கட்டினான். அக்கோவிலே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

காசி விசுவநாதர் ஆலயம்

காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசம் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார் நவாப். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் கிழவரே நீர் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால்தான் எனக்குப் புரியும். என் மொழியில் நாளை வந்து கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரைக் கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார் குமரகுருபரர். அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது கத்தினான் நவாப். நேற்று நீங்கள் எனக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்துவிட்டேன் என்றார் குமரகுருபரர். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா அமரும் ஆசனம் இல்லையே என்று சொல்லி பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.

இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இதுதான் என் ஆசனம் என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் அது பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று சிரித்தார். அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே சென்று நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.

குமரகுருபரர் சிங்கத்தை பார்த்து இங்கே வா என்று கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறாமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே. நான் இப்போது உன் மொழியில்தானே பேசிக்கொண்டிருக்கின்றேன். யாருடைய துணையுமில்லாமல் புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்றார். ஆச்சரியப்பட்ட நவாப் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். இறையருளால் மட்டுமே இது சாத்தியம் என்றார். உங்களுடைய இறைவனா என்னுடைய இறைவனா என்று கேட்டான் நவாப். அதற்கு குமர குருபரர் உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் என்று நவாப் பணிவாகப் பேசினார்.

ஆஞ்சநேயர்

முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் மதவெறியால் இந்துக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு ஆன்மிக சக்தியளிக்க ஸ்ரீ ராமதாசரும் ஸ்ரீ பக்த துக்காரமும் மராட்டிய மண்ணில் அவதரித்தனர். அதே காலத்தில் தன் வீரவாளின் மூலம் தன் திடீர் தாக்குதலின் மூலம் முகலாயர்களின் தூக்கத்தைக் கெடுத்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி.

ஸ்ரீ ராமதாசரையும் பக்த துக்காராமையும் தன் ஆன்மிக குருவாக பெற்றார் சிவாஜி. ஒரு சமயம் வனத்திலிருந்த ஸ்ரீ ராமதாசரின் ஆசிரமத்திற்கு தன் வீரர்கள் துணையின்றி தனியாகவே வந்தார் சிவாஜி. அப்போது ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார் ராமதாசர் சிவாஜியை உள்ளே அழைத்து அப்பூஜையில் பங்கேற்கச் செய்தார். அப்பூஜையில் பங்கேற்ற சிவாஜி ஆழ்ந்த தியான நிலைக்கு சென்றார்.

அப்போது வெளியில் வந்த ராமதாசர் முகலாய வீரர்கள் சிவாஜி தனியாக இந்த ஆசிரமத்திற்கு வந்ததை அறிந்து அவரை கொல்வதற்கு இந்த ஆசிரமத்தை சுற்றிவளைத்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டார். உடனே தன் சீடன் சிவாஜிக்கு எவ்வித ஆபத்து நேரக்கூடாதென தன் தெய்வமான அனுமனை வணங்கினார். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ திடீரென்று வந்த காட்டுக்குரங்குகள் கூட்டம் ஆசிரமத்தை நோக்கி முன்னேறிய முகலாய வீரர்களை கடித்து குதறத் தொடங்கின. குரங்குகளின் இந்த முரட்டுத்தனமான தாக்குதலைத் தாங்க முடியாமல் முகலாய வீரர்கள் அங்கிருந்து தலைத் தெறிக்க ஓடினர். சற்று நேரம் கழித்து தியானம் கலைந்த நடந்ததெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி ராமதாசருக்கு நன்றி கூறினார். அப்போது ராமதாசர் தான் சிவாஜியின் உயிரை காப்பாற்றவில்லை என்றும் தான் வழிபடும் ஸ்ரீ அனுமனே சிவாஜியை காப்பாற்றியதாக கூறினார். ஸ்ரீ அனுமன் தனக்கு அருள்புரிந்ததை எண்ணி மெய்சிலிர்த்தார் வீர சிவாஜி.

சுவாசம்

ஓர் நாட்டில் இருந்த ஞானி அனைவராலும் நேசிக்கப்பட்டார். அந்த நாட்டின் அரசியும் ஞானி மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். ஒருநாள் ஞானியை தரிசிக்க சென்றாள். ஞானியிடம் அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம் தான் வேண்டும் என்றாள். அவர் உடனே தனது பிச்சைப் பாத்திரம் கொடுத்து விட்டார். ராணி அவரிடம் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தாள். இந்த பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன். உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி இப்பாத்திரம் என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன் என்றாள். அவரைப் பொறுத்தவரை பழைய பாத்திரமும் தங்கத்திலானா பாத்திரமும் ஒன்றுதான் எனவே அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.

ஞானியிடம் தங்கத்திலான பாத்திரம் இருப்பதை திருடன் ஒருவன் பார்த்தான். ஒரு சந்நியாசியிடம் இருக்கும் பாத்திரத்தை திருடி விடவேண்டும் என்று முடிவு செய்தான். ஞானி ஒரு மிகவும் பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார். ஞானி சீக்கிரமே தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லாமல் பாத்திரத்தை எடுத்துகொண்டு சென்று விடலாம் என்று காத்திருந்தான். தங்க பாத்திரத்திற்காக திருடன் காத்திருப்பதை கண்ட ஞானி அவன் ஏன் காத்திருக்க வேண்டும் என்று தங்க பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. விலையுயர்ந்த பொருளை அவர் இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. ஞானி அருகே சென்ற அவன் மிகவும் நன்றி சுவாமி. உங்களைப் போன்ற பற்றில்லாதவர்களும் இருக்கின்றார்கள் என்று இப்போது அறிந்து கொண்டேன். உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டான். அவன் கூறியதை கேட்டு சிரித்த அவர் என்னிடம் நீ வரவேண்டும் என்று தான் பாத்திரத்தை வீசினேன் அருகே வா என்றார்.

ஞானியின் பாதங்களை தொட்டு வணங்கிய திருடன் வாழ்க்கையில் முதன்முறையாக தெய்வீகத்தை உணர்ந்து பரவசத்தை அடைந்தான். நானும் உங்களைப் போல ஞானியாக மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான். இங்கேயே இப்போதே மாறலாம் என்றார். அதைக்கேட்ட திருடன் நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். நான் ஒரு திருடன் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்றுமுறை அரசரின் பொக்கிஷ அறைக்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். யாராலும் என்னை பிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நான் இப்போதே எப்படி ஞானியாக மாற முடியும் என்றான். ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு தீபத்தை ஏற்றிக் கொண்டு வந்தால் அங்கிருக்கும் இருட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஆகவே நான் போக மாட்டேன் என்று சொல்லுமா. தீபத்தை கொண்டு போனதும் வெளிச்சம் அங்கே உடனே வந்துவிடும். அதுபோல் திருட்டு என்னும் இருட்டிற்குள் இருக்கும் உனக்குள் ஒரு வெளிச்சத்தை ஏற்றிக்கொள். வெளிச்சம் உனக்குள் வந்துவிடும் இப்போதே நீ ஞானியாகலாம் என்றார் ஞானி. திருடனால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன் மூலம் நீ உனக்குள் வெளிச்சத்தை கொண்டு வர முடியும் என்றார். அதற்குவதிருடன் நான் என் திருட்டு தொழிலை விட வேண்டுமா எனக் கேட்டான். நீ எப்போதும் இருப்பது போல் உன் விருப்பப்படி செய்து கொள். ஒரு ரகசியத்தை நான் உனக்கு கற்றுத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன் விருப்பம் என்றார். இதை கேட்டு மகிழ்ந்த திருடன் ரகசியத்தை கற்றுத்தரும்படி கேட்டான். எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அப்போது நீ உன்னுடைய சுவாசத்தை கவனி உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் நீ உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும் போது வேறு யாருடைய வீட்டிற்குள் இரவில் நுழையும்போதும் உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும் வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும் போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே என்றார். மகிழ்ந்த திருடன் இது மிகவும் எளிதானதாக இருக்கிறதே. நான் எப்பவும் போல் இருக்கலாம் ஆனால் ஞானியாகி விடுவேன் என்று மகிழ்ச்சியுடன் ஞானியின் காலில் விழுந்து வணங்கி சென்றான்.

ஞானியை சில நாட்கள் கழித்து திருடன் பார்க்க வந்தான். நான் கடந்த பதினைந்து நாட்களாக திருட முயற்சி செய்தேன். நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால் என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக விழிப்போடு தன்னுணர்வோடு கவனமானவனாக இருக்கிறேன். அந்த நேரத்தில் வைரங்கள் கூட கூழாங்கற்களாக தெரிகிறது. நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான். நீ சொன்ன அந்த அமைதி மௌனம் ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் சுவாசத்தை கவனித்தக்கொண்டே இரு நீ ஞானியாகி விடுவாய். வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என நினைத்தால் சுவாசத்தை கவனிக்க மறந்து திருட்டு தொழிலை செய்து கொள். நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய் என்றார். உன் வாழ்வில் தலையிட நான் யார் என பதிலளித்தார். என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கு தீட்சையளியுங்கள் என்று திருடன் கேட்டான். அதற்கு ஞானி நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்று ஆசிர்வதித்தார். குருவின் காலில் விழுந்தான் சீடன்.

சிறுவனின் பக்தி

யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதி ஒன்றில் (இன்றைய மதுரா) ஒரு சின்னஞ்சிறு இடையன் வசித்து வந்தான். அவனுக்கு விளையாட யாரும் தோழர்கள் இல்லாததால் ஒரு சிறு கல்லையே சிவலிங்கமாக கருதி அதை பூஜித்து விளையாடி வந்தான். சேற்றையே சந்தனமாக கருதி அதற்கு இட்டு அழகு பார்த்தான். மேய்ச்சல் நிலத்தில் கிடைத்த சில மலர்களை கொண்டு அதற்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தான். நைவேத்தியத்திற்கு கனிகள் கிடைக்கவில்லை என்பதால் பல வகை மண் வகைகளையே உருண்டையாக பிடித்து வைத்து அவற்றை கனிகளாக பாவித்து அந்த சிவலிங்கத்திற்கு படைத்து மகிழ்ந்தான். அவன் வழிபாடு அன்போடும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.

இடையர் குலச் சிறுவனின் இந்த பூஜையை பெரிதும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட சிவபெருமான் குபேரனின் தனத்தில் இருந்து பெருமளவு எடுத்து அச்சிறுவனுக்கு கொடுத்து அவன் பூஜித்து வந்த அந்த கல்லை ரத்தின லிங்கமாக மாற்றிவிட்டார். அவனுடைய வீடும் சகல செல்வங்களாலும் நிரம்பி ரத்தின மயமாக காட்சியளித்தது. திடீரென தான் பூஜித்து வந்த சிவலிங்கமானது ரத்தினக் கல்லாகவும் தனது வீடு உள்ளிட்ட அனைத்தும் செல்வத்தால் நிரம்பி வழிவதைக் கண்ட அந்த சிறுவன் வியப்படைந்தான். அப்போது அவன் முன்னர் பிரத்யட்சமானார் சிவபெருமான். தான் ஏக்கத்தோடு பணிந்து பூஜித்து வந்த சிவபெருமான் தன் முன் நிற்பதை கண்ட அந்த பாலகன் அவரை பணிந்து பலவாறு துதித்தான்.

சிவபெருமான் அந்த சிறுவனை நோக்கி குழந்தாய் நீ செய்துள்ள புண்ணியத்தால் இனி உன் பெயர் ஸ்ரீகரன் என்று வழங்கப்படும். மேலும் உன் வம்சத்தில் நந்தகோபன் என்கிற மகன் பிறப்பான். அவரிடம் மகாவிஷ்ணுவே மகனாக வளர்வார். நமது நல்லாசிகள் என்று கூறிவிட்டு மறைந்தார். அதன் பிறகு அந்த சிறுவன் பல காலம் சிவபூஜை செய்தபடி வாழ்ந்துவிட்டு அனைத்து விதமான இன்பங்களையும் துய்த்துவிட்டு இறுதியில் சிவலோகப் ப்ராப்தி அடைந்தான்.

கருத்து: எவ்வளவு பெரிய மற்றும் சிறிய யாகங்கள் பூஜைகள் செய்தாலும் எந்த எண்ணத்தில் செய்கின்றோம் என்பதே முக்கியமானது.

எண்ணங்கள்

ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே என்று வருத்தப்படுவார். ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோல கற்கள் அங்கு குவிந்துவிட்டது. வேசிக்கோ துறவியைப் பார்த்து பொறாமை இவர் எப்போதும் தெய்வத்தை நினைத்து தியானத்திலேயே இருக்கிறாரே நாம் இந்தப் பாவத் தொழிலை செய்து கொண்டு இருக்கிறோமே என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள். ஒரு நாள் அவள் இறந்துபோனாள். தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது. துறவி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

சிறிது நாட்களில் துறவி இறந்தார் அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு கோபம் வந்துவிட்டது. என்ன இது அநியாயம் நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம் அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா என்று கேள்வி கேட்டார். எமதூதர்கள் கூறினார்கள் முனிவரே அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையே என்று இரவும் பகலும் இறைவனை எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இறைவனை நினைத்து தியானம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை பேர் செல்கின்றார்கள் என்று பார்த்து கல்லை போட்டுக்கொண்டிருந்தீர்கள். இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளேயே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள் என்று நரகத்திற்கு அழைத்துப் சென்றார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

கருத்து: எந்த செயல் செய்தாலும் எண்ணங்களே பிரதானம்.

புத்தர்

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர் முதியவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முதியவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் உங்களுக்கு பைத்தியமா தெய்வத்தையே எரித்து விட்டீர்களே என்று கோபத்தில் கதறினார். உடனே முதியவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன கிளருகின்றீர்கள் என்று குரு கேட்டதற்கு முதியவர் புத்தரை எரித்து விட்டதாக சொன்னீர்களே அவரின் எலும்புகளைத் தேடுகிறேன் என்றார். புத்தரை எரித்து விட்டு இப்படி செய்கின்றீர்களே என்று கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். மறுநாள் காலை முதியவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.

முதியவர் இரவு எரிந்த மரபுத்தர் சாம்பல் மீது பூக்களைத் தூவி புத்தம் சரணம் கச்சாமி என்று பிரார்த்தனை செய்து கீழே விழுந்து வணங்கி வழிபாடு செய்து கொண்டிருந்தார். குரு அவர் அருகே சென்று என்ன செய்கிறீர்கள் இப்போது சாம்பலை வழிபாடு செய்து கொண்டிருக்கின்றீர்கள். இரவு வணங்க வேண்டிய புத்தரை எரித்து விட்டீர்கள். உங்களுக்கு மனநிலை சரியில்லையா என்று கேட்டார்.

முதியவர் குருவை பார்த்து நீங்கள் தானே இரவு இவர் புத்தர் என்று சொன்னீர்கள் ஆகையால் அவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். இரவு மரத்தில் புத்தராக இருந்தார் இப்போது சாம்பலாக இருக்கின்றார் அவ்வளவு தானே வித்யாசம் என்றார். புத்தர் உருவ வழிபாடு வேண்டாம் என்றார். இன்று நீங்கள் அவரின் உருவத்தை வைத்து வணங்கி இறுதியில் அவரின் கொள்கைகளை விட்டுவிட்டீர்கள். நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரத்திலான புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்கள் என்றார். குருவுக்கு தலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது.

கோபம்

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என்று அமைதியாக கேட்டார். புத்தருடன் இருந்த சீடர் ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன் என்றார். புத்தர் தனது சீடரிடம் சொன்னார் ஆனந்தா நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா இதோ இவரைப்பார் ஏற்கனவே இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார். அவருடைய கோபமான முகத்தைப்பார். அவர் உடல் ஆடுகிறது. கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கின்றாயா அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார். இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்.

எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது. என் முகத்தை துடைப்பதில் எனக்கு சிரமம் ஒன்றும் இல்லை. நீ கோபப்படாதே. இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும். உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும். இவர் மீது கோபப்படாதே. மாறாக இரக்கப்படு என்றார். பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து நீ மிகவும் களைப்புடன் காணப்படுகிறாய். உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும். என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு வீட்டிற்குப் போய் ஓய்வெடு என்றார். அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான். பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான். புத்தர் சொன்னார் முதலாவதாக நான் உன் மீது கோபப்படவில்லை. பின் எதற்காக நான் உன்னை மன்னிக்க வேண்டும். இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய். மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

அனுபவம்

ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற வியாபாரிகள் ஓர் இடத்தில் ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அருகில் இருந்த பணியாளிடம் பார்த்து தங்கள் மொழியிலேயே தண்ணீர் கேட்டார்கள். பானி லாவோ என்றார் ஒருவர். தண்ணீர் கொண்டு வா என்றார் மற்றொருவர். இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளில் கேட்டனர். பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு என அனைவரின் மொழிக்கேற்ப வேறு வேறு ஒலிகள் அங்கு கேட்டது. அவர்கள் அனைவரும் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளை சொல்லி ஒரு பொருளை கொண்டு வர சொன்னதை உணர்ந்தார். ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் தண்ணீரைக் கொண்டு கொடுத்தார் பணியாள். ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டிருக்கின்றார்கள். வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார் மொழி தெரியாதவர்.

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரியவருகிறது. தண்ணீர் ஒரு பொருளே அதனை அறிந்தவர்கள் அவர்களுக்கு புரிந்த மொழிகளில் சொல்கிறார்கள். அதுபோல கடவுளும் ஒருவரே அவரவர்களுக்கு கிடைத்த அனுபவத்தில் ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள். கடவுளிடம் நெருங்க நெருங்க எல்லாக் கடவுளரும் ஒன்றே என்ற உண்மையை அனுபவத்தில் உணரலாம்.

ஆயுள்

ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன் சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு இல்லை உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றார். எல்லாரையும் படைப்பவன் நான் என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டர். சரி வா காட்டுகிறேன் என்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அழைத்துக்கொண்டு போனார். ஒரு இடத்தில் லோமசர் என்ற ரோமரிஷி காணப்பட்டார் அவரிடம் மஹாவிஷ்ணு தங்கள் வயதென்ன இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்று கேட்டார்.

என் வயதை கேட்கின்றாயா சொல்கிறேன். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலி யுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும் என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுளில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும் என்றார். இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது.