இறைவன் சாப்பிடும் நைவேத்யம்

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். இறைவனுக்கு நாம் செய்யும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டால் பாத்திரத்தில் சிறிதளவாவது காலியாகி விடவேண்டும் ஆனால் உணவு அப்படியே இருக்கிறது. நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினான். இதனை கேட்ட குரு பதில் எதுவும் சொல்லாமல் அவனை ஊடுருவி பார்த்துவிட்டு நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். பாடம் ஆரம்பித்த குரு அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார். அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். கேள்வி கேட்ட சிஷ்யனை அருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா என்று கேட்டார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான். எங்கே ஒரு முறை சொல் என்றார். கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தை கூறி முடித்தான். அனைத்தையும் கேட்ட குரு நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லை நான் கூறிய போது நீ எழுதிய சுவடியை காட்டு என்றார். பதட்டம் அடைந்த சிஷ்யன் சுவடியை எடுத்து காண்பித்தான். பிறகு குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் நீங்கள் சொல்லி சுவடியில் எழுயிருப்பதை போலவே கூறினேன் என்றான்.

இந்த சுவடியில் இருப்பதை படித்து உன் மனதில் உள்வாங்கினாய் என்றால் சுவடியில் மந்திரம் இருக்கிறதே சுவடியில் இருக்கும் மந்திரத்தை நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா என்றார். சிஷ்யன் குழப்பமாக பார்த்தான். குரு தொடர்ந்தார். உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் அளவில் குறையவில்லை. அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம் என்றார்.

பரமாத்மா

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம். ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை அல்லது தனியுரிமை யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோவிலே. இதனை உணர்ந்து நம்முள் இருக்கும் சுயநலப்போக்கை தூக்கியெறிந்துவிட்டு எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

என்னுடையது இல்லை

ஒரு அரசன் ஞானியிடம் சென்று என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன் என்றார். சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்து சிம்மாசனத்தில் அமர வைத்து நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும் இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்? விழித்தான் அரசன். ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. இந்த உயிர் எனதல்ல. வேலை செய்வதற்காக இந்த உடல் எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய் என்று கூறி விடைபெற்றார் ஞானி.

எண்ணங்கள்

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான் கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற அழியாத பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள். நீயும் கடவுள் தான் என்றார். அதற்கு பக்தர் அப்படியானால் ஏன் என்னால் உணர முடியவில்லை என்று கேட்டான். அதற்கு அந்த மகான் உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார். ஆனால் உன் எண்ணம் உலகத்தில் நடக்கும் விஷயங்களில் சூழ்ந்திருப்பதால் அவரை உணர முடியவில்லை என்று பதிலளித்தார். இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை புரிய வைக்க முயன்றார். அனால் அந்த பக்தரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இறுதியாத அந்த பக்தரை ஹரித்வாருக்கு செல்லும்படி அந்த மகான் கூறினார். அங்குள்ள கங்கை நதியில் ஒரு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீன் இருக்கின்றது மனிதர்கள் போலவே பேசும் குரல் அதற்கு இருப்பதால் உன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் சொன்னார். உடனடியாக மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று ஹரித்வாருக்குப் புறப்பட்டார்.

அபூர்வமான மீனின் வருகைக்குக் காத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த மீன் அங்கு வந்து எங்கிருந்து வந்திருக்காய் என்று கேட்டது. அதற்கு அந்த பக்தர் மகான் ஒருவர் உன்னிடமிருந்து கடவுளைப் பற்றித் தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார் என்று கூறினார். அதற்கு அந்த மீன் எனக்கு ஏழு நாட்களாக ஒரே தாகம். எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று கேட்டது. அதற்கு பக்தர் பைத்தியக்கார மீனே உன்னுடைய வலது இடது மேலே கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் தண்ணீர் தானே இருக்கிறது என்று பதிலளித்தார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார் என்று மிக அழகாகக கூறியது. அந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்த போதிலும் ஒரு சந்தேகத்தை முன் வைத்தான். அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன் என்று கேட்டான். அதற்கு அந்த மீன் இதே கேள்வி தான் எனக்கும் தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு ஏன் தாகம் தணியவில்லை என்பது தான். மீனின் வடிவமைப்பு குறித்து அந்த பக்தன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மீன் எப்படி நீந்திதால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவன் மீனிற்கு எடுத்துரைத்தான். உடனே மீன் எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீங்கள் கூறியது போல கடவுளை உணர அதற்கு உண்டான வழியில் நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கடவுளை உணரலாம். ஆசைகளை திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலக விஷயங்கள் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பக்தரும் அப்படியே செய்து உண்மையை புரிந்து கொண்டார்.

கடவுளை அடைய வேண்டும் என்றால் எண்ணங்களை அவர் மீது வைக்க வேண்டும். பார்க்கும் எல்லாப் படைப்புகளிலும் அவரை உணர வேண்டும்.

குருவின் வழிகாட்டுதல்

குரு ஒருவர் ஒரு ஊருக்கு வந்தார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம் உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன். நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் அதற்கு முன் ஒரு வேலை செய் ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை குரு அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும் அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் குரு. இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் திரும்ப திரும்ப அசுத்தம் ஆகுதுன்னு சுத்தப்படுத்தாமல் விட்டால் இந்த இடம் மிகவும் அசுத்தம் ஆகிவிடும் ஆகையால் சுத்தம் செய்கிறேன் என்றான். இதை கேட்ட குரு அப்போது சொன்னார் தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் மனிதர்களை நல்வழிபடுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான் சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கேட்டான். அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்து இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா என்று கேட்டார். ஆகாது சாமி என்றான். உன் கேள்விக்கு இதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் வழிகாட்டும் பாதையில் சென்று மனிதன் தன்னிடம் இருக்கும் வினைகள் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி இறைவனை அடைந்து விடுகிறானோ அப்பொழுதே எங்களின் சுத்தப்படுத்தும் கடமை முடிந்து விடும் என்றார்.

பற்று

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைக்க யாரும் முயற்சிக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். என் வீடு என் வீடு என்று அலறினான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான் அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு அதே நெருப்பு அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு மனிதனை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது மனிதனை சோகம் தாக்குவது இல்லை. நான் என்னுடையது எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

Rammalar's Weblog | Just another WordPress.com weblog ...

தர்மம்

ஒருமுறை ஆதிசங்கரர் ஒரு ஊர் வழியாக சென்று கொண்டிருந்தார். ஒரு சின்னக் குட்டையில் தண்ணீர் குறைவாக இருந்ததினால் அதிலிருந்த மீன்கள் தண்ணீருக்காகப் பரிதவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த வழியாக தண்ணீர் எடுத்துக் கொண்டு போன கிராமத்து ஜனங்களிடம் மீன்களுக்காக கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அதற்கு ஊர்மக்கள் சாமி உனக்கு வேறு வேலை வெட்டி இல்லை என்று நினைக்கிறோம். பத்து வருடமாக எங்கள் ஊரில் தண்ணீரே இல்லை. நாங்கள் குடிப்பதற்காக எவ்வளவோ மைல் நடந்து போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறோம். நீ மீன்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறாயே அதெல்லாம் தர முடியாது என்றார்கள்.

தண்ணீர் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு பத்து மைல் நடந்து போய் தன் கமண்டலத்தில் தண்ணீர் கொண்டு வந்து குட்டையில் கொட்டினார். அங்கே இருந்த மீன்கள் எல்லாம் தண்ணீரில் சந்தோஷமாக நீந்தின. உடனே இடி இடித்து மழை பெய்தது. இந்த மாதிரி ஒரு சிறிய தர்மத்திற்கே மழையை வரவழைக்க முடிகிறதே பத்து வருடமாக தண்ணீரே இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு தானதர்மம் செய்யத் தவறி விட்டீர்கள் என்றார்.

நீதி: எங்கு தான தர்மங்கள் சரியாக செய்யப்படுகறதோ அங்கு தண்ணீர் பஞ்சம் உணவு பஞ்சம் வராது.

பரமாத்மா

அந்தக் காலத்தில் புனித யாத்திரையாக கங்கையிலிருந்து காவடியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதருக்கு அபிஷேகம் செய்வார்கள். பின் ராமநாதபுரத்தின் கடற்கரை மண்ணை எடுத்துக் கொண்டு போய் காசியில் சேர்ப்பார்கள். ஏகநாதர் சில பிராமணர்களுடன் கங்கா ஜலத்தைக் காவடியில் எடுத்துக்கொண்டு ராமநாதபுர மாவட்டத்தை நோக்கி இரண்டாயிரம் மைல் வரை வந்து விட்டார். ராமநாதபுரம் இன்று மாதிரியே அந்த காலத்திலும் தண்ணீரில்லாமல் வெறும் மணல்வெளியாக பாலைவனமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு கழுதை வெயில் தாங்க முடியாமல் தண்ணீர் தாகத்துடன் தண்ணீருக்காக வாயை ஆ வென்று திறந்து கொண்டு மணலில் புரண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

ஏகநாதர் தன்னுடைய காவடியில் இருக்கிற கங்கா ஜலத்தை எடுத்து அந்தக் கழுதையின் வாயில் ஊற்றி கழுதையின் தாகத்தை தீர்த்து அதனை காப்பாற்றினார். அவருடன் வந்தவர்கள் நீ மகாபாவி எங்களுடைய கூட்டத்திலிருந்து உன்னை விலக்கப் போகிறோம். ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை ஒரு கழுதைக்குக் கொடுத்து விட்டாயே என்று திட்டினார்கள். அதற்கு ஏகநாதர் உங்களுக்கு இன்னும் அஞ்ஞானம் போகவில்லை. நான் எந்த ராமநாதேஸ்வரரைத் தேடி வந்தேனோ அவர் நான்கு மைல் முன்னாலேயே வந்து என்னிடம் இருக்கிற கங்கைத் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தார் கடவுள் இல்லாத வஸ்து உலகத்தில் எதுவுமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லாமும் எல்லோரும் பரமாத்மாதான் என்றார்.

அமைதி

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் ஒரு நாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன் வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால் ஏக நாதர் கோபம் கொள்ளவில்லை. விட்டல விட்டல என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒரு முறை இரு முறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான். ஆனால் ஏகநாதர் திரும்ப திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி சுவாமி என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி காலில் விழுந்தான். அதற்கு ஏகநாதர் நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் கங்கையில் பல முறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன் என்று பதிலளித்தார். இதனை கவனித்து வந்த ஒரு மனிதர் ஏகநாதரிடம் சென்று சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது இதன் ரகசியம் என்ன என்று கேட்டார்.

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு நீ உன் கையைக் காட்டு என்றார். அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது பின்பு இறந்து விடுவாய் என்றார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் உயிர்பயம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். ஏகநாதர் சொன்னார். நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். மரணம் வரும் எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்கு பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய் என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

உயர்ந்த எண்ணம்

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான். எல்லா வீட்டிலும் திருடியவன் அரண்மனையில் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான். திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு சிவனடியார் பக்தி அதிகம். தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை அடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். அன்று இரவு தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள். அரசே நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டும் என்றாள் அரசி. நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும். நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன் என்றான் அரசன். தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள் அரசி. நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான் அரசன்.

அதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு உறங்கி விட்டார்கள். வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டு ஒரு திட்டம் போட்டான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிடலாம். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடலாம். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பிதந்திரமாய் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.

மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில் மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். ஐயா தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன் தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். மன்னவா எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும் என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான். திருடன் அப்பொழுது சிந்தித்தான். சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால் உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்கு எல்லாம் கடவுளே என்று மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகான் ஆகிவிட்டான்.

நீதி: உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.