சாருகர்

சாருகர் ஒரு மாமிச வியாபாரி. தன் கடையில் எடை கல்லாக சாளக்கிராம மூர்த்தியை உபயோகித்து வந்தார். சாளக்கிராமத்தின் மகிமையை பக்தர் ஒருவர் சொல்லக்கேட்டு நாளடைவில் அந்த மூர்த்தி மேல் அன்பு ஏற்பட்டு வியாபார நேரம் தவிரத்து மற்ற நேரங்களில் அந்த சாளக்கிராம கல்லை வணங்கி வந்தார். ஒரு நாள் இதை கவனித்த விஷ்ணு பக்தர் அவரை ஏம்பா இந்த அடாத செயல் செய்கிறாய் என சாளக்கிராமத்தின் மகிமையையும் கிருஷ்ண பரமாத்மாவின் புகழையும் எடுத்து கூறி பண்டரி மேன்மையையும் கூற இதை அறிந்த சாருகர் பண்டரி யாத்திரை செல்ல முடிவு செய்து கிளம்பினார். வழியெல்லாம் பண்டரி நாதா பண்டரிநாதா எனு கூறி என்றும் விட்டல் விட்டல் என்று பஜனை செய்து கொண்டே சென்றார். இரவு பகலாக பஜனை செய்தபடி நடந்து சென்றார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார். இரவில் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் வேலை காரணமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே தாங்கள் யார்? என்று கேட்டாள். அதற்கு சாருகர் அம்மா வணக்கம் நான் ஒரு யாத்ரீகன். என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன் என்றார். அந்த பெண்மணி இவரிடம் என் உள்ளததைக் கொள்ளை கொண்ட உத்தமரே இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர் என அவரை ஆசையுடன் நெருங்கினாள். அம்மா இந்த உலகம் கடுகளவு மட்டுமே. இந்த கடுகளவு உலகத்தில் தவறு செய்யும் பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் பெண்களைத் தீண்டாதவன். நீங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம். கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம் என ஒழுக்கத்தை போதித்தார். அவள் காதுகளில் ஏதும் விழவில்லை. வெறி பிடித்தவளைப் போல ஓடி கத்தியை எடுத்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள். என் உயிரினும் இனிய உத்தமரே என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர் என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள். இந்தக் கொடுஞ் செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள். சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள். பெரியோர்களே இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு வேலையாக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள். ஊர்க்காரர்கள் சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். பின்னர் காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான்.

பாண்டுரங்கன் அனைத்தும் அறிவான் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர். குற்றம் புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத சாருகர் துடிதுடித்தார். கைகளில்லாமல் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி நமது பரம பக்தனான சாருகன் வருகிறான். கோயில் மேளம் குடை சுருட்டி பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள் என்று பணித்தருளினார். அனைவரும் சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார். அப்பாேது வெட்டப்பட்ட கைகள் இரண்டும் விட்டலன் அருளால் முளைத்தன.

தேவ தேவா விட்டலா என்று அன்பின் வெளிப்பாட்டில் கதறி அழுதார். மேலும் அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே என்று புலம்பினார். அப்போது விட்டலன் பிரசன்னமாகி அவரை தேற்றி கூறினார். அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓர் அந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். அங்கு பசுவை வெட்ட வந்த புலையன் ஒருவன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான் அந்த அந்தணன். புலையனும் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் தனவந்தனின் மனைவி. பசுவைக் கொலை செய்த புலையன்தான் அவளுடைய கணவன். உன்னுடைய துன்பங்கள் அனைத்தும் முற்பிறப்பில் நீ செய்த தீவினையால் வந்தவை. உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இப்போது தீர்ந்தது. இப்பிறவியில் நீ வினைகளின் காரணமாக பெற்ற துன்பத்திலும் விடாமால் செய்த உன் பக்தியின் பலனால் இன்று எமது தரிசனமும் கிடைத்தது என்று அருளிச் சென்றார். பின் சாருகர் காலமெல்லாம் பண்டரியிலேயே தங்கி நாம செபம் செய்து இறுதியில் வைகுண்டம் எழுந்தருளினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.