அமைதி

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் ஒரு நாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன் வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால் ஏக நாதர் கோபம் கொள்ளவில்லை. விட்டல விட்டல என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒரு முறை இரு முறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான். ஆனால் ஏகநாதர் திரும்ப திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி சுவாமி என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி காலில் விழுந்தான். அதற்கு ஏகநாதர் நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் கங்கையில் பல முறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன் என்று பதிலளித்தார். இதனை கவனித்து வந்த ஒரு மனிதர் ஏகநாதரிடம் சென்று சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது இதன் ரகசியம் என்ன என்று கேட்டார்.

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு நீ உன் கையைக் காட்டு என்றார். அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது பின்பு இறந்து விடுவாய் என்றார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் உயிர்பயம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். ஏகநாதர் சொன்னார். நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். மரணம் வரும் எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்கு பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய் என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.