ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -3

புலஸ்தியரின் மகனான விஸ்ரவஸ் சத்யவானாக சீலனாக சாந்த குணத்துடன் வாழ்ந்து வந்தான். இதையறிந்த பரத்வாஜர் என்னும் முனிவர் தன் மகள் தேவ வர்ணினி என்பவளை மணம் செய்து கொடுத்தார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எல்லா விதமான பிரம்ம குணங்களும் நிறைந்த குழந்தையைக் கண்டு புலத்தியர் மிகவும் மகிழ்ந்தார். நன்மை தரும் விதமான புத்தி இயல்பாகவே உடையவனாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். தேவ ரிஷிகளுடன் கலந்து ஆலோசித்து குழந்தைக்கு வைஸ்ரவனன் என்ற பெயர் வைத்த புலத்தியர் இவனும் தந்தையைப் போலவே தவ சீலனாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். வைஸ்ரவன் வளர்ந்து பெரியவன் ஆனான். உயர்ந்த தர்மம் எதுவோ அதை கடைபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து கடும் தவம் செய்து வந்தான். உக்ரமான விரதங்களை சங்கல்பம் செய்து கொண்டு ஆயிரம் வருடங்கள் தவம் செய்தான். சில நாட்கள் தண்ணீர் மட்டுமே உணவாகவும் பின் காற்றை மட்டும் உணவாகவும் பின் அதுவும் இல்லாமல் ஆகாரமே இல்லாமல் என்று ஆயிரம் வருடங்கள் செய்த தவம் ஒரு வருடம் போல சென்றது.

வைஸ்ரவனின் ஆயிரம் வருட தவத்தில் மிகவும் மகிழ்ந்த பிரம்மா அவனுக்கு தரிசனம் கொடுத்தார். உன் தவச் சிறப்பைக் கண்டு மெச்சுகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பிரம்மாவை எதிரில் கண்ட வைஸ்ரவணன் நான் லோக பாலனாக ஆக வேண்டும். செல்வத்தைக் காப்பாற்றுபவனாக உயர்ந்த பதவி வேண்டும் என்றான். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் நானே நான்காவது லோக பாலனை நியமிக்க எண்ணியிருந்தேன். இந்திரன் வருணன் யமன் இவர்களுக்கு சமமான அந்தஸ்தை பெறுவாய் என்று ஆசிர்வதித்து செல்வத்துக்கு அதிபதியான தனாதிபதி (தனத்தின் அதிபதி) என்ற பதவியை ஏற்றுக் கொள். இந்திரன் வருணன் யமன் குபேரன் என்ற நால்வரும் லோக பாலர்களாக விளங்குவீர்கள் என்றார். பிரம்மா வைஸ்ரவனுக்கு சூரியன் போல பிரகாசமான புஷ்பக விமானத்தை பரிசாக அளித்தார். இது உனக்கு வாகனமாக இருக்கட்டும் என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்.

வைஸ்ரவனன் தனது தந்தையான விஸ்ரவஸ்யை வந்து வணங்கி எனக்கு தேவையான வரங்களை பிரம்மாவிடம் கேட்டு பெற்றுக் கொண்டேன். பிரம்மா என்னை தனாதிபதி ஆக்கி விட்டார். நான் வசிக்க தகுந்த இடமாக ஒன்று சொல்லுங்கள். அங்கு எந்த பிராணிக்கும் எந்த விதமான தொந்தரவும் ஏற்படக் கூடாது என்றான். விஸ்ரவஸ் சற்று யோசித்து விட்டு தென் சமுத்திரக் கரையில் திரிகூடம் என்று ஒரு பர்வதம் உள்ளது. அதன் மேல் விசாலமாக இந்திரனின் நகரம் போலவே இலங்கை என்ற நகரம் ரம்யமாக அமைந்துள்ளது. தேவலோகத்து விஸ்வகர்மா இந்திரனுக்கு அமராவதியை கட்டிக் கொடுத்தது போல இதனை ராட்சசர்களுக்கு என்று கட்டியிருக்கிறார். தங்கத்தால் செய்யப்பட்ட தூண்கள் தங்கத்தில் வைடூரியம் இழைத்து செய்யப்பட்ட தோரணங்கள் என்று செல்வச் செழிப்புடன் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட நகரம் அது. இந்த இலங்கை நகரம் நீ வசிக்க ஏற்றது. அங்கிருந்த ராட்சசர்கள் அனைவரும் விஷ்ணுவிற்கு பயந்து ஓடி விட்டார்கள். யாரும் இல்லாததால் அந்த நகரம் தற்போது சூன்யமாக இருக்கிறது. தற்சமயம் இலங்கைக்கு உரிமையாளன் தலைவன் என்று யாரும் இல்லை. அந்த இடத்தில் நீ சௌக்யமாக வசிக்கலாம். போய் வா உனக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுப்பினார். வைஸ்ரவணன் இலங்கையை தன்னுடையதாக்கிக் கொண்டு மலையின் உச்சியில் தன் விருப்பமானவர்கள் ஆயிரக்கணக்கானோர் உடன் வர மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஆரம்பித்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் யாவரும் மன நிறைவோடு இருந்தனர். நான்கு பக்கமும் சமுத்திரம் சூழ்ந்த அந்த நகரத்தில் இருந்து கொண்டு அவ்வப்பொழுது புஷ்பக விமானத்தில் தாய் தந்தையரைக் காண வந்து கொண்டிருந்தான். தேவ கந்தர்வர்கள் இவனுடைய குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.

தொடரும்………..

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -2

ராமரிடம் அகத்தியர் பேச ஆரம்பித்தார். இந்திரஜித் யாராலும் வெல்ல முடியாத பலம் அவனுக்கு எப்படி வளர்ந்தது என்பதை நான் சொல்கிறேன். அதற்கு முன் ராவணனின் பிறப்பு அவன் யாரிடம் எப்படி வரம் பெற்றான் என்பதை சொல்கிறேன் கேட்டுக் கொள் என்று ராவணனின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார் அகத்தியர். முன்பு க்ருத யுகத்தில் பிரம்மாவின் மானச புத்திரனாகத் தோன்றியவர் புலஸ்தியர். அவர் குணம் தர்மம் சீலம் இவைகளில் அதிக பலசாலியாக இருந்து பிரம்ம ரிஷி என்ற பட்டத்தை பெற்றார். தன் குணங்களால் எல்லோருக்கும் பிரியமானவராக இருந்தார். இமய மலைச் சாரலில் த்ருண பிந்து என்ற ராஜரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினார். அங்கு வசிக்கும் பொழுது தன் தவத்தை தொடர்ந்தும் வேதங்களில் படித்ததை மனனம் செய்யும் முறையையும் கவனமாக செய்து வந்தார். அச்சமயம் த்ருணபிந்து ராஜரிஷி மகளை சந்திக்க அவளது தோழிகளான சில தேவலோகத்துப் பெண்கள் அந்த ஆசிரமத்திற்கு வந்தனர். வந்தவர்கள் அதன் அழகில் கவரப்பட்டு ஆடிப்பாடி இன்பமாக இருந்தனர். தவம் செய்யும் முனிவருக்கு இது இடையூறாக இருந்தது. இதனை அப்பெண்கள் அறியாமல் தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். தனது தவத்திற்கு இடையூராக இருந்த பெண்களின் மீது கோபம் கொண்ட முனிவர் பெண்களில் யார் என் முன் வந்தாலும் அவள் கர்பிணி ஆவாள் என்று சபித்தார். இதைக் கேட்ட பெண்கள் ப்ரும்ம ரிஷியின் சாபம் என்பதால் பயந்து ஓடி விட்டனர்.

த்ருண பிந்துவின் மகள் இதனை அறியாமல் தனது தோழிகளின் வரவை எதிர்பார்த்து அங்கு நடமாடிக் கொண்டிருந்தாள். அதே சமயம் புலஸ்தியர் வேதங்களை சொல்லிக் கொண்ருந்தார். வேதங்கள் கேட்கும் சத்தம் வரும் இடத்தை நோக்கி அவள் சென்று புலஸ்தியரின் முன்பு அவள் நின்றதும் அவளின் உடல் வெளுக்க ஆரம்பித்தது. கர்பத்துடன் உடல் மாற்றம் அடைந்தாள். தன் சாபம் என்ன எதனால் இந்த உரு மாற்றம் என்பது புரியாமல் நடுங்கினாள். தந்தையிடம் சென்று அழுது கொண்டே தனக்கு என்னவோ ஆகி விட்டது என்றாள். த்ருண பிந்து மகளைப் பார்த்து திகைத்து எங்கு சென்றாய் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு அவள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை அப்பா. நான் புலஸ்தியர் இருக்கும் இடத்தின் அருகே எனது தோழிகளை தேடிக் கொண்டு சென்றேன் அங்கு தோழிகள் யாரையும் காணவில்லை. அங்கேயே சற்று நேரம் தேடிக் கொண்டு நின்றேன். புலத்தியர் அங்கு வேதங்களை ஓதிக் கொண்டிருந்தார். வேதங்களை கேட்டுக் கொண்டே அவரின் முன்பு போய் நின்றேன். திடீரென்று இது போல என் உடல் மாற்றமடைந்து விட்டது. உடனே பயந்து ஓடி வந்து விட்டேன் என்றாள். த்ருண பிந்து தன் தவ வலிமையால் நடந்ததை அறிந்து கொண்டார்.

த்ருண பிந்து தன் மகளை அழைத்துக் கொண்டு புலஸ்தியர் தவம் செய்யும் இடத்திற்கு வந்தார். புலஸ்தியரைப் பார்த்து பிரம்ம ரிஷியே இவள் எனது மகள். நல்ல குணங்களுடன் சீலமாக வளர்க்கப் பட்டவள். இவளை தங்களுக்கு தானமாக தருகிறேன். உங்களுடைய யாகத்திற்கும் தவத்திற்கும் உதவி செய்து பணிவிடை செய்வாள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நடந்ததை தனது தவ வலிமையில் தெரிந்து கொண்ட புலஸ்தியரும் த்ருண பிந்துவின் மகளே ஏற்றுக் கொண்டார். சில நாட்களில் அவளுடைய சீலமும் அவள் கவனத்துடன் நடந்து கொண்டதும் புலத்தியருக்கு திருப்தியை உண்டாக்கியது. இதனால் மகிழ்ந்த புலத்தியர் அவளது மனக் கவலையை போக்க எண்ணி அவளிடம் பேச ஆரம்பித்தார். உனது குணம் மற்றும் பணிவிடைகளால் நான் மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு பிறக்கப் போகும் குழந்தை பௌலஸ்த்யன் என்ற பெயருடன் எனக்கு சமமான ஆற்றலுடன் பெயர் பெற்று விளங்குவான். நான் வேதம் சொல்லி நீ கேட்டதால் விஸ்ரவஸ் (வேதங்களை நன்கு கேட்டவன்) என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்குவான் என்றார். இதைக் கேட்டவள் மன நிம்மதியடைந்து நாளடைவில் விஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றாள். விஸ்ரவஸ் கல்வியில் சிறந்தவனாகவும் எல்லா ஜீவன்களையும் சமமாக காணும் மனப் பான்மையுடனும் விரதங்களை கடைபிடித்தும் ஆசாரங்களுடன் தன் தந்தையைப் போலவே தவம் செய்து மூவுலகிலும் பெயரும் புகழும் பெற்று வளர்ந்து வந்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 1

ராமர் அரசனானதும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காகவும் ராவணனை அழித்ததற்காக அவரை பாரட்டுவதற்காகவும் நான்கு திசைகளில் இருந்தும் முனிவர்கள் பலர் அயோத்திக்கு வந்தார்கள். அரசவைக்கு வந்த முனிவர்களுக்கு தக்க மரியாதை அளித்து அமர வைத்தார் ராமர். பொன் வேலைப் பாடமைந்த விரிப்புகளில் சிலரும் குசம் என்ற புல்லைப் பரப்பி சிலரும் மான் தோல் விரித்து சிலரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமர்ந்தார்கள். ராமர் வந்தவர்களின் நலத்தை விசாரித்தார். அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்து ராமரை பாராட்டி வாழ்த்தினார்கள்.

ராமரிடம் அகத்தியர் பேச ஆரம்பித்தார். தேவர்களாலும் வெல்ல முடியாத ராட்சசர்களின் அரசன் ராவணனை அழித்து விட்டாய். மிகப் பெரிய வீரனை வென்று வெற்றி வாகை சூடியவனாக உன்னைக் காண்கிறோம். சகோதரன் லட்மணனுடனும் சீதையுடனும் நலமாக திரும்பி வந்து பரதன் மற்றும் சத்ருக்கனனுடன் சேர்ந்தது விட்டாய் மிக்க மகிழ்ச்சி. கும்பகர்ணன், பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மகோதரன், அகம்பனன் ஆகிய ராட்சசர்கள் மிகப்பெரிய உடலமைப்பை கொண்டவர்கள். அவர்களை வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டி விட்டாய். கும்பனும், நிகும்பனும் சிறந்த வீரர்கள் ஆவார்கள். யுத்தம் என்றாலே மதம் கொண்டு வரும் காலாந்தகன், யமாந்தகர்கள், யக்ஞ கோபன், தூம்ராக்ஷன் ஆகிய இவர்கள் சாஸ்திரம் நன்றாக அறிந்தவர்கள். இவர்களை அழிப்பது மிகவும் கடினமானது. இவர்களையும் உனது காலனுக்கு சமமான அம்புகளால் அடித்து வீழ்த்தினாய். மகா மாயாவியான இந்திரஜித் யாராலும் வெற்றி பெற முடியாது என்ற வரத்தை பெற்றவன். அவனை நீ அழித்ததும் யுத்தத்தில் ராமர் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கை பல முனிவர்களுக்கு வந்தது. இதனால் இனி ராட்சசர்களால் எந்தத் தொல்லையும் இல்லை என்று அவர்கள் நிம்மதி அடைந்தனர். அனைத்தும் முடிந்ததும் உன்னிடம் சரணடைந்த விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கி விட்டாய். தர்மத்தின் படியே நடந்து உனது பராக்கிரமத்தை காட்டி தீயவர்களை அழித்து அனைவருக்கும் நன்மை செய்து தர்மத்தை காத்து விட்டாய் என்று ராமரை வாழ்த்தினார் அகத்தியர்.

ராமர் அகத்தியரிடம் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது தங்களிடம் கேட்கிறேன் என்று தனது கேள்வியை கேட்க ஆரம்பித்தார். தேவர்களும் வெல்ல முடியாத கும்பகர்ணன் அழிந்தான். யுத்தத்தில் மதம் பிடித்தவர்களாக செயல்படும் தேவாந்தகன் நராந்தகர்கள் அழிந்தார்கள். மேலும் பல வலிமையான ராட்சசர்கள் அழிந்தார்கள். இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக அழியும் போது மகிழ்ச்சி அடையாத முனிவர்கள் இந்திரஜித்தை அழித்ததும் வெற்றி பெற்றோம் என்று ஏன் மகிழ்ந்தார்கள். இந்திரஜித் அழிந்தாலும் மூன்று உலகங்களையும் வென்ற ராவணன் ராட்சசர்களுக்கு தலைவனாக இருக்கிறான். அவனை அழிப்பதற்கு முன்பாக ஏன் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்திரஜித்தை மட்டும் வீரனாக தாங்கள் புகழ்ந்து பேசுவதற்கு என்ன காரணம். யுத்த களத்தில் ராவணனை விட இந்திரஜித் எப்படி வலிமையுள்ளவனாக இருந்தான். இந்திரனையும் வெற்றி பெறும் அளவிற்கு அவனுக்கு ஆற்றல் எப்படி கிடைத்தது. பல வலிமையுள்ள அஸ்திரங்களை வைத்திருந்தான் இந்திரஜித். அதனை அவன் எப்படிப் பெற்றான். அவனுக்கு ஏதேனும் விசேச தன்மைகள் இருக்கிறதா என்று தயவு செய்து பதில் சொல்லுங்கள். இந்த கேள்விக்கான பதிலை நான் அரசனாக தங்களிடம் கட்டளையிட்டு கேட்கவில்லை. சாதாரண மனிதனாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கிறேன். இதில் ரகசியம் ஏதேனும் இருக்கிறது சொல்லக்கூடாது என்று இருந்தால் சொல்ல வேண்டாம் தங்களை நான் வற்புறுத்தவில்லை என்று அகத்தியரிடம் பேசி முடித்தார் ராமர்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் முன்னுரை பகுதி – 2

ராமர் யுத்தம் முடிந்ததும் ராமேஸ்வரத்திற்கு வந்து சிவ பூஜை செய்த பிறகே அயோத்திக்கு சென்றார் என்ற உண்மைச் செய்தி ஒன்று உள்ளது. இந்த செய்தி வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் இல்லை கம்பர் எழுதிய கம்பராமாயணத்திலும் இல்லை. ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் ஆரம்பித்த போது முதலில் கங்கை கரையைத் தாண்டி குகனின் இருப்பிடத்தில் இருக்கும் போது அங்கு வந்து சந்தித்த பரதன் ராமரை மீண்டும் அயோத்திக்கு அழைத்தான். ராமர் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக வர மறுத்து விட்டார். அதற்கு பரதன் பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் முடிந்த அடுத்த நாளே ராமர் அயோத்திக்கு திரும்பி வர வேண்டும் என்ற வரத்தை வாங்கினான். ராமர் தான் கொடுத்த வாக்குப்படி வரவில்லை என்றால் தன் உடலை விட்டு இறந்து விடுவேன் என்று ராமரிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். யுத்தம் முடிந்து ராமர் சீதையை அடைந்ததும் பதினான்கு ஆண்டு வனவாச காலத்தின் இறுதி நாட்கள் வந்துவிட்டது. பரதனிடம் கொடுத்த வாக்குப்படி உடனடியாக அயோத்திக்குத் திரும்ப வேண்டியது இருப்பதால் ராமர் இலங்கையில் இருந்து நேராக புஷ்பக விமானத்தில் அயோத்தியின் எல்லையில் இருக்கும் கங்கை கரைக்கு வந்து விட்டார். அயோத்திக்குத் திரும்பியதும் அனைவரது விருப்பத்தின்படி பட்டாபிஷேகத்தை ஏற்றுக் கொண்டு அரசனாக பதவி ஏற்றுக் கொண்டார்.

ராமர் அரசனாக பதவி ஏற்றதும் முதலில் மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்த பிறகு தனக்கும் தனக்காக யுத்தம் செய்தவர்களுக்கும் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்தனை செய்தார். யுத்தத்தில் பலர் இறப்பதற்கு காரணமாக தானும் லட்சுமணனும் வானரங்களும் விபீஷணனும் இருந்தபடியால் அனைவருக்கும் பலவிதமான தோஷங்கள் தொற்றிக் கொண்டன என்பதை அறிந்து கொள்கிறார். அவற்றை போக்குவதற்காக பூஜைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பூஜைகளை செய்வதற்கான குறிப்பிட்ட நாளையும் நேரத்தையும் வேதத்தில் உள்ள ஆகமங்களின் படி செய்ய அதற்காக பணிகளை மேற்கொண்டார். இதற்காக தனது நண்பர்களான சுக்ரீவனையும் விபீஷணனையும் ராமேஸ்வரத்திற்கு வரவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினார்.

ராமரிடம் யுத்தம் செய்து அழிந்த ராவணனின் குணங்கள் கெட்டுப் போய் கீழானதாக இருந்ததே தவிர அவன் சிவன் மீது கொண்ட பக்தியும் அவன் செய்த பூஜைகளும் அவனது பலமும் மிகவும் உயர்வானதாகவே இருந்தது. அதனால் ராவணனை அழித்த ராமருக்கு மூன்று விதமான தோஷங்கள் தொற்றிக் கொண்டன. அவை பிரம்ம ஹத்தி தோஷம், வீர ஹத்தி தோஷம் மற்றும் சாயா ஹத்தி தோஷம் ஆகும். ராவணன் சிறந்த சிவபக்தன். முறையாக வேதங்களை கற்று ஆகமங்களின் படி தினந்தோறும் யாகங்களை செய்தவன். அவனை ராமர் அழித்ததால் பிரம்ம ஹத்தி தோஷம் ராமருக்கு ஏற்பட்டது. பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்த ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கார்த்த வீர்யார்ஜூனன் மற்றும் வாலி என்ற இருவரைத் தவிர தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்ட மிகச்சிறந்த வீரன் ராவணன். ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு வீர ஹத்தி தோஷம் உண்டானது. வீர ஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் (திருமறைக்காடு) தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர். மூன்றாவதாக சாயா என்றால் பிரகாசமான ஒளி என்று அர்த்தம். சாயா என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். ராவணனுக்கு உருவத்தில் கம்பீரமும், வேத சாஸ்திரப் படிப்பும், சங்கீத ஞானமும், சிவ பக்தியும் ஆகிய பல சாயாக்கள் இருந்ததால் அவனை அழித்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. சாயா ஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரம் தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர்.

ராமர் தன்னுடைய பிரம்ம ஹத்தி தோஷம் விலகுவதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட ராமேஸ்வரத்திற்கு தனது நண்பர்களான சுக்ரீவன் அனுமன் விபீஷணன் ஆகியோருடன் வந்தார். கடற்கரையில் சிவ பூஜை செய்வதற்காக குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனிடம் கேட்டுக் கொண்டார் ராமர். ராமரின் கட்டளையை நிறைவேற்ற அனுமன் காசி நோக்கிப் புறப்பட்டார். அனுமன் காசியில் இருந்து சிவ லிங்கம் கொண்டு வருவதற்கு வெகு நேரம் ஆகியது. குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பாக சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமர். அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட சீதை கடற்கரை மணலிலேயே ஒரு சிவலிங்கத்தை செய்தாள். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு வழிபாடும் செய்து முடித்தார் ராமர். இந்த லிங்கமே தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் வருந்தினார். அதனால் அந்த மணல் லிங்கத்தை அங்கிருந்து தனது வலிமையான வாலால் எடுக்க முயன்றார் அனுமன். இந்த முயற்சியில் தோல்வியுற்ற அனுமனுக்கு அவரது வால் அறுந்தது. அதனால் வருத்தமடைந்த அனுமனிடம் ராமர் தனக்காக மிகவும் சிரமப்பட்டு லிங்கத்தை கொண்டு வந்ததற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் கொண்டு வந்த காசி லிங்கத்திற்கு முதல் பூஜை நடந்த பிறகே தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜைகள் நடக்கும் என்று ஆறுதல் கூறினார். அந்த லிங்கம் தற்போது ராமேஸ்வரத்தில் ராமநாதருக்கு வடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காசி விஸ்வநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ராமேஸ்வரத்தில் தினந்தோறும் அதிகாலையில் காசி விஸ்வநாதருக்கு முதல் பூஜை செய்த பின்னரே ராமர் பிரதிஷ்டை செய்த ராமநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது. ராமருடன் பல இடங்களுக்கு சென்ற சுக்ரீவன் விபீஷணன் உட்பட யுத்தம் செய்து தோஷங்கள் உள்ள அனைவரும் ராமரின் கட்டளைப்படி பூஜைகள் செய்து தங்களது தோஷங்களை போக்கிக் கொண்டார்கள்.

உத்தர காண்டம் முன்னுரை முற்றுப் பெற்றது.

ராமாயணம் 7. உத்தர காண்டம் முன்னுரை பகுதி – 1

ராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இதிகாசமும் தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணமும் யுத்த காண்டம் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. ராமர் பல்லாண்டு நெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தை வால்மீகியும் கம்பரும் நிறைவு செய்து விட்டார்கள். உத்தர காண்டம் பகுதி வால்மீகி மற்றும் கம்பரின் காலத்திற்குப் பின்னால் வந்தவர்களே எழுதினார்கள். உத்தர என்ற சொல்லுக்கு பின்னால் என்றும் கடைசி என்றும் பொருள். உத்தர காண்ட வரலாற்றை உத்தர ராமசரிதம் என்ற பெயரில் கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பவபூதி என்ற வடமொழி அறிஞர் நாடகமாக இயற்றினார். தமிழில் கம்பரின் சீடரான ஒட்டக் கூத்தர் உத்தர காண்ட வரலாற்றை இயற்றினார். ஒட்டக் கூத்தருக்கு வாணிதாசன் என்ற பெயரும் உண்டு என்று சோழ மண்டலச் சதகத்தில் சொல்லப்படுகின்றது. இவர் இயற்றிய பாடல்களின் மாண்பைக் கண்டு சோழன் இவரைத் தம் அரசவைப் புலவராக ஆக்கிக் கொண்டார். இவர் தக்கயாகப் பரணி, மூவருலா ஆகிய நூல்களை இயற்றினார். உத்தர காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டது.

ராமர் தான் ஆட்சி செய்யும் அயோத்தியில் இருக்கும் ஒரு சலவைத் தொழிலாளி அவரது மனைவியிடம் சீதையைப் பற்றித் தவறாக பேசிய பேச்சினால் வருத்தமுற்று கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்புவதும், காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும், ஆசிரமத்தில் சீதை லவன் குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும், இரு குழந்தைகளுக்கும் வால்மீகி முனிவர் கல்வியும் போர்க்கலைகளையும் கற்பித்தலும், சீதையின் உருவ பொம்மையைத் தனதருகில் வைத்துக் கொண்டு ராமர் அயோத்தியில் அசுவமேத யாகம் செய்ததும், பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட அசுவமேத யாகக் குதிரைகளை லவ குசர்கள் கட்டி வைத்தலும், யாகக் குதிரைகளை மீட்க வந்த சத்துருக்கனன் பரதன் லட்சுமணன் ஆகிய மூவரையும் லவ குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் ராமரே நேரில் வந்து லவ குசர்களை சந்தித்து அவர்கள் தனது குழந்தைகள் என்பதைத் தெரிந்து கொண்டு யாகக் குதிரைகளுடன் லவ குசர்களையும் அயோத்திக்கு அழைத்துச் செல்வதும், ராமருடன் திரும்பி செல்வதை விரும்பாத சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி உடலை விடுவதும், ராமர் பல ஆண்டுகள் அயோத்தியை ஆண்ட பின்னர் தனது நாட்டின் பகுதிகளை லவ குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தலும், ராமர் வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து பூமியை விட்டு வைகுந்தம் செல்லுவதும் ஆகிய இவை அனைத்தும் உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.

ராமாயணத்தை பல இடங்களில் உபன்யாசங்கள் செய்யும் போது யுத்த காண்டத்துடன் முடித்து விடுவார்கள். உத்திர காண்டம் உபன்யாசத்தில் யாரும் செய்வதில்லை. இதற்கான காரணத்தை காஞ்சி மகா பெரியவரிடம் கேட்ட பொழுது அதற்கு அவர் உத்தர காண்டத்தில் ராமர் வைகுண்டம் சென்றார் என்று இருக்கிறது. ராமர் எப்போதும் நம்முடனே இருக்க வேண்டும் வைகுண்டம் செல்லக் கூடாது என்பதால் யாரும் உத்தர காண்டத்தை உபன்யாசமோ பாராயணமோ செய்வதில்லை என்று பதில் அளித்துள்ளார். உத்தர காண்டத்தில் அறிந்து கொள்ள வேண்டிய பல அபூர்வமான செய்திகள் நிறைய இருக்கிறது அதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு உதாரணமாக அயோத்தியில் ஒரு குடிமகன் சீதையை சந்தேகமாக பேசிய காரணத்திற்காக சீதையை காட்டிற்கு ராமர் அனுப்பி விடுவதிலிருந்து ஒரு நாட்டின் அரசனாக இருப்பவன் 100% மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு மக்களுக்கு ஒரு நாட்டின் அரசியின் மேல் சந்தேகம் இருக்கும் வரை அவள் அந்த நாட்டின் அரசியாக இருக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.