சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது தண்ணீருக்குள் ஒளிந்திருந்த முதலை சாதுவின் கால்களை கவ்விப் பிடித்தது. சாது முதலையை கருணையாக பார்த்தார். முதலை சாதுவிடம் பேசியது. சாதுவே இந்தக் குளம் என் ஆளுகைக்குட்பட்டது. இதில் இறங்குபவர்களை நான் தின்று விடுவேன். இன்று நீங்கள் எனது பசியை போக்க வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கருணையோடு நீங்கள் என்னைப் பார்த்தாலும் நான் உங்களை விட மாட்டேன் என்றது. அதற்கு சாது முதலையே மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லை. என் குருகுலத்தில் படிக்கும் சீடர்களுக்கு கல்வி இன்னமும் நிறைவுபெறவில்லை. நான் இறந்து விட்டால் அவர்களின் படிப்பு பாதியில் நின்று விடும். அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறதே தவிர உயிரை இழப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை நீ விட்டால் அதற்கு உபகாரகமாக ஏதேனும் இருந்தால் சொல் அதனை செய்கிறேன் என்றார் சாது. யோசித்தது முதலை. சாதுவே உங்களை நான் விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தினமும் சீடர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இந்த குளத்திற்கு எதிரில் அமர்ந்து கொள்ள வேண்டும். தாகத்தோடு வருபவர்கள் குளத்தில் இறங்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் குளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டும். அவர்கள் குளத்தில் இறங்குவார்கள். பிறகு நான் அவர்களை கொன்று தின்று விடுவேன். இதைச் செய்வதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன். அதே போல சத்தியத்தை மீறினால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாவம் உங்களை வந்தடையும் என்றது முதலை. சாதுவும் முதலை சொன்னதை ஏற்றுக் கொண்டு முதலைக்கு சத்தியம் செய்து கொடுத்தார். முதலை அவரை விடுவித்தது. அங்கிருந்து புறப்பட்டார்.
சாது முதலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடுத்த நாள் குளக்கரைக்கு வந்து எதிரில் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு மீனவன் வந்து சாதுவிடம் பேசினான். ஐயா நான் மீன் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தக் குளத்தில் வலை வீசினால் அதிகமாக மீன்கள் கிடைக்குமா? என்று கேட்டான். மீன் பிடிப்பவரே இந்தக் குளம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது பெருமை வாய்ந்தது என்று குளத்தை மிகவும் பெருமையாக பேசி தொடர்ந்தார். ஆனால் மீன் கிடைக்குமா என்ற உனது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இந்தக் குளத்தில் வசிக்கும் முதலையிடம் கேள். உன் கேள்விக்கு முதலையிடம் பதில் கிடைக்கும் என்றார். இந்தக் குளத்தில் முதலை இருக்கிறதா? ஐயோ என்று கத்தியவாறு ஓட்டம் பிடித்தான். இதைப் பார்த்த முதலை குளத்திலிருந்து வெளியே வந்தது. சாதுவே இதுதான் சத்தியத்தை காப்பாற்றுகிற லட்சணமா? நீங்கள் அவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் ஏன் ஓடுகிறான்? என்று கோபத்தோடு கேட்டது. முதலையே குளத்தைப் பற்றியும் குளத்தில் உள்ள உன்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. சாது தம்மை ஏமாற்றுகிறாரோ என்று சந்தேகமடைந்த முதலை உடனே தன்னுடைய குட்டியை கூட்டி வந்தது. சாதுவே இது என் குட்டி. நீங்கள் வைத்திருக்கும் துணியில் இதை மூட்டையாக கட்டி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வருபவர்களிடம் என்ன பேசுகிறீர்கள் என்பதை குட்டி கேட்டு என்னிடம் சொல்லும் என்றது.
சாதுவின் பக்கத்தில் மூட்டையில் குட்டி இருந்தது. அன்று அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது. சாதுவே இந்தப் பையில் தங்க நகைகள் இருக்கின்றன. நான் குளத்தில் குளித்துவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். இந்தக் குளம் குளிப்பதற்கு உகந்ததுதானே? என்று கேட்டான். வழிப்போக்கரே குளத்து நீர் மிகவும் நல்ல நீர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மிகவும் சிறப்பான குளம். நேற்று ஒருவன் இப்படித்தான் தனது பொருளை எனது அருகில் இருக்கும் துணியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினான். அவன் இன்னும் வரவில்லை. குளத்தில் இறங்கியவன் வந்ததும் அவனிடம் கேட்டுக்கொள் என்றார் சாது. என்னது நேற்று போனவன் இன்னும் வரலையா? குளத்தில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஓடினான். இதனை கண்ட தாய் முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது. கோபத்தோடு சாதுவைப் பார்த்து நேற்று யார் வந்து உங்களிடம் மூட்டையை கொடுத்தது என்று கத்தியது. முதலையே நீ தானே என்னிடம் உனது குட்டியை இந்த துணியில் வைத்து விட்டு குளத்தில் இறங்கினாய். அதன்பின் நீதான் வரவேயில்லையே. குளத்தை பெருமையாகத்தானே சொல்லியிருக்கிறேன். நான் சத்தியத்தை மீறவில்லை என்றார் சாது. அடுத்த நாள் அந்த நாட்டு மந்திரி குளக்கரைக்கு வந்தார். சாதுவைப் பார்த்து இந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். குளம் பாதுகாப்பானதா? என்று கேட்டார். மந்திரியே இந்த குளத்திற்கு செல்லும் பாதையைப் பாருங்கள். மனிதர்கள் குளத்தை நோக்கி நடந்து சென்ற பாதத் தடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை பாருங்கள். அப்படியானால் இந்த குளத்தில் அதிகமான மக்கள் குளிக்க சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த குளம் குளிக்க சிறப்பான குளம் போல தெரிகிறது. ஆனால் குளத்திலிருந்து திரும்பிய மனிதர்களின் பாதத் தடங்களும் சரி சமமாக இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். மந்திரி பார்த்தார். குளத்தை நோக்கிச் சென்ற பாதச் சுவடுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. குளத்திலிருந்து கரைக்குத் திரும்பிய பாதச் சுவடுகள் ஏதுமில்லை. குளத்திற்குள் சென்றவர்கள் திரும்பி வரவில்லை குளத்தில் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்ட மந்திரி சாதுவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். இதனை கண்ட முதலை குட்டியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டது.
சாதுவைப் பார்த்து முதலை சாதுவே நீங்கள் சத்தியத்தை மீறிவிட்டீர்கள். குளக் கரையில் அமர்ந்து எனக்கு உணவாக வேண்டியவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமல்ல நீங்கள் வாக்கு மீறி விட்டீர்கள் ஆகவே உங்களை பாவம் வந்து சேரும் என்று கத்தியது. அதற்கு சாது முதலையே உன் பார்வையில் உன் கோபம் நியாயமானது உனது பார்வையில் நான் கொடுத்த வாக்கை மீறியவனாக உனக்கு தெரிகிறது. ஆனால் தர்மத்தின்படியே நான் நடந்து கொண்டேன். தர்மத்துக்கு எதிராக எதையும் சாதுவானவர்கள் செய்யமாட்டார்கள். நான் காப்பாற்ற வேண்டிய தர்மங்கள் இங்கு இரண்டு இருக்கிறது. ஒன்று உனக்கு கொடுத்த வாக்கை தவறாமல் காப்பது. இரண்டு இங்கு வந்தவர்களுக்கு குளத்தைப் பற்றி கேள்வி கேட்கும் போது நான் சொல்லும் பதில் சரியாக இருக்கும் என்று என்னை நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவது எனது கடமை. ஒரே நேரத்தில் இரண்டு தர்மங்களை நான் காப்பாற்றியாக வேண்டும். குளத்தை பெருமையாக கூறி உனக்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றினேன். அதே போல் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமான வார்த்தையை கூறி அவர்களையும் காப்பாற்றினேன். ஆக நான் தர்மத்தை மீறவில்லை. என்னை பாவம் அண்டாது என்று சொல்லி முதலைக்கு கொடுத்த வாக்கின்படி மீண்டும் குளத்தின் எதிரே சென்று அமர்ந்து கொண்டார். சாது இருக்கும் வரை தனக்கு உணவு கிடைக்காது என்று உணர்ந்த முதலை தனது உணவிற்கு வேறு இடத்திற்கு சென்று விட்டது.
