நாம் யார்?

ஒரு ராஜா யுத்தத்தில் தோற்றுப் போகிற மாதிரியான சூழல் வந்ததும் தப்பித்துப் போகலாம் என்று எண்ணுகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு குதிரையில் ஏறி தப்பிப் போகிறான். எதிரி நாட்டுக்காரர்கள் துரத்திக் கொண்டு வந்ததைப் பார்த்தலும் ராஜா தன் மனைவியிடம் நான் முடிந்தால் இவர்களுடன் சண்டை போட்டு ஜெயித்து வருவேன். நீ கர்ப்பிணியாக இருக்கிறாய் உன் வயிற்றில் இருப்பது நம் நாட்டின் வாரிசு. அவனை வைத்து எப்படியாவது நாட்டை மீட்பதற்கு தயார் செய். நாட்டிற்காக நீ தப்பித்துப் போ என்கிறான். அதனால் ராணி குதிரையின் மேல் ஏறி தப்பிப் போகிறாள். சண்டையில் ராஜா இறந்து விடுகிறார். ராணி சிறிது தூரம் சென்றவுடன் அவளுக்கு பிரசவம் ஆகிறது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்து விடுகிறாள். அந்த இடம் வேடர்கள் வசிக்கிற ஒரு காடு. அவர்களுக்கு இந்தப்பெண்மணி ராணி என்பதும் தெரியாது. அதனால் ராஜகுமாரன் தான் யார் என்று தெரியாமல் வேடவர்களுடைய காட்டில் வளர்கிறான். அவன் ராஜகுமாரன் என்கிற விஷயம் ராஜா ராணி இரண்டு பேருக்கு மாத்திரம் தான் தெரியும். இரண்டு பேரும் உயிரோடு இல்லை. அவன் வேடர்களைப் போலவே சாப்பிட்டு அவர்கள் மொழியை பேசி வளர்கிறான்.

அந்த நாட்டில் இருந்த மந்திரி புத்திசாலி. தப்பித்துப் போன ராஜா ஒரு வேளை உயிரோடு இருந்திருந்தால் இந்த நேரம் வந்திருப்பார். வரவில்லை ஆகையால் ராணிக்கு குழந்தை பிறந்து இன்று உயிரோடு இருந்தால் அந்த ராஜகுமாரனை வைத்து எப்படியாவது இந்த நாட்டை மீட்டுவிடலாம் என்று சொல்லி மந்திரி ராஜா தப்பிச் சென்ற திசையை நோக்கி சென்று தேடிச் செல்கிறார். காட்டில் வேடர் குலத்தில் வளரும் ராஜகுமாரனின் முகத்தில் அரசரின் சாயல் மற்றும் நடை பாவனையை பார்த்து வேடர்களிடம் இவனைப் பற்றி விசாரிக்கிறார். அவர்கள் சொன்னதை வைத்து நம் ராஜகுமாரன் இவன் தான் என்று தெரிந்து கொண்டு நீ ராஜகுமாரன் வா போகலாம் உனக்கென்று நாடு மக்கள் இருக்கிறார்கள். நாட்டை மீட்டுவிடலாம் வா. அங்கு வந்தால் உனக்கு அத்தனை சுகங்களும் கிடைக்கும் என்கிறார். அவன் பயந்து கொண்டு நான் ராஜா எல்லாம் கிடையாது என்னை விட்டு விடுங்கள் வர முடியாது என்கிறான். அவனை மந்திரி தேற்றி அவனுக்கு குதிரை ஏறுவது கத்தி சண்டை போடுவது வரை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவனை அழைத்து வந்து நாட்டை மீட்டு விடுகிறார். நாட்டில் இப்போது அரசனாக அனைத்து சுகங்களையும் அனுபவித்தான் அந்த காட்டில் வளர்ந்த ராஜாகுமாரன்.

இது கதையில் உள்ள அந்த இளவரசன் நாம்தான். நம்முடைய தந்தை நடராஜா. சிதம்பரம் நடராஜா.

இக்கதையில் உள்ளது போல் நாமெல்லாம் பிறவி எடுக்கும் முன்பாக பகவானோடு இருந்தவர்கள். ஆசை காரணமாக எங்கிருந்து வந்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாயையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடல் என்னும் இந்த பவசாகரத்தில் மாட்டிக் கொண்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இதிலிருந்து மீள வழி வழி தெரியாமல் நாம் வாழும் இந்த உலகம் என்று சொல்லக்கூடிய இந்த காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் ராஜகுமாரர்கள். ஜீவாத்மாக்களாகிய நாம் கைலாயத்திலோ வைகுண்டத்திலோ இருந்தவர்கள். நம் அப்பா இறைவன் என்று சொல்கின்ற ராஜா நடராஜா. நாம் இந்த உலகத்தில் வந்து மக்களுடன் சேர்ந்து மக்களாகி விட்டோம். அவர்களைப் போல் உடை உடுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமெல்லாம் கைலாசவாசிகள். வைகுண்டவாசிகள் பசி தாகம் தூக்கம் இல்லாமல் அமிழ்தம் சாப்பிட்டுக் கொண்டு அழகாக பட்டாடைகளை தரித்துக் கொண்டு தேவர்களுடைய கிரீடத்தை போட்டுக் கொண்டு பேரின்பத்தில் லயித்துக் கிடந்தவர்கள். இன்றைக்கு பசிக்கிறது தாகம் எடுக்கிறது. உடலிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்று சேம்பும் சோப்பும் போட்டுக் கொண்டு சென்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் இதனையெல்லாம் பெருமையாக வேறு நினைத்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எவ்வளவு ஆனந்தமாக பகவானோடு இருந்தவர்கள். இன்றைக்கு மானுடர்களாக மயக்கத்தில் மயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கதையில் வந்த மந்திரியைப் போல் நம் வாழ்க்கையிலும் ஒருவன் வந்து நீங்களெல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. நான் உங்களை கயிலாயத்தில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு இப்படி மனிதனோடு மனிதனாகப் போய் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம். அதெல்லாம் கிடையாது இது என் உடம்பு என் வீடு என் பந்தம் என்போம். மாயையின் மயக்கத்தில் இருப்பதினால் இறைவனே வந்து சொன்னாலும் நான் மனிதன் என்போம். கதையில் வரும் மந்திரியை ராஜ குமாரன் நம்பி அவர் சொன்னதை எல்லாம் செய்தது போல் நம்மிடம் சொன்னவரை நம்பினால் அவர் சொல்வதை நம்பினால் அவர் விடாமல் பயிற்சி கொடுத்து நமக்கு இருக்கிற சக்தியை நமக்கு புரிய வைப்பார். யார் அந்த அவர்? நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்கள் நமக்கு அருள்பாலித்த நூல்கள் நம்முடைய தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பெரிய புராணம் உட்பட பன்னிரு திருமுறைகள் என்று பெரிய நூல் களஞ்சியமே இருக்கிறது. இந்த நூல்கள் வழியாக நமக்கு அவர்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் பயிற்சி செய்து அந்த பயிற்சியில் எப்போது முற்றுப் பெருவோமோ அப்போது இந்த துன்ப பிறவியில் இருந்து விடுபட்டு கைலாசம் அல்லது வைகுண்ட அரசவைக்கு சென்று விடுவோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.