கார்போதக கடல்

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாட்சன் பூமியில் பல்வேறு பாவச் செயல்களைச் செய்தான். இதனால் பூமி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொண்டு வருவதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். விஷ்ணு கார்போதக கடலில் இருந்து இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையில் தூக்கியுள்ள பூமிக்கு உள்ளேதான் கடல் உள்ளது. அப்படி என்றால் எந்த கடலில் இருந்து விஷ்ணு போர் புரிந்தார்?

அந்த கடலுக்கு கார்போதக கடல் என்று பெயர். கார்போதக என்றால் ஒளி உட்புக முடியாத என்று பொருள். கார்போதக கடல் என்பது விண்வெளியில் உள்ள கரும்பொருள் கடல். அறிவியலின் படி அதற்கு Ocean Of Dark Matter என்று சொல்வார்கள். அதாவது ஒளியை பிரதிபலிக்காத கண்களால் காணமுடியாத விண்வெளி பருப்பொருட்களின் கூட்டம் என்று பெயர்.

இறையவர்கள் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும் உபதேசித்த இறைவனும்

  1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
  2. உத்திரகோசமங்கை – பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
  3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
  4. திருவுசாத்தானம் – இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
  5. ஆலங்குடி – சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
  6. திருவான்மியூர் – அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
  7. திருவாவடுதுறை – அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
  8. சிதம்பரம் – பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
  9. திருப்பூவாளியூர் – நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
  10. திருமங்களம் – சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  11. திருக்கழு குன்றம் – சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  12. திருமயிலை – 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
  13. செய்யாறு – வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
  14. திருவெண்காடு – நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
  15. திருப்பனந்தாள் – அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
  16. திருக்கடவூர் – பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
  17. திருவானைக்கா – அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
  18. மயிலாடுதுறை – குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
  19. திருவாவடுதுறை – அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
  20. தென்மருதூர் – 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
  21. விருத்தாசலம் – இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
  22. திருப்பெருந்துறை – மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
  23. உத்தரமாயூரம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
  24. காஞ்சி – ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
  25. திருப்புறம்பயம் – சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
  26. விளநகர் – அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
  27. திருத்துருத்தி – சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
  28. கரூர் – ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
  29. திருவோத்தூர் – ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது ஏன்?

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் காஞ்சி மகா பெரியவாளிடம் ஒரு கேள்வி கேட்டார். அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது? என்று கேட்டார், ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால் வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து அதோ பார் நிலா என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள். அது போல ராம தூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு. அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போது வானத்தில் செக்கச் செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயு புத்திரன் அல்லவா? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங் குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. ராகு பகவான் அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த போட்டியில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். உளுந்து தானியம் இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதன்படி உளுத்தம் பருப்பை மாவாக்கி பாம்பு போல் வடை தயாரித்து அதனை மாலைகளாக கோர்த்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. (தற்போது இதனை அறிந்து கொள்ளாமல் சிலர் அரிசியிலும் செய்து மாலை கோர்த்து சாற்றுகிறார்கள். உளுந்தில் செய்தாலும் பாம்பின் உடல் போல் வளைந்து செய்யாமல் தட்டையாக வடைகளை சுட்டு பாலை கட்டி சார்த்துகிறார்கள்) வடையாகட்டும் ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு. இனிப்பு ஜாங்கிரி வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும் அவர்களுக்குக் காலை உணவு வேளையில் இனிப்புப் பண்டங்களையும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான் அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள். அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி என்று சொல்லி விட்டு சிரித்தார் மஹா பெரியவா.

அறியாமை மனம்

சிவாலய வளாகத்துக்கு அருகே ஒரு நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டே இருக்கும். கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தது. அப்போது அந்த ஊரின் சிவாலயத்தில் 11 நாட்கள் தொடர் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் அனைவருமே தாங்கள் சாப்பிடும் உணவை இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட்டார்கள். இறைவனுக்கு படைத்தது என்பதால் கீழே போடக்கூடாது என்று மீதம் இல்லாமல் சாப்பிட்டார்கள். யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவில்லை. நாய்க்கு எச்சில் இலை உணவு கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயிலின் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது. அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் செய்தார். ராமர் பூஜை பிரதிஷ்டை செய்த லிங்கம் உள்ள இராமேஸ்வரம் தல மகிமையை விளக்கமாக பேசினார். அனைத்தையும் அந்த நாயும் காது கொடுத்து கேட்டது. இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் உள்ள சிறப்பை கேட்டதும் மக்கள் அனைவரும் திருவிழா முடிந்ததும் அக்கோயிலுக்கு செல்ல வேண்டும் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். நாய் சிந்தித்தது. நாமும் இப்படியே எச்சில் இலையை பொறுக்கித் தின்றே காலத்தை கழித்து விடக் கூடாது. இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தது. திருவிழா முடியும் வரை கோயிலின் அருகே இருந்து இவரது சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு மேலும் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின் கிளம்பலாம் என்று நாய் முடிவு செய்து திருவிழா முடியும் நாளுக்காக காத்திருந்தது. கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை தினமும் கேட்டு நாளடைவில் அதற்கு இராமேஸ் வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது. சாப்பிடாமல் விரதம் இருந்ததால் வைராக்கியம் அதிகரித்தது. திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

கோயிலில் திருவிழா முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள். நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது. முதல் அடி எடுத்த வைத்தது. அப்போது ஒரு வீட்டின் பின் பக்கத்தில் இருந்து பொத் என்று ஒரு சத்தம் கேட்டது. நாய் திரும்பிப் பார்த்தது. எச்சில் இலையில் நிறைய உணவு இருந்தது. அதனைப் பார்த்ததும் பசியுடன் இருந்த நாயின் வாயில் எச்சில் ஊறியது. என்ன மணம் நல்ல கறி விருந்தாக இருக்கிறது என்று சாப்பிட்டது. நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த கறி விருந்து கிடைத்திருக்காது என்று நினைத்து அடுத்த எந்த வீட்டில் இலை விழும் என்று பார்க்க தொடங்கி இராமேஸ்வரத்தை மறந்தது.

இந்த நாயின் மனம் போலத்தான் ஒரு மனிதனின் மனம். இந்த மனம் இருக்கிறதே மகிழ்ச்சியில் அனுபவிக்க எது கிடைத்தாலும் நன்றாக அனுபவித்து ஆட்டம் போடும். மகிழ்ச்சிக்கு எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பண்ணுவது போலவும் நம்மை போல பக்திமான் யாரும் இல்லை என்னைப் போல் நல்லவன் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும். ஆனால் பணம் சேர்க்க பொருள் சேர்க்க தவறு செய்யும் போதும் நாக்கு சுவை தேடி புலால் உண்ணவும் மது உண்ணவும் என்று வாய்ப்பு கிடைத்ததும் கோயிலாவது சாமியாவது புண்ணியமாவது அதுக்கெல்லாம் இன்னும் வயது இருக்கிறது. இப்பவே சாமியார் மாதிரி உத்திராட்சம் போட்டு திருநீறு பூசி காசி இராமேஸ்வரம்னு போகனுமா? வாழ்க்கையை இந்த வயதில்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆட்டம் போட மனம் ஆரம்பித்து விடும். துக்கம் வந்தால் சாமி சாமி என்பதும் துக்கம் தொலைந்ததும் ஆட்டம் போடுவதும் மனிதனின் பிறவித் துன்பத்திற்கு மூல காரணமாகவே இருக்கிறது. இதனை அறியாத மனிதன் நான் எனது என்னுடையது என்று ஆட்டம் போட்டபடியே அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட 5 வகை குளியல்கள்

  1. வாருணம் – குளம் ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தல் வாருணம் ஆகும். இதில் கழுத்து மற்றும் இடுப்பு வரை குளித்தலுக்கு கௌணம் என்று பெயர்
  2. பஸ்மோத்தூளனம் – விபூதி பூசிக் கொள்வது. விபூதி குளியல் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் வெப்பத்தால் கிடைக்கும் சாம்பலை பூசிக் கொள்வது.
  3. வாயவ்யம் – பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அதன் கால் குளம்பு மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணன் இந்தப் பசுக்களின் கால் குளம்பு பட்ட மண்ணை சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி இருப்பாராம். இதனால் அவருக்கு கோதளி தூஸரிதன் என்ற பெயர் ஏற்பட்டது. காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம் எனப் பெயர்.
  4. திவ்யம் – திவ்யம் என்ற சொல்லுக்கு மேன்மைய்யானது தெய்வீகத் தன்மை கொண்டது என்று பொருள். பகலில் சில நேரங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழியும். இவ்வாறான மழை நீர் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதால் திவ்யக் குளியல் என்று பெயர்.
  5. ப்ராஹ்ம ஸ்நானம் – ப்ரம்ஹம் என்றால் வேதம் மற்றம் வேத மந்திரம் என்று ஒரு பொருள். கலச நீர் வைத்து மந்திரம் சொல்லி யாகம் செய்தபின் அந்த கலசத்தில் உள்ள மந்திர நீரை தெளிப்பார்கள். வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த நீரை தெளித்துக் கொள்ளுதலுக்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.

ஞானப்பால்

ஞானம் என்பது உயர் அறிவு அல்லது கடவுளின் உண்மை சாரத்தைக் காணும் அறிவுத்திறன். ஞானப்பால் என்றால் இவ்வுலகத்தை கடந்து கடவுளின் உண்மை நிலையை அனுபவித்து ஆன்மீக அறிவு பெறும் பரம்பொருள் நிலையை அடைய வழிகாட்டும் பால் (பால் என்பது தமிழ் இலக்கியத்தில் “மார்க்கம்” அல்லது “வழி” எனப் பொருள்படும்).

ஞானப்பாலின் சித்தாந்தம்

  1. அறிவு வளர்ச்சி: ஞானப்பால் என்பது மனதின் சுத்திகரிப்பு, உலகத்தின் பற்று அகற்றுதல், மற்றும் பரம்பொருள் பற்றிய அறிவு பெறும் முயற்சியாகும்.
  2. பரம்பொருளின் தரிசனம்: ஞானப்பால் வழியாக ஒருவர் கடவுளின் உண்மை நிலையை அனுபவித்து உலக வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் கற்கை பற்றி ஆழமாக உணர முடியும்.
  3. இயற்கையோடு இணைவு: ஞானப்பால் அடைவதன் மூலம் மனிதர்கள் இயற்கையோடு இணைந்து மெய்யான ஆன்மிக வாழ்க்கையை வாழ முடியும்.

ஞானப்பால் அடைவதற்கான வழிகள்

  1. தியானம் மற்றும் துறவு: மனதின் அமைதி மற்றும் கர்ம வினைகளை விடுவித்தல் மூலம் ஞானப்பால் அடைய வழி காட்டப்படுகிறது.
  2. ஆன்மீக ஞானம் மற்றும் வேதாந்தம்: ஆன்மீக நூல்களைப் படித்து அதன் விளக்கத்தை புரிந்து கொள்ளுதல் ஞானப்பாலின் அடித்தளம். பின்பு அதனை கடைபிடித்தல். பின்பு உணர்தல்.
  3. குரு உபதேசம்: ஞானப்பாலை அடைவதற்கான வழியில் குருவின் வழிகாட்டுதல் முக்கியமானதாகும்.

இறுதிப் பயன்

ஞானப்பாலின் இறுதி பயன் ஆன்மாவின் விடுதலை அதாவது முக்தி அல்லது நிர்வாணம்.

தெரியாது என்பதே மிகப்பெரிய ஞானம்.

ஒரு முறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியுடன் எல்லாரும் சென்றனர். ஆனால் ஒரே ஒரு பக்தர் மட்டும் தயங்கி அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அதனால் மிகுந்த கவலையுடன் பகவானே ஒவ்வொருவரும் ஏதேதோ கேள்விகள் கேட்டனர். நீங்களும் சளைக்காமல் எல்லாருக்கும் பதில் சொன்னீர்கள். ஆனால் எனக்கு எதுவுமே தெரியாது. என்ன கேள்விகள் கேட்பது என்று கூட தெரியாது. என்னைப் போன்ற பாமரர்கள் ஞானம் பெறுவது எப்படி முக்தி அடைவது எப்படி? என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.

வாஞ்சையுடன் அந்தப் பக்தரைப் பார்த்த பகவான் ஏன் இப்படி நீயாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறாய்?அவர்களுக்குப் பல விஷயங்களில் குழப்பங்கள் சந்தேகங்கள் இருந்தன. அதைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர். நான் பதில் சொன்னேன். உனக்கு அந்த மாதிரி குழப்பங்கள் ஏதும் இல்லையே! தனக்கு ஒன்றுமே தெரியாது என்று உணர்வதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய ஞானம். இதை விட வேறென்ன வேண்டும்? எல்லாவற்றையும் ஈசன் பொறுப்பில் விட்டு விட்டு பற்றில்லாமல் உன் கடமைகளைச் செய்து வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்றார் பகவான். பக்தரும் மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு அகன்றார்.

அமைதி

  1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – மந்திரம்
  2. செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – தந்திரம்
  3. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – அன்பு
  4. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – பக்தி
  5. சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – குண்டலினி
  6. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – கடாட்சம்
  7. அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – யோகா
  8. மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – தியானம்
  9. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – பிராணாயாமம்.
  10. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் – கோவில்
  11. ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – இசை
  12. உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – குடும்பம்

இல்லறம் அது நல்லறம்

முனிவரிடம் அவரது சீடர் இல்லறம் அது நல்லறம் என்று சொல்கிறார்கள். அது ஏன் என்று கேள்வி கேட்டார். விரைவில் அதற்கு பதில் கொடுப்பதாக முனிவர் கூறினார். அப்போது அவரிடன் வந்த ஒரு பறவை சுவாமி உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து சென்று அங்கே உள்ள ஒரு அழகான தீவை பார்க்க விரும்புகிறேன் நான் என்ன செய்ய வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றது. அதற்கு முனிவர் பறவையே உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஆகவே முயற்சி செய். ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் முனிவர். தலையசைத்து விட்டு பறந்தது பறவை.

இதனை கவனித்த சீடன் ஏன் சோர்வு வரும் போது திரும்ப வர வேண்டும் என்று கேள்வி கேட்டான். அதற்கு முனிவர் சீடனே முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்து விடுவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார். ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. சுவாமி கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன் சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால் கடலில் விழுந்திருப்பேன். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் என் முயற்சியை தொடர விரும்புகிறேன் என்றது பறவை. அதற்கு முனிவர் பறவையே இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன் திரும்பி வா என்றார் சாது. பதினைந்து நாட்கள் போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன. சுவாமி எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்து விட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள் என்றது பறவை.

முனிவர் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார். பறவைகளே பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள் என்றார் முனிவர். பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு முனிவரிடம் வந்தன. சுவாமி உங்களின் வழிகாட்டுதலினால் ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் எனது துணையுடன் ஓய்வெடுத்தோம் என்றது பறவை.

பறவைகளே அருமை நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா? என்று கேட்டார் முனிவர். சுவாமி சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் யார் இதனை சுமந்து செல்வது என்று எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால் கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது காப்பாற்றுகிறது என்ற உண்மை புரிந்தது என்று முனிவருக்கு நன்றி சொல்லி விட்டு பறந்தது பறவை.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சீடனிடம் பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்கு காரணம் துணை. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய குச்சி என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது சண்டையைக் கொடுத்தது பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால் அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு குச்சியைப் போல மனிதர்களுக்கு இல்லறம் கருவியாகிறது.

சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடக்க கடலில் குதிக்க வேண்டியதில்லை நீந்த வேண்டியதில்லை. துணையின் உதவியுடன் இல்லறம் என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம். குச்சியை சுமப்பதாக பறவைகளுக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் குச்சியே பறவைகளை சுமக்கிறது. இதைப் போல கணவனும் மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையில் இல்லறமே அவர்களை நல்லறமாக இருந்து வழி நடத்தி சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைய உதவி செய்கிறது என்று சொல்லி முடித்தார்.

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரத்தைப்பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னது. காயத்ரீ மந்திரமானது மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநு சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?

ரிக் யஜுர் ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த சாரம் காயத்ரீ மகாமந்திரம். காயத்ரீ என்றால் எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்று பொருள். கானம் பண்ணவதென்றால் இங்கே பாடுவது என்று பொருளில்லை. அன்புடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் பய பக்தியுடனும் அன்புடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் காக்கும். அதனால் அந்தப் பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்றால் வேதம். வேத மந்திரங்களுக்கு எல்லாம் தாயார் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அட்சரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொரு அடியிலும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு திரிபதா காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. காயத்ரீயில் சகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். வேத மந்திரங்களில் சித்தி உண்டாக காயத்ரீயை சரியாக ஜபம் செய்ய வேண்டும்.