சிரார்த்தம்

உலகில் முதலில் சிராத்தம் எப்போது உண்டானது?

பிரம்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மகரிஷி தோன்றினார். அந்த மகரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் ஒரு ஆயிரம் வருடம் தவம் செய்து கொண்டிருக்கையில் ஒரு நாள் தனது உடலை விட்டார். இதனால் நிமி புத்ர சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தார். அந்த உடலுக்கு செய்ய வேண்டிய கிரியைகளை சரியாக செய்து எரித்தார். அடுத்த நாள் அமாவாசை தினம். விடியற்காலையில் எழுந்து இறந்த தனது புத்திரன் மேன்மை நிலையை அடைய என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில சிந்தனை உண்டானது. அதன்படி பிராமணர்களை அழைத்து தனது இல்லத்தில் உணவு சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் உணவு சாப்பிட அமர்ந்ததும் அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பையை தெற்கு நுனியாக வைத்தார். அவர்களுக்கு திருப்தியாக உணவு பரிமாறினார். அவர்கள் சாப்பிட்டு சென்றதும் அந்த இடத்தில் தன் புத்திரனின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி உணவு தானம் செய்த அதன் பலன் தனது புத்திரனுக்கு போகுமாறு நீரை தரையில் விட்டு பிரார்த்தனை செய்தார். இப்படி செய்ததால் தன் புத்திரனின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகி விட்டதாக அவருக்கு திருப்தி வந்தது. அடுத்த நாள் அவருக்கு யாரும் இதுவரை செய்யாத தவறான காரியத்தை ஏதும் செய்து விட்டோமோ என்று சிறிது பயம் உண்டானது. இதனை அறிந்தால் ரிஷிகள் ஏதும் சாபம் கொடுத்தது விடுவார்களோ என்று பயந்தார். உடனே தனது வம்சத்தைச் சேர்ந்த அத்ரி மகரிஷியை தியானம் செய்தார். அவரது வருத்தத்தை அறிந்த அத்ரிமகரிஷியும் உடனே அங்கு வந்தார்.

நீ செய்த இந்த கர்மமானது பித்ருக்களுக்குச் செய்த யாகம் ஆகும். ஆகவே நீ பயப்படாதே. நீ ஒரு தவஸ்வி. இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் செய்யவேண்டுமென்று உன் மனதில் தோன்றி பிறகு நீ இதனை செய்திருக்கிறாய். இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் இந்த யுக காலத்தில் செய்ய வேண்டுமென்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் செய்து அதன் பலனாக பல நன்மைகளை அவர்கள் அடைவார்கள் என்று பிரம்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. உனது தவ பலத்தினால் உனது மனதில் இது தோன்றும்படி பிரம்மா அருள் செய்தார். சிரத்தையுடன் செய்கிற கர்மமானதால் இதற்கு சிரார்த்தம் என்று பெயர் பெறும் என்று சொல்லி உபதேசித்துவிட்டு பிரம்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி மாத மாதம் அமாவாசை அன்று அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து அனைவரும் செய்யத் தொடங்கினார்கள். அப்போது முதல் சிரார்த்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

நிமி ஏற்படுத்திய சிரார்த்த முறைகளை அனைவரும் செய்ய ஆரம்பித்ததால் பித்ருக்களுக்கு ஏராளமான உணவு கிடைத்துக் கொண்டே இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட பித்ருக்கள் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சில துன்பங்களை அனுபவித்தார்கள். இதனை சந்திர பகவானிடம் முறையிட்டார்கள். அவர் பிரம்மாவிடம் போகும்படி சொல்ல பித்ருக்கள் பிரம்மாவிடம் போய்த் தங்களுடைய துன்பத்தை போக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். பிரம்மா அக்னி பகவான் உங்கள் குறையை நிவர்த்திப்பார் என்று ஆசி கூறினார். பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட அவரும் இனி உங்களிடம் வரும் உணவுகளை என்னுடன் கொடுங்கள் அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டு எரித்து அழித்து விடுகின்றேன் என்று சொன்னார். அன்று முதல் சிரார்த்தம் செய்யும் போது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.

சிரார்த்தம் என்பது ஆதிகாலத்திலேயே வேதங்களில் இருந்தவற்றை ரிஷிகள் தவம் செய்து அறிந்து கொண்டு அதனை பிரம்மாவினால் அறியப்பட்டு செய்யப்படுகிறது. சிரார்த்தம் செய்யும் போது செய்யப்படும் ஹோம அக்னியில் போடப்படும் திரவியங்கள் எல்லாம் பித்ரு கணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக இறந்து போன ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கிறது. இந்த ஜீவாத்மாக்ககள் இதனால் ஏதேனும் ஒரு வகையில் நன்மை அடைந்து மேன்மை நிலையை அடைகிறார்கள். அவர்களுக்கு மேன்மை நிலையை கொடுத்த பலனை சிரார்த்தம் செய்தவர்களும் பெற்று தங்களது துன்பத்தை போக்கி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

பித்ருக்கள் என்பவர்கள் யார்?

பிரம்மா தேவர்களை படைத்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து நீங்கள் யாகங்கள் செய்து என்னை ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் பிரம்மாவின் கட்டளைப்படி செய்யாமல் தங்களின் ஆசைகளுக்கு ஏற்ப அங்கிருந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு பிரம்மா யாகம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த ஞானம் அனைத்தும் மறந்து போனார்கள். இவர்களுடைய செயலைப் பார்த்த பிரம்மா நீங்கள் எந்த விதமான ஞானமும் இல்லாமல் போவீர்கள் என்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இதனால் பல துன்பங்களை தேவர்கள் அனுபவித்தார்கள். பின் தேவர்கள் பிரம்மாவைச் சரணாகதி அடைந்து தாங்கள் செய்த தவறுக்கு பிராயத்சித்தம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். நீங்கள் உங்களது சுகங்களினால் உருவான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள் என்றார். தேவர்களும் அவர்களுடைய பிள்ளைகளிடம் சென்று பிரம்மா சொன்னதுபோல் செய்யும்படி வேண்டிக்கொள்ள அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு பிராயச்சித்தம் செய்து இழந்த ஞானத்தை மீண்டும் கொடுத்து பிள்ளைகளே போங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் பிள்ளைகள் என்று சொன்னதால் கோபம் கொண்டு இதனை பிரம்மாவிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட பிரம்மா அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் உங்களுடைய சுகத்தினால் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்கு தந்தை ஆனீர்கள். அதுபோல் அவர்கள் உங்களுக்கு பிராயச்சித்தம் செய்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்கு தந்தை ஆனார்கள். ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான். ஞானம் கொடுத்த அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். ஞானம் பெற்ற நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள் என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.

பித்ருக்கள் ஏழு விதமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு வகையினர்களும் உருவத்தை கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு பித்ரு லோகம் என்றும் பெயர். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்ற மூன்று வகையினர்கள் உருவம் இல்லாதவர்கள். தங்களுடைய தர்ம புன்ய பலன் மற்றும் ஞானத்தால் எங்குமிருக்கும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். அணுவிலும் பிரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு விருப்பமான ரூபங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு சநாதன லோகம் என்று பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர். நம்முடைய இறந்து போன முன்னொர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்கள் இறந்து போனவர்களுக்கு நேரடியாகப் போவதில்லை. அவைகள் நேரடியாக பித்ரு கணங்களுக்கு அல்லது பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோக பலத்தால் மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுடர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எந்த இடத்தில் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள்.

பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய சிராத்தம் செய்து பிண்ட தானம் செய்யும் போது பூமியைப் பிளந்து கொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்கள் அணியப்பட்டிருந்தன. அந்தக் கை அவருடைய தகப்பனாருடையது. அவர் இறந்து போவதற்கு முன்னிருந்தது போலவே இருந்தது. பீஷ்மரும் பிதா கையில் பிண்ட தானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் போட்டு சிரார்த்தம் செய்தார். சிரார்த்தம் பித்ருக்களுக்கு செல்ல வேண்டும் என்ற தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வரம் கொடுத்து மறைந்து விட்டார். ஆகையால் நாம் செய்யும் சிரார்த்தம் பித்ரு தேவதைகளுக்குப் போய் பின் அவர்களால் இறந்து போன ஜீவாத்மாக்கள் எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும் அங்கு அவர்களுக்கு சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரகஸ்யம் மார்க்கண்டேயருக்கு சனத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பஞ்சாட்சரம்

பஞ்ச அட்சரம் பஞ்சாட்சரம் ஆகும். பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும். பஞ்சாட்சரம் இந்த சமஸ்கிருத வார்த்தையை தமிழில் ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்கின்றோம்.

ஐந்தெழுத்து மந்திரம் என்பது என்ன?

நமசிவய ஐந்தெழுத்து மந்திரமாகும்.

உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம் மெல்லினம் இடையினம் என பிரிக்கலாம்.

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்.

ந ம சி வ ய எழுத்துக்களில் முதல் இரண்டு எழுத்துக்கள் மெல்லினம். மத்தியில் உள்ள ஒரேழுத்து வல்லினம். இறுதி இரண்டு எழுத்தும் இடையினம். ஐந்து எழுத்துக்களும் ஐந்து பூதங்களை குறிக்கும்.

ந – நிலம்
ம – நீர்
சி – நெருப்பு
வ – காற்று
ய – வானம்

மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற இந்த ஐந்து பூதங்களின் ஆற்றலும் இந்த நமசிவய மந்திரத்தில் உள்ளது என்பதை ஞானிகள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு எளிதில் யாராலும் உணர முடியாத இறைவனை நமசிவய என்று உணர்ந்து சொன்னால் இந்த ஒரு சொல் இறைவனை உணர வைப்பதை ஞானிகள் உணர்ந்து வெளிப்படுத்தினார்கள். இதனை ஆழ்ந்து தியானித்து கவனித்தால் புரியும். மேலும் இந்த ஐந்து எழுத்துக்களின் உயிர்த் தன்மையை இறைவனின் அருளால் உணர்ந்து கொண்ட ஞானிகள் நமசிவய எனும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை தனது சீடர்களுக்கு உபதேசம் செய்தும் பல பாடல்களின் வழியாக மக்களுக்கும் உபதேசித்தார்கள்.

நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பு இந்த நான்கின் நடுவிலும் இயற்கைக்கு ஏற்றவாறு தனித்தன்மையாக குறைந்த வெப்பமான குளிர்ச்சியாகவும் அதிகபட்ச வெப்பமாகவும் இருக்கிறது. ஆகாயம் காற்று நெருப்பு நீர் மண் இவைகளின் சக்தியை அளவிட முடியாது. இவைகள் தனித்தனியே இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லவும் இயலாது. இதனை அறிந்த ஞானிகள் இதனை பஞ்ச பூதங்கள் என்று வகுத்து வைத்தார்கள்

மனிதர்கள் அனைவருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை. மனிதர்களின் ஆசைகள் கர்மாக்களுக்கு ஏற்ப ஒன்று அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். இதனால்தான் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் இருப்பதில்லை. சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள். சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள். சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள். காரணம் இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான். அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைகள் நீங்குகிறது. அவனது உடம்பில் உள்ள பஞ்சபூத ஆற்றல் அதிகரிகிறது. பஞ்ச பூதங்களின் ஆற்றல் அதிகமான மனிதன் மிக ஆற்றல் மிக்க உணர்வுகளால் தூண்டப்பட்டு மேன்மை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான். அவனுக்கு உலகின் இயக்கமும் அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது. தான் யார் என அறிகின்றான். தான் யார் என அறிந்தவன் இறைவனை அறிந்தவனாகின்றான். இறைவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை. அவன் தாம் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான். அவர்களைத்தான் சாதாரண மக்கள் ஞானிகள் என்கிறார்கள். ஆகவே நமசிவய மந்திரத்தை சொல்வோம். ஞானம் பெறுவோம். இறைவனை உணர்வோம்.

அறிந்து கொள்வோம்

  1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை புண்ணியமும் பாவமுமாகும் ஆகும்.

ஒருவர் தான் செய்த தான தருமங்கள் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ணியங்களை தானே அடுத்தவர்களிடம் எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும். ஒருவர் தான் செய்த பாவங்களை தானே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும். குறைய வேண்டியது பாவம் நிறைய வேண்டியது புண்ணியம். ஆகவே செய்த தானதர்மங்களை சொல்லக் கூடாது. பாவத்தைக் சொல்ல வேண்டும்.

  1. இறைவனுடைய கருணையையும் அன்பையும் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

துன்பத்தில் துடிக்கிற உயிர்களிடம் அன்பு செய்து கருணையோடு அவற்றின் துன்பத்தை போக்குவதற்கான தன்னால் இயன்ற செயலை செய்தால் இறைவனும் அவர்களின் மேல் அன்பு செலுத்தி கருணையோடு இருப்பார். அன்பால் அன்பையும் கருணையால் கருணையையும் பெறலாம்.

  1. 1. மன அழுக்கு 2. வாயழுக்கு 3. மெய்யழுக்கு என்று அழுக்குகள் மூன்று வகைப்படும்

1 பொறாமை ஆசை கோபம் ஆகியவை மன அழுக்கு ஆகும். இந்த மன அழுக்கை தியானம் என்ற நீரால் கழுவி தூய்மை செய்யலாம்.

2 பொய் புறங்கூறல் அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் பேசுதல் ஆகியவை வாயழுக்கு ஆகும். வாயால் இறைவனை போற்றித் துதித்துப் பாடி இந்த வாயழுக்கை சுத்தம் செய்து நீக்கலாம்.

3 மெய் என்றால் உடல் என்று பொருள். போதைப் பொருள்கள் உபயோகித்தல் கொலை புலால் உண்ணுதல் களவு ஆகிய இவை மெய்யழுக்கு ஆகும். இந்த மெய்யழுக்கை உடலால் இறைவனுக்கு உழவாரப்பணி செய்து அர்ச்சனை என்னும் நீரால் கழுவி சுத்தம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் & அனாதை

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு பொருளானது தற்போது வசதியின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. பொருள் செல்வம் இல்லாதவன் மற்றும் திறமை அற்றவன் ஆகியோர் அதிஷ்டம் இல்லாதவனாக பார்க்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.

உண்மை பொருள்:

அதிர்ஷ்டம் என்பற்கு பார்க்கக் கூடிய அல்லது பார்ப்பதைக் குறிக்கிறது. யாராலும் பார்க்க முடியாததை பார்ப்பவனே அதிர்ஷ்டசாலி ஆகின்றான். திருஷ்டி என்ற வார்த்தை உண்டு. பார்ப்பதை குறிப்பதால் தான் திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்கிறார்கள். பார்த்த விஷயங்களையே பார்த்துப் பார்த்து அது நம் நினைவுகளில் சுவடுகளாக பதிவாகிவிடும். இந்த பதிவு அழியும் வரை அது அழியாத திருஷ்டியாக அப்படியே இருக்கும். கண்கள் பார்த்ததை மட்டுமே நம்புவதால் தன்னிடம் இல்லாத பொருள் இன்னொருவரிடம் இருப்பதை பார்க்கும் போது அது தன்னிடம் இல்லையே என்ற ஏக்கமும் வைத்திருப்பவர் மீது பொறாமையும் ஏற்படுகிறது. ஆகவே இதன் பொருள் திருஷ்டி ஆகும். இதன் பொருள் அதிஷ்டம் கிடையாது.

அதிர்ஷ்டம் என்றால் இதுவரை பார்க்காத பார்வைக்கு புலனாகாத விஷயம் என்று பொருள்படும். அப்படியொன்று ஒருவனுடைய வாழ்வில் கண்களுக்கு புலப்பட்டால் அனுபவமாக உணரப்படுமானால் கேட்கப்படுமானால் அவன் அதிர்ஷ்டமுடையவன் ஆகின்றன். இந்த அதிஷ்டம் ஒருவனுக்கு வாய்க்க வேண்டுமானால் ஞான குருவின் வழிகாட்டுதலின் மூலமாகவே கிடைக்கும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஞான குருவைப் பெற்றவன் மட்டுமே அதிர்ஷ்டசாலி ஆவான்.

அனாதை

அனாதை என்ற வார்த்தைக்கு தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் இல்லாதவர்கள் ஆகியோர்களை உலக ரீதியாக அனாதை என்ற சொல்லைப் பயன்படுத்ததி பார்க்கப்படுகிறது.

உண்மைப் பொருள்:

குருவை அடையாத ஒருவனை அனாதை ஆவான். அனாதை என்பதற்கு சமஸ்கிருத மொழியில் குருவை அடையாதவன் என்று பொருள். குரு சீடனுக்கு வழிகாட்டி அறிவை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் தீட்சை வழங்கி ஆத்ம ஞானத்தை ஊட்டி முக்தியடைய வழிகாட்டுபவராகவும் இறைவனை உணர வைப்பவராகவும் இருக்கிறார். எத்தனை உறவு முறைகள் சொந்த பந்தங்கள் இருந்தாலும் குருவை அடையாதவனே அனாதை ஆவான். ஏனெனில் எந்தனை சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு நாள் அனைத்து சொந்த பந்தங்களும் பிரிந்து அழிந்து போகும். சொந்த பந்தங்கள் நிலையற்றது ஆகும். ஆனால் ஞான குருவை பெற்றவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனை சென்று அடையும் வரை நிலையாக இந்த குரு சீடன் உறவு இருந்து கொண்டே இருக்கும். குருவானவர் சீடனுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார்.

கார்போதக கடல்

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். பிரம்மனிடம் இருந்து வரம் பெற்ற இரண்யாட்சன் பூமியில் பல்வேறு பாவச் செயல்களைச் செய்தான். இதனால் பூமி கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனை மீட்டு வெளிக் கொண்டு வருவதற்காக விஷ்ணு வராக அவதாரமாகத் தோன்றினார். விஷ்ணு கார்போதக கடலில் இருந்து இரண்யாட்சனுடன் பல ஆண்டுகள் போர் புரிந்து வென்றார்.

வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையில் தூக்கியுள்ள பூமிக்கு உள்ளேதான் கடல் உள்ளது. அப்படி என்றால் எந்த கடலில் இருந்து விஷ்ணு போர் புரிந்தார்?

அந்த கடலுக்கு கார்போதக கடல் என்று பெயர். கார்போதக என்றால் ஒளி உட்புக முடியாத என்று பொருள். கார்போதக கடல் என்பது விண்வெளியில் உள்ள கரும்பொருள் கடல். அறிவியலின் படி அதற்கு Ocean Of Dark Matter என்று சொல்வார்கள். அதாவது ஒளியை பிரதிபலிக்காத கண்களால் காணமுடியாத விண்வெளி பருப்பொருட்களின் கூட்டம் என்று பெயர்.

இறையவர்கள் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும் உபதேசித்த இறைவனும்

  1. ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
  2. உத்திரகோசமங்கை – பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
  3. இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
  4. திருவுசாத்தானம் – இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
  5. ஆலங்குடி – சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
  6. திருவான்மியூர் – அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
  7. திருவாவடுதுறை – அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
  8. சிதம்பரம் – பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
  9. திருப்பூவாளியூர் – நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
  10. திருமங்களம் – சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  11. திருக்கழு குன்றம் – சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
  12. திருமயிலை – 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
  13. செய்யாறு – வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
  14. திருவெண்காடு – நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
  15. திருப்பனந்தாள் – அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
  16. திருக்கடவூர் – பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
  17. திருவானைக்கா – அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
  18. மயிலாடுதுறை – குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
  19. திருவாவடுதுறை – அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
  20. தென்மருதூர் – 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
  21. விருத்தாசலம் – இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
  22. திருப்பெருந்துறை – மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
  23. உத்தரமாயூரம் – ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
  24. காஞ்சி – ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
  25. திருப்புறம்பயம் – சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
  26. விளநகர் – அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
  27. திருத்துருத்தி – சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
  28. கரூர் – ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
  29. திருவோத்தூர் – ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது ஏன்?

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் காஞ்சி மகா பெரியவாளிடம் ஒரு கேள்வி கேட்டார். அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது? என்று கேட்டார், ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால் வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து அதோ பார் நிலா என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள். அது போல ராம தூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு. அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போது வானத்தில் செக்கச் செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயு புத்திரன் அல்லவா? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங் குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. ராகு பகவான் அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த போட்டியில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். உளுந்து தானியம் இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதன்படி உளுத்தம் பருப்பை மாவாக்கி பாம்பு போல் வடை தயாரித்து அதனை மாலைகளாக கோர்த்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. (தற்போது இதனை அறிந்து கொள்ளாமல் சிலர் அரிசியிலும் செய்து மாலை கோர்த்து சாற்றுகிறார்கள். உளுந்தில் செய்தாலும் பாம்பின் உடல் போல் வளைந்து செய்யாமல் தட்டையாக வடைகளை சுட்டு பாலை கட்டி சார்த்துகிறார்கள்) வடையாகட்டும் ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு. இனிப்பு ஜாங்கிரி வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும் அவர்களுக்குக் காலை உணவு வேளையில் இனிப்புப் பண்டங்களையும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான் அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள். அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி என்று சொல்லி விட்டு சிரித்தார் மஹா பெரியவா.

அறியாமை மனம்

சிவாலய வளாகத்துக்கு அருகே ஒரு நாய் எப்போதுமே சுற்றிக் கொண்டே இருக்கும். கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தது. அப்போது அந்த ஊரின் சிவாலயத்தில் 11 நாட்கள் தொடர் திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அந்த ஊரில் அனைவருமே தாங்கள் சாப்பிடும் உணவை இறைவனுக்கு படைத்து விட்டு சாப்பிட்டார்கள். இறைவனுக்கு படைத்தது என்பதால் கீழே போடக்கூடாது என்று மீதம் இல்லாமல் சாப்பிட்டார்கள். யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவில்லை. நாய்க்கு எச்சில் இலை உணவு கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயிலின் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது. அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் செய்தார். ராமர் பூஜை பிரதிஷ்டை செய்த லிங்கம் உள்ள இராமேஸ்வரம் தல மகிமையை விளக்கமாக பேசினார். அனைத்தையும் அந்த நாயும் காது கொடுத்து கேட்டது. இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் உள்ள சிறப்பை கேட்டதும் மக்கள் அனைவரும் திருவிழா முடிந்ததும் அக்கோயிலுக்கு செல்ல வேண்டும் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். நாய் சிந்தித்தது. நாமும் இப்படியே எச்சில் இலையை பொறுக்கித் தின்றே காலத்தை கழித்து விடக் கூடாது. இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தது. திருவிழா முடியும் வரை கோயிலின் அருகே இருந்து இவரது சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு மேலும் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின் கிளம்பலாம் என்று நாய் முடிவு செய்து திருவிழா முடியும் நாளுக்காக காத்திருந்தது. கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை தினமும் கேட்டு நாளடைவில் அதற்கு இராமேஸ் வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது. சாப்பிடாமல் விரதம் இருந்ததால் வைராக்கியம் அதிகரித்தது. திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

கோயிலில் திருவிழா முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள். நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது. முதல் அடி எடுத்த வைத்தது. அப்போது ஒரு வீட்டின் பின் பக்கத்தில் இருந்து பொத் என்று ஒரு சத்தம் கேட்டது. நாய் திரும்பிப் பார்த்தது. எச்சில் இலையில் நிறைய உணவு இருந்தது. அதனைப் பார்த்ததும் பசியுடன் இருந்த நாயின் வாயில் எச்சில் ஊறியது. என்ன மணம் நல்ல கறி விருந்தாக இருக்கிறது என்று சாப்பிட்டது. நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த கறி விருந்து கிடைத்திருக்காது என்று நினைத்து அடுத்த எந்த வீட்டில் இலை விழும் என்று பார்க்க தொடங்கி இராமேஸ்வரத்தை மறந்தது.

இந்த நாயின் மனம் போலத்தான் ஒரு மனிதனின் மனம். இந்த மனம் இருக்கிறதே மகிழ்ச்சியில் அனுபவிக்க எது கிடைத்தாலும் நன்றாக அனுபவித்து ஆட்டம் போடும். மகிழ்ச்சிக்கு எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பண்ணுவது போலவும் நம்மை போல பக்திமான் யாரும் இல்லை என்னைப் போல் நல்லவன் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும். ஆனால் பணம் சேர்க்க பொருள் சேர்க்க தவறு செய்யும் போதும் நாக்கு சுவை தேடி புலால் உண்ணவும் மது உண்ணவும் என்று வாய்ப்பு கிடைத்ததும் கோயிலாவது சாமியாவது புண்ணியமாவது அதுக்கெல்லாம் இன்னும் வயது இருக்கிறது. இப்பவே சாமியார் மாதிரி உத்திராட்சம் போட்டு திருநீறு பூசி காசி இராமேஸ்வரம்னு போகனுமா? வாழ்க்கையை இந்த வயதில்தான் அனுபவிக்க வேண்டும் என்று ஆட்டம் போட மனம் ஆரம்பித்து விடும். துக்கம் வந்தால் சாமி சாமி என்பதும் துக்கம் தொலைந்ததும் ஆட்டம் போடுவதும் மனிதனின் பிறவித் துன்பத்திற்கு மூல காரணமாகவே இருக்கிறது. இதனை அறியாத மனிதன் நான் எனது என்னுடையது என்று ஆட்டம் போட்டபடியே அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட 5 வகை குளியல்கள்

  1. வாருணம் – குளம் ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தல் வாருணம் ஆகும். இதில் கழுத்து மற்றும் இடுப்பு வரை குளித்தலுக்கு கௌணம் என்று பெயர்
  2. பஸ்மோத்தூளனம் – விபூதி பூசிக் கொள்வது. விபூதி குளியல் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் வெப்பத்தால் கிடைக்கும் சாம்பலை பூசிக் கொள்வது.
  3. வாயவ்யம் – பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அதன் கால் குளம்பு மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணன் இந்தப் பசுக்களின் கால் குளம்பு பட்ட மண்ணை சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி இருப்பாராம். இதனால் அவருக்கு கோதளி தூஸரிதன் என்ற பெயர் ஏற்பட்டது. காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம் எனப் பெயர்.
  4. திவ்யம் – திவ்யம் என்ற சொல்லுக்கு மேன்மைய்யானது தெய்வீகத் தன்மை கொண்டது என்று பொருள். பகலில் சில நேரங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழியும். இவ்வாறான மழை நீர் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதால் திவ்யக் குளியல் என்று பெயர்.
  5. ப்ராஹ்ம ஸ்நானம் – ப்ரம்ஹம் என்றால் வேதம் மற்றம் வேத மந்திரம் என்று ஒரு பொருள். கலச நீர் வைத்து மந்திரம் சொல்லி யாகம் செய்தபின் அந்த கலசத்தில் உள்ள மந்திர நீரை தெளிப்பார்கள். வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த நீரை தெளித்துக் கொள்ளுதலுக்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.