பக்தியின் உச்சம் அன்பு

லட்சுமி அம்மாள் என்கின்ற எச்சம்மாள் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். வினையின் காரணமாக அவரது கணவர் அவரது மகன் மற்றும் இரண்டு மகள்கள் அடுத்தடுத்து இழந்த நிலையில் விதி அவளை ரமணரின் முன்னிலையில் அழைத்துச் சென்று நிறுத்தியது. எச்சம்மாள் விருபாக்ஷா குகையில் ரமணரின் முன் ஒரு மணி நேரம் நின்றாள். அந்த ஒரு மணி நேரத்தில் அவளுடைய வேதனைப்பட்ட இதயமும் அதிர்ச்சியடைந்த மனமும் மாறியது. அவளின் மனம் அமைதியின் உச்சத்திற்கு சென்றது. ரமண மகரிஷியுடனான இந்த சந்திப்பிற்குப் பிறகு எச்சம்மாள் 1907 இல் திருவண்ணாமலையில் குடியேறினார். தினமும் சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு அவருக்கும் அவருடன் வசிப்பவர்களுக்கும் உணவு கொண்டு வரும் பணியை எச்சம்மாள் எடுத்துக் கொண்டாள்.

எச்சம்மாள் ஒரு முறை பகவானுடைய படத்துக்கு ஒரு லட்சம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதாக சங்கல்பித்தார். எவ்வளவு தேடியும் 50000 இலைகள் மட்டுமே அவளுக்கு கிடைத்தன. கடும் கோடை வேறு எங்கும் இலைகள் கிடைக்கவில்லை. வில்வ இலைகள் கிடைக்க அருள்புரியுமாறு ரமணரிடம் முறையிட்டார். உடனே ரமணர் உன் உடம்பை கிள்ளி பூஜை பண்ணு என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தூக்கி வாரிப் போட்டது. கிள்ளினால் வலிக்குமே என்றார். மரத்திலிருந்து இலையை கிள்ளினால் வலிக்காதா? என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தன் தவறு புரிந்தது. பகவானே முன்னேயே சொல்லி இருந்தால் அந்த ஐம்பதாயிரம் இலைகளை கிள்ளி இருக்க மாட்டேனே? என்றார். உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும்ன்னு தெரியும். இலைகளை கிள்ளினா அதுக்கு வலிக்கும்ன்னு தெரியாதா? இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா? என்றார் ரமணர்.

பூஜை என்பது இலைகளைக் கிள்ளியும் பூக்களைப் போட்டும் மாலைகளை அணிவித்தும் நைவேத்தியம் செய்தும் படைப்பதல்ல. இதெல்லாம் கண் தெரியாதவனுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல உதவும் கம்பு போல இறைவனின் அருகில் செல்ல உதவும். ஆனால் பக்தியில் முழுமையடைய வேண்டுமானால் எதிரே இருக்கும் இறைவன் அனைத்து உயிர்களுக்கும் இருக்கின்றான் என்று உணர்வதும் தனக்குள்ளேயே இருக்கின்றான் என்று உணர்வதும்தான் அந்த உணர்வில் அன்பை வெளிப்படுத்துவதே பக்தியின் உச்சம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. திருமந்திரம் பாடல் எண்: 270

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.