பஞ்சாட்சரம்

பஞ்ச அட்சரம் பஞ்சாட்சரம் ஆகும். பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும். பஞ்சாட்சரம் இந்த சமஸ்கிருத வார்த்தையை தமிழில் ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்கின்றோம்.

ஐந்தெழுத்து மந்திரம் என்பது என்ன?

நமசிவய ஐந்தெழுத்து மந்திரமாகும்.

உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம் மெல்லினம் இடையினம் என பிரிக்கலாம்.

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்.

ந ம சி வ ய எழுத்துக்களில் முதல் இரண்டு எழுத்துக்கள் மெல்லினம். மத்தியில் உள்ள ஒரேழுத்து வல்லினம். இறுதி இரண்டு எழுத்தும் இடையினம். ஐந்து எழுத்துக்களும் ஐந்து பூதங்களை குறிக்கும்.

ந – நிலம்
ம – நீர்
சி – நெருப்பு
வ – காற்று
ய – வானம்

மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற இந்த ஐந்து பூதங்களின் ஆற்றலும் இந்த நமசிவய மந்திரத்தில் உள்ளது என்பதை ஞானிகள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு எளிதில் யாராலும் உணர முடியாத இறைவனை நமசிவய என்று உணர்ந்து சொன்னால் இந்த ஒரு சொல் இறைவனை உணர வைப்பதை ஞானிகள் உணர்ந்து வெளிப்படுத்தினார்கள். இதனை ஆழ்ந்து தியானித்து கவனித்தால் புரியும். மேலும் இந்த ஐந்து எழுத்துக்களின் உயிர்த் தன்மையை இறைவனின் அருளால் உணர்ந்து கொண்ட ஞானிகள் நமசிவய எனும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை தனது சீடர்களுக்கு உபதேசம் செய்தும் பல பாடல்களின் வழியாக மக்களுக்கும் உபதேசித்தார்கள்.

நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கிறது. நெருப்பு இந்த நான்கின் நடுவிலும் இயற்கைக்கு ஏற்றவாறு தனித்தன்மையாக குறைந்த வெப்பமான குளிர்ச்சியாகவும் அதிகபட்ச வெப்பமாகவும் இருக்கிறது. ஆகாயம் காற்று நெருப்பு நீர் மண் இவைகளின் சக்தியை அளவிட முடியாது. இவைகள் தனித்தனியே இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லவும் இயலாது. இதனை அறிந்த ஞானிகள் இதனை பஞ்ச பூதங்கள் என்று வகுத்து வைத்தார்கள்

மனிதர்கள் அனைவருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை. மனிதர்களின் ஆசைகள் கர்மாக்களுக்கு ஏற்ப ஒன்று அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். இதனால்தான் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் இருப்பதில்லை. சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள். சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள். சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள். காரணம் இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான். அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைகள் நீங்குகிறது. அவனது உடம்பில் உள்ள பஞ்சபூத ஆற்றல் அதிகரிகிறது. பஞ்ச பூதங்களின் ஆற்றல் அதிகமான மனிதன் மிக ஆற்றல் மிக்க உணர்வுகளால் தூண்டப்பட்டு மேன்மை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான். அவனுக்கு உலகின் இயக்கமும் அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது. தான் யார் என அறிகின்றான். தான் யார் என அறிந்தவன் இறைவனை அறிந்தவனாகின்றான். இறைவனை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை. அவன் தாம் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான். அவர்களைத்தான் சாதாரண மக்கள் ஞானிகள் என்கிறார்கள். ஆகவே நமசிவய மந்திரத்தை சொல்வோம். ஞானம் பெறுவோம். இறைவனை உணர்வோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.