ஆருத்ரா தரிசனம்

பிறப்பே எடுக்காத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி இரண்டு புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தார் சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும் ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள் இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சிவபெருமான் பக்தர்களுக்காக இப்பூமியில் நின்ற நாள் ஆருத்ரா நன்னாள்.

காயத்திரி மந்திரம்

விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள். 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். இந்த மந்திரத்தை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு காயத்திரி மந்திரம் என்ற பெயர் ஆயிற்று.

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம் எனக் குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும் மலைகளில் நான் விந்திய மலையாகவும் மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும் காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம் தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம் எனக் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் உயர் அறிவு சக்தியினை அளித்து அறியாமையை நீக்க வேண்டும் என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

காயத்திரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

7 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

11 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது நரம்பு மண்டலத்திலும் சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது ஒருவரின் அழிவுப்பூர்வ ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

31 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளையின் க்ரே பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

150 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது உயர்நிலையினை மனம் மற்றும் மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாக இருக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றி இதுவரை விஞ்ஞான ஆய்வுகள் செய்யப்படவில்லை. என்றாலும் அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் நீர் பெரிய ராமபக்தர். பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்கள் ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டுங்கள் என்றார். நான் மாயாஜாலக்காரன் அல்ல ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல கோபப்பட்ட அக்பர் அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர் தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும் திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.

படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை. அக்பரிடம் சென்ற சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும் என்று ஆலோசனை அளித்தனர். அதையடுத்து துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே வானரப் படைகள் மாயமாய் மறைந்தன. துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஹனுமான் சாலிஸா தமிழில்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய்
ஸ்ரீ ஹனுமானே

ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே.

Image result for துளசிதாசர்

திருமூலர் காட்டும் லிங்கங்கள்

லிங்கம் என்பதற்கு மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.

  1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். பிரளய காலத்தில் பிரபஞ்சங்கள் அனைத்தும் எந்த இடத்தில் ஒடுங்கி பின்னர்ப் படைப்புக் காலத்தில் மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.
  2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும். சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
  3. லிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பின் அடையாளத்தை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம் எனலாம்.

திரூமூலர் கூறும் லிங்க வகைகள்

  1. அண்ட லிங்கம்
  2. பிண்ட லிங்கம்
  3. சதாசிவ லிங்கம்
  4. ஆத்ம லிங்கம்
  5. ஞான லிங்கம்
  6. சிவ லிங்கம்

1.அண்ட லிங்கம்

அண்டம் என்றால் உலகம். லிங்கம் என்பது அடையாளம். அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் உற்பத்தி செய்தான். குண்டலினி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713) இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724) நிலம் – ஆவுடையார், ஆகாயம் – இலிங்கம், கடல் – திருமஞ்சனமாலை, மேகம் – கங்கை நீர், நட்சத்திரங்கள் – ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை – எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம். (திருமந்திரம் 1725)

2.பிண்ட இலிங்கம்

மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.

மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து. (திருமந்திரம் 1726)

என்று திருமூலர் கூறுகின்றார். மக்கள் தலை – பாணம், இடைப்பட்ட உடல் – சக்தி பீடம், கால் முதல் அரை வரை – பிரமபீடம் எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

3.சதாசிவ லிங்கம்

லிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு இருதயம் – ஞானசக்தி, தலை – பராசக்தி, தலைமுடி – ஆதிசக்தி, கவசம் – இச்சா சக்தி, நேத்திரம் – கிரியா சக்தி, சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ லிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.

4.ஆத்ம லிங்கம்

அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம லிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கிறார். ஒளியும் ஒலியும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

5.ஞான லிங்கம்

உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770) என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.

6.சிவலிங்கம்

அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு அடையாளத்தின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகிறது. உருவம் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைத்து வழிபடுவது கடினம். பக்குவத்தை தேடும் உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து இறைவனை உணர ஓர் உருவம் தேவைப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் சிவலிங்க உருவமாக எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே. (திருமந்திரம் 1773)

என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை லிங்க வடிவில் வழிபட்டு நற்பேறுகளைப் பெருவோம்.

No photo description available.

தென்னாடுடைய சிவனே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி அப்படினா வடநாட்டு சிவன்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள்.

தென்னாட்டு சிவன் தான் அசல். வடநாட்டு சிவன் அப்படியல்ல. ஏனெனில் வடநாட்டு சிவன் ருத்திரனாக மட்டுமே பாவிக்கப்படுகிறார். தென்னாட்டின் முக்கிய சிவன் கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. வடநாட்டில் அப்படி அல்ல. இங்கு கோவில் கருவறையில் லிங்கத்தை தொட்டு வழிபட உரிமையில்லை. வடநாட்டில் தொட்டு வழிபடலாம். காசியில் உள்ள சிவன் கோவில் உட்பட. அதற்கு அங்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல. சிவனே அங்கு தீண்டாதவர். ஏனெனில் படைப்புத்தொழிலை பிரம்மாவும், காக்கும் தொழிலை விஷ்ணுவும், அழிக்கும் தொழிலை சிவனும் செய்வதாக கூறுவது வடநாட்டு மரபு.

தென்னாட்டில் எல்லாத்தொழிலையும் (முத்தொழில்) சிவனே செய்கிறார் என்று நம்புவது தென்னாட்டு சைவ சித்தாந்த மரபு. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் போக மேலும் இரண்டு தொழிலை சிவன் செய்கிறார். அது மறைத்தல்,அருளல். எனவே தென்னாட்டு சிவன் ஐந்தொழில் செய்பவராக இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த ஐந்தொழிலை ஆற்றுவதை விளக்குவது தான் சிதம்பரம் கோவில் நடராஜர் வடிவம். நடனத்தின் அரசனாக சிவனை பார்ப்பது தென்னாட்டில் மட்டுமே.

எனவே தென்னாடுடைய சிவனே போற்றி.

இறைவன் தரிசனம்

கடவுள் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். மன்னனும் எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ அதே போல ராணியாருக்கும் மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும் நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தர வேண்டும் என்று ஆவலான வரத்தை கேட்டான். இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டு விட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.

அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக் கொண்டு வா காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார். மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும் இறைவனை காண வாருங்கள் என்று மக்களுடனும் மலையை நோக்கி புறப்பட்டான். அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர். சிறிது உயரம் சென்றவுடன் அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன. உடனே மக்களில் நிறைய பேர் செம்பை மடியில் கட்டிக் கொண்டு சிலர் செம்பு பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான். அதற்கு மன்னா இப்பொழுது இது தான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது என்று ஒட்டு மொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக் கொண்டு மலையேற துவங்கினான் மன்னன்.

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன. அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டை கட்ட ஆரம்பித்தனர். மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான். விலை மதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான். மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன் மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிது தொலைவில் தென்பட்டது தங்கமலை. ராஜகு டும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்று விட மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும் தளபதியும் மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே சரி வாருங்கள். செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக் கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன் அங்கே தென்பட்டது வைரமலை அதைப் பார்த்த ராணி முதற் கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன். கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார் மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன். அதற்கு கடவுள் நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும். உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக் கொண்டவர்கள் சிலருக்கு உடல் செல்வம் சொத்து என்ற செம்பு வெள்ளி தங்கம் வைரம் போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர் என்று சொல்லி மன்னனுக்கு அருளை வழங்கி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.

நம: பார்வதி பதயே

சிவன் கோயில்களில் நம: பார்வதிபதயே என ஒருவர் சொல்ல ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் அவருக்கு மகாதேவன் என்று பெயர்.

பூலோகத்தில் உமாதேவியிடம் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் இறைவனை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தார். இவர் ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாக அழிந்து விட்டது. அதாவது உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும் என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார். அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே என்றார் திருஞானசம்பந்தர். அரன் என்றால் சிவன். சிவ நாமம் உலகம் முழுவதும் சூழ துயர்கள் அனைத்தும் தீரும்.

நம: பார்வதீபதயே என்று ஒரு பெரியவர் சொல்ல உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு அம்மையப்பனைத் துதித்து ஹர ஹர மகாதேவா என்று சொன்னால் அனைத்து தீயவைகளும் அழிந்து போகும்.

Image result for நம: பார்வதி பதயே"

நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.

கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான். சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார்.

வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன்? பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.

Image result for சிவபக்தன்"

இறைவனின் மகிழ்ச்சி

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வாருமாறு கூறினார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன். நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்றார். திடுக்கிட்ட பண்ணையார் இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன் என்றார். இறைவன் எமக்கு வந்த ஒரு பழத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன் என்றார். விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா என்றார். அவன் ஆம் என்றான். பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார். உண்மையைச் சொல் இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன் எனறார். அவன் உண்மையைச் சொல்லி விடுகிறேன் வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான் நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன் மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன் என்றான். பண்ணையாருக்குப் புரிந்து விட்டது. கோயிலுக்குக் கொடுத்த 99 பழத்தை விட ஏழைக்குக் கொடுத்த ஒரு பழமே இறைவனைக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது.

பசியோடு இருப்பவரின் பசியை தீர்க்காமல் கோவிலுக்கு எவ்வளவு கொடுத்தாலும் இறைவனுக்கு மகிழ்ச்சி இல்லை.