மனம்

மனம் என்பது உழாத நிலம் போன்றது ஆகும். நிலத்தில் கலைகள் தேவையில்லாத முட்கள் முளைத்து இருக்கும். மண் முரடாக இருக்கும். கல் பாறைகள் இருக்கும். அதில் தெய்வீக செடியை நட இயலாது. மண்ணில் உள்ள தேவையில்லாத குப்பைகளை நீக்கி மண்ணை முதலில் ஏர் உழுது பன்படுத்திய பிறகுதான் செடியை நட வேண்டும். அப்போது செடியானது நன்கு வளரும். நிலத்தை உழுது பன்படுத்துவது போல நம் மனதையும் இயமத்தால் தீயவற்றை நீக்கி மனதால் நன்மை தரக்கூடிய நியம வழியை கடைபிடித்து தெய்வீக செடியை நட்டு வைத்தால் இறைவன் அங்கு வந்து அமர்வான்.

இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

  1. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
  2. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
  3. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
  4. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
  5. பிறர் கொடுக்கும் பரிசுகளை ஆசையினால் பெற்றுக் கொள்ளாமை.
    இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.

நியமம்: நன்மைகளைப் பெறுவது

தவம் ஜபம் சந்தோஷம் தெய்வ நம்பிக்கை தானம் சிவவிரதம் சித்தாந்தக் கேள்வி சிவபூசை ஞான அறிவு நாணம் ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும் போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.

இதனை தொடர்ந்து செய்பவர்களுக்குள் இறைவன் வந்து அமர்வான். இதனை திருமந்திரம் அட்டாங்க யோகம் தலைப்பில் வரும் பாடல்களில் தெரிந்து கொள்ளலாம்.

தச வாயுக்கள்

  1. உயிர் காற்று (பிராணன்) – மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.
  2. மலக் காற்று (அபானன்) – கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.
  3. தொழிற் காற்று (வியானன்) – நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொண்டுசெல்லும்
  4. ஒலிக் காற்று (உதானன்) – இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை வெளிப்படுத்தும்
  5. நிரவுக் காற்று (சமானன்) – சத்துக்களை உடல் முழுதும் சம அளவில் கொண்டு சேர்ப்பது.
  6. விழிக் காற்று (நாகன்) – பார்வைத் திறன் அளிப்பது உணர்ச்சிகளை தூண்டக் கூடியது
  7. இமைக் காற்று (கூர்மன்) – கண்ணீரை வரவழைத்தல் சிரித்தல் போன்றவைகளுக்கு காரணமாக உள்ளது.
  8. தும்மல் காற்று (கிருகன்) – நாவில் சுரப்பையும் பசி தும்மலுக்கு காரணம்
  9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) – கொட்டாவி விடுதல் விக்கலுக்குக் காரணம்
  10. வீங்கக் காற்று (தனஞ்செயன்) – நினைவற்ற நிலையில் உடலை வீங்கச் செய்தல் (பெருக்க குறைக்க) போன்றவைகளுக்குக் காரணம்

உடலில் இந்த தச வாயுக்கள் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. இந்த பத்து வாயுக்களுடன் சில துணை வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவை

முக்கியன் – உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
வைரவன் – கபத்தை உருவாக்கும்.
அந்திரியாமி – பிராணனை உருவாக்குதல்.
பிரவஞ்சனை – பிராண வாயுவின் நண்பன் இக்காற்றின் துணையுடன் தான் சுவாசம் நடக்கிறது.

இந்த பத்து காற்றுகளும் ஒரு மனிதன் இறக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கும்? முதலில் இவ்வுடலை விட்டு பிரிவது உயிர்க் காற்றும் நிரவுக் காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்து விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. மற்ற காற்றுகள் உயிரில்லாத அந்த சவ உடலில் இருந்து கொண்டிருக்கும். ஒருவர் இறந்து விட்டால் உயிர் சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்து விடுவதில்லை. இரண்டு வாயுக்கள் தவிர மற்ற 8 வாயுக்களும் இறந்த உடலில் 11 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை இருக்கும். அது வரை நமது சவ உடலில் முடியும் நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல் பட்டுக் கொண்டிருப்பதை ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உடலை விட்டு 8 காற்றுகளும் ஒவ்வொன்றாக மெதுவாகவே வெளியேறும். சவ உடலை விட்டு வெளியேறும் வரையில் சவ உடலை வீங்க வைப்பதும் கெட்டுக் போக வைப்பதும் நவ துவாரங்களில் நுரை நீர் வரச் செய்தல் உடம்பை துர் நாற்றம் எடுக்கச் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்கிறது. எப்போது இந்த வேலை முடிகிறதோ அது வரை சவ உடலில் இக்காற்றுகள் இருக்கும். இறுதியாக தனஞ்செயன் என்ற காற்று வெளியேறும். தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

வள்ளலார் இப்படி நடக்கக்கூடாது என்றுதான் இறந்த உடலை புதைக்க சொல்கிறார். புதைக்காமல் எரித்து விட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்ய விடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றியது போலாகும். எரித்தல் நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக் கூடிய தனஞ்செயன் வாயு இடுகாட்டில் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் டப் என்று சப்தத்துடன் வெடித்து வெளியேறும். இந்த தனஜய வாயுவின் உதவியுடன் பல ஞானிகள் யோகிகள் இறந்த நபரை மீண்டும் உயிருடன் வரச் செய்திருக்கிறார்கள்.

பல யோகிகள் ஞானிகள் உடலை விட்டு விட நினைக்கும் போது தங்களது யோக சாதனைகளால் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் முழுமையாக எடுத்துக் கொண்டு உடலை விட்டு விலகுவார்கள். தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இதன் காரணமாகவே இவர்களது உடல் எத்தனை வருடங்களானாலும் கேட்டுப் போகாமல் இருக்கும்.

ஜீவ சமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்து வித வாயுக்களுமே வெளி வருவது இல்லை. காரணம் இவர்கள் விரும்பும் போது அல்லது உலக நன்மைக்காக இவர்கள் மீண்டும் இவ்வுலகில் அந்த உடலுடன் வெளி வருவார்கள். காற்றுடன் ஜீவ சமாதியில் இருப்பவர் யார் காற்றை எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்ற ஞானிகள் யார் என்பதை சராசரி மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அமைதி

வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – மந்திரம்.
செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – தந்திரம்.
ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – இசை.
பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – கடாக்ஷம்.
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – யோகா.
மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்.
சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – பிராணாயாமம்.
சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – குண்டலினி.
இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் கோவில்.
உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – குடும்பம்.
தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – அன்பு.
இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – பக்தி.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை.

  1. மச்ச அவதாரம்

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

  1. கூர்ம அவதாரம்

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

  1. வராக அவதாரம்

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

  1. நரசிம்ம அவதாரம்

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

  1. வாமண அவதாரம்

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6.பரசுராம அவதாரம்

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

  1. ராம அவதாரம்

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

  1. பலராம அவதாரம்

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9.கிருஷ்ணஅவதாரம்

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

  1. கல்கி அவதாரம்

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய குடும்பக் கோரம்

திருவருட் பிரகாச வள்ளலாரை முத்துசாமி என்பவர் தன் திருணமத்திற்கு அழைத்திருந்தார். வள்ளற்பெருமான் திருமணத்திற்கு செல்லவில்லை. வள்ளற்பெருமான் வராததை எண்ணி வருத்தம் கொண்டார் முத்துசாமி அவர்கள். அவர் வருந்துவதை உணர்ந்த வள்ளற்பெருமான் தன்னுடைய மூன்று மனைவிகள் 8 பிள்ளைகள் படுத்தும் பாட்டால் திருமணத்திற்கு வர இயலவில்லை என்று குறிப்பிட்டு பாடல் வடிவில் ஒரு கடிதம் எழுதினார். அந்தப் பாடல்களே குடும்பக் கோரம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த உபதேசம் இது. தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதால் இது குடும்பகோரம் எனப்பெயர் பெற்றது.

பாடலின் கருத்து:

குடும்பத் தலைவன் பெயர் – ஏழை அவனுக்கு மூன்று மனைவிகள்:
முதல் மனைவி – ஆணவம்
இரண்டாம் மனைவி – மாயை
மூன்றாம் மனைவி – கன்மம்.

முதல் மனைவியாகிய ஆணவத்திற்கு ஒரே மகன் – அவன் பெயர் அஞ்ஞானம். இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு நான்கு பிள்ளைகள் – 1. மனம் 2. புத்தி 3.சித்தம் 4.அகங்காரம். மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு மூன்று பிள்ளைகள் – 1.சத்துவம் 2.இராசசம் 3.தாமசம்

மூன்று மனைவியரோடும் எட்டுப் பிள்ளைகளோடும் ஏழைத் தலைவன் வாழ்வதோ வாடகை வீட்டில். வாடகை வீடு ஒருவருக்கு சொந்தமானது இல்லை. வீடு மூன்று பேருக்கு சொந்தமானது. அந்த மூன்று பேர் 1.வாதம் 2.பித்தம் 3.சிலேத்துமம்.
வீட்டுக்காரர்கள் மூவரும் வீட்டிற்கு ஒவ்வொரு மாதமாக வாடகை வாங்குவது இல்லை. தினந்தோறும் வாடகையை வசூலிக்கின்றனர். வீடு – உடம்பு. வாடகை – உணவு.

இவ்வாறு துன்புறும் குடும்பத் தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம் உள்விவகாரம் உள்ளது. அவை வேதாந்தம் பேச வருவோர்கள் சித்தாந்தம் பேச வருவோர்கள் இதிகாசம் கூற வருவோர்கள் இலக்கணம் இயம்ப வருவோர்கள் மத தூஷணம் செய்ய வருவோர்கள் விவகாரம் பேச வருவோர்கள் வீண் கதைகள் பேச வருவோர்கள் இப்படி எத்தனையோ வெளி விவகாரங்கள்.

மலங்கழித்தல் பல்துலக்குதல் ஆடை துவைத்தல் நீராடல் சிவ சின்னம் அணிதல் பூசனை யோகம் என எத்தனையோ உள் விவகாரங்கள். இத்தனை விவகாரங்களுக்கும் பகல் பொழுது சரியாகப் போகிறது.

இரவு வந்தது இனிப் பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும். பரத்தை யார்? நித்திரை. நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றது என்று வள்ளலாரின் குடும்ப கோரம் நிறைவு பெருகின்றது.

இவ்வாறு பாடல்களை அருளி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்கு இக்குடும்ப கோரத்தை வள்ளலார் கொடுத்து அனுப்பினார். பெருமானிடமிருந்து குடும்பகோரக் கடிதத்தை முத்துசாமியிடம் கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார். முத்துசாமி இந்த அகவலை மனப்பாடம் செய்து வைத்திருந்தார். மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டு அதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார். அது சித்தந்த சரபம் கலியாண சுந்தரனார் (அட்டாவதானம் பூவை கலியான சுந்தரனார்) பார்வையிட்டு காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை ஒரு பாதியும் ஆகஸ்டு இதழில் மறுபாதியுமாக வெளிவந்தது. அனைத்து திருஅருட்பா பதிப்புகளிலும் குடும்ப கோரம் பிற்சேர்க்கை பகுதியில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் இதுவே மிக நீண்ட செய்யுள் கடிதம் ஆகும்.

அரோகரா

முருகனை வணங்கும் போது அரோகரா என்ற சொல்லுக்கு விளக்கம் என்ன?

அரோகரன் என்பது முருகனின் தூய தமிழ்ப் பெயராகும். அரன் + ஓங்கரன் = அ(ர+ஓ)கரன் = அரோகரன். ஓங்கரனில் இருக்கின்ற “ங்” உச்சரிப்பே நாளடைவில் மழுவி ஓகரன் ஆகிவிட்டது. தமிழ் இலக்கணத்தின்படி ன் எழுத்து இருந்தால் அது விலகி ஆ சேரும். உதாரணமாக முருகன் கந்தன் என்ற அழைக்கும் போது முருகன் என்பதை முருகா என்றும் கந்தன் என்பதை கந்தா என்றும் அழைக்கிறோம். அதுபோலவே அரோகரன் என்பதை அரோகரா என்றும் அழைக்கிறோம்.

அரோகரன் என்றால் பொருள் என்ன?

அரன் என்றால் = சிவன்
ஓங்கரன் = ஓங்காரத்தின் உருவமாக இருப்பவன்

அரோகரன் என்றால் சிவனிடமிருந்து வெளிவந்த ஓங்காரத்தின் வடிவமானவன் என்று பொருள்.

இராணியின் படிக்கிணறு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு உள்ளது இது இராணியின் படிக்கட்டு என்று அழைக்கபடுகிறது. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று. நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் காளி ராமர் கிருஷ்ணர் நரசிம்மர் கல்கி மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி வாமனர் வராகி நாககன்னிகள் யோகினி 16 வகையான கலை நயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர் சாதுக்கள் திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன. லட்சுமி தேவியுடன் வராகமூர்த்தி கையில் பாஞ்சஜன்ய சங்குடன் இருக்கும் சிற்பமும் உள்ளது.

1050 இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும் மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும் மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304 இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெருமாள் கோவிலில் தாயாரை முதலில் ஏன் தரிசிக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?

ராமாயணத்தில் 14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும் என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால் ராமர் சீதை மற்றும் லட்சுமணன் தண்டக வனத்திற்கு வந்து அங்கிருந்த சரபங்க முனிவரை தரிசித்தார்கள். ராமரை தரிசித்த பிறகு சரபங்க ரிஷி சுதீக்ஷன ரிஷியை சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு தன் உடலை அக்னியில் விட்டு விட்டு பிரம்ம லோகம் சென்று விட்டார். சரபங்கர் சொன்னபடி சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள் மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமர் சீதையுடன் லட்சுமணனும் வந்து கொண்டிருந்தான். வரும் வழிகளில் பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் ராமரை பார்த்து இந்த வானத்தில் வசித்து கொண்டிருக்கும் முனிவர்கள் நாங்கள் ராட்சர்களால் அனாதைகள் போல குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம். இதோ பாருங்கள் குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராட்சர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்கள் விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. பம்பா நதிக்கரையில் மந்தாகினி ஓடும் நதிக்கரையில் சித்ரகூடத்தின் அருகில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராட்சர்கள். ராமா ராட்சர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராட்சர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ராமர் முனிவர்களிடம் பேச ஆரம்பித்தார். முனிவர்களான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே இந்த வனத்திற்கு வந்துள்ளேன். என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான் உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராட்சர்களை தடுப்பேன். அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது. உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராட்சர்களை நான் ஒழிப்பேன். என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள் என்று உறுதியளித்து அவர்களிடமிருந்து விடைபெற்றார்.

ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள். ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. திருப்தியே இல்லாதவன் பொய் பேச துணிவான். திருப்தியே இல்லாதவன் அடுத்தவர்களின் தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான். திருப்தியே இல்லாதவன் தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். பொய் சொல்வதை காட்டிலும் மற்ற இரண்டும் மிகவும் கொடியது. நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அசத்தியம் கிடையவே கிடையாது. அதே போல பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை. பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை. நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்தினிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர் சத்தியத்தை மீறாதவர் தகப்பனார் ஆணையை மீறாதவர். உங்களிடம் எப்பொழுதும் தர்மமும் சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது. புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன். உங்களிடம் பொய்யும் இல்லை பெண்ணாசையும் இல்லை. ஆனால் இப்போது உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும் மூன்றாவது குறை தெரிகிறதே. இந்த வனத்தில் வசிக்கும் முனிவர்களைப் பாதுகாப்பதற்காக ராட்சசர்களைக் கொல்வேன் என்று முனிவர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே. நீங்கள் இந்த வனத்தில் ராட்சசர்களைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த காரணத்தால் உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்படக் கூடாதே என்று கவலை கொள்கிறேன் என்றாள் சீதை.

திருமால் ராமராக அவதரித்தது போல் மகாலட்சுமியே சீதையாக அவதரித்து இருப்பதால் இறைவியின் இந்த குணம் வெளிப்பட்டது. எலும்பு குவியலாக முனிவர்களை கொன்று குவித்த ராட்சசர்களை கொல்ல கூடாது என்பதற்காக தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும் சீதையையை கண்டு சிரித்தார் ராமர். சீதையின் குணம் இது என்று அறிந்த ராமர் தர்மத்தை காப்பது என் கடமை. நானாகவே ராட்சசர்களை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. முனிவர்கள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். தர்மத்தின்படி அவர்களை காக்கும் பொறுப்பு சத்ரியனான எனக்கு இருப்பதால் அவ்வாறு வாக்கு கொடுத்தேன் வாக்கு கொடுத்து விட்டால் என்னால் மீறவே முடியாது என்று நடக்க ஆரம்பித்தார்.

ராமர் முனிவர்களை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும் சத்ரியர்களுக்கு உண்டான தர்மத்தின் படி ராட்சசர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று வாக்கு கொடுத்தார். சீதை தாயுள்ளத்துடன் ராட்சசர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? அவர்களை திருத்தலாமே என்று நினைத்தாள். இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல அசோகவனத்திலும் காணலாம். சீதையை பார்த்து உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன் என்று 10 மாதங்கள் ராட்சசிகள் சூழ்ந்து கொண்டு அவளை சித்ரவதை செய்தனர். போரில் ராவணன் கொல்லப்பட்ட பின் அனுமான் சீதையை அழைக்க வந்த போது உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராட்சசிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா? என்று கேட்க அப்போது சீதை தன்னை சித்ரவதை செய்த ராட்சசிகளுக்கு பரிந்து பேசி அனுமானை சமாதானம் செய்து ராட்சசிகளுக்கு தீங்கு ஏதும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பரமாத்மா தர்மத்தை காப்பவர். தர்மம் செய்பவர்களை காப்பதற்காகவும் அதர்மம் செய்பவர்களையும் தர்மத்திற்கு எதிரானவர்களையும் தண்டித்து விடுவார். தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் அவனை திருத்துவதற்காக பரிந்து பேசும் குணம் உடையவள். பெருமாள் கோவிலில் நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால் தகப்பனார் போல இருக்கும் பெருமாள் இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன? என்று கவனித்து விடுவார். நம்மை பார்த்தவுடனேயே இப்படி அதர்மம் செய்கிறானே இவனை திருத்த தண்டனை கொடுத்தால் என்ன? என்று நினைப்பார். நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு பிறகு பெருமாளை பார்க்க சென்றால் நாம் செல்வதற்கு முன்பே நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள் என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார். தாயாரை பார்த்து விட்டு வருபவர்கள் தவறு தெரிந்தாலும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அணுகிரகம் செய்து விடுவார் பெருமாள்.

பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை

பெருமாள் சனிக்கிழமை உகந்த நாளாக வைத்து வழிபடப்படுகிறார். இதற்கான காரணம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

சூரியனுக்கு சஞ்ஜனா சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும் யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணன் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து சகோதரியே உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை அமங்களமானவன் என்று கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அங்கே வந்த நாரதர் சனீஸ்வரா யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய் என்று கூறினார்.

கண்ணனை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்? என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர் ஹோலிகா என்று இரண்யனுக்கொரு சகோதரி இருந்தாள். அவள் தீயால் தன் உடம்பு சுடப்படாமல் இருக்கும் விசேஷ வரத்தை வைத்திருக்கிறாள். பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரண்யன் ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா தானும் தீக்குள் இறங்கி அவனை வெளியே வர முடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார். ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரண்யனைக் கொன்ற நரசிம்மராக வந்த திருமாலை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை கொண்டாட இருக்கிறார்கள்.

கண்ணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள் ஹோலிகா. சனீஸ்வரா நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கி விட்டால் கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம் என்றார். அடுத்த நாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்து விட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிப்பார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நாரதர் சனீஸ்வரனைக் கண்ணனிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன் சனீஸ்வரா நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும் சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28 வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன் என்று வரமளித்தான்.

வழுவூர் கோவிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி

தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை அழைக்கின்றார்கள். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானை முகமுடைய கஜமுகா அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சி இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும் யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன. சிவனின் ரௌத்ரப்பார்வை நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள் இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும் இன்னொன்று ஊன்றிய நிலையிலும் உள்ளது. சிவனின் உள்ளங்கால் தரிசனம் காணலாம்.

ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர அதை அழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினார். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்சிலை அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பத்தாவது கிமீ தூரத்தில் வழுவூர் உள்ளது.