அமைதி

பெரிய அரச வம்சமத்தை சேர்ந்த புத்தர் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியானார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் சிரித்தார்கள். கேலி செய்து அவர் மீது கல் வீசினார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே என்று கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. மக்களின் நீண்ட நேர கேலிக்கு பிறகு இறுதியில் குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து சன்னியாசியே நாங்கள் இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியுடன் ஆனந்தமாக இருக்கின்றீர்கள். எவ்வாறு தங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார்கள்.

அமைதியாக அவர்களை பார்த்த புத்தர் நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார். யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே அந்த இனிப்பு சொந்தம் என்றனர் மக்கள். இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார் புத்தர். எங்களுக்குத்தான் என்றார்கள் மக்கள். சரி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பினார் புத்தர்.

ஆயுள்

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் சீடர்கள் அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள். புத்தர் தம் சீடர்களை நோக்கி ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார். எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எழுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். அறுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். ஐம்பது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள். சில வினாடிகள் அமைதியாக இருந்த புத்தர் அது ஒரு மூச்சு என்றார்.

வெறும் மூச்சுவிடும் நேரம்தானா என்று கேட்டார் ஒரு சீடர். ஆமாம் வாழ்வு என்பது மூச்சுவிடும் ஒரு நேரம் தான். அந்த நேரம் மட்டுமே நமக்கு சொந்தம் அடுத்த மூச்சுவிடும் நேரத்திற்கு நாம் இருப்போமா இருக்க மாட்டோமா என்று யாருக்கும் தெரியாது. அதனால் நமக்கு சொந்தமான இந்த ஒவ்வொரு வினாடி நேரத்தையும் அனுபவித்து நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும். ஒவ்வொரு வினாடி பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும். சிலர் நேற்றைய நினைவில் வாழ்கிறார்கள். சிலர் இறந்தகால நினைவில் வாழ்கிறார்கள். சிலர் அறியப்படாத எதிர்காலத்தில் எதிர்காலக் கனவில் எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்ந்து நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள். இவர்கள் எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற கண்பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும் நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி அப்படியே கீழே விழுந்துவிட்டார்.

நண்பர் அவர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால் விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் கீழே இருந்து எழுந்தார். சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும் சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது என்று முடித்தார்.

கருத்து: பிரச்சனைகள் வரும் போது நாம் அதை கண்டுகொள்ளாமல் நமது வேளையை மட்டும் செய்தோமானால் அது நம்மை விட்டு ஓடிவிடும்.

சொர்க்கம்

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு கதை ஒன்றைச் சொன்னார். ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன் ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று எண்ணி அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன் அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன் ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான் எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும் என்றார் குரு.

ஆசை

நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர் ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்து கம்பளி மூட்டைப் பிடித்துக்கொண்டான். அப்போது ஆற்றின் வேகத்தில் கம்பளி மூட்டை அவனை அதனுடன் இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன்

கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான். அப்போது கம்பளி மூட்டையை பிடித்துக்கொண்டிருந்தவன் சொன்னான். இது கம்பளி மூட்டையல்ல கரடி நான் விட்டாலும் அது என்னை விட மறுக்கிறது என்றான். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை வைத்து அவற்றைப் பிடித்துக்கொண்டவுடன் அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். முடிவில் பிடித்த ஆசைகளை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை.

சித்திகள்

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குரு மகனே ஏன் இவ்வளவு கடினப்பட்டு பதினான்கு வருடங்களையும் வீணாக்கி இருக்கிறாய். ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பான். நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார்.

இறைவனின் திருவடியை அடையும் வழியாக சித்திகள் மீது ஆசை கொண்டு யாரும் காலத்தை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.

குரு எப்படி இருக்க வேண்டும்

ஒரு சிறுவனுக்கு இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை. அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று சொன்னார். சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம் என்றாலும் சாமியாரை வணங்கிவிட்டுக் கிளம்பினார். அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன் தீமை எல்லாவற்றையும் விளக்கினார். அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சொன்னார். எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் யோசனை சொன்னார்.

பையனின் முகத்தில் மலர்ச்சி. அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் குழப்பம் தீரவில்லை. பையனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சாமியாரிடம் வந்தார். சாமியாரின் முகத்தில் கேள்விக்குறி. நீங்கள் இந்த புத்திமதியைப் போன வாரமே சொல்லியிருக்கலாமே சாமி என்றார். சாமியார் முகத்தில் புன்னகை. போன வாரம் எனக்கே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது அம்மா. நானே அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாதபோது எப்படி உங்கள் மகனுக்கு புத்தி சொல்ல முடியும் ஒரு வார காலத்தில் இனிப்பைக் குறைக்கப் பழக்கிக்கொண்டுவிட்டேன். அதனால் இப்போது தைரியமாகச் சொல்கிறேன். தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா என பார்ப்பது குருவின் பொறுப்பு என்றார். அம்மாவின் குழப்பம் தீர்ந்தது.

உன்னை முதலில் திருத்திக்கொண்டு ஊருக்கு புத்திமதி சொல் என்பதுதான் கதையின் சாரம். ஒரு குரு தன்னை எப்போதும் பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறருக்குச் சொல்லும் அறிவுரைகளைத் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்

ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். குருவே தவறு செய்து கொண்டு உபதேசம் செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது என்று கேட்டார் சீடர். ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றார் பரமஹம்ஸர். சீடருக்கு புரியவில்லை. பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது. சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை. துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை. குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும். குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது. சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும் கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

உடல் என்னும் வண்டி

சந்தையில் இருக்கும் மாட்டு வண்டிக்கு உயிரும் இல்லை அறிவும் இல்லை. மாட்டுக்கு உயிர் உண்டு அறிவும் உண்டு வண்டிக்காரன் உயிருடன் இருக்கும் அறிவுள்ள மாட்டை உயிரில்லாத வண்டியுடன் பூட்டி தான் செல்ல வேண்டிய இடத்தை தீர்மானித்து வண்டியை செலுத்துவான். மாட்டிற்கு தேவையான உணவையும் தண்ணீரையும் வழியில் கொடுப்பான். ஒய்வு நேரத்தில் அதற்கு ஓய்வு கொடுப்பான். சில நேரங்களில் பாதை நன்றாக இருக்கும். மாடு சுலமாக செல்லும். சில நேரங்கிளில் கரடு முரடான பாதை வரும். அப்போது மாட்டினால் தூக்க முடிந்த அளவு மட்டுமே பாரத்தை வைத்து கரடு முரடான பாதையில் கொண்டு செல்வான். பாதை சரியில்லை என்றால் வேறு பாதையில் செல்வான். எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம் அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே. அறிவிருந்தும் அனைத்தையும் சுமந்து நடப்பது தானாக இருந்தாலும் மாட்டினால் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல

உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டி தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். மனிதன் இயங்கி ஒடிக்கொண்டே இருக்கின்றான். மனிதனுக்கு தேவையான உணவு தண்ணீர் அளித்துவிடுகின்றான். அவன் கர்ம விதிப்படி தாங்கும் அளவிற்கு சந்தோசம் துக்கம் கொடுக்கின்றான். எத்தனை பிறவி எத்தனை காலம் அனைத்தையும் தீர்மானித்து இயக்குபவன் இறைவன் ஒருவனே. இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை. இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.

குரு

பகவான் ஸ்ரீ ரமணர் வழக்கும் போல் தன்னுள் தானே ஆழ்ந்து ஆனந்த பரவசத்தில் மெள‌னமே மொழியாக அம்ர்ந்து இருந்தார். அப்போது ஊருக்குள் இருந்து ஒரு துக்க நிகழ்ச்சி நடந்தது. உண்மையில் அந்த துக்கத்தைப் பற்றி ஊருக்குள் மகிழ்ச்சியே ஏற்பட்டது. இறந்தவர் ஊருக்குள் பெரிய சண்டியர். கட்டப் பஞ்சாயத்து கந்து வட்டி அடிதடி அராஜகத்திற்குப் பெயர் போனவர் அவர். பலருடைய சொத்துக்களை அநியாயமாகப் பறித்துச் சாலையில் நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. தொழில்களைச் செய்யவிடாமல் பல குடும்பங்களைப் பட்டினியில் தள்ளி தற்கொலை வரை விரட்டியவர். ரமணர் அமைதியாக அமர்ந்திருந்தார். ஊருக்குள் இருந்து ஆஸ்ரமத்திற்குப் ப‌லரும் வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் வந்தவுடன் சுவாமி அந்தப் பாவி போய்விட்டான் என்று செய்தியாக சொன்னார்கள். ரமணர் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அடுத்த நபர் வருவார். அவரும் மீண்டும் தகவலை மகிழ்ச்சியுடன் சொல்வார். அப்போதும் ரமணர் எந்த சலனமும் இல்லாமல் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அமைதிகாத்தார். இது மாலை வரை தொடர்ந்தது சுமார் 50 பேராவது ரமணரிடம் இந்த ஒரே செய்தியை சொன்னார்கள் யாருக்கும் ரமணர் பதில் அளிக்கவில்லை முகத்தில் மகிழ்ச்சியோ துக்கமோ காட்டவில்லை.

ரமணர் கல்லைப்போல இருப்பதைக் காண்டு பக்தர்கள் சலிப்புக் கொண்டார்கள். அந்தி சாய்ந்த உடனே அந்த இறந்த நபருடைய பூத உடல் அவருடைய உறவினர்களால் மயானத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. அந்தத் துக்க‌ ஊர்வலம் ஆஸ்ரமத்தைத் தாண்டிச் சென்றது. ஆஸ்ரமத்திற்கு முன்னால் ஊர்வலம் வந்த போது ரமணர் எழுந்து நின்றூ மரியாதை செய்தார். மேலும் பூத உடலை நோக்கிக் கைகூப்பி வணங்கினார். பார்த்துக் கொண்டிருந்த ஒரு பக்தருக்குக் கோப‌மே வந்து விட்டது. சற்றும் தயங்காமல் தன் கோப‌த்தை கொட்டிவிட்டார் அந்த பக்தர். என்னங்க‌ சாமி அவனோ அயோக்கியன். அவனப் போயி கும்பிடறீங்களே அது ஏன்னு சொல்லுங்க சாமி என்றார். ரமணர் ஒன்றும் சொல்லவில்லை. பக்தர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் ஏன் ஏன் என்று கேட்டுப் பின் தொடர்ந்தார். அந்த பக்தரின் தொல்லை தாங்காமல் ரமணர் தன் மெள‌னத்தைக் கலைத்தார். இறந்தவர் என்னுடைய ஒரு குரு என்றார் ரமணர். அந்த சண்டியன் உங்களுக்கு குருவா ஆச்சரியப்பட்டார் பக்தர்.

அவரிடமிருந்து உடல் சுத்தம் பற்றி நான் அறிந்து கொண்டேன். நான் திருவண்ணாமலைக்கு வரும் போது எனக்கு 12 வயதுதான். அதுவரை வீட்டில் அம்மாதான் எனக்கு முதுகு தேய்த்து தண்ணீர் ஊற்றிக் குளிப் பாட்டுவார்கள். எப்படி குளிக்க வேண்டும் என்பது கூட அறியாத வயது எனக்கு. அப்போது அந்த நபர் குளத்தில் வந்து குளிப்பதை வேடிக்கை பார்ப்பேன். எப்ப‌டி நாமே முதுகைத் தேய்ப்ப‌து கைவிரல் கால் விரல் காது மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து பார்த்து தேய்த்துக் குளிப்பார். நானும் அதுபோல குளிக்க அவரைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன். எனவே அவர் எனக்கு உடல் சுத்தம் பற்றி அறிவுறுத்திய குரு ஆவார் என்றார். ரமணர் அளித்த விளக்கத்தைக் கேட்டு பக்தர்கள் அமைதியானார்கள்.

எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.

கர்மா

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது ஆகும். அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் காரணமாக இந்த பிறவியில் நம்முடனே வரும் கர்ம வினையாகும். பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை ஆகும். இந்த கர்மா சிறிதாக இருந்தால் அதனால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும். பெரிதாக இருந்தால் அடுத்த பிறவியிலும் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியது இருக்கும். மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது ஆகும். இவ்விதம் மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது. நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். மனிதன் தாம் வாழும் காலத்தில் மெய், வாய், கண், காது, மூக்கு என ஐந்து புலன்களால் தூண்டப்பட்டு இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது கர்மவினைகள் உண்டாகிறது. முதலாவதாக எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையிலேயே அதனை தீர்க்க முடியும். இரண்டாவதாக நம் கர்ம வினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டவர் இறைவன் ஒருவரே. முதலில் நாம்முடைய கர்ம வினைகள் நீங்க இறைவனை பற்ற வேண்டும். இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவை

  1. யாதனம் – கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
  2. சிரவணம் – இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
  3. கீர்த்தனம் – இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி பஜனைகள் மூலம் கூட்டுப்பிரார்தனை செய்தல்.
  4. பூஜார்தனம் – அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.
  5. ஸ்துதி – இறைவனை போற்றி தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த ஐந்த விதமான சேவைகளை சிரத்தையுடன் செய்து வர நாம் அனுபவிக்கும் கர்ம வினைகள் அனைத்தும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறிதளவு துன்பத்துடன் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.