திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தி

முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அதை பார்த்த அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அவர்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர். அதற்கு அரசன் உங்கள் அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச் சொல் என்று கூறி வெட்டிவிட்டான்.

ஐவரும் பதறி அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள் என்றார். உடனே அங்கு சென்ற ஐவரும் அந்த இடத்தில் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் இச்சிறு பாலகனா பக்தன் என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது. அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான். ஐவரும் நடந்ததை பாலகனிடம் கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர்.

அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்கள் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச் செய்தான் அந்த பாலகன்.. அதை நம்ப மறுத்த முகலாய அரசன் நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் எனக் கூறி நம்ப மறுத்தான். சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் என கூறினான். அச்சிவபாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான். அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.

இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும்.

அன்று அங்கு வந்த பாலகன் வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.

அரங்கனின் மந்திர மரக்கால்

திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்துகொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்கிற எண்ணத்துடனும் சிலர் அதை வெறும் கூலி வேலையாகவும் சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது. செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். கணக்குப் பிள்ளையை அழைத்து பேசினார். இன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை என்றார் அவர். அவ்வளவு தான் திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். கணக்குபிள்ளையிடம் இன்று ஒரு நாள் சமாளித்துவிடுங்கள். பணத்திற்கு பதில் ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்பமுடியுமா பாருங்கள். நாளைக்கு ஏதாவது செய்யலாம் என்று கூறி கணக்குப் பிள்ளையை அனுப்பிவிட்டு தனியே யோசிக்கிறார்.

நடப்பது அவன் பணி. அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டியது அவனிடத்தில் உள்ளது. நாம் எதற்கு கவலைப்படுவானேன் என்று மனதை தேற்றிக்கொண்டார். கோவிலுக்கு சென்று அரங்கனை வணங்கி தனது மனக்குறையை எடுத்து சொல்லி உன் ஆலயத் திருப்பணியை நீ தான் மேற்கொண்டு தொடர உதவவேண்டும். நீ அறியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அரங்கன் அன்பனே கவலை வேண்டாம். நாளை கொள்ளிடக் கரைக்கு வாருங்கள். கொள்ளும் அளவிற்கு பொருள் தருகிறேன் என்று கூறிவிட்டு மறைந்தான். மறுநாள் எழுந்ததும் அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் திசையை நோக்கி வணங்கியவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு கொள்ளிடக்கரைக்கு விரைந்தார். ஆனால் கொள்ளிடக்கரையில் யாரும் இல்லை. நிமிடங்கள் நாழிகையானது. நாழிகைகள் கரைந்து நாளானது. யாரும் வரவில்லை. ஒருவேளை அரங்கன் கனவில் வந்தது பிரம்மையோ. அரங்கன் வந்து எதுவும் சொல்லவில்லையோ… எப்போதும் கோவில் கட்டும் நினைவிலேயே இருப்பதால் நமக்கு தான் அப்படி ஒரு கனவு வந்ததோ என சிந்தித்துக்கொண்டிருந்தார் ஆழ்வார்.அரங்கன் வருவான் வருவான் என்று நாள் முழுக்க காத்திருந்தது தான் மிச்சம். யாரும் வரவில்லை.

சரி புறப்படலாம் என்று அவர் தீர்மானித்த நேரம் தொலைவில் யாரோ வருவது போலிருந்தது. யாரோ ஒருவர் பார்க்க ஒரு வணிகர் போல இருந்தார். தலையில் தலைப்பாகை. கையில் ஒரு சுவாதியும் எழுத்தாணியும். இன்னொரு கையில் மரக்காலுடன் வந்துகொண்டிருந்தார். ஐயா நான் உங்களை பார்க்க தான் வந்துகொண்டிருக்கிறேன். இருங்கள் போய்விடாதீர்கள் என்று சற்று தொலைவில் வரும்போது ஆழ்வாரின் காதுகளில் விழுமாறு சொன்னார். ஆழ்வாருக்கு ஆச்சரியம். என்னைப் பார்க்கவா? ஆமாம் ஐயா உங்களுக்கு ஏதோ பொருள் தேவையாமே. மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று ரங்கநாதர் என்னை இங்கே அனுப்பிவைத்தார். மிக்க மகிழ்ச்சி ஐயா என்று கூறிவிட்டு அவரை சற்று ஆராய்வது போல பார்த்தார் திருமங்கையாழ்வார். பொருள் தர வந்திருப்பதாக சொல்கிறீர்கள். உங்களிடம் இந்த காலி மரக்காலை தவிர வேறு எதுவும் இல்லையே என்று கேட்டார். இந்த மரக்கால் தான் அந்தப் பணியை செய்யப்போகிறது இது நெல் அளக்கும் மரக்கால் என்று நினைத்து விட்டீர்கள். இது பொன் அளக்கும் மரக்கால் மந்திர மரக்கால் அரங்கன் திருப்பெயரை பக்தியுடன் உச்ச்சரித்து இதில் மண்ணை போட்டாலும் அது பொன்னாகிவிடும் என்று கூறி சிரித்தான் அந்த வணிகர்.

அப்படியானால் வாருங்கள் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திற்கே செல்வோம் என்று கூறி வணிகனை அழைத்துக்கொண்டு திருவரங்கம் விரைந்தார் திருமங்கையாழ்வார். இவர்கள் சென்ற நேரம் கூலி கொடுக்கும் நேரம். வணிகரை பார்த்து ஐயா மரக்காலில் மண்ணை போட்டு அளக்கலாமா நேரமாகிறது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்கவேண்டும் என்றார் திருமங்கையாழ்வார்.. இதோ உடனே ஆரம்பிப்போம். இது மந்திர மரக்கால். யார் உண்மையில் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் இதில் பொன் கிடைக்கும். மற்றவர்களுக்கு மண் தான் கிடைக்கும். பொன் கிடைக்காது. ஒவ்வொருவருமாக வரிசையாக வந்து நின்றனர். வணிகர் மண்ணை அள்ளி மரக்காலில் போட அவரவர் உழைப்புக்கு தகுந்தவாறு மண் அனைத்தும் பொன்னாக மாறியது. பணி செய்யாமல் ஏய்த்துவந்தவர்களுக்கு மண் தான் கிடைத்தது. அவர்கள் திருதிருவென விழித்தனர். மரக்கால் பொய் சொல்லாது போங்கள் இங்கே இருந்து என்று அவர்களை விரட்டினார் திருமங்கையாழ்வார். மண் கிடைத்தவர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் கூடிப் பேசி திருமங்கையாழ்வார் செய்தது சரில்லை. உழைப்பை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதற்கு இந்த வணிகன் வேறு உடந்தை. அந்த வணிகன் நம்மை மோசம் செய்துவிட்டான் என்று குமுறினர்.

வணிகனை பார்த்து நீ மந்திரவாதி தானே உனக்கு நாங்கள் பாடம் புகட்டுகிறோம் என்று அவனை அடிக்கப் பாய்ந்தனர். ஆனால் அந்த வணிகனோ அவர்கள் பிடியில் அகப்படாமல் ஓட்டமெடுத்தான். அனைவரும் வணிகரை துரத்த திருமங்கையாழ்வார் குதிரை மீது ஏறி அவ்வணிகரை பின் தொடர்ந்தார். வணிகர் அப்படி இப்படி போக்குகாட்டிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன்நாராயணனாக காட்சி தந்தார். அந்த இடமே ஆதனூர் என்னும் தலம். 108 திவ்யதேசத்தில் இது 11 வது திவ்யதேசம். தன்னை காக்கவந்து பொன் தந்து படியளந்தது சாட்சாத் அரங்கனே என்பதை அறிந்த திருமங்கையாழ்வார் கண்ணீர் மல்க அரங்கனின் துதித்தார். பாமாலைகள் பாடினார். வணிகனாக வந்தது அரங்கன் என்பதை அறிந்த ஏனையவரும் மனம் திருந்தினர். ஆழ்வார் அவர்களிடம் திருக்கோவிலில் பணி செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. எனவே அதை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதே அரங்கன் இந்த விளையாட்டை நிகழ்த்தினார். இனியாவது சிரத்தையுடன் பணி செய்யுங்கள் என்றார்.அவர்களும் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு திருமங்கையாழ்வார் கால்களில் விழுந்தனர். இன்றும் ஆதனூரில் சுவாமி மரக்காலை தலையில் வைத்துப் சயனித்திருப்பார். இடது கையில் எழுத்தாணி ஏடு இருக்கும். இங்கே சுவாமிக்கு படியளக்கும் பெருமாள் என்று பெயர்.

சாளக்கிராமம்

ஒரு மன்னனின் மகள் துளசி மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக என்று சாபமிட்டாள். அந்த கல் தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது.

கிருஷ்ணஅவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன. என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும் துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன் என்றார். அந்த கற்களில் சங்கு சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும் புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போற்றப்படுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன். இங்கே வர முடியாதவர்கள் துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள் பாலிப்பேன் என்றார்.

யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம் சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன் என்றும் மஹாவிஷ்ணு கூறினார்.

மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு ஹிரண்ய கர்ப கற்கள் என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள் சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.

நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிட்டவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை. கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான்.

துணியை கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன் என கேட்டான். பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.

சிவனடியார்

திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும் சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்க்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் அவர்கள் மீதும் பட்டுவிட்டது. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர். சிவனடியாரோடு சிவனடியாராக ஆலயத் தொண்டு புணைய முனைந்து விட்டனர்.

அனுப்பிய தூதர்கள் இருவரும் திரும்பி வராதததைக் கண்டு மேலும் இரு தூதர்களை அனுப்பினான் எமதர்மன். சிவாச்சாரரும் மற்றும் சிவஞானம் பெற்றிருந்த யமதூதர்கள் இருவரும் சேர்ந்து ஆலயப் பிரகாரத்தில் உழவாரபணி மேற்க் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் சிவனடியார் ஆலயப் பிரகாரத்தில் முளைத்திருந்த புற்களை சிவநாமம் சொல்லி பிடுங்கி உதறிக் கொண்டிருந்தார். அப்போது திரும்ப வந்த யமதூதர்கள் இருவரும் சிவாச்சாரரைத் தேடி ஆலயப் பிரகாரம் வந்தனர். புற்களை பிடுங்கி உதறியதிலிருந்து தெறித்த மணல் படிமங்கள் இரண்டாம் முறையாக வந்த எமதூதர்கள் இருவர் மீதும் பட்டது. இவர்களும் சிவஞானம் பெற்று சிவனடியாராக மாறிவிட்டனர். மேலும் அடியார்களோடு அடியாராக ஆலயப் பணியை மேற்கொண்டனர். இரண்டாவதாய் அனுப்பிய இருவரும் திரும்பி வராததால் என்ன ஆயிற்று என நினைத்த எமதர்மன் நாமே நேரில் சென்று பார்க்கலாம் என புறப்பட்டான்.

பிரகாரத்தை சுத்தம் செய்த சிவனடியார் ஈசனுக்கு மாலையில் வழிபாடு செய்வதற்காக வில்வதழைகளைக் கொண்டு வாழைநாரில் தொடுத்துக் கொண்டிருந்தார். சிவச்சாரரைத் தேடி ஆலயம் வந்து பார்த்தான் எமதர்மன். அங்கே சிவாச்சாரருடன் தன் தூதர்கள் நால்வரும் சிவத் தொண்டு செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்டான். இதைக் கண்டதும் சிவாச்சாரரை ஆவேசத்தோடு நோக்கி என்ன மாயவித்தை செய்து இவர்களை சிவவேலை பார்க்கச் செய்தீர் என்றதுடன் இப்போது நானே வந்திருக்கிறேன். என்னை என்ன செய்யப் போகிறாய் பார்க்கலாம் என்றான் எமதர்மன். சிவ நாமத்தை கூறிக் கொண்டு விழ்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த சிவனடியார்க்கு எமதர்மனின் பேச்சு எரிச்சல் அடையச் செய்தது. திருப்பணி செய்ய விடாமல் இதென்ன தொல்லையா போச்சு என வில்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த வாழைநாரை எடுத்தார். திருவூறல்நாதா எனச் சொல்லி அந்த வாழைநாரை எமதர்மன் மீது எறிந்தார் சிவனடியார். விரைந்த வாழைநார் ஒரு வலையாக உருவெடுத்து எமனின் கை கால்களை கட்டிப் போட்டன. எமன் மந்திரத்துக்கு கட்டுண்டவர் போல செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். நாம எவ்வளவு பாசக்கயிறை வீசியிருப்போம் ஆனால் இந்த சாதாரண வாழைநாரை நம்மால் அறுத்தெறிய முடியவில்லையே என வியந்து சிவாச்சாரரைப் பணிந்தார். சிவனடியாரும் எமதர்மனை பார்த்து இத்தலத்தில் தக்கோலத்தில் சுயம்புநாதராக வீற்றிருக்கும் மகாதேவன் திருவடியை தொழுவாயாக மகாதேவனை சரணடைந்தால் உமக்கு கதிமோட்சம் உண்டாகும் என்று சிவனடியார் எமதர்மனுக்கு வழிகாட்டினார்.

எமதர்மனும் நேராகச் சென்று மகாதேவரை சரணடைந்து வணங்கினான். தஞ்சம் என வருவோர்க்கு அருளுபவன் திருவூறல்நாதன் ஆவார். காலனே இங்கு வந்து சரணடைந்து விட்டதார். எமனுக்குக் காட்சி தந்து என்னடியார்கள் மீது கைவினை செய்யாதே என்று உன்னிடம் பல முறை கூறியுள்ளேன். திருக்கடையூரில் மார்க்கண்டேயனை திருவெண்காட்டில் சுவேதுவை போன்ற என் அடியார்கள் மீது நீ பாசக் கயிறை வீசியிருக்கின்றாய். ஒவ்வொரு முறையும் தவறுவதும் மன்னிப்பதும் நல்லதல்ல என ஈசன் உரைத்து எமதர்மனை கட்டப்பட்டிருந்த வாழைநார் கட்டை விலக்கினார். எமதர்மனும் ஈசனை வணங்கி வழிமொழிந்து புறப்பட்டுச் சென்றான். சிவனடியாராக மட்டும் இருந்து விட்டால் எம பயமில்லை என இருக்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவநெறியில் உறுதிபட இருந்தால் எமனை சிவாச்சாரர் கட்டியது போல எந்த வினையையும் எதிர்க்க முடியும். அதற்கு இந்த சிவாச்சாரியார் சிவனடியார் போல, சுவேது போல, மார்க்கண்டேயர் போல ஞானம் பெறும் வழியில் பயணிக்க வேண்டும்.

திருமலையில் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பதில்லை

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனந்தசூரி – தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர். குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர். அன்றிரவு இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார். திடுக்கிட்டு கண் விழித்த அவர் தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க அப்போது அசரீரியாய் ஒரு குரல் அந்த மணியை யாரும் தேட வேண்டாம் புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக வேங்கடநாதன் என்கிற பெயரில் அனந்தசூரி – தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன். திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே மணியானகுழந்தையாக அவதரித்ததால் திருமலையில் இன்றும் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை.

Image may contain: one or more people

திருவடி தீட்சை

குரு அமர்ந்திருக்க அவர் முன் அமர்ந்திருந்தான் சீடன் விஸ்வநாத பிரம்மச்சாரி. சீடனது கண்கள் கலங்கி இருந்தன அவன் தன் கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேசினான். குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களுக்கு பணிவிடை செய்வதிலும் உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்கள் என்றான்.

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கிய குரு அவனை தீர்க்கமாக பார்த்தார். விஸ்வநாதா சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடிந்தது. பிரம்ம ஞானத்தை வழங்க உனக்கு வேறு குரு ஒருவர் காத்திருக்கிர்றார். அந்த குரு காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக செல் சீடனே என்றார் குரு. பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி. காசியை அடைந்தான். அவன் அங்கு வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்தான். நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான். வழியில் தென்பட்ட தடாகம் ஒன்று கண்களுக்குத் தெரிய அதில் நீர் அருந்த குனிந்தான். அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அமைந்திருந்த கோயில் கோபுரம் நிழலாக நீரில் பிரதியாகத் தெரிந்தது. நிமிர்ந்து மேல் நோக்கி பார்த்தான். ஆலய கோபுரம் ஒன்று தெரிந்தது. நடு வனத்துக்குள் கோயிலா கோபுரத்தை வணங்கிவிட்டு ஆச்சரியத்துடன் அந்தக் கோயிலுக்குள் நுழைய அடியெடுத்து வைத்தான்.

கோயில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் வந்தது. வா விஸ்வநாதா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உனது குரு என்னை பார்க்கத்தான் அனுப்பினார் என்று. தனது ஞான குருவை காணும் ஆவலில் கோயிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன். அங்கே அவன் கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார். இதைக் கண்ணுற்ற விசுவநாதனால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. எனது குரு உங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். என கூறியவன் ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வையுங்கள என்றான். அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அவனை பார்த்து மேலும் கூறினார். நீ வேண்டுமானால் எனது கால்களை எடுத்து வேறு இடத்துப் பக்கம் திருப்பி வை. என்னால் கால்களை எடுக்க முடியாது என்றார். கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் அவரை நோக்கி வேகமாக வந்து அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்றி திருப்பி வைத்தான். காலை தூக்கி வைத்த இடத்தில் சிவ லிங்கம் தெரிய வெடுக்கென்று காலை மீண்டும் தூக்கி வேறொரு திசைக்கு மாற்றினான். அங்கும் அங்கும் சிவலிங்கம் காட்சி தெரிய காலை கீழே வைக்காது தூக்கிய வண்ணம் நின்றிருந்தான். கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தெழுகிறதே என செய்வதறியாது விழித்தான். பல இடங்களில் காலை மாற்றி மாற்றி தூக்கி வைத்தாலும் அனைத்து இடத்திலும் சிவலிங்கம் தோன்றுகிறதே என யோசித்தவன் தனது தலையில் அவரின் கால்களை வைத்து அழுத்தினான்.

அவனே சிவமானான்
அவனே சிவமானான்
அவனே சிவமானான்

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

‌திருமந்திரம்.

குரு பக்தி

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றை தேடி நீராட சென்றனர். ஆற்றை கண்டுபிடித்து நீராடினர் இருவரும் பின் குரு சூரியனை வணங்கினார். அப்பொழுது சூரிய பகவான் அசிரிரியாக தோன்றி வேத குருவே வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்று கொண்டேன். ஆனால் இன்று சூரியன் ஆகிய நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் என்று கூறி அசரீரி மறைந்தது. குருவும் சூரியனை வணங்கி விட்டு சீடனை கவலையோடு பார்த்தார். பின் இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே இருக்கும் சிவன் கோயிலை நோக்கி நடக்க துவங்கினர். கோயில் வந்ததும் இறைவனை இருவரும் வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர்ந்தனர்.

சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது. இதை பார்த்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது. குரு ராஜநாகத்தைப் பார்த்து நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன் என்று தடுத்தார். இப்பொழுது ராஜநாகம் பேசியது. வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் உள்ள ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா என்று முறை இட்டது. உடனே குரு அப்படி என்றால் என் சீடனின் கழுத்தில் உள்ள ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை. சரி சற்று பொறு நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய். என்று கூறி ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர். தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி படுத்தபடியே சிறிதும் அசையாமல் இருந்தான்.

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார் ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது. குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார். சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர். அப்பொழுது சீடன் தன் கழுத்தில் மருந்து பற்று போட்டு இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல் குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா என்று கேட்டான். குரு புன்னகையுடன் சீடனே நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய் உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா என்று புன்னகையுடன் கேட்டார். சீடன் குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன். பின் இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால் எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை என்று கூறி பணிந்து நின்றான். குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார். ஞானகுருவை முழு நம்பிக்கையுடன் ஏற்று கொண்டால் வாழ்வில் எப்போதும் நல்லதே நடக்கும்.

உண்மை ஞானம்

ஒரு குரு இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .குருவுயும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக பார்க்க ஆரம்பித்தான்.

தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். குருவின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார். இன்று அதிகாலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் குரு ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை நமது அரசரால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்றார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. இதோ உடனே விரைந்து செய்து முடிக்கிறேன் குருவே என்று சொல்லிவிட்டு தச்சு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

தச்சு ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். தச்சு ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசரால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பலஅயல்நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தச்சு ஆசாரி சூடாகி விட்டார். ஏன்டா இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைச்சேனா செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே நீ படிச்சவன்தானா என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் என்றான். தச்சுஆசாரி அடேய் அறிவு கெட்டவனே என்னதான் படிச்சிருந்தாலும் விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயரம் மற்றும் அகலம் மட்டும்தான் என்றார். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. மனித அறிவு இவ்வளவுதானா இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் அவமானம் பொங்கியது .கூனிக் குறுகியபடியே குருவின் முன்னால் போய் நின்றான் .

குரு சிரித்துக் கொண்டே கேட்டார் என்னப்பா சவப்பெட்டி அடிச்சாச்சா அவன் பதில் சொன்னான் அடிச்சாச்சு என்னோட தலை கனத்துக்கு என்றான். குரு சொன்னார் என்னதான் படித்து பல பதக்கங்கள் பரிசுகள் வாங்கி இருந்தாலும் பெரிய பதவியில் இருந்தாலும் பெரிய பணக்காரராக இருந்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடனும் மனித நேயத்துடனும் நடப்பதே உண்மையான ஞானம் என்றார்.

கர்ம யோகம் என்றால் என்ன ? - வில்லங்க ...

சூர்தாசர் பக்தி

சூர்தாசர் பிறவியிலே கண்பார்வையை இழந்தவர். கண்பார்வை தெரியாததால் குடும்பம் இவரை ஒதுக்கி வைத்தது. ஒரு நாள் அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தபோது தெரு வீதியில் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர் சிலர். அவர்கள் பாடிய பாடல்களை கேட்டு பரவசமடைந்த சூர்தாசர் அதில் ஒருவரை அழைத்து அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரை பற்றியது மிகவும் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் அய்யா இந்த பாடல்கள் கண்ணனை போற்றி பாடும் பாடல்கள் அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள் என்றார். உடனே சூர்தாசர் நீங்கள் போற்றி பாடிய கண்ணன் எப்படி இருப்பார் என்று கேட்டார். அதற்கு அவர் கண்ணன் சிறு குழந்தை கருநீல நிறம் உடையவன் அவன் புன்னகை முகத்தை பார்த்தால் பரவசம் அடையும் நம் மனது அவன் வசம் போய்விடும் கையில் புல்லாங்குழல் வைத்து இசையால் இந்த உலகத்தை இயங்க செய்பவன் என்று கண்ணனை வர்ணித்து விட்டு அவர் கிளம்பி விட்டார்.

இதை கேட்ட சூர்தாசர் கண்ணனை தன மனக்கண்ணில் பார்க்கலானார் அப்படியே கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பின் தன் வீட்டை விட்டு சென்று ஒரு ஆற்றங்கரையில் மரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி பல பாடல்கள் பாடலானார். இவரது பாடல்களை கேட்க கூட்டம் கூடியது தினம் அவர் பாடல்களை கேட்கும் மக்கள் கூட்டம் அவர் பசியாற ஏதாவது உணவு பொருள் கொண்டு வந்து கொடுப்பர்கள். அதை அன்போடு ஏற்று கொண்டு சூர்தாசர் கண்ணனின் கீர்த்தனைகளை பாடி வந்தார். ஒரு நாள் துளசி தாசர் என்னும் ராம பக்தர் அங்கே விஜயம் செய்தார். இவர் கம்பரை போல் ராமாயணம் எழுதியவர். அதுவே துளசி ராமாயணம் என்று போற்றபட்டது. சூர்தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர் அவரது கீர்த்தனைகளை கேட்டு தன்னையே மறந்தார். பின் சூர்தாசர் பாடி முடிக்கும் வரை அமைதி காத்த துளசிதாசர் பின் சூர்தாசரை அழைத்து ஆற தழுவி இனி நாம் நண்பர்களா இருந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கண்ணனின் கீர்த்தனைகளை பாடுவோம் என்றார். இதை சூர்தாசரும் ஏற்று கொண்டு துளசிதாசருடன் அவரது இல்லம் சென்றார்.

தினமும் கண்ணன் கோயிலுக்கு சென்று அவனது கீர்த்தனைகளை பாடி வந்தனர் இருவரும். ஒருநாள் இருவரும் கண்ணன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் எதிரில் ஊர் மக்கள் சில பேர் தலை தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரை தடுத்து நிறுத்திய துளசிதாசர் அய்யா ஏன் இந்த பதட்ட ஓட்டம் ஏதும் ஆபத்தா என்று கேட்டார். ஓடி வந்தவர் ஆம் அய்யா எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்தி வருகிறது அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்று விடும் அதான் எல்லோரும் ஓடுகிறோம் நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அப்போது சூர்தாசர் துளசிதாசரை பார்த்து அன்பரே யானை எப்படி இருக்கும் அதற்கு மதம் என்கிறாரே இவர் அப்படி என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு துளசிதாசர் யானை என்பது மிக பெரிய மிருகம் அதற்கு கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால் பார்க்கும் யாவையும் மிதித்து அழித்தே விடும் அதான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள். நம்முள் கண்ணன் இருக்கும்போது நமக்கு என்ன கவலை என்று கூறி கண்ணனை நினைத்து தியானித்து நின்றார் துளசிதாசர்.

மதம் கொண்ட யானை அவர் அருகே வந்து நின்றது. தியானத்தில் இருந்த துளசி தாசரை பார்த்தது பின் அப்படியே பணிந்து வணங்கி அவரை ஆசிர்வதித்து விட்டு வந்த வழியே சாந்தமாக சென்றது. இதை வியப்புடன் பார்த்த மக்கள் துளசிதாசரை வணங்கி நின்றனர். துளசிதாசர் தியானம் கலைந்து கண் திறந்து பார்த்தார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். அதை கேட்ட துளசிதாசர் எல்லாம் கண்ணன் செயல் அவனை வணங்குங்கள் என்று கூறிவிட்டு சூர்தாசரை தேடினார். சூர்தாசர் ஒரு கடையின் மறைவில் இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்து நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தார் துளசிதாசர். இப்பொழுது துளசி தாசருக்கு ஒரு சந்தேகம் வந்தது நம்மை போலவே சூர்தாசரும் ஒரு கிருஷ்ண பக்தர் தானே பின் ஏன் யானையை நினைத்து அவர் பயப்படவேண்டும் என்று நினைத்து சூர்தாசரை அழைத்து வந்து தன் சந்தேகத்தை கேட்டார். அதற்கு சூர்தாசர் துளசிதாசரே நீங்கள் மிக பெரிய கிருஷ்ண பக்தர் உங்கள் மனதில் இருக்கும் கண்ணனோ இளமை தேகம் பொருந்தியவன். அதனால் நீங்கள் தியானத்தில் இருந்த போது வந்த யானையை கண்ணன் விரட்டி விடுவான். ஆனால் கண்ணில்லாத குருடனான எனக்கு என் மனக்கண்ணில் உள்ள கண்ணனோ சிறு குழந்தை வடிவானவன் இதுவரை அவனது சிரித்த முகத்தை வைத்தே பல பாடல்கள் பாடியுள்ளேன். யானை மிக பெரிய மிருகம் என்று நீங்கள் சொன்னதால் என் மனதில் உள்ள கண்ணன் சிறு குழந்தையானவன் யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால் நான் எப்படி கண்ணனை சமாதானம் செய்வது இதுவரை அவன் சிரித்த முகத்தை நினைத்தே பல பாடல்கள் பாடிய எனக்கு அவன் அழுத முகத்தை கண்டால் என்னால் தாள முடியாது அதனால்தான் என் இரு கைகளையும் என் நெஞ்சில் வைத்து யானையை அவன் பார்ப்பதை மறைத்து கொண்டேன். ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள் என்று பணிந்து நின்றார். இதை கேட்டதும் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. சூர்தாசரே உமது நட்பு கிடைத்தது நான் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் கிடைத்திருக்க வேண்டும் மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் நீங்களே எமது நண்பராக வரவேண்டும் என்று அவரை ஆற தழுவி கோயிலுக்கு அழைத்து சென்றார்.

Image result for சூர்தாசர்