தியானம் என்றால் என்ன

தியானம் என்றால் என்ன? அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகர்ஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம் நான் எப்போ ம் சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ ம் சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா என்றார் சிரித்துக் கொண்டே சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

மகரிஷியின் ம் க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் ம் சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது ம் வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும் தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது. புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய ம் சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா ம் சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல். எதிர்பாராத ஒரு நொடியில் ம் சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான். இரண்டு ம் களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி. ரமணர் சொன்ன இரண்டு ம் கள் வாழ்வும் மரணமும் இதற்கு இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமும் ஒருவன் தியானத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Image result for தியானம் ரமணர்

ராம ஜப மகிமை

ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம் அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து ராம ராம என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார். அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற பீர்பாலோ அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை அவ்வீட்டினர் மனம் மகிழ்ந்து வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரித்தனர்.

அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவருக்கு உணவு கொடுத்துவிட்டு ஏளனத்தோடு சொன்னார். பீர்பால் இப்போதாவது தெரிந்ததா நான் எடுத்த சரியான முடிவு தான் இன்று உங்களுக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கும் ராமஜபம் உங்களுக்கு உணவு கொடுக்கவில்லை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார். உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால் அரசே உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இது தான் ராம ஜபத்தின் மகிமை என்று கூற அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.

Image result for பீர்பால் அக்பர்

தீட்சை

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும் என்ற ஆசை உண்டானது. தீட்சை பெற வேண்டுமானால் அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான். தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான். முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான். மன்னனை உற்று நோக்கிய பிரம்மஞானி இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார். எனவே அரசனிடம் அரசே நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார். அரசன் தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால் ஞானி தீட்சை தராததால் மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.

தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான். மன்னர் பெருமானே நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார். தாங்கள் விரும்பினால் உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர். மன்னனும் அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர் பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது. தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு இப்போது நான் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.

அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய இது தானே மந்திரம் இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக. அது கேட்ட பிரம்மஞானி அரசே இப்போது நான் சொல்வதுபோல் நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான். பிரம்மஞானி அரசனிடம் அரசே நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில் நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள். அதே சமயம் நீங்கள் நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன் பிரம்மஞானி நின்று கொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான். ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தவுடன் அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம் இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார். இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள். வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள். இந்த நிலையில் பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன் அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். இவ்விதம் அரசன் சொன்னவுடன் வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள். அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார். அரசே இப்போது இங்கு நடந்த சம்பவத்தில் உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.

நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால் என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும் என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை நிறைவேற்றவில்லை. மாறாக நீங்கள் அரியணையில் அமராமல் அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள். எனவே நான் கூறிய அதே சொற்களை நீங்கள் சொன்னபோது தான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது. நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது. இது போல்தான் அரசே மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள் சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம். ஆனால் மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான் அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும். இறையனுபூதி பெறாத ஒருவர் சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம். ஆனால்,அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும் மல மாசு நீங்கும் என்று கூறி முடித்தார்.

உண்மையையுணர்ந்த அரசன் ஞானியை கைது நிலையைத் தவிர்த்து தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான். தீ என்றால் மலம். ஷை என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழிப்பதே தீட்சையாகும். தீட்சைகள் பல வகைப்படும்.

பரிச தீட்சை: ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில் புருவ மத்தியிலும் தலை உச்சியிலும் நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். உதாரணம் ஒரு பறவை முட்டையிட்டு அதன் மேல் உட்கார்ந்து அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது பரிச தீட்சையாகும்.

நயன தீட்சை: ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். உதாரணம் ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை.

பாவானா தீட்சை: ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. உதாரணம் ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும்.

காயத்திரி மந்திரம்

மன்னரும் அவரது மந்திரியும் ஒரு நாள் மாறுவேடம் அணிந்து நகர் சோதனை செய்து வந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த மன்னர் இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலேதும் செய்யத் தெரியாதா என்று கேட்டார். மந்திரியின் மனத்தில் முள்ளெனத் தைத்தன அந்த வார்த்தைகள். பிறகு மந்திரி அந்தப் பிச்சைக்காரனைச் சந்தித்துக் கேட்டபொழுது தன்னுடைய பெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட்டதாகவும் இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான். அதைச் கேட்ட மந்திரி அவன் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு மந்திரி சொன்னபடி ஜபம் செய்து வந்தான்.

அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான சக்தி ஏற்பட்டது. இதை அறிந்த மந்திரி அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன்னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவிரமாக ஜபம் செய்தார். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்பட்டு தினந்தோறும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் மந்திரியே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவுடன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக மந்திரிக்கு நன்றி தெரிவித்தான்.

மறுநாள் மந்திரி மன்னரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து மன்னர் மிக ஆச்சரியப்பட்டார். அரசரும் அவர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்கள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவர் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் மந்திரி. சக்கரவர்த்தி நம்பாமல் அந்த ஏழையின் இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவனும் நடந்ததைச் சொல்லி காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று மந்திரி விளக்கினார். காயத்திரி ஜபத்தினால் பட்ட மரம் தழைக்கும் வாழ்வில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் நிம்மதியும் மனச் சாந்தியும் பெறுவார்கள். சத்ருக்கள் (எதிரிகள்) நாசமடைவார்கள் பாபங்கள் நீங்கிப் பிறவித்துயர் நீங்கும். வேதசாரமான இந்த மஹா மந்திரம் நம் ரிஷிகளின் அருளினால் நமக்குக் கிடைத்தது

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

பொருள்: மூவுலகத்திலும் மிகப்பெரிய சக்தியாய் விளங்கும் அந்த பரம ஜோதியை நாம் தியானிக்கின்றோம். அந்த பரம சக்தி நமது இருளை நீக்கி புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொதுப்பொருள்.

அமெரிக்காவின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் ஒன்றிணைந்து உலக நாடுகள் பலவற்றில் உள்ள பல்வேறு மந்திரங்களை ஆய்விற்கு உட்படுத்தினர். அப்போது காயத்திரி மந்திரம் ஒலிக்கும்போது மட்டும் நொடிக்கு சுமார் 1,10,000 ஒலி அலைகளை எழுப்புவதை கண்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவில் காயத்திரி மந்திரமே அதிக ஓலி அலைகளை எழுப்பும் உலகின் தலை சிறந்த மந்திரம் என்பதை தெரிவித்தனர். இந்த ஆய்விற்கு பின்பு அமெரிக்காவின் பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் தினமும் இரவு 7 மணிக்கு தொடர்ந்து 15 நிமிடங்கள் காயத்திரி மந்திரம் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எறும்புகளைப் போல மனிதர்கள்

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அங்குள்ள அந்தணர்கள் ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்துவிடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர் சொன்னார்.

கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள். அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும் எறும்புகளெல்லாம் அந்தச் சர்க்கரையை மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும் வாழ்க்கையில் இறைவனை அடைய வேண்டும் என்ற உயரிய லட்சியமெல்லாம் வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமல் அங்கேயே இருந்து விடுவார்கள் என்று சிரித்தபடி சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இறைவன் இல்லாத இடம் எங்குமில்லை

ஓர் முனிவரிடம் மூன்று இளைஞர்கள் வந்தனர். முனிவரே உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும் என்றனர். ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த முனிவர் யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள் என உத்தரவிட்டார். முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில் கிளியைக் கொன்று விட்டு முனிவரிடம் திரும்பினான். முனிவர் அவனிடம் உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது என அனுப்பி விட்டார். இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது. கொல்ல மனமின்றி அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான். அவனிடம் முனிவர் நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள் என்று திருப்பி அனுப்பினார். மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான். எங்கும் இறைவன் நிறைந்து இருக்கிறார். அதனால் இறைவன் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால் இதைக் கொல்ல முடியாது என்று சொல்லி முனிவரிவிடம் கிளியை ஒப்படைத்தான். அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார். பின் தன் யோகசக்தியால் மற்ற இரண்டு கிளிகளையும் வரவழைத்து அவைகளை சுயரூபத்திற்கு மாற்றினார். கந்தவர்களாக மாறிய கிளிகள் முனிவரை வணங்கிவிட்டு புறப்பட்டனர்.

கங்கையில் நீராடல்

கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற வயதான அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது கதை கேட்பது உணவு தங்க இடம் கேட்டு வருபவர்களை உபசரிப்பது அவரது பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை. அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.

ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர். அப்போது அவர்கள் புண்ணியதாமாவிடம் நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா என்று கேட்டனர்.

அதற்கு புண்ணியதாமா நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது என்றார். ஒரு கணம் திகைத்த அந்த யாத்திரிகர்கள் மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம் என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. இரு யாத்திரிகர்களும் கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.

கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே என்று புலம்பத் தொடங்கி விட்டனர். பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும் என்று மனமுருக வேண்டினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும் புண்ணியவானுமான புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். இறைவனின் லீலைகள் கதை எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் இறைவனின் லீலைகள் கதையை தொடர்ந்து கேட்பவர்கள் படிப்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது என்று கூறி மறைந்து விட்டாள்.

தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக புண்ணியதாமாவிடம் சென்று நடந்தவற்றை கூறி அவரது காலில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.

கருத்து

கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது. இறைவனின் லீலைகளை கதையாக கேட்பது படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்ய முடியும். இறைவனின் லீலைகள் கதையாக எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதனை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர்கள் ஆகிறார்கள். இறைவனின் லீலைகளை கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை.

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது?

ஒருமுறை பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர் கங்கையில் நீராட சென்றார். அப்போது கங்கையில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் மாதா கங்கை என் பாவத்தினை போக்கி காத்தருள்க என்று கூறி நீராடினார்கள். இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. பாவம் செய்தவர்களின் பாவங்கள் விடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள் என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார். அந்நேரம் ஒரு பெண் அங்கு வந்து ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்டாள். முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது. எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூறினாள். முனிவர் அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை நீங்கள் யார் என்று கேட்க அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாள்.

முனிவர் தன் சந்தேகத்தை தீர்க்க சமுத்திரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார். அங்கே சென்ற முனிவர் சமுத்திர தேவனை தபம் செய்தார். சமுத்திர தேவனும் அவர் முன் தோன்றி தன் வணக்கத்தை தெரிவித்தார். முனிவர் சமுத்திரத்திற்கு வரும் பாவங்கள் எங்கு செல்கின்றன தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டார். இதற்கு சமுத்திர தேவன் முனிவரே கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால் கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறி சமுத்திர பகவான் மறைந்தார்.

தன் சந்தேகம் தீராத முனிவர் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். சூரிய பகவானே கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா என்று கேட்டார். அதற்கு சூரிய பகவான் முனிவரே என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள் என் உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை. இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது. உடனே முனிவர் அப்படியென்றால் இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது என்று கேட்க அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.

முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார். சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள் காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது. அதன் தாக்கம் அதிகரிக்கும் போது மழை பெய்விக்கப்படுகின்றது. மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது. அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றது மேகம்.

தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார். முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார்.
முனிவரே பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும் நான் உட்கொண்ட பாவங்கள் என்னில் தங்குவதில்லை மழைநீர் வழியாக வரும் பாவங்கள் மீண்டும் கங்கைக்கே சென்றுவிடுகிறது என்றாள். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா. இல்லை பூமி மாதா என்றார் முனிவர். நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள். அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால் முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும் என்றாள் பூமி மாதா.

இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கேட்க நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன் தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள் என்று முனிவர் கேட்க தன் சுயரூபத்தை காண்பித்து நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார். இதனால் மகிழ்ச்சியுற்ற முனிவர் மாதா மனிதர்கள் செய்யும் பாவங்கள் சுழன்று சுழன்று மீண்டும் கங்கையை வந்தடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால் கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா என்று கேட்டார். முனிவரே இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன். அதற்கு சிவபெருமான் தேவி கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும். அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் பெருகிவரும் பாவங்களின் ஒரு பாகம் அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப எரிந்து நாசமாகிறது என்றார். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா என்று கங்காதேவி கேட்க ஆம் என்றார் முனிவர். அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக்கொண்டேன் என்று தேவி கூற. நிச்சயமாக செய்கிறேன் என்று கூறி முனிவர் நீராட சென்றார்.

யார் சாத்தான்

மாணவன்- உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா?

ஆசிரியர்- ஆமாம்.

மாணவன்- அப்படியெனில் சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

ஆசிரியர்- உன்னிடம் சில கேள்விகள் கேட்கின்றேன் பதில் சொல். குளிர்நிலை என்று ஏதேனும் இருக்கிறதா?

மாணவன்- ஆமாம் இருக்கிறது.

ஆசிரியர்- குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். சரி தானே

மாணவன்- ஆமாம்

ஆசிரியர்- இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

மாணவன்- ஆம் இருக்கிறது.

ஆசிரியர்- மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் குளிரும் இருளும் எங்கும் உருவாகுவதில்லை. வெப்பம் இல்லாத இடத்தை குளிர் என்றும் ஒளி இல்லாத இடத்தை இருள் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் நம்பிக்கையின் பற்றாக்குறை. கடவுள் மீது எங்கு நம்பிக்கை இல்லையோ அன்பு இல்லையோ அந்த வெற்றிடமே சாத்தான் என்று அழைக்கப்படுகிறது.