ஞானி ஒருவரிடம் வந்த ஒருவன் இறைவனை நான் தினமும் வழிபடுகின்றேன். அவரை நம்புகின்றேன் ஆனால் எனக்கு ஏன் துன்பங்கள் மட்டும் வருகிறது என்று கேட்டான். அதற்கு ஞானி ஒரு கதை சொன்னார்.
ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார். அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார். தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டு மிகவும் பதட்டமாக இருந்தார்கள். அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும் ஒவ்வொருவரும் கைதட்டி விசில் அடித்து பாராட்டினார்கள். அவர் கூட்டத்தினரிடம் கேட்டார் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்களா என்று கேட்டார்
அனைவரும் ஒரே குரலில் ஆம் ஆம் உங்களால் முடியும் என்று கத்தினார்கள். நீங்கள் என்னை நம்புகிறீர்களா என்று கேட்டார். அவர்கள் ஆம் ஆம் நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்டவும் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர் சொன்னார் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையானால் உங்களில் யாராவது ஒருவர் உங்கள் குழந்தையை என் தோளில் அமர வையுங்கள் என்றார். நான் உங்கள் குழந்தையை மறுபுறம் மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன் என்றார். அங்கு நின்ற அனைவரும் திகைத்தார்கள். அனைவரும் அமைதியாகி ஒவ்வொருவராக பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார்கள். அனைவரும் கயிற்றின் மீது நடப்பவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை.
இக்கதையை ஞானி சொன்னதும் தனக்கு புரிந்துவிட்டது. இறைவனிடம் சரண்டைய முயற்சிக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
கருத்து:
நம்பிக்கை வேறு. சரணாகதி வேறு. சரணாகதி என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் யோசிக்காமல் முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய உலகில் இறைவனிடம் நம்பிக்கை வைக்கின்றோம். ஆனால் சிறு துன்பம் வந்ததும் நமது நன்மைக்காகவே இறைவன் இத்துன்பத்தை கொடுத்திருக்கின்றார் என்று நம்ப மறுத்து சரணடைய மறுக்கிறோம்.
