சுலோகம் -109

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-62

புலன் நுகர் பொருட்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அவ்விசயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் வருகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இறைவனின் மீது தனது மனதை வைக்காதவனின் சிந்தனையானது உலகத்தில் உள்ள போகப் பொருட்களின் மீது சென்று கொண்டே இருக்கிறது. அந்த பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்பதினால் அந்தப் பொருட்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று உண்டான பின் அவற்றை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆசையை அனுபவித்து விட்டால் இதை விட பெரிய ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று மனமானது மேலும் ஆசைப்படுகிறது. ஆசையை அனுபவிக்க சூழ்நிலை இல்லை என்றாலோ தடங்கல் ஏற்பட்டாலோ அதற்கு காரணமானவர் மீது கோபம் வருகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -108

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-61

அனைத்து புலன்களையும் தன் வசப்படுத்தி ஒரு முகப்படுத்திய சித்தமுடையவன் என்னையே பரகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். ஏனெனில் எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனுடைய புத்தி உறுதியானதாகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தன் அனைத்து புலன்களையும் தனக்குள் உள்ளிழுத்து தன் வசப்படுத்தியவனின் புத்தியானது உறுதியான வைராக்கியத்துடன் இருக்கும். அந்த உறுதியான வைராக்கியத்துடன் தன் மனதை ஒரு முகப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை காண வேண்டும் என்று தியானத்தில் அமர்ந்தால் தனக்குள் இருக்கும் இறைவனை கண்டு உணரலாம். அப்போது அவனுடைய மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

புத்தி உறுதியாகி தியானத்தில் அமர்பவனுடைய மனம் இறைவனிடம் ஒன்று சேர்கிறது. அப்படி மனதை இறைவனிடம் ஒன்று சேர்த்த சாதகனின் மனமாகிய காற்றும் நெருப்பாகிய இறைவனும் ஒன்று சேர்வதினால் காற்றும் நெருப்பும் சேர்ந்து வைக்கோலை எரிப்பது போல் சாதகனின் மும்மலங்களும் கர்மாக்களும் எரிந்து சாதகன் முக்தி பெறுகிறான்.

சுலோகம் -107

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-60

அர்ஜூனா பற்று அழியாததால் கலக்குபவைகளான புலன்கள் முயற்சியுள்ள புத்தியாலியான மனிதனின் மனதைக் கூட பல வந்தமாக இழுத்துச் சென்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தனது புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் தனக்குள் உள்ளிழுத்து வைத்துக் கொண்டு மன உறுதியுடன் இருந்தாலும் மனதில் இருக்கும் ஆசைகளை அழிக்காவிட்டால் எவ்வளவு புத்திசாலியான மனிதனின் மனதைக் கூட புலன்களானது பலவந்தமாக இழுத்துச் சென்று விடும். ஆகவே மனிதன் தன் புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் உள்ளிழுத்துக் கொண்டதும் தொடர்ந்து தனக்கான யோக சாதனைகளை (எப்படி என்பதை அடுத்த சுலோகத்தில் சொல்கிறார்) செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை உணர முயற்சிக்க வேண்டும் இறைவனை கண்டு உணர்ந்தால் அனைத்து ஆசைகளும் அழிந்து விடும் அதன் பிறகு புலன்கள் மனதை இழுக்க முடியாது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -106

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-59

புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன் நுகர் பொருட்களை மட்டுமே விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை. இந்த புத்தி உறுதியானவனுக்கு பரமாத்வை தரிசித்த பிறகு அந்த பற்றும் விலகி விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகளின் மீது புலன்கள் செல்லாதவாறு தனக்குள் இழுத்துக் கொண்ட உறுதியுடையவனின் புலன்கள் உள்ளிழுக்கப் படுவதால் ஆசைப்படும் பொருளின் மீது மட்டுமே அவனது புலன் விலகுகிறது. ஆனால் பொருளின் மீது இருக்கும் ஆசை அவனிடம் இருந்து விலகுவதில்லை. ஆனால் இந்த புலன்களை உள்ளிழுத்துக் கொண்டதன் பயனாக அவனது மனம் தனக்குள் ஒரு முகப்படுத்தப்பட்டு தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து தரிசிப்பான். இறைவனின் தரிசனத்தை தனக்குள் கண்ட பிறகு அவன் அந்த பொருளின் மீது வைத்திருந்த ஆசையும் அவனை விட்டு விலகி விடுகிறது.

சுலோகம் -105

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-58

சுலோகம் -105

ஆமை எல்லாப் பக்கங்களில் இருந்தும் தனது உறுப்புகளை உள்ளிளுத்துக் கொள்வது போல மனிதன் புலன் நுகர் பொருட்களில் இருந்து புலன்களை உள்ளிழுத்துக் கொள்கிறோனோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆமையானது ஆபத்துக் காலங்களில் தனது உடல் உறுப்புகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மையுடையது. அது போல் மனிதனின் புலன்கள் ஆசைகளின் காரணமாக இந்த உலகப் பற்றுகளின் மீது செல்லும் போது புலன்களை தனக்குள் இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும். எந்த மனிதன் இது போல் தன்னுடைய புலன்களை அடக்கிக் கொள்கிறானோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -104

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-57

எவன் ஒருவன் அனைத்திலும் பாசம் வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதும் இல்லையோ வெறுப்பதும் இல்லையோ அவனுடைய புத்தி உறுதியானது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் இருக்கும் உறவுகளின் மீதோ அல்லது பொருட்களின் மீதோ அது நன்மை கொண்டதாக இருந்தால் இந்த பொருள் கிடைத்ததும் மகிழ்ச்சி அடையாமலும் தீமை கொண்டதாக இருந்தால் வெறுப்படையாமலும் இருப்பவன் எவனோ அவனுடைய புத்தி உறுதியானது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -103

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-56

துன்பங்கள் நேரும் போது மனம் கலங்காதவன் சுகங்கள் ஏற்படும் போது அவற்றில் சிறிது கூட ஆசைப்படாதவன் விருப்பம் பயம் கோபம் ஆகிய இவற்றை முற்றும் அறுத்தவன் மன உறுதியானவன் என்று சொல்லப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது சிறிதும் கலங்காமல் வருத்தப்படாமல் இருப்பவனும் மகிழ்ச்சி ஏற்படும் போது இந்த மகிழ்ச்சி அப்படியே தொடர வேண்டும் என்று அதன் மீது ஆசைப்படாதவனும் இவ்வுலகத்தில் அழியக்கூடிய பொருட்கள் மீது விருப்பம் இல்லாதவனாகவும் இவ்வுலகத்தில் உள்ள எதைக் கண்டும் பயம் இல்லாதவனாகவும் மரணம் என்ற ஒன்று அருகில் வந்தாலும் அதற்கும் பயம் இல்லாதவனாகவும் அகங்காரம் ஆணவத்தின் வெளிப்பாடான கோபம் என்பது இல்லாதவனாகவும் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -102

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-55

சுலோகம் -102

அர்ஜூனா ஒருவன் தன் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் அறவே துறந்து தனது ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆனந்தமாக இருக்கிறானோ அவன் உறுதியான மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகள் மற்றும் தனது உறவு முறைகளால் வரும் பந்தம் பாசம் மற்றும் செல்வங்கள் மீது உள்ள பற்று என அனைத்து ஆசைகளையும் முற்றிலும் துறந்தவன். மற்றும் உலக ரீதியாக மகிழ்ச்சி வந்தால் உடனே மகிழ்ச்சி அடையாமலும் துக்கம் வந்தால் உடனே துக்கப் படாமலும் எது நடந்தாலும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவன். மற்றும் புகழ் ஏற்பட்டால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் யாரேனும் இகழ்ந்தால் மனம் வருத்தப்படாமலும் மனதை ஓரே நிலையில் வைத்திருப்பவன் எவனோ அவன் ஆத்மா எது ஆத்மா இல்லாதது எது என்ற ஞானத்தை பெறுகிறான். அவனே அனைத்தையும் துறந்தவன் ஆகிறான்.

இன்பம் மகிழ்ச்சி இவை அனைத்தும் வெளியில் இருந்து வருபவையாகும். அவை வந்தவுடன் உடனே சென்று விடும். ஆனால் பேரானந்தம் என்று சொல்லப்படுவது தனக்குள்ளேயே கிடைப்பதாகும். அது உடனே செல்லாது. அந்த பேரின்பத்திலேயே தனக்குள்ளேயே பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவன் எவனோ அவனே மன உறுதியுடையவன் என்று அழைக்கப்படுகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -101

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-54

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கேசவா சமாதியில் நிலைபெற்று பரமாத்மாவை அடைந்த உறுதியான அறிவுடையவன் என்ன சொல்வான்? அவன் என்ன செய்வான்? எவ்வாறு நடந்து கொள்வான்? எதனை அடைவான்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் கூறிய அறிவுரைகளை கேட்ட அர்ஜூனன் மேலும் தனது சந்தேகங்களை கிருஷ்ணரிடம் கேட்கிறான். உறுதியான மன வலிமையாலும் அறிவினாலும் சமாதி நிலை அடைந்தவர்கள் சுற்றி இருப்பவர்களிடம் என்ன பேசுவார்கள். தனது கடமைகளாக அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்வார்கள். இறுதியில் அவர்கள் எதனை சென்று அடைவர்கள் என்று கிருஷ்ணரிடம் அர்ஜூனன் கேள்வி கேட்கிறான்.

சுலோகம் -100

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-53

சுலோகம் -100

பல வசனங்களை கேட்டு சஞ்சலமாகிய உனது புத்தி எப்போதும் பரமாத்மாவிடம் அசையாமல் மேலும் திடமாக நிலைபெறுகிறதோ அப்போது யோகத்தை அடைவாய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சொர்கத்தை அடையும் வழிகள் என்றும் இந்த உலகின் போகங்கள் செல்வங்கள் அவற்றை அடையும் வழிகள் என்றும் இங்கு பல செய்திகளை கேட்டு கேட்டு புத்தி நிலையில்லாமல் சிதறுகிறது. ஒரு செய்தியை படித்தோ அல்லது வேறு ஒருவர் சொல்வதை கேட்டோ அது நன்மையானதாக மனதிற்கு தோன்றுகிறது. சிறிது நேரத்தில் அதே செய்தி பற்றி வேறொன்றை படிக்கும் போதோ அல்லது வேறு ஒருவர் சொல்வதை கேட்கும் போதோ உடனடியாக அது தவறானது என்று தோன்றுகிறது. மனமானது திடமான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இதையெல்லாம் விட்டு இறைவனின் மீது வலிமையான நம்பிக்கையும் இறைவனின் மீது சிந்தனையும் எப்போது திடமாக ஏற்படுகிறதோ அப்போது யோகத்தை அடைந்து விடலாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.