சகலாகம சார சங்கிரகம் என்னும் ஆகம நூல் பிரம்ம முகூர்த்த நேரம் பற்றிய அதிகாலை நேரத்தின் விளக்கத்தை சொல்கிறது. அந்த நூலில் சொல்லப்பட்ட ஒரு சுலோகம்
சுலோகம்
பிராம்ஹே முகூர்த்தே வித்வாம்ஸ்து
மனசா சிந்தயே சிவம்
சத்ரிபாத திரிகடிகா
ராத்திரியேது தினே தினே.
சூரியன் மறைந்த நேரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு சூரியன் மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் அதிகாலை 6 மணிக்கு விடிகிறது என்று வைத்துக் கொள்வோம். மொத்தம் 12 மணி நேரம் இரவு ஆகும். இந்த 12 மணி நேரம் கொண்ட ஒரு இரவை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதிக்கு ஜாமம் என்று பெயர். 7 1/2 நாழிகை என்பது ஒரு ஜாமம். 24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை ஆகும். ஆக ஒரு இரவுக்கு மொத்தம் 4 ஜாமங்கள் இருக்கும். 1 ஜாமம் என்பது 3 மணி ஆகும். சூரியன் மறைந்த 6 மணி முதல் 9 மணி வரை முதல் ஜாமம். 9 மணி முதல் நடுஇரவு 12 மணி வரை 2 ஆம் ஜாமம். 12 மணி முதல் 3 மணி வரை 3 ஆம் ஜாமம். அதிகாலை 3 மணி முதல் விடியற் காலை 6 மணி வரை 4 ஆம் ஜாமம். இந்த 4 ஆம் ஜாமத்தில் உள்ள 7 1/2 நாழிகையில் பாதி 3 3/4 நாழிகை அதாவது 1.30 மணி நேரத்திற்கு பிரம்ம முகூர்த்த நேரம் என்று பெயர். சூரியன் உதிக்கும் 6 மணிக்கு 1.30 மணி நேரம் முன்பிலிருந்து பிரம்ம முகூர்த்த நேரம் ஆரம்பிக்கிறது.
இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தூய்மையான பிரபஞ்ச சக்தியானது மழைபோல் கொட்டிக் கொண்டே இருக்கும். இந்த சக்திக்கு பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி என்று பெயர். அந்த அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு மனிதனுடைய அறிவும் மனமும் விழிப்பு நிலையில் இருக்கும். இந்த அதிகாலை நேரத்தில் எழுந்து உடலை தூய்மை செய்து விட்டு எக்காரியத்தை செய்தாலும் அறிவும் மனமும் விழிப்பு நிலையில் இருப்பதினால் மழை போல் கொட்டிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச சக்தியை எளிமையாக கிரகித்துக் கொள்ளும். அப்போது நூல்களை படித்தாலும் பூஜைகள் செய்தாலும் தியானம் ஜெபம் என்று எந்த காரியம் செய்தாலும் அக்காரியமானது நமது மனதில் அப்படி ஞாபகமாக பதிய ஆரம்பிக்கும். ஞாபகமாக பதியும் அந்த செயலானது நல்ல சிந்தனையை கொடுத்து அறிவை வளர்த்து நம்மை மேலும் மேன்மைப் படுத்துகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் அதிகாலை எழுந்து படி என்றும் அதிகாலை எழுந்து பூஜைகள் செய். தியானம் செய். ஜபம் செய். கோயிலுக்கு செல் என்று எந்த நல்ல காரியம் செய்தாலும் அதிகாலை நேரத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
