சிவ வடிவம் – 54. சக்கரதானமூர்த்தி

குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்காக திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். யுத்தம் நடைபெறும் போது திருமாலால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை வந்தது. திருமால் தனது சக்ராயுதத்தை அனுப்பினார். சக்ராயுதம் முனிவரின் வஜ்ஜிரக் கையில் பட்டு திரும்ப திருமாலிடமே சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் ஒரு உருவத்தை மாயையால் உருவாக்கினார். அதனைக் கண்ட முனிவர் தனது பாத கட்டை விரலை அசைத்தார். அந்த அசைவிலிருந்து பல திருமால்கள் உருவானார்கள். இதனைக் கண்ட திருமால் இம்முனிவர் தம்மைவிட வலிமை வாய்ந்தவர் என்று அவரிடம் சரணடைந்து விடைபெற்றார்.

திருமால் வைத்திருந்த சக்கரத்தின் வரலாறு. ஒரு சமயம் பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்தது. இறைவன் மீண்டும் ஒரு புதிய உலகைப் படைக்க பிரம்மாவையும் திருமாலையும் உண்டாக்கினார். அவர்கள் இருவரிடமும் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்படைத்தார். காத்தல் தொழிலுல் செய்வதற்காக திருமால் இறைவனிடம் ஆயுதம் ஒன்று வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால் சூரிய சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும் சக்கரம் ஒன்றும் கொடுத்தார். உடன் பார்வதி தன்பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார். காத்தல் தொழில் செய்ய இறைவன் கொடுத்த சக்கராயுதம் ததீசி முனிவரிடம் தோற்றதால் அதனை விட வலிமையான ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற வேண்டும் என்று திருமால் எண்ணினார். யாராலும் அழிக்க முடியாத சலந்தரனை அழிக்க சிவபெருமான் தனது கால் கட்டை விரலால் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அதனை ஆயுதம் ஆக்கி சலந்தரனை அழித்தார். அது போல் ஒரு ஆயுதத்தை பெற வேண்டும் என்று முடிவு செய்து கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்றை சிவபெருமான் மறைத்தார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு மலர் இல்லாததைக் கண்ட திருமால் தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்து இறைவனுக்கு சமர்ப்பித்து அன்றைய தனது பூஜையை முடித்தார். கமலம் என்றால் தாமரை. தனது கண்ணை தாமரை மலராக எண்ணி இறைவனுக்கு அர்ச்சித்ததால் சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்து அவரின் விருப்பப்படி சுதர்சன சக்கர ஆயுதத்தை கொடுத்தார். யாரையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை கொண்ட சுதர்சன சக்கரத்தை திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது.

அதர்வண வேத உபநிடாதமான சரபோப நிடதத்திலும் மகாபாரதத்திலும் காஞ்சி புராணத்திலும் சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு உண்டு. சக்கரதான மூர்த்தியின் திருவடியில் சிவபெருமான் நான்கு கைகளுடன் சடாமகுடம் தரித்துக் காணப்படுகிறார். வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு சாந்தமாக அமர்ந்திருப்பார். இரு கரங்களிலும் மானும் டங்கமும் இருக்கும். முன் வலது கரத்தில் சக்கரம் இருக்கும். சிவபெருமானின் பக்கத்தில் உமையமை அமர்ந்திருக்கிறாள். வலப்பக்கத்தில் பிரம்மாவும் எதிராக திருமாலும் வழிபட்டுக் கொண்டு நிற்பார்கள். இவ்வடிவ அமைப்பு உத்தரகாமிய ஆகமத்தில் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இத்திருவுருவம் உள்ளது. திருவழிமிழலை திருக்கோயிலில் இவ்வடிவத்தின் செப்புத் திருவுருவம் உள்ளது.

சிவ வடிவம் – 53. கௌரி வரப்ரதமூர்த்தி

பிரம்மாவை நோக்கி அசுரன் ஒருவன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் அவனுக்கு காட்சி கொடுத்த பிரம்மாவிடம் பார்வதிதேவியின் உடலிருந்து தோன்றியப் பெண்ணைத் தவிர வேறொருவரால் எனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கினான். வரத்தின் பயனால் தேவர்கள் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் தன்னை அழிக்க முடியாது என்று அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். அசுரனின் கொடுமை அதிகரிக்க அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார்கள். பிரம்மா தேவர்களுடன் சிவபெருமானிடம் சென்று அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். சிவபெருமான் பார்வதி தேவியை பார்த்து காளியே வருக என்றார். உடனே பார்வதி தேவியின் உடலில் இருந்து கருமையான நிறத்துடன் காளி தேவி வெளிப்பட்டாள். சிவபெருமானிடம் எம்மை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டு தனது கருமை நிறத்தை மாற்றி பொன்னிறமாக மாற்றிக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டாள். அதற்கு சிவபெருமான் காளியிடம் இமயமலையில் தவமியற்று. அனைத்திற்கும் காரணம் உனக்கே தெரியும் என்றார். காளிதேவியும் இமயமலையில் தவம் செய்தாள். தவத்தின் பலனால் தேவி தனது கருமை நிறம் நீங்கி பொன்நிறத்தைப் பெற்றாள். பொன்நிறத்துடன் இருந்த தேவியிடம் சிம்ம வாகனத்தை கொடுத்த பிரம்ம அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். பொன் நிறத்துடன் சிம்ம வாகனத்தில் அசுரனை அழித்த தேவியானவள் துர்கை தேவி என பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் தனது போர்க்கோலம் நீக்கி மீண்டும் சிவபெருமானிடம் சென்ற தேவி கௌரி எனப் பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் வந்த தேவியை சிவபெருமான் ஏற்றுக் கொண்ட திருவடிவமே கௌரிவரப்ரதமூர்த்தி ஆகும்.

சிவ வடிவம் – 52. ஏகபாதமூர்த்தி

சங்கார காலத்தில் சிவ பெருமானால் படைக்கப்பட்ட அனைத்தும் அவருள் ஒடுங்கிய பின் அவர் தனித்து நிற்பதால் சிவபெருமானுக்கு ஏகபாத மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. பேருழிக் காலத்தில் உலகங்களும் உலகங்கத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சிவ பரம்பொருளுக்குள் ஒடுங்குகின்றன. இறைவனிடம் சரிசமமாக இருக்கும் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். அனைத்தும் தனக்குள் ஒடுங்கியதும் சிவபெருமான் ஏகபாத மூர்த்தியாக நிற்கிறார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. எத்தனை சர்வசிருஷ்டி ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன. இவரிடமே முடிகின்றன. இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. இவரிடமே தஞ்சமடைகின்றன.

இத்திருவுருவின் வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் மழுவும் முன் வலக்கையில் காக்கும் குறிப்பும் இடக்கையில் அருளல் குறிப்பும் இருக்கிறது. இவர் புலித்தோலை அணிந்து மணிகளால் ஆன மாலைகளை அணிந்து சடையில் சந்திரனையும் கங்கையையும் அணிந்து காணப்படுகிறார். விஸ்வகர்மா சிற்ப சாத்திரம் என்ற நூல் ஏகபாதமூர்த்திக்கு 16 கரங்கள் உண்டு என்று சொல்கிறது. கம்பரும் ஸ்ரீவில்லிபுத்தரும் தமது காவியங்களில் ஏகபாதமூர்த்தியின் சிறப்புகளை கூறியுள்ளார்கள். அனைத்துக் காலங்களிலும் எல்லாவுலகமும் இவரது திருவடியின் கீழ் இருப்பதால் இவர் ஏகபாத மூர்த்தி என்று பெயர் பெற்றார். தப்பளாம் புலியூரில் உள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார்.

சிவ வடிவம் – 51. திரிபாதத்ரிமூர்த்தி

சிவப்பரம்பொருள் பிரம்மன் திருமால் உருத்திரன் என்ற மூம்மூர்த்திகளை உருவாக்கி அவர்களுக்கு படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை அளிக்கின்றார். பேருழிக் காலத்தில் சிவப்பரம்மொருளால் படைக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் ஒடுங்கும். மூன்று விதமான தொழில்களை செய்த மும்மூர்த்திகளும் சிவபரம்பொருளில் ஒன்றாக ஒடுங்குவார்கள். உலகை மீண்டும் படைக்க விரும்பிய போது தன்னுள் ஒடுங்கி இருந்த மூவரையும் ஒற்றை காலில் நின்று தனது இதயத்திலிருந்து உருத்திரனையும் தனது வலப்பாகத்தில் இருந்து பிரம்மனையும் தனது இடப்பாகத்திலிருந்து திருமாலையும் தோற்றுவித்தார். அப்போது இருந்த திருவடிவமே திரிபாதத்ரிமூர்த்தி திருத்தோற்றம் ஆகும். திரிபாதத்ரிமூர்த்தி வடிவத்தில் பிரம்மனும் திருமாலும் தனது ஒரு கால்களுடன் சிவப்பரம்பொருளுடன் இணைந்து கொள்வார்கள். சிவப்பரம்பொருளின் ஒற்றை காலுகளுடன் அவர்களின் ஒற்றை கால்களும் சேருவதால் மூன்று கால்கள் ஆகின்றன. அதனால் இந்த திருவடிவத்திறகு ஏகபாதத் திருமூர்த்தி என்று பெயர்.

இவ்வாறு லிங்க புராணமும் ஆதித்ய புராணமும் கூறுகின்றன. மகாபாரதத்தில் இந்த வடிவத்தை பற்றி சிறப்பாக கூறுகின்றது. வலப்புறத்தில் பிரம்மன் கமண்டலமும் ஜெபமாலையுடன் இருக்க இடப்புறம் உள்ள திருமால் சங்கு சக்கரத்துடன் இருப்பார் என்று சிவஞானபோதம் என்ற சைவ சித்தாந்த நூல் இவ்வடிவம் பற்றி கூறுகின்றது. இவரது வடிவத்தை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம்.

சிவ வடிவம் – 50. ஏகபாதத்ரிமூர்த்தி

சிவபெருமான் உயிர்களுக்கு அருள்வதற்காகவே பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் சேய்விக்கிறார். சிவபெருமானின் இதயத்தில் இருந்து உருத்திரரும் சிவபெருமானின் இடப்பாகத்திலிருந்து பிரம்மாவும் வலப்பாகத்தில் இருந்து திருமாலும் தோன்றினார்கள். கண்களில் இருந்து சூரியனும் சந்திரனும் மூக்கிலிருந்து வாயுவும் கழுத்தில் இருந்து கணேசரும் இதயத்தின் ஒரு பாகத்தில் இருந்து கந்தனையும் தொந்தியிலிருந்து இந்திரன் குபேரன் வருணன் எமன் ஆகியோரையும் பிரத்யங்கத்தில் இருந்து 50 கோடி தேவர்களையும் ரோமங்களிலிருந்து எண்ணிக்கையற்ற முனிவர்களையும் தோற்றுவித்ததாக சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அவரிடமே ஒடுங்குகின்றன. அதனால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கும் மூர்த்தியாக அவர் ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் அவர் ஏகபாதத்ரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

சிவ வடிவம் – 49. ஜலந்தர வத மூர்த்தி

தேவலோகத்து அரசன் நான் என்ற அகந்தையுடன் இந்திரன் திருக்கைலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வர கிளம்பினான். இதனை அறிந்த சிவபெருமான் அவனது அகந்தையை அழிக்க அவன் வரும் வழியில் துவாரபாலகராக உருமாறி நின்றிந்தார். இந்திரன்‌ அவரிடம் நான்‌ இப்போது ஈஸ்வரனைச்‌ சந்திக்க இயலுமா எனக்‌ கேட்டான். சிவபெருமான்‌ எதுவும்‌ பதில்‌ கூறாமல்‌ வாய்மூடி அமைதியாக இருந்தார்‌. இதனால்‌ கோபம்‌ கொண்ட இந்திரன்‌ தன்‌ வச்சிராயுதத்தால்‌ அவரைத்‌ தாக்கினார்‌. வச்சிராயுதம் தவிடு பொடியானது. கோபமடைந்த சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். உண்மை அறிந்த இந்திரன் பயந்து போய் தன்னுடைய அகந்தை அழிந்து அவரிடம் மன்னிக்க வேண்டினான். கருணையே வடிவான பரம்பொருள்‌ அவனை மன்னித்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். தனது கோபத்தை எடுத்து கடலில்‌ எறிந்துவிட்டு கைலாயம்‌ சென்றடைந்தார்‌. கடலில்‌ விழுந்த கோபக்கனல்‌ ஒரு வலிமை மிக்க அரக்க குழந்தையாக உருவெடுத்தது. இந்த குழந்தையை கடலரசன் எடுத்து வளக்க ஆரம்பித்தான். தான்‌ வளர்க்கும்‌ அந்தக்‌ குழந்தைக்கு பெயர் வைக்க பிரம்மனிடம்‌ கொடுத்தான்‌. குழந்தையைத்‌ தன்‌ மடிமீது வைத்துக்‌ கொஞ்சிக்‌ கொண்டிருந்த பிரம தேவரின்‌ தாடியைப்‌ பிடித்து இழுத்தது குழந்தை. பிரம்மன்‌ வலி தாளாமல்‌ கண்ணீர்‌ சிந்த அது குழந்தையின்‌ மேல்பட்டது. கடல் நீர் பட்டதாலும் பிரம்மனின் கண்ணீர் பட்டதாலும் அக்குழந்தைக்கு ஜலந்தரன்‌ என பெயரிட்டார் பிரம்மர். ஜலந்தரன்‌ என்ற சொல்லுக்கு ஜலம்‌ தரித்தவன்‌ என்றும்‌ தண்ணீரால்‌ தாங்கப்‌ பெற்றவன்‌ என்றும்‌ பொருள்‌.

கடுமையான தவம் செய்து பிரம்மரிடம் பல வரங்கள்‌ பல பெற்றான் ஜலந்தரன்‌. அரக்கர்களுடன்‌ சேர்ந்து மொத்த உலகத்தையும் வெற்றி பெற்றான்‌. மிகப்பெரிய நகரம்‌ ஒன்றை அமைத்து அதற்கு ஜலந்தரபுரம்‌ எனப்‌ பெயரிட்டான்‌. அதில்‌ இருத்து மொத்த உலகத்தையும் அரசாட்சி செய்த ஜலந்தரன்‌ காலநேமி என்பவரின் மகள்‌ பிருந்தையை மணந்து இன்பமாக வாழ்ந்து வந்தான்‌. தன்‌ வரத்தின் பலத்தாலும்‌ உடல்‌ வலிமையாலும்‌ ஆணவம்‌ கொண்ட ஜலந்தரன்‌ தேவர்களை எல்லாம்‌ துன்புறுத்‌தத்‌ தொடங்கினான்‌. இவன்‌ வருகையைக்‌ கேட்டதும்‌ தேவர்கள்‌ எல்லாம்‌ அஞ்சி ஓடத்‌ தொடங்கி கயிலை மலையில்‌ அடைக்கலம்‌ புகுந்தனர்‌. இதனை அறிந்து மிகக்கோபங்‌ கொண்டு போர்க் கோலம்‌ தாங்கி கயிலை மலையை நோக்கி செல்ல ஆயத்தமானான். இதனைப் பார்த்த அவன்‌ மனைவி பிருந்தை சிவபெருமானின்‌ பெருமைகளை எல்லாம்‌ எடுத்துக்‌ கூறி கைலை மலையை நோக்கிப்‌ போருக்கு செல்லக் கூடாது என்று வேண்டி நின்றாள்‌. ஆனாலும் கயிலை சென்றான்‌ ஜலந்தரன்‌.

இந்திரன்‌ முதலானோர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்‌. சிவபெருமானும்‌ அபயமளிக்கும்‌ திருக்கரத்தை காட்டி அஞ்சவேண்டாம்‌ என அருள்‌ செய்தார்‌. ஒரு அந்தணராக உருவம் மாறி ஜலந்தரன்‌ முன்னே சென்று அவனுடன்‌ பேசலானார்‌. அவன்‌ தான்‌ கைலைக்குச்‌ செல்லும்‌ எண்ணத்தைக்‌ கூறினான்‌. அதற்கு அவரும்‌ அவர்‌ கைலைக்குச்‌ செல்வது ஒருபுறம்‌ இருக்கட்டும்‌ தான்‌ சொல்லும்‌ சிறு வேலையைச்‌ செய்ய முடியுமா? என்று கேட்டார். ஆணவத்துடன்‌ எதையும்‌ செய்து முடிக்கும்‌ பேராற்றல்‌ தனக்கு உண்டு என்று கூறினன்‌. உடனே அந்த அந்தணர்‌ தன்‌ கால் பெருவிரலால்‌ மண்ணில்‌ ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்தைப்‌ பெயர்த்து எடுத்து அவன்‌ தலைமேல்‌ தாங்க வேண்டும்‌ என்று கூறினார்‌. ஜலந்தரன்‌ அதைக்‌ கேட்டு சிரித்துவிட்டு அந்த வட்டத்தை அனாயாசமாகப்‌ பெயர்க்கக்‌ தொடங்கினான்‌. ஆனால்‌ அவனால்‌ அது எளிதில்‌ முடியவில்லை. தன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி பெயர்த்து தன்‌ இரு கரங்களாலும்‌ உயரத்‌ தரக்கிப்‌ பிடித்து தலைக்குமேல்‌ தாங்கினான்‌. உடனே அது அவன்‌ உடலை இரு கூறுகளாகப்‌ பிளந்தது சக்கரம். அவனது உடலில் இருந்து சோதி வடிவமாக இறைவன்‌ திருக்கரத்தில்‌ சென்று அமர்ந்தான்.

ஜலந்தரன்‌ அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். தேவர்கள் தங்களுக்கு உண்டான அவரவர் பதவியை மீண்டும் பெற்றார்கள். தேவர்கள் துயர்துடைக்க சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே ஜலந்தர வத மூர்த்தி ஆவார்.

சிவ வடிவம் – 48. கஜாந்திகமூர்த்தி

சூரபத்மன் பெரும் வலிமை உடைய கூடிய அரக்கன். அவன் தேவலோகத்தை தாக்கி இந்திரனை வெற்றி கொண்டு தேவலோகத்தில் இருப்பவர்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்தான். சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே அசுரர்களின் கொடுமைத் தாங்காத தேவர்கள் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கயிலை அடைந்தனர். இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார். கயிலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். இதற்கு மறுத்த அவளை இழுத்துக் கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார். அவர்கள் இந்திராணியை கொடுமைப் படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பினார். இதனை அறிந்த சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் ஐயப்பனை பழிவாங்கப் புறப்பட்டான். பானுகோபன் இந்திராணியையும் இந்திரனையும் தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டான். அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். பானுகோபன் அவர்களது ஐராவதத்தை சிறை பிடித்தான்.

ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. ஐராவதத்தின் தந்தம் உடைய அதுவும் பின் வாங்கியது. மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று மூன்று காலமும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சி கொடுத்தார். அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த தந்தங்களை புதுப்பித்து பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப் பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது. ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி சிவபெருமான் காட்சிக் கொடுத்து வரம் கொடுத்த வடிவமே கஜாந்திக மூர்த்தி ஆகும்.

சிவ வடிவம் – 47. அசுவாருடமூர்த்தி

பாண்டிய மன்னன் குதிரைக்காக மாணிக்கவாசகரை துன்புறுத்த மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றார் இறைவன். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டு மாணிக்க வாசகரை மேலும் துன்புறுத்தினான். மீண்டும் மாணிக்கவாசகர் சிவபெருமானை தஞ்சம் அடைய சிவபெருமானின் திருவிளையாடலால் பாண்டிய மன்னன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.

மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தியாகும். திருப்பெருந்துறையில் உள்ள ஸ்ரீ யோகாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயிலில் உள்ள பஞ்சாட்சர மண்டபத்தின் தூண் ஒன்றில் இந்த மூர்த்தியின் சிற்பம் உள்ளது.

சிவ வடிவம்- 46. குருமூர்த்தி

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மாணிக்கவாசகர் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும் ஞானம் என்பதும் போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்து விட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.

பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக் கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கி விட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். பல சிவ தலங்களுக்கும் சென்று பல பாடல்களை இயற்றினார்.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவடி தீட்சை கொடுத்து உபதேசம் செய்த உருவமே குருமூர்த்தி ஆகும்.

சிவ வடிவம் – 45. கிராதமூர்த்தி (வேட மூர்த்தி)

பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்டிருந்தனர். அங்கே அவர்களின் குறைளை கேட்கவும் ஆலோசனைக் கூறவும் மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேச வியாசமுனிவர் பாண்டவர்கள் இருந்த காட்டுப் பகுதிக்கு சென்றார். அங்கே பலவகையில் இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் கூறினார். அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது அறிவுரைப்படி குறிப்பிட்ட நல்ல நாளில் தவம் செய்ய அர்ஜூனன் இமய மலையை அடைந்தான். அங்கே வசிக்கும் முனிவர் ரிஷிகள் தேவகணத்தினரின் ஆசியுடன் அங்கு சிவபெருமானை மனதில் நினைத்து தவம் செய்ய ஆரம்பித்தான். அர்ஜூனனின் தவத்தை சோதிக்க இந்திரன் விரும்பினான். ஆகவே தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பி தவத்தைக் கலைக்கும்படி செய்தான். அவர்கள் அர்ஜூனன் முன்பு பலவித நாட்டியமாடியும் தவம் கலையவில்லை.

அர்ஜூனனின் தவப் பலனால் சிவபெருமான் வேடராகவும் பார்வதி தேவி வேடுவச்சியாகவும் முருகன் குழந்தையாகவும் வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும் தேவகணங்கள் வேடுவக் கூட்டமாகவும் மாறியது. அர்ஜூனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர். அங்கே அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக் கண்ட சிவபெருமான் பன்றி மீது அம்பு ஏய்து அசுரனை கொன்றார். அப்போது தவம் கலைந்த அர்ஜூனன் வேடுவக் கோலத்தில் இருந்த இறைவனை பார்த்ததும் தன்னை எதிர்க்க வந்திருக்கிறார் என்று எண்ணி சிவனுடன் யுத்தம் புரிந்தான். பின் அர்ஜூனனுக்கு சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். இறைவனிடம் யுத்தம் புரிந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை சரணடைந்த அர்ஜூனன் பாசுபத அஸ்திரத்தை சிவனிடமிருந்து பெற்றான். அர்ஜூனனுடன் அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுக்க வந்த இறைவன் ஏற்ற வேடுவ வடிவமே கிராத மூர்த்தியாகும்.

குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் கோயிலி வில்வாரண்யேஸ்வரர் என்ற பெயரில் கிராத மூர்த்தி அருள்பாலிக்கிறார். கேரளாவில் அமைந்துள்ள வேட்டைக்கொருமகன் ஆலயங்கள் வேடுவக் கோலத்தில் ஈசனை மூலவராகக் கொண்ட கோயில்களாகும்.