துறவு

மிகப் பெரிய துறவியொருவர் தம்முடைய சீடரிடம் துறவு பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டார். அதனை சீடர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாமன்னர் ஜனகரிடம் அனுப்பி வைத்தார். சீடருக்கோ வியப்பு ஏற்பட்டது. குருவே தாங்களோ மிகப் பெரிய துறவி சற்குரு. அவரோ நாடாளும் மன்னர் குடும்பஸ்தர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்று கேட்டார். அந்தத் துறவி தமது சீடரிடம் நாம் சந்நியாசி அவர் குடும்பஸ்தர் என்பதையெல்லாம் தாண்டி அவரிடம் நீ கற்றுக் கொள்வதற்கு உனக்கு ஒன்று இருக்கிறது. பணிவுடன் தலைவணங்கி அவரிடம் அதைக் கற்றுக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாவிட்டாலும் குருவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அந்த சீடர் மிதிலைக்கு சென்றார். அரசவைக்குள் மன்னர் ஜனகர் இருந்தார். அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆடல் பாடல் என்று களைகட்டியது. அவையில் இருந்தோர் அனைவரும் நடனத்தில் மயங்கி அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். மன்னர் ஜனகர் இந்தக் கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்தார். அந்தக் காட்சியைப் பார்க்கவே சீடருக்கு பிடிக்காமல் இருந்தது. ஜனகர் சிரித்துக் கொண்டே அந்த சீடரிடம் இங்கு காண்பதைக் கொண்டு தவறான முடிவுக்கு வந்து விடாதே. ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் தான் உனது குரு உன்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். அதை மட்டும் கற்றுக் கொள்ள ஒரு நாள் இந்த அரண்மனையில் தங்கியிருந்து விட்டு பின் நீ புறப்பட்டு செல்லலாம் என்றார்.

அரண்மனையில் உள்ள ஒரு அறையில் சீடர் தங்கினார். அவர் தங்கியிருந்த அறை மிகவும் அழகானதாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. விருந்து முடிந்ததும் தூங்குவதற்கு படுக்கையில் சாய்ந்தார். மேலே பார்த்த போது திடுக்கிட்டார். அந்த அறை முழுவதும் மேல் பகுதியில் சீடரின் தலைக்கு மேலே ஒரு கூர்மையான வாள்கள் வெறுமனே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். எந்த நேரத்திலும் நூல் அறுந்து ஏதோஒரு வாள் தனது கழுத்தில் விழும் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு அன்று இரவு முழுவதும் விழித்துக் கொண்டு அந்தக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். பொழுது விடிந்ததும் ஐனகர் வந்தார். அவரிடம் இந்த அறை வசதியாக இருந்ததா? படுக்கை சுகமாக இருந்ததா? இரவு நன்றாக உறங்கினீர்களா? என விசாரித்தார். அதற்கு அந்த சீடர் எல்லாமே வசதியாகத் தான் இருந்தது. ஆனால் தலைக்கு மேலே மெல்லிய நூலில் உறையில்லாத வாள் தொங்கிக் கொண்டிருக்க எப்படி நான் அமைதியாக உறங்க முடியும்? என்று பதில் அளித்தார். அரசர் அவரிடம் நீங்கள் இங்கே வரும் போது மிகவும் களைப்பாக இருந்தீர்கள். எனவே படுத்ததும் அசதியில் தூங்கிக் போயிருக்கலாம். ஆனால் ஏன் தூங்க முடிய வில்லை. தூங்கினால் வாள் அறுந்து நமது மீது விழுந்தால் என்னாகும் என்ற சிந்தனையில் பயத்தில் தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் உங்கள் சிந்தனை ஓடியது. இதனால் நீங்கள் தூங்காமல் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருந்தீர்கள். இந்த எச்சரிக்கைக்கு நடுவில் இந்த உலகம் மற்றும் இதில் இருக்கும் சுகதுக்கங்கள் ஒன்றையும் நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள். இந்த சிந்தனை இல்லாத மனம் தான் துறவு. இதுதான் எனது போதனை.

நான் எனது அரசவையில் அமர்ந்து கொண்டிருந்தாலும் அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தாலும் இந்த சுகபோகங்களுக்கிடையே நான் எனது தலைக்கு மேலே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் உறையில்லாத மரணம் என்ற வாளைப் பற்றிய கவனத்தில்தான் எப்போதும் இருக்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது. ஒரு நொடிப்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதுபோல் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள். எந்த நேரத்திலும் வரக்கூடிய அந்த மரணம் குறித்து நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். எனவே நான் இந்த அரண்மனையில் வாழ்ந்தாலும் கூட நானும் ஒரு துறவி தான் என்று சொல்லி சீடரை அனுப்பி வைத்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.