கௌரவர்களின் தலைநகராக இருந்த அஸ்தினாபுரம் நகருக்கு கிருஷ்ணர் வந்தார். பலர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்தும் அங்கெல்லாம் போகாமல் விதுரனின் வீட்டுக்குச் சென்றார் கிருஷ்ணர். தன்னுடைய வீட்டிற்கெல்லாம் கிருஷ்ணர் வரமாட்டார் என்றிருந்த விதுரரின் வீட்டிற்கு திடீரென்று வந்த கிருஷ்ணரைப் பார்த்ததும் நிலை தடுமாறினார் விதுரர். இங்கும் அங்குமாக ஓடி என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்தார். கிருஷ்ணரை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது? என்று எண்ணிய விதுரர் ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து விட்டு அந்த ஆசனத்தை நன்றாக தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே அதில் அமரச் சொன்னார். கிருஷ்ணர் சிரித்தபடியே நின்றார். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு ஓடினார். கண்ணில் பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு கிருஷ்ணரிடம் வந்து கிருஷ்ணா இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே மறுக்காமல் சாப்பிடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.
விதுரர் படபடப்போடேயே காணப்பட்டார். அவரது சிந்தனையில் தான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறோம். அவன்தான் தனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கிருஷ்ணர் தூது வந்தபோது மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதன் மேல் கம்பளம் விரித்து அந்தக் கம்பளத்தின் மீது ஆசனத்தை வைத்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமர்ந்ததும் கீழே விழுவார். அவரை சிறை பிடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தான் துரியோதனன். இப்படிப்பட்ட கீழ்மையான எண்ண் கொண்ட துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம் அவனைப் போலவே சிந்தனை கொண்டு சுயநினைவின்றி கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து இம்சிக்கச் செய்திருக்கிறோமோ துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ எனப் பதைபதைத்தார் விதுரர். விதுரருக்கு எவ்வளவு பெரிய ஞானம். இந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்த கிருஷ்ணர் விதுரா என்னைக் கண்டதும் நீ படுகின்ற உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது என்றார்.
இறைவனுக்காக பூஜை செயல்களில் ஈடுபடும் போது தன்னையும் அறியாமல் தவறு ஏதேனும் செய்து விடுவோமோ நடந்து விடுமோ என்று எண்ணத்தில் இறைவனைத் தவிர வேறு சிந்தனையில்லமால் சிரத்தையுடன் இருக்க வேண்டும். இப்படி இருப்பவர்களே ஞானியாகத் திகழ்கிறார்கள். இறைவன் இவர்களுக்கே முதன்மையில் அருள்கிறார் அரவணைக்கிறார் ஆட்கொள்கிறார் என மகாபாரதத்தில் அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.
