சங்கராச்சாரியார் கோயில்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக் கரையில் உள்ள சங்கராச்சாரியார் மலையில் 1000 அடி உயரத்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. வட்ட வடிவ அறையில் பெரிய சிவலிங்கம் உள்ளது. அதனை சுற்றி ஒரு பாம்பு இருக்கிறது. இக்கோயிலுக்கு ஜோதிஷ்வரர் கோயில் என்றும் பெயர். பௌத்தர்கள் பாஸ் பாஹர் என்றும் அழைப்பார்கள். தற்போது உள்ள இக்கோயில் கிபி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது எப்போது என்ற உண்மையான தேதி குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. 1924 ஆம் ஆண்டு வாழ்ந்த பண்டிதர் ஆனந்த கௌலின் என்பவர் இக்கோயில் காஷ்மீரை ஆண்ட மன்னர் சண்டிமன் என்பவரால் கிமு 2629 – 2564 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிடுகிறார். கிமு 371 ஆம் ஆண்டு அந்நாட்டை ஆட்சி செய்த மன்னன் இக்கோயிலை கட்டினார் என்று எழுத்தாளர் கல்ஹனா குறிப்பிடுகிறார்.

காஷ்மீர் மன்னர்கள் கோபாதித்தியன் கிமு 426 – 365 மற்றும் லலிதாத்தியன் கிமு 697 – 734 காலத்தில் இக்கோயில்லுக்கு திருப்பணி செய்துள்ளார்கள். நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயிலின் கூரைகளை ஜெனுலாபீத்தீன் என்பவர் சீரமைத்தார். சீக்கியப் பேரரசின் காஷ்மீர் ஆளுநர் குலாம் மொய்னூதீன் உத்தீன் (1841 – 46) இக்கோயில் கோபுரத்தை செப்பனிட்டுள்ளனர். டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங் 1846 – 1857 காலத்தில் ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1925 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜா கோயிலுக்குச் சென்று மின் தேடுதல் விளக்குகளை நிறுவி அதற்கான மின்சாரக் கட்டணச் செலவுக்கு நிதியை கொடுத்திருக்கிறார். 1961 ஆம் ஆண்டு துவாரகாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் இக்கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் சிலையை நிறுவினார். பாண்டிச்சேரியின் ஸ்ரீ அரவிந்தர் 1903 ஆம் ஆண்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். பிரபல இந்திய தத்துவஞானி வினோபாபா 1959 கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

இமயமலையில் உள்ள புனித தலங்களுக்கு ஆதிசங்கரர் சுற்றுப்பயணம் சென்ற போது ஸ்ரீநகரில் உள்ள இக்கோயிலுக்கும் சென்று சிவலிங்கத்தை தரிசித்துள்ளார். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுத வேண்டி அதற்கான மூலச் சுவடிகளை தேடி காஷ்மீரின் சாரதா பீடத்திற்குச் சென்றார். பின்னர் கோபாத்திரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசித்து சௌந்தர்ய லகரி எனும் அம்பாள் தோத்திரப் பாடலை இக்கோயிலில் பாடினார். எனவே இக்கோயில் சங்கராச்சாரியார் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலத்தை பௌத்தர்களும் புனித தலமாக கருதுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தை புதுப்பித்துள்ளார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.