அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் குறுங்காலீஸ்வரர் குசலவபுரீஸ்வரர். அம்பாள் தர்மசம்வர்த்தினி மற்றும் அறம் வளர்த்த நாயகி. இறைவனும் இறைவனுக்கு வலப்புறமுள்ள அம்பாளும் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்கள். அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்கிறார். தீர்த்தம் குசலவ தீர்த்தம். தல விருட்சம் பலா. இடம் சென்னை அருகில் உள்ள கோயம்பேடு. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால் மோட்ச தலமாக கருதப்படுகிறது. லவ குசர்கள் கோ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை அயம் என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் கோயம் பேடு என பெயர் பெற்றது. பேடு என்றால் வேலி எனப் பொருள். அருணகிரியார் இத்தலத்து முருகனைத் திருப்புகழில் பாடும் போது கோசைநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கோவில் சுமார் 25200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இடைக்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பெரிய குளம் உள்ளது. இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது. கோவிலுக்கு அருகில் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.

ஒரு காலத்தில் இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மணலால் மூடிவிட்டது. சோழ மன்னன் ஒருவன் இவ்வழியே தேரில் சென்ற போது சக்கரம் லிங்கம் மீது ஏறி ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் நவக்கிரக சன்னதி தாமரைபீடத்தின் மீது அமைந்துள்ளது. நவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை அவரது சாரதியான அருணன் ஓட்ட மனைவியருடன் சூரியபகவான் அருள் பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள் கீழ்பீடம் வெள்ளை தாமரை பீடம் சிவப்பு ரதம் கருப்பு தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருக்கிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா லட்சுமி ஞானசரஸ்வதி நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோபுரத்திற்கு கீழே கபால பைரவர் வீரபத்திரர் இருக்கின்றனர். அதிகார நந்தி காலபைரவர் வீரபத்திரர் விநாயகர் பிரம்மன் சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குப்புற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது.

அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய அவள் லவன் குசன் என்னும் 2 மகன்களை பெற்றெடுத்தாள். ராமர் தனது தந்தை என தெரியாமலேயே லவ குசர் வளர்ந்தனர். இந்நேரத்தில் ராமர் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அங்கு வால்மீகி முனிவரின் உத்தரவின் பேரில் லவ குசர் இருவரும் சென்றார்கள். மனைவி இல்லாமல் அஸ்வமேத யாகம் நடத்துவது சாஸ்திர விரோதம் என்பதாலும் சீதாவை காட்டுக்கு அனுப்பி விட்டதை அறிந்தும் ராமர் மீது கோபமடைந்த லவ குசர் இருவரும் தாங்கள் வசித்த வனத்துக்கே திரும்பி விட்டனர். அப்போது அஸ்வமேத யாகக் குதிரை லவ குசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப் போட்டனர். அங்கு வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடன் போரிட்டு வென்றதோடு குதிரையை மீட்க வந்த லட்சுமணருடனும் போரிட்டு வென்றனர். இவர்களைத் தேடி ராமனும் இங்கு வந்தார். இதையறிந்த வால்மீகி லவ குசர்களிடம் ராமர் அவர்களது தந்தை என்பதையும் அவர்களது அன்னையே சீதை என்பதையும் எந்தச் சூழ்நிலையில் சீதாதேவியை ராமர் காட்டுக்கு அனுப்பினார் என்பதையும் விளக்கினார். இருப்பினும் தந்தையை எதிர்த்ததால் லவ குசருக்கு பித்ரு தோஷம் பிடித்தது. வால்மீகியின் ஆலோசனைப்படி இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றனர். இதனால் சுவாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது.

கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை – என்பார்கள்.

இதற்கு விளக்கம் உலகத்தில் கோயம்பேடு என்ற பெயர் கொண்ட ஊர் வேறு இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது. பொதுவாக ஒரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கின்ற பெயர் இன்னொரு ஊரில் சிவபெருமானுக்கு இருக்கும். ஆனால் இந்த ஈஸ்வரனுடைய பெயர் வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். மடக்குப் போன்ற லிங்கம் என்பது இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை அதாவது பானை மூடப் பயன்படும் மூடியை கவிழ்த்தது போல் இருக்கும். ஆகவே அவ்வாறு சொல்வார்கள்.

இக்கோவிலில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 12 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள் ஜெயம்கொண்ட சோழமண்டலம் மற்றும் மாங்காடு இப்பகுதியில் இடம் பெற்றிருந்ததை பதிவு செய்துள்ளன. கோயம்பேடு கிராமசபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த செய்திகள் குறித்தும் இக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. வால்மீகி முனிவர் ராமரின் மகன்கள் லவன் குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அருணகிரிநாதர் இக்கோவில் முருகரை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

குறுங்காலீஸ்வரர்
தர்மசம்வர்த்தினி
நடராஜர்
பைரவர்
காபால பைரவர்
முருகர்
நவகிரகம்
தட்சணாமூர்த்தி

வாலி வழிபட்ட ஆதிபுரீஸ்வரர்

கிஷ்கிந்தை எனும் நாட்டை அரசாண்டு வந்த வாலி வீடுபேறடைவதற்காக தினசரி 4 சமுத்திரத்தில் நீராடி விதிப்படி நித்யகருமம் முடித்து பின்பு கயிலை மலை சென்று முதலில் நந்தி தேவரை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்று பார்வதி சமேதரான சிவபெருமனை வாக்கு காயங்களினால் வழிபட்டுப் பின் தன் நகரினை அடைந்து நீதியுடன் நல்லாட்சி புரிந்து வந்தார்.

ஒரு நாள் திக் விஜயம் செய்து வந்த இராவணன் வாலியைக் கண்டு குறும்பாக அவனை தன் கையை விட்டுப் பிடிக்க முற்படுகையில் வாலி தன் வாலினால் இராவணன் உடல் முழுவதையும் சுற்றி கட்டி விடுகிறார். பின்னர் அப்படியே சமுத்திரங்களில் நீராடி கயிலை மலை சென்று நந்தி தேவனை வணங்கி சிவனைக் காண அனுமதி கேட்டார். அதற்கு நந்தி தேவர் கைலாசபதியானவர் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் அதிகாபுரியை அடுத்த ஆதிபுரத்திற்கு சென்றுள்ளார் என்றார். உடனே சிவபெருமானை தரிசிக்க வேண்டி நந்திதேவரிடம் வாலி ஆதிபுரத்திற்கு வழி கேட்டார். நந்திதேவரோ உன் வாலினால் கட்டுண்டு கிடக்கும் இராவணன் அந்த ஆதிபுரத்தை அறிவான் என்று கூறுகிறார். (இராவணன் மிகச்சிறந்த சிவ பக்தன். சிவன் இருக்கும் இடம் எதுவாகினும் இராவணனிற்கு தெரியும்) உடனே வாலி இராவணனைப் பார்த்து ஆதிபுரத்திற்கு வழி சொன்னால் இந்த கட்டை தளர்த்தி உன்னை விடுவிப்பேன் என்கிறார். உடனே இராவணன் இந்த ஆதிபுர திருத்தலத்தை காட்டிட அங்கு திரிபுரசம்கார மூர்த்தியாய் உள்ள சிவபெருமானைக் கண்டு பேரானந்தம் அடைந்து வாலி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம் இந்த ஆதிபுரம்.

வாலியின் வாலினால் கட்டுண்டு இராவணன் விழிபிதுங்கி நிற்கும் காட்சி மூல விக்ரகம் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் தெற்கு திசையில் உள்ளது. இடம்: பத்மதளநாயகி உடனுறை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் ஆதிபுரம் எனும் எய்தனூர் (நெல்லிக்குப்பம் அருகில்) கடலூர் மாவட்டம்.

சேஷமூலை சேஷபுரீஸ்வரர் கோயில்

திருவாரூரில் மணக்கால் ஐயம்பேட்டையில் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என பெயர் மறுவியது. மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவர் சேஷபுரீஸ்வரர். சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அம்பாள் அந்தப்புரநாயகி பாலதிரிபுரசுந்தரி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சிவக்குளத்து தீர்த்தம். கோயில் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாகவும் ஒரு கையில் வளையல் காலில் சிலம்பு கால் விரளில் மெட்டி ஒரு பக்கம் ஆபரணங்களுடன் அருள்பாலிக்கிறார். சனகாதி முனிவர்கள் அருகில் உள்ளனர். அவரை பார்த்த வண்ணம் நந்தி பகவான் இருக்கிறார். சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக் கோயிலில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும் லட்சுமியும் துவார பாலகர்களாக அருள் பாலிக்கிறார்கள். பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய பார்வதி (வீரம்) சரஸ்வதி (அறிவு) லட்சுமி (செல்வம்) மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

திருலோக்கி

குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம். அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம் மான் ஏந்தியும் முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும் இடது கரத்தில் மலர் ஏந்தியும் உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் பார்யா சௌக்யப்ரதாயினி என்பதாகும்.

அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள் நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை.

தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதியானது. சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் வணங்கும் கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் சிறப்பானது. குரு பூஜித்து பேறு பெற்ற ஒப்பற்ற தலம் திருலோக்கி.

இடம் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணம் அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி கோவில் அமைந்துள்ளது.

நவ பிருந்தாவனம்

ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனேகுந்தி பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின் படகு பயணம். துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும் தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவபிருந்தாவனம் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. ஆஞ்சநேயர் சிறுவயதில் இந்த மலையை தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மாலை தாவி விளையாடிய இடம் ஆகையால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் படகில்தான் நவ பிருந்தாவனம் செல்ல முடியும். துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது. அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். துங்கபத்திராவின் நடுவே பள்ளிகொண்ட அரங்கநாதர் கோவில் அனுமன் கோவில் மற்றும் ஒன்பது மகான்கள் 1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 2. ஸ்ரீ ஜெய தீர்த்தர் 3. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் 4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் 5. ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் 6. ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் 7. ஸ்ரீ ராம தீர்த்தர் 8. ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர் 9. ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

நவபிருந்தாவனத்தில் முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது இந்தக் குகையில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

அவதாரத்ரய ஹனுமான்

மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனத்திற்கு யாரும் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.

மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாம்பு கோவில்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது நாம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வெமுலவாடாவில் இருந்து கரீம்நகர் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஒரு சிறிய குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வழியில் நாகதேவதைக்கு ஒரு கோவில் இருக்கிறது. பாம்பு வடிவத்தில் அமைந்த ஆலயம் இது. நரசிம்மர் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வாசல் போன்று இந்த நாகர் வடிவ கோவில் உள்ளது. பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து கோவில் பிரவேசம் தொடங்குகிறது. அந்த இடத்தின் வெளிப்பகுதியில் தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம் சிமெண்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாம்பு வயிற்றுப் பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பின் வடித்திற்குள் நுழைந்ததும் பக்த பிரகலாதனின் வாழ்க்கை வரலாறு அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது. பக்தபிரகலாதன் பிறந்தது முதல் விஷ்ணு பக்தன் என்பதால் இரண்யகசிபு அவனை கொல்வதற்கு எடுக்கும் முயற்சிகள் மற்றும் இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்வது வரை சிற்பமாக வடித்து வைக்கப்பட்டுள்ளது. நாகர் வடிவ சிலையில் சுரங்கப்பாதை முடிவுறும் இடத்தில் நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. இங்கே நாகதேவதைகளின் பழமையான சிலைகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பாம்பின் உடலுக்குள் செல்வது போல் அமைந்த சுரங்கத்தில் சூரிய வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் ஆங்காங்கே வட்ட வடிவ ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தாமரை லிங்கம் சோமநாதர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு சோமநாதர் திருக்கோவில் உள்ளது. புராணபெயர் சதூர்வேதி மங்கலம் பெருமூள்ளுர் பேரூர். மூலவர் ஸ்ரீசோமநாதர். சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்க பாணத்துடன் இறைவன் அருளுகின்றார். அம்பாள் சுந்தராம்பிகை குந்தளாம்பிகை. நின்ற கோலத்தில் அருள் காட்சி கொடுக்கின்றாள். தலவிருட்சம் செந்தாமரை கொடி. தீர்த்தம் லட்சுமி தீர்த்தம்.

இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது சிவனது தலையிலிருந்து  விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். ஸ்ரீதிரிபுவன சித்தர் என்பவர் ஓர் அரிய தவத்தை மேற்கொண்டார். பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களிலும் அரிய ஒரு தெய்வீகத் தாமரைப் புஷ்பத்தை தன் தவத்தினால் லிங்கமாக உருவாக்கி வழிபட எண்ணம் கொண்டார். தன் எண்ணத்தின் படி பூலோகத்தில் இக்கோவிலின் தீர்த்தத்தில் இருந்து எடுத்த தாமரை மலரை தன் தவ வலிமையால் லிங்கமாக உருவாக்கி பிரதிஸ்டை செய்து வழிபட்டார். பாணலிங்கமே தாமரைத் தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல் வேறு எங்கும் காண இயலாது.

கிழக்கு நோக்கிய திருவாயில். விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் நவக்கிரகம் பைரவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும் புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன.

தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன் மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான பெருமகளூரே  பூலோகம் பூவர்லோகம் சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர் இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லும் போது ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.

பல யுகங்களாக இருந்த இந்த சிவலிங்கம் இந்த யுகத்தில் வெள்ளத்தின் காரணமாக குளத்திற்குள் மூழ்கியது. பிற்காலத்தில் இந்த குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழ மன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித் தழுவிய போது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து வைரம் வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர்

விநாயகருக்கு உள்ள மிகப்பெரிய குடைவறைக்கோயில். மூலவரான விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். தேசிவிநாயகப் பிள்ளையார் என்ற வேறு பெயரும் உள்ளது. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க அழகுள்ள விநாயகர் என்று பொருள். ஆறு அடி உயரத்தில் கம்பீரம்மாக வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடைந்து கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு இருக்கிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். அதில் தமிழ் நாட்டில் மூன்றும் ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும் ஒன்று. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. இக்கோவில் இருக்கும் பிள்ளையார்பட்டியின் புராண பெயர்கள் எருகாட்டூர் அல்லது எக்காட்டுர் மருதங்குடி திருவீங்கைகுடி திருவீங்கைச்வரம் இராசநாராயணபுரம் மருதங்கூர் தென்மருதூர் கணேசபுரம் கணேசமாநகரம் பிள்ளை நகர் ஆகும். முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் போல் விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.

கோவிலில் இரண்டு பெரிய ராஜகோபுரங்கள் உள்ளது. ஒன்று கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

தெற்கு நோக்கியபடி சங்கர நராயணர் அருளுகிறார். சண்டீசன் கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள். மலையைக் கடைந்து செதுக்கிய பெரிய மகாலிங்கம் உள்ளது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இங்கு திருமணம் நடைபெற வைக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும் பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும் அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் பசுபதீசுவரர் சன்னதியும் உள்ளது. இக்குகைக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மாள் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது.

கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மற்றொரு பகுதி கற்றளி ஆகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் வினாயகர் சன்னதியை வலம் வர இயலாது.

குடைவரை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

விநாயகரின் சிறப்புகள்:

  1. இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருக்கிறார்.
  2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.
  3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.
  4. வயிறு ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திருக்கிறார்.
  5. வலத்தந்தம் நீண்டும் இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார்.
  6. வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியருள்கிறார்.

கோவில் திருவிழாக்களில் விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும். 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மகா அபிஷேகமும் நடத்தப்படும்.

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார். பிள்ளையார் மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி கொடியேற்றம் நடக்கும். பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும் பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும் உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும் இரவு ஐம்பெருங்கடவுளரும் தங்க வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவார்கள்.

தெய்வங்கள் பேசும் ஆலயம்

பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள். இக்கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தாந்திரிக் பவானி மிஸ்ரா என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இந்த கோவிலில் நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோவிலில் 1. திரிபுரா பைரவி 2. துமாவதி 3. பகுளாமுகி 4. தாரா 5. காளி சின்னமஸ்தா 6.ஷோடசி 7. மாதங்கி 8. கமலா 9.உக்ரதாரா 10, புவனேஸ்வரி ஆகிய பத்து மகாவித்யாக்களின் சிலைகள் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது தவிர 1. பங்களாமுகி மாதா 2. தத்தாத்ரேய பைரவ் 3. படுக் பைரவ் 4. அன்னபூர்ண பைரவ் 5. கால பைரவ் 6. மாதங்கி பைரவ் ஆகிய பைரவர்களின் சிலைகளும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.