தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை அழைக்கின்றார்கள். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானை முகமுடைய கஜமுகா அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சி இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும் யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன. சிவனின் ரௌத்ரப்பார்வை நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள் இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும் இன்னொன்று ஊன்றிய நிலையிலும் உள்ளது. சிவனின் உள்ளங்கால் தரிசனம் காணலாம்.
ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர அதை அழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினார். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்சிலை அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பத்தாவது கிமீ தூரத்தில் வழுவூர் உள்ளது.
ஹொய்சாளேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டு வந்த காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. ஹொய்சாளேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவா பார்வதி சிலை அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹொய்சாளேஸ்வரர் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக்கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும் இக்கோயில் மன்னனால் மட்டுமின்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலும் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன் கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக்குளம் ஹொய்சாளேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.
கோவில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹொய்சாளேஸ்வரருக்கும் மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. கருவறைகளில் சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப் போலவும் நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோயில் இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.
கோவில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். மேல் உள்ள இரண்டு கைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் மாலிக்காபூர் படையெடுப்பில் உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும் யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உள்ளது. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார். இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயண மகாபாரத கதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. ஆதிநாதர் சாந்திநாதர் பார்சவநாதர் ஆகிய சமணக் கோயில்களும் இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ளன.
கோவிலில் இரண்டு பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. முதல் சன்னதியில் ஹொய்சாளேஸ்வரர் என்னும் திருநாமத்தில் இருக்கிறார். சிவலிங்க பாணத்தின் மேல் நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகாக உள்ளது. இச்சன்னதியின் முன் நவரங்க மண்டபம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ளது. விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சாள மன்னனின் மனைவி சாந்தளாதேவி. ராணியின் பெயரால் இவர் சாந்தளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டு பாணியில் சாந்தளேஸ்வரர் மீது தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரு சன்னதிக்கும் நேரே கிழக்கு வாசல்கள் உள்ளன. வடக்கு தெற்கு வாசல்களும் உண்டு. வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சியாக உள்ளது. சுவாமி தரிசனத்தின் போது தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்சவர் சிலைகள் உள்ளன. ஹொய்சாளேஸ்வரருக்கும் சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும் மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பாணியில் நாக்கை வெளியில் நீட்டாமல் உள்ளது. சிவாம்சத்துடன் நந்தி மகாகாளர் என்னும் துவாரபாலகர்கள் சன்னதிகளில் காவலாக நிற்கின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள் கையில் திரிசூலமும் டமருகம் என்னும் உடுக்கையும் ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். கைகளை லாவகமாக வளைத்தும் கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யார பாவனையில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்களின் சிலைகள் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார பாலகர்களின் பாதத்தில் காவல் வீரர்கள் நிற்கின்றனர்.
கோவில் பிரகார சுவர் முழுவதும் சித்திர வேலைப்பாடுகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. யானை சிங்கம் குதிரைவீரர்கள் பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும் அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஹொய்சாள மன்னர்கள் தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும் இவர்கள் கிருஷ்ணனை வணங்காமல் சமண சமயத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு இவர்கள் மீண்டும் தங்கள் வேதசமயத்தைப் பின்பற்ற தொடங்கினர். அதன்பின் சிறியதும் பெரியதுமாக சிவபெருமான் மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது இங்கு ஒரு சிவாலயம் கட்டி மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் ஹொய்சாளேஸ்வரர் என்று பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் நிறைவு பெற்றது. விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான கெட்டுமல்லா இக்கோயிலைக் கட்டினார்.
14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தான் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது இக்கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அன்னியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் தொல்லியல் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இருந்து 149 கிமீ தூரத்தில் இக்கோவில் உள்ளது.
மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியில் புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது. சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன. ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீஸ்வரர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களை இக்கோவில் பெற்றுள்ளது. மூலவர் புனுகீசுவரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் தாமரை மலரையும் தாங்கி கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தலவிருட்சம் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை வடக்கு உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது.
திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் ஐந்து நிலைக் கோபுரத்துடன் அமைந்துள்ளது. நேராக பலி பீடமும் உயந்த கொடிமரமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகப்பெருமான் உள்ளார். அருகில் சகஸ்ரலிங்கம் சந்நிதி உள்ளது. சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளார். தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது. உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன. வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான் லட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. தெற்கு நோக்கி நடராஜரின் சந்நிதி அமைந்துள்ளது. கருவறையின் வடக்கு மாடங்களில் துர்க்கை பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அதனருகில் சண்டேசர் சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர் சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார். உள்பிரகாரத்தின் தென்கிழக்கில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர் பிள்ளையார் உருவங்கள் உள்ளன. புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்து மூவரின் செப்புச் சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் அவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும் அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய நேசநாயனாரின் சந்நிதி உள்ளது. சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்த தொண்டினை செய்ததினால் இறைவனால் இவருக்கு முக்தி கொடுக்கப்பட்டது என்று பெரியபுராணம் கூறுகிறது.
முற்காலத்தில் இந்த இடம் வனப்பகுதியாக தனியூர் என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த இந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அதன் காரணமாக அந்த வனத்தின் காற்றில் புனுகு மணம் கமழ்ந்தது. அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்றிற்கு முற்பிறவி வாசனையின் காரணமாக இறை ஞானம் பெற்று தன் முற்பிறவி ஞாபகம் வந்தது. அந்த புனுகுப்பூனை முற்பிறவியில் இந்திரனாக இருந்தது. அப்போது நடந்த தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் புனுகுப்பூனையாக மாறும்படி சிவனாரால் சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சாபவிமோசனம் வேண்டினான். சிவபெருமான் விமோசனமாக இத்தலத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினார். புனுகுப்பூனையாக இங்கு பிறந்த இந்திரன் சிவன் அருளியபடி அந்த வனத்தில் உள்ள பவளமல்லி விருட்சத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டது. தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார். இதையறிந்து இறைவனின் கருணைத்திறன் கண்டு வியந்த பிரம்மா திருமால் உள்ளிட்ட தேவர்கள் அந்த இடத்துக்கு வந்து பவளமல்லி விருட்சத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனாரைப் போற்றி வழிபட்டனர். பிற்காலத்தில் இறைவனின் அற்புத லீலையை அறிந்த சோழ மன்னன் வனத்தில் இறைவனுக்கு அழகியதோர் ஆலயம் எழுப்பி இறைவனுக்கு புனுகீசர் என்று பெயரிட்டு வணங்கினான். நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்படிச் செய்தான். இதுகுறித்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய தனியூர்ப் புராணம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிவனை பிரம்மா வணங்கிய ஆலயம். ஊர் திருப்பட்டூர். புராண பெயர் திருப்பிடவூர். மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் 15 16 17 ஆகிய நாட்களில் காலையில் சூரியக் கதிர்கள் பிரம்மபுரீஸ்வரர் மீது பட்டு வணங்குகிறது. அம்பாள் பிரம்ம நாயகி மற்றும் பிரம்ம சம்பத்கவுரி. அம்பாள் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் இந்த தீர்த்தத்தை பிரம்மா உருவாக்கினார். தலவிருட்சம மகிழ மரம். பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஒருவரது தலை எழுத்தை மாற்றும். மேலும் ஒருவர் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தலையில் எழுதியிருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று கோவில் தல புராணம் சொல்கிறது. இத்தலம் ஒரு சிவனுடைய தலமாக இருந்தாலும் இங்குள்ள பிரம்மாவின் சந்நிதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலவருக்கு வடக்கு பக்கத்தில் தனிச் சன்னதியில் ஆறேகால் அடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள் பாலிக்கிறார் பிரம்மா. இந்தியாவிலேயே மிகப் பெரிய பிரம்மா இவர்தான்.
உலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்ற பிரம்மா சிவனைப் போலவே தனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தார். பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்க விரும்பிய சிவன் பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றைக் கொய்து விட்டார். பிரம்மாவின் படைப்புத் தொழிலையும் பறித்து விட்டார். பிரம்மா இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தன்னை வழிபடுமாறும் தகுந்த நேரம் வரும் போது சாப விமோசனம் தருவதாகவும் சிவபெருமான் பிரம்மாவிற்கு கூறினார். பிரம்மாவும் இந்த உலகில் அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்து இத்தலத்தில் சாபவிமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிற்கு படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை வழங்கினார். மேலும் இங்கு வந்து பிரம்மனை வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும் ஆற்றலை பிரம்மனுக்கு சிவன் வழங்கினார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. கோவிலின் வெளி பிரகாரத்தில் தெற்க்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பிரம்மன் சன்னதி உள்ளது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1. பாதாள ஈஸ்வரர் 2. சுத்த ரத்தினேஸ்வரர் 3. தாயுமானவர் 4. கயிலாசநாதர் 5. ஜம்புகேஸ்வரர் 6. சப்தரிஷிஸ்வரர் 7. அண்ணாமலையார் 8. பழமலைநாதர் 9. பிரம்ம புரீஸ்வரர் 10. காளத்திநாதர் 11. ஏகாம்பரரேஸ்வரர் 12. மண்டூகநாதர் ஆகிய 12 லிங்கங்கள் சிறிய சன்னிதிகளில் உள்ளார்கள்.
சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபடுவதற்காக மகாவிஷ்ணுவை சிவபெருமானை வழிபட்டார். இதனால் மகிழ்ந்த விஷ்ணு சிவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். அதன்படி மகாவிஷ்ணுவுக்கு இங்கு தனிக் கோவிலாக பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும்.
கோவில் சுமார் 5 ஏக்கர் நிரப்பலளவில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. ஜோதிடக்கலையின் தந்தையும் பாம்பு உடலைப் பெற்றவருமான பதஞ்சலி முனிவர் பல இடங்களில் பல முறை உடலுடன் வந்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பிராகாரத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சந்நிதி அருகே பாதாள லிங்கம் சந்நிதி உள்ளது. அம்பாள் கோவிலுக்கு அடுத்துள்ள வடக்குப் பிராகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது. எதிரே ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி உள்ளது. இந்த கைலாசநாதர் கோவிலைச் சுற்றி பல சிவலிங்க சந்நிதிகள் உள்ளன. கோவில் கருவறைக்கும் ராஜகோபுரத்திற்கும் இடையே சுமார் 300 மீட்டர் இடைவெளி உள்ளது. இடையில் 7 நிலைப்படிகள் உள்ளன. இந்த 7 வாசல்களையும் கடந்து இறைவன் கருவறையில் எப்போதும் இயற்கை வெளிச்சம் காணப்படுகிறது. எந்த விளக்கொளியும் இல்லாமலலேயே சிவலிங்கத்தைப் பளிச்சென்று தரிசிக்கலாம். இக்கோயிலிலுள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்று அழைக்கப்படுகிறார் வள்ளி தெய்வானையுடன் (கிரியா இச்சா சக்திகளாக) இக்கோயிலில் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்திருக்கோயிலில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன் பின்னர் படை திரட்டிச் சென்றார். இதனால் திருப்படையூர் எனப்பட்ட இத்திருக்கோயில் திருப்பிடவூர் என்று மருவி தற்போது திருப்பட்டூர் என அழைக்கப்படுகிறது. முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீசுவரர் என்ற பெயரில் உள்ளார். இக்கோவிலில் உள்ள நந்தியை தொட்டுப் பார்த்தால் உண்மையான காளையை தொட்டுப் பார்ப்பது போல் உணரலாம்.
சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்று அழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான். பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு திருப்பட்டூரில் அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் அரங்கேற்றம் செய்த ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு காலகட்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டியிருக்கிறார்கள். பின்னர் மாபெரும் வெற்றிகளைப் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை வணங்கியிருக்கின்றனர். கால பைரவர் பொதுவாக அனைத்து சிவன் கோவிலிலும் வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி இருப்பார். ஆனால் இக்கோவிலில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளது போல் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. திருநாவுக்கரசர் திருஅதிகை வீரட்டானம் தலத்திற்குரிய பதிகத்தில் இக்கோவிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுந்தரர் திருவாரூர் தலத்திற்குரிய பதிகத்தில் இத்தலத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் மேகநாதர் அம்பாள் லலிதாம்பிகை சவுந்திரநாயகி மேகலாம்பிகை. லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய வரத ஹஸ்த முத்திரையுடன் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. எல்லா சிவ ஸ்தலத்திலும் சிவனை வணங்கி பிறகு தான் அம்பிகை பரிவார மூர்த்திகளை வழிபடுவது மரபு. அரிதான சில சிவ ஸ்தலத்தில் மட்டுமே அம்பிகையை முதலில் வழிபாடு செய்வது சிறப்பானது அந்த அகரவரிசையில் இத்தல அம்பாளும் ஒருவர். சர்க்கரை பாவாடை என்று சொல்லும் நைவேத்தியம் இங்கு பிரசித்தமானது. சர்க்கரை பொங்கல் செய்து அம்மன் முன் வைத்து அதன் முன் நெய்யை குளம் போல் ஊற்றி வைப்பார்கள். அந்த நெய்யில் அம்பிகை உருவம் தெரியும். அது தான் சர்க்கரை பாவாடை நைவேத்தியம். லலிதாம்பிகை சகல ஆபரணங்களையும் அணிந்து பட்டத்தரசியாக ஜொலித்தாலும் காலில் கொலுசு அணியாமல் அலங்காரம் செய்து வந்தனர். 1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால் அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு பக்தை அம்பாளுக்கு தங்கக்கொலுசு செய்து அணிவித்தார். தற்போதும் பக்தர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.
லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்து ஹயக்ரீவர் சொல்ல லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியர் எழுதினார். ஹயக்கிரீவரிடம் அகத்தியர் லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர் பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் என்றார். அகத்தியர் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர் லலிதா நவரத்தின மாலை என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.
மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருவுருவில் அழகிய வடிவாக காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும். அம்மை சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். கார்கோடகன் வழிபட்டதால் இந்த ஊர் கார்கோடக நல்லூர் என்று அழைக்கப்பட்டது. தற்போது பெயர் மருவி கோடக நல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தனி சன்னதியில் காட்சித் தரும் ஆனந்த கெளரி அம்மை ஐந்து தலை நாகம் குடைபிடித்த நிலையில் காட்சித் தருகிறாள். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்ற பெயர்களும் உள்ளது. இக்கோவில் வினாயகருக்கு கல்யாண வினாயகர் என்று பெயர். இங்கு கல்யாண விநாயகரும் சுப்பிரமணியருமே துவார பாலகர்களாக காட்சித் தருகின்றார்கள். இங்கு நவக்கிரகங்களுள் அங்காரக பகவான் சிவனை வழிபட்டுள்ளார். இங்கு கொடி மரம் பலி பீடம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி இல்லை. இங்கு மாசி மாத சிவராத்திரி மார்கழி திருவாதிரை ஆகிய வருடாந்திர உற்சவங்களும் பிரதோஷம் மற்றும் செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. கோடகநல்லூர் சிவன் கோவில் திருநெல்வேலி நகரம் சேரன் மகாதேவி சாலை வழியில் சுமார் 16 கி. மீ தொலைவில் உள்ளது.
தல வரலாறு: அடர்ந்த காடாக இருந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்காக அந்த முனிவரின் மகன் காட்டிற்குள் சென்றிருந்தான். அப்போது அந்த நாட்டின் இளவரசனாக இருந்த பரிஷத் மகாராஜாவின் மகன் அந்த காட்டிற்குள் வேட்டையாட வந்திருந்தான். அவன் வேட்டையாடிக் கொண்டே முனிவர் அமர்ந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். நீண்ட நேரம் காட்டிற்குள் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் களைப்பும் சோர்வும் அடைந்த அந்த இளவரசனுக்கு தாகம் ஏற்பட்டிருந்து. அவன் குடிக்க நீர் வேண்டி முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதுகளில் கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இளவரசன் தன்னுடைய அழைப்பிற்கு செவி சாய்க்காமல் இருந்த முனிவரின் மீது ஆத்திரத்தில் அருகே கிடந்த இறந்த போன பாம்பின் சடலத்தை எடுத்து கழுத்தில் போட்டு விட்டு குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி அவர் எதுவும் அறிந்திருக்க வில்லை.
முனிவரின் மகன் தனது தந்தை யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய ஞான திருஷ்டியால் அங்கு நடந்தது என்ன என்பதை முனிவரின் மகன் அறிந்து கொண்டான். இதனால் அவனக்கு பெருங் கோபம் ஏற்பட தன் தந்தையும் குருவும் ஆனவரை அவமானப்படுத்திய இளவரசனின் தந்தை பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து போகட்டும் என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதனால் பாம்பு தீண்டி அவர் இறந்து விட நேரிடும் என்றும் மகாராஜாவிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட பரிஷத் மகாராஜா தனது உயிரை பாம்பிடம் இருந்து காத்துக் கொள்ள ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் ஒன்று கட்டி பாம்பு எளிதில் புக முடியாத இடத்தில் வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து பரிஷத் மகாராஜாவை சாபப்படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விட்டார். கார்கோடகன் பாம்பு தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து வசிக்கத் தொடங்கியது.
கார்கோடகன் என்னும் அந்த பாம்பு தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றினார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டியது. இந்த விஷம் அவரது உடலை உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறி வேறு ரூபத்திற்கு மாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவை அடையாளம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நள மகாராஜாவின் மாமனார் வீமராஜா தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.
நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது. பரிஷத் மகாராஜாவையும் நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோடகனின் முன் மகா விஷ்ணு தோன்றி தாமிரபரணிக்கரையில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வந்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறி அருள் புரிந்தார். அதன் படி கார்கோடகன் பாம்பு தாமிரபரணி கரைக்கு வந்து மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜைகள் செய்து வழிபட்டு தவம் இருந்தது. அதன் தவத்தை மெச்சிய சிவபெருமான் அங்கு தோன்றி காட்சியளித்து கார்கோடகனுக்கு முக்தி அளித்தார்.
கர்நாடகாவின் விஜயபுரா பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சக்கராங்கிதா லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கம் புராதாண பண்டைய லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தின் மேல் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வசிக்கிறாள்.
மகாராஷ்டிராவின் லோனாரில் உள்ள மோத்தா அனுமன் கோவிலில் ஒரு காந்த பாறையால் கட்டப்பட்ட படுத்த நிலையில் ஒரு பெரிய அனுமன் மூர்த்தி உள்ளார். 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் அனுமன் ஆரம்பத்தில் இருந்து தூக்க நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். கண்கள் திறந்த நிலையில் இருந்தாலும் இவர் தூக்கத்தில் இருப்பதாக கோவிலின் புராண வரலாற்றுப்படி சொல்லப்படுகிறது. 8 ஆம் நூற்றாண்டில் லோனார் பள்ளத்தை உருவாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து இந்த அனுமனின் சிலை செதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூர்த்தி 9.3 அடி உயரமும் அனுமனின் இடது கால் சனி தேவரின் சிறிய சிலை உள்ளது. இந்த சிலை பல ஆண்டுகளாக சிவப்பு நிற செந்தூரம் பூசப்பட்டிருந்தது. இப்போது செந்தூரம் அகற்றப்பட்டு அனுமனின் அசல் வடிவத்தை காணலாம்.
கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.
ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.
இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார்.
பேராணந்த ஒளிபொருந்திய உற்சவ முருகரைக் கண்ட கூட்டம் மொத்தமும் பரவசத்தோடு முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா எனக் கூறினார்கள். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம் வள்ளலாருக்கும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி நமக்கும் அருள் புரிவார்.
மகாராஷ்ரா மாநிலத்தில் சடாரா என்னுமிடத்தில் பழமையான பட்டீஸ்வர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிவலிங்கம் கும்பேஷ்வர் பிண்ட் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவ லிங்கத்தைப் பற்றி இந்து வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் உள்ளது. இக்கோவிலைப் பற்றி ஸ்ரீ க்ஷேத்ரா பட்டீஸ்வரர் தரிசனம் என்ற வரலாற்று நூல் உள்ளது. இந்த புராதாண சிவலிங்கத்தை சுற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் 8 குகைக் கோயில்கள் உள்ளது. இவற்றில் 1000 க்கும் மேற்பட்ட சிவ லிங்கங்கள் உள்ளது. இக்குகைக்குள் நிலத்திற்கு அடியிலும் சிவ லிங்கங்கள் உள்ளது. குகைக் கோயிலில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்ட பாம்பு மற்றும் சிறிய சிவலிங்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிக்கலான சிற்பங்களைக் கொண்ட மகா சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலிலுள்ள பல தெய்வங்கள் தனித்துவமாக அழகாக உள்ளது. இந்த தெய்வங்களின் பெயரை இன்னும் முழுமையாக அடையாளம் காணமுடியவில்லை.
அக்னீஸ்வர் மற்றும் இறைவனின் வாகனமான காளை இருவரும் சேர்ந்த உடலுடன் ஒரு சிற்பம் இருக்கிறது. இந்த சிற்பத்தில் முகம் பார்ப்பதற்கு ஒரே முகமாக தோன்றினாலும் நன்றாக பார்த்தால் அக்னீஸ்வரரின் முகமும் காளையின் முகமும் தெரியும். அக்னீஸ்வரரின் எழு கைகளுடனும் இரண்டு கால்களுடனும் காளையின் நான்க் கால்களுடனும் இந்ம சிற்பம் உள்ளது. இந்த உருவத்தை வலிமைமிக்க கடவுள் மனிதர்களுக்குள் நுழைந்தார் என்று ரிக் வேதம் 4.58.3 விவரிக்கிறது. இந்த குகைகளில் நவகிரகத்தின் சிற்பங்களும் உள்ளது. நான்கு முகம் கொண்ட சிவலிங்கம் பல சிற்பங்கள் மத்தியில் முற்றத்தில் உள்ளன. பிரதான அறையின் நுழைவாயிலில் கதவின் இருபுறமும் ஆண் வடிவிலான இறை உருவங்கள் திரிசூலங்களையும் பெண் வடிவிலான இறை உருவங்கள் கங்கா மற்றும் யமுனா தண்ணீர் பானைகளையும் வைத்திருக்கின்றார்கள். சிறிய கட்டைவிரல் ஆணி அளவிலான செதுக்கப்பட்ட சிற்பங்கள் முதல் 2 மீ நீளம் வரையிலான சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வெளியே திரிமூர்த்தியுடன் ஒரு சிவலிங்கமும் கல்லால் செய்யப்பட்ட இரண்டு பெரிய விளக்குத் தூண்களும் உள்ளது. இங்கு சத்குரு கோவிந்தானந்தசாமி மகாராஜ் மட் என்று அழைக்கப்படும் ஒரு மடம் உள்ளது. பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் ஒரு சில சாதுக்களால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றி உள்ள மலையில் சுமார் 52 வகையான மருத்துவ தாவரங்கள் உள்ளன.