கார்க்கோடக நல்லூர்

மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருவுருவில் அழகிய வடிவாக காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும். அம்மை சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். கார்கோடகன் வழிபட்டதால் இந்த ஊர் கார்கோடக நல்லூர் என்று அழைக்கப்பட்டது. தற்போது பெயர் மருவி கோடக நல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தனி சன்னதியில் காட்சித் தரும் ஆனந்த கெளரி அம்மை ஐந்து தலை நாகம் குடைபிடித்த நிலையில் காட்சித் தருகிறாள். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்ற பெயர்களும் உள்ளது. இக்கோவில் வினாயகருக்கு கல்யாண வினாயகர் என்று பெயர். இங்கு கல்யாண விநாயகரும் சுப்பிரமணியருமே துவார பாலகர்களாக காட்சித் தருகின்றார்கள். இங்கு நவக்கிரகங்களுள் அங்காரக பகவான் சிவனை வழிபட்டுள்ளார். இங்கு கொடி மரம் பலி பீடம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி இல்லை. இங்கு மாசி மாத சிவராத்திரி மார்கழி திருவாதிரை ஆகிய வருடாந்திர உற்சவங்களும் பிரதோஷம் மற்றும் செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. கோடகநல்லூர் சிவன் கோவில் திருநெல்வேலி நகரம் சேரன் மகாதேவி சாலை வழியில் சுமார் 16 கி. மீ தொலைவில் உள்ளது.

தல வரலாறு: அடர்ந்த காடாக இருந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்காக அந்த முனிவரின் மகன் காட்டிற்குள் சென்றிருந்தான். அப்போது அந்த நாட்டின் இளவரசனாக இருந்த பரிஷத் மகாராஜாவின் மகன் அந்த காட்டிற்குள் வேட்டையாட வந்திருந்தான். அவன் வேட்டையாடிக் கொண்டே முனிவர் அமர்ந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். நீண்ட நேரம் காட்டிற்குள் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் களைப்பும் சோர்வும் அடைந்த அந்த இளவரசனுக்கு தாகம் ஏற்பட்டிருந்து. அவன் குடிக்க நீர் வேண்டி முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதுகளில் கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இளவரசன் தன்னுடைய அழைப்பிற்கு செவி சாய்க்காமல் இருந்த முனிவரின் மீது ஆத்திரத்தில் அருகே கிடந்த இறந்த போன பாம்பின் சடலத்தை எடுத்து கழுத்தில் போட்டு விட்டு குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி அவர் எதுவும் அறிந்திருக்க வில்லை.

முனிவரின் மகன் தனது தந்தை யாகம் செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய ஞான திருஷ்டியால் அங்கு நடந்தது என்ன என்பதை முனிவரின் மகன் அறிந்து கொண்டான். இதனால் அவனக்கு பெருங் கோபம் ஏற்பட தன் தந்தையும் குருவும் ஆனவரை அவமானப்படுத்திய இளவரசனின் தந்தை பரிஷத் மகாராஜா பாம்பு தீண்டி இறந்து போகட்டும் என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதனால் பாம்பு தீண்டி அவர் இறந்து விட நேரிடும் என்றும் மகாராஜாவிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட பரிஷத் மகாராஜா தனது உயிரை பாம்பிடம் இருந்து காத்துக் கொள்ள ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் ஒன்று கட்டி பாம்பு எளிதில் புக முடியாத இடத்தில் வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து பரிஷத் மகாராஜாவை சாபப்படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விட்டார். கார்கோடகன் பாம்பு தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து வசிக்கத் தொடங்கியது.

கார்கோடகன் என்னும் அந்த பாம்பு தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றினார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டியது. இந்த விஷம் அவரது உடலை உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறி வேறு ரூபத்திற்கு மாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவை அடையாளம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நள மகாராஜாவின் மாமனார் வீமராஜா தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.

நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது. பரிஷத் மகாராஜாவையும் நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோடகனின் முன் மகா விஷ்ணு தோன்றி தாமிரபரணிக்கரையில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வந்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறி அருள் புரிந்தார். அதன் படி கார்கோடகன் பாம்பு தாமிரபரணி கரைக்கு வந்து மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜைகள் செய்து வழிபட்டு தவம் இருந்தது. அதன் தவத்தை மெச்சிய சிவபெருமான் அங்கு தோன்றி காட்சியளித்து கார்கோடகனுக்கு முக்தி அளித்தார்.

சக்கராங்கிதா லிங்கம்

கர்நாடகாவின் விஜயபுரா பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சக்கராங்கிதா லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கம் புராதாண பண்டைய லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தின் மேல் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வசிக்கிறாள்.

தூக்கத்தில் அருள் கொடுக்கும் அனுமன்

மகாராஷ்டிராவின் லோனாரில் உள்ள மோத்தா அனுமன் கோவிலில் ஒரு காந்த பாறையால் கட்டப்பட்ட படுத்த நிலையில் ஒரு பெரிய அனுமன் மூர்த்தி உள்ளார். 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் அனுமன் ஆரம்பத்தில் இருந்து தூக்க நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். கண்கள் திறந்த நிலையில் இருந்தாலும் இவர் தூக்கத்தில் இருப்பதாக கோவிலின் புராண வரலாற்றுப்படி சொல்லப்படுகிறது. 8 ஆம் நூற்றாண்டில் லோனார் பள்ளத்தை உருவாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து இந்த அனுமனின் சிலை செதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூர்த்தி 9.3 அடி உயரமும் அனுமனின் இடது கால் சனி தேவரின் சிறிய சிலை உள்ளது. இந்த சிலை பல ஆண்டுகளாக சிவப்பு நிற செந்தூரம் பூசப்பட்டிருந்தது. இப்போது செந்தூரம் அகற்றப்பட்டு அனுமனின் அசல் வடிவத்தை காணலாம்.

கந்தகோட்டத்து உற்சவர் முருகன்

கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.

ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.

இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார்.

பேராணந்த ஒளிபொருந்திய உற்சவ முருகரைக் கண்ட கூட்டம் மொத்தமும் பரவசத்தோடு முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா எனக் கூறினார்கள். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம் வள்ளலாருக்கும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி நமக்கும் அருள் புரிவார்.

கும்பேஷ்வர்

மகாராஷ்ரா மாநிலத்தில் சடாரா என்னுமிடத்தில் பழமையான பட்டீஸ்வர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிவலிங்கம் கும்பேஷ்வர் பிண்ட் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவ லிங்கத்தைப் பற்றி இந்து வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் உள்ளது. இக்கோவிலைப் பற்றி ஸ்ரீ க்ஷேத்ரா பட்டீஸ்வரர் தரிசனம் என்ற வரலாற்று நூல் உள்ளது. இந்த புராதாண சிவலிங்கத்தை சுற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் 8 குகைக் கோயில்கள் உள்ளது. இவற்றில் 1000 க்கும் மேற்பட்ட சிவ லிங்கங்கள் உள்ளது. இக்குகைக்குள் நிலத்திற்கு அடியிலும் சிவ லிங்கங்கள் உள்ளது. குகைக் கோயிலில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்ட பாம்பு மற்றும் சிறிய சிவலிங்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிக்கலான சிற்பங்களைக் கொண்ட மகா சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலிலுள்ள பல தெய்வங்கள் தனித்துவமாக அழகாக உள்ளது. இந்த தெய்வங்களின் பெயரை இன்னும் முழுமையாக அடையாளம் காணமுடியவில்லை.

அக்னீஸ்வர் மற்றும் இறைவனின் வாகனமான காளை இருவரும் சேர்ந்த உடலுடன் ஒரு சிற்பம் இருக்கிறது. இந்த சிற்பத்தில் முகம் பார்ப்பதற்கு ஒரே முகமாக தோன்றினாலும் நன்றாக பார்த்தால் அக்னீஸ்வரரின் முகமும் காளையின் முகமும் தெரியும். அக்னீஸ்வரரின் எழு கைகளுடனும் இரண்டு கால்களுடனும் காளையின் நான்க் கால்களுடனும் இந்ம சிற்பம் உள்ளது. இந்த உருவத்தை வலிமைமிக்க கடவுள் மனிதர்களுக்குள் நுழைந்தார் என்று ரிக் வேதம் 4.58.3 விவரிக்கிறது. இந்த குகைகளில் நவகிரகத்தின் சிற்பங்களும் உள்ளது. நான்கு முகம் கொண்ட சிவலிங்கம் பல சிற்பங்கள் மத்தியில் முற்றத்தில் உள்ளன. பிரதான அறையின் நுழைவாயிலில் கதவின் இருபுறமும் ஆண் வடிவிலான இறை உருவங்கள் திரிசூலங்களையும் பெண் வடிவிலான இறை உருவங்கள் கங்கா மற்றும் யமுனா தண்ணீர் பானைகளையும் வைத்திருக்கின்றார்கள். சிறிய கட்டைவிரல் ஆணி அளவிலான செதுக்கப்பட்ட சிற்பங்கள் முதல் 2 மீ நீளம் வரையிலான சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வெளியே திரிமூர்த்தியுடன் ஒரு சிவலிங்கமும் கல்லால் செய்யப்பட்ட இரண்டு பெரிய விளக்குத் தூண்களும் உள்ளது. இங்கு சத்குரு கோவிந்தானந்தசாமி மகாராஜ் மட் என்று அழைக்கப்படும் ஒரு மடம் உள்ளது. பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் ஒரு சில சாதுக்களால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றி உள்ள மலையில் சுமார் 52 வகையான மருத்துவ தாவரங்கள் உள்ளன.

தபகேஸ்வர் குகைக்கோவில்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள இக்கோவில் மஹாதேவ் கோவில் என்றும் தபகேஷ்வர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான சிவலிங்கம் குகைக் கூரையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இயற்கையாக அமைந்த சிவலிங்கமும் உள்ளது. இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின் மீது நீர் தொடர்ச்சியாக சொட்டிக் கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. தபக் எனும் சொல்லுக்கு இந்தியில் சொட்டுவது என்று பொருளாகும். இந்த கோயிலைச் சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகள் உள்ளது. இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளது.

மகாபாரத புராதாண கதையின் படி துரோணாச்சாரியின் மனைவி கல்யாணிக்கு இந்த குகையில் அஸ்வத்தாமன் பிறந்தார். துரோணாச்சாரியா மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் தன் மகன் அஸ்வத்தாமாவுக்கு பால் வழங்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் குழந்தைக்கு பாலை பாய்ச்சி உள்ளார். பாண்டவர்கள் இந்த சிவபெருமானை வழிபட்டு உள்ளார்கள். துரோணாச்சார்யார் அவரது மனைவியான கல்யாணி மற்றும் மகன் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு இக்கோவிலில் சிற்பம் உள்ளது.

பர்வதமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிவன் தலம் பர்வதமலை. இம்மலை மிகவும் தொன்மையானது. திரிசூலகிரி நவிரமலை சஞ்சீவிகிரி மல்லிகார்ஜுன மலை கந்தமலை தென் கயிலாயம் என்று வேறு பல பெயர்களும் உள்ளது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப் பற்றியும் அப்பகுதி மக்களைப் பற்றியும் குறிப்பிடும் ஒரு சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப் பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நூல் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப் பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர் பிரமராம்பிகை கோவில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

இராவணனுக்கு எதிரான போரில் பிரம்மாஸ்திரத்தால் மயங்கிச் சரிந்த லட்சுமணனை காப்பாற்ற இமயத்திலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த போது அதிலிருந்து வீழ்ந்த சிறு பகுதியே இந்த பர்வதமலை. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்ற காரணத்தினால் இந்த மலைக்கு சஞ்சீவி மலை என்ற பெயரும் உண்டானது. ஒருமுறை அம்பிகை சிவனிடம் பூவுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆகிய நான்கையும் பெறுவதற்கு வழிபட வேண்டிய தலம் எது என்று கேட்டாள். சிவபெருமான் அம்பிகை கேட்ட கேள்விக்கு பர்வத மலையை அடையாளம் காட்டினார். உலக மக்களின் நலனுக்காகத் அம்பாள் தவமியற்றிய இந்த மலை அன்னை பார்வதியின் திருப்பெயரை கொண்டு பர்வத மலை என்று போற்றப்படுகிறது. அன்னை பார்வதி தவமியற்றியதன் காரணமாக மலைகள் அனைத்திலும் உயர்வான மலை என்ற பொருளும் பர்வத மலைக்கு உண்டு. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை மலைகளின் அரசன் என்று பொருள்.

மூலவர் மல்லிகார்ஜுனர் என்ற காரியாண்டிக் கடவுள் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். பக்தர்களே இறைவனை தொட்டு அபிஷேகங்கள் செய்து பூஜைகள் செய்யலாம். இறைவனை இப்போதும் பௌர்ணமி அன்று இந்திரன் வந்து விழிபட்டு செல்கிறான் என்கிறது கோவில் புராண வரலாறு. அம்பாள் பிரம்மராம்பிகை பர்வத ராணி என்ற பெயரில் மூலவருக்கு இடது புறம் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இரவு அம்பாள் கண்ணத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்பாள் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் கோவில் கட்டிட அமைப்புகள் உள்ளது. சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் விநாயகப் பெருமானும் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியரும் வீரபத்திரர் தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றனர். வீரபத்திரர் துர்க்கையம்மன் ரேணுகாதேவி சப்தகன்னியர் உள்ளனர். தீர்த்தம் பாதாள சுனைத் தீர்த்தம். இத்திருக்கோவிலின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி அருள்புரிகிறாள். அருகில் சப்த முனிகள் உள்ளனர். மலையில் உள்ள தீர்த்த சுனையிலிருந்து நீர் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கிறது.

சிவபெருமான் கைலாயத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போது அவர் தனது முதல் காலடியை பர்வதமலையில் வைத்தார். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்தார். பர்வத மலையில் அண்ணாமலையாரின் திருவடி உள்ளது. மலை உச்சியில் ராட்சச திருசூலம் உள்ளது. இக்கோவிலுக்கு கதவுகள் இல்லை. பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர். பச்சை அம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிமீ தூரம் நடந்து மலை அடிவாரத்திற்கு செல்லலாம். அங்கிருந்து சுமார் 1300 படிக்கட்டுகள் உள்ளது. அதனை தாண்டினால் அதன் பிறகு மலை ஏறுவது போல் ஒற்றை அடிப்பாதையில் கரடுமுரடான பாறைகள் எனச் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு மலையேற வேண்டும். விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலை ஏறும் வழியில் உரல் வடிவில் ஒரு கற்பாறை அதில் ஒரு குழி உள்ளது. அதனால் அந்த இடத்திற்கு உரல் பாறை என்று பெயர். உரல் பாறையைக் கடந்து சிறிது தூரம் மேல் நோக்கிச் சென்றால் பாழடைந்த மண்டபம் உள்ளது. இதற்கு பாதிமண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தை அடைந்தால் மலை உச்சியை அடைவதற்கு பாதி தூரம் வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். அதனால் பாதி மண்டபம் என்று பெயர் வந்தது. அந்த மண்டபம் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது. சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும் விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

மலைக்குத் தென்திசையில் உள்ள கடலாடி என்னும் ஊரிலிருந்து ஒற்றையடிப் பாதை வழியில் வந்தாலும் இந்தப் பாதி மண்டபத்தை அடையலாம். இங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும் வழி செங்குத்தானது. இப்பகுதியை குமரி நெட்டு என்பர். மேலே சென்றால் சுழல்பாறை என்னும் பகுதியை அடையலாம். வட்ட வடிவமாக அமைந்துள்ள இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையில் வளைந்து ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். இதனைக் கடந்தால் ஏணிப்படி வழி வரும். இரண்டு மலைகளுக்கு இடையில் கனமான தண்டவாளங்கள் உள்ளது. இந்தப் பாதையைக் கடந்து சென்றால் ஒரு கல்மண்டபத்தினை அடையலாம். இதற்கு தீட்டுக்காரி மண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் பாதாளச்சுனை என்ற சிங்கக் கிணறு சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகம் உள்ளதென்றும் அதை மனிதர்கள் காண வழியில்லை என்றும் புராண வரலாறுகள் உள்ளது. சித்தர்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாக வரலாறு உள்ளது. இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது. இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த பல குகைகள் உள்ளன. அந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த குகைக்குள் மக்கள் செல்லவே முடியாத படி பாதைகள் உள்ளது. அதைக் கடந்து மேல்நோக்கிப் பயணித் தால் கடப்பாறை என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதி மிகவும் செங்குத்தானது. இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றைப் பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். மேலே ஓரளவு சம வெளிப் பிரதேசத்தை அடையலாம். மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் சமயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டுகிறது.

பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்றும் பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் ஆராதனை செய்தால் கீழே தரை மட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறது தல புராணம். அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை என்று சொல்வது போல் பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என்ற வாசகம் இருக்கிறது. இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் ஞானம் கைகூடும். திரிகால ஞானயோகம் கிட்டும் என்பது கோவில் புராண வரலாறு. திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம். காஞ்சி மகா பெரியவர் கடந்த 1944ம் ஆண்டு மார்கழி முதல் நாள் கிரிவலம் செய்தார். பர்வதமலை முழுவதுமே தனக்கு ஈசனாக தெரிந்தபடியால் அடியவர்களிடமும் பர்வதமலை சாட்சாத் அந்த பரமேஸ்வரனே என்று கூறி மலை மேல் ஏறினால் அவரை மிதிக்க வேண்டி வருமே என்று பர்வதமலையை கிரிவலம் செய்தார்.

கபிலர் மலை

மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார். மலையில் உள்ள தென்றல் காற்று முருகன் மீது மூலஸ்தான குகைக் துவாரத்தில் இருந்து எப்போதும் வீசிக் கொண்டு மூலஸ்தானத்தில் உள்ள தீபத்தை அசைத்துக் கொண்டே இருக்கும். அதனால் தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என சிறப்பித்து பாடல் பாடப் பெற்றுள்ளார். கபிலர்மலை மேல் புராதன புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கு செல்ல மொத்தம் 120 படிகள் உள்ளது. இத்திருக்கோயிலில் அரசமரத்து பிள்ளையார் இடும்பன் சன்னதி சித்தி விநாயகர் காளஹஸ்தி ஈஸ்வரன் சன்னதி கமலாம்பிகா அம்மன் சன்னதி உள்ளது. தலவிருட்சம் நாவல்மரம். இம்மலை இயற்கையான செந்நிறம் கொண்டதாக உள்ளது.

கபிலர்மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்திருக்கும் பாறையில் தான் முக்காலத்தில் கபிலமகரிஷி என்ற முனிவர் அமர்ந்து முருகப் பெருமானை நினைத்து பெரும் வேள்வி செய்து தவம் செய்து வந்தார். இன்றும் அந்தப் பாறையில் கபில மகரிஷி தவம் செய்த இடம் தனித் தன்மையாக தெரிகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு கபில மகரிஷிக்கு தினசரி பூஜை நடந்து வருகிறது. திருவிழாக் காலங்களில் கபில மகரிஷி தவம் செய்த இடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கபில மகரிஷி இம்மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தியாக விளக்கிய முருகப்பெருமானை வணங்கி வந்தார். அதன்பிறகு, அவரால் முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கி வந்ததாக கூறப்படுகிறது. கபில மகரிஷி இங்கு தங்கி தவம் இருந்து முருகனை வழிபட்டு வந்ததையொட்டியே இம்லைக்கு அவர் பெயரால் கபிலர் மலை என சிறப்பு பெயர் பெற்று புகழுடன் விளங்குகிறது. இங்கு மலையுச்சியில் கபில தீர்த்தமும் உண்டு. இச்செய்திகள் வடமொழி தல புராணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கபிலர்மலை குறித்து சங்க நூல்கள் சிலவற்றில் குறிப்புகள் உள்ளன. அதன்படி கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோவாழியாதன் எனும் சேர மன்னனிடம் நூறு ஆயிரம் பொன் மற்றும் நாடும் பெற்று இம்மலையில் தங்கி பெரும் வேள்வி தவம் செய்து வாழ்ந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அதற்கு ஆதாரமாக ஆறுநட்டான் மலையில் உள்ள கடுங்கோவாழியாதன் அமைத்த கல்வெட்டு மூலம் அறியலாம்.

செவி சாய்த்த விநாயகர்

திருச்சி அருகில் இருக்கும் அன்பில் என்ற ஊரில் இருக்கும் சத்தீயவாகீஸ்வரரை தரிசிக்க திருஞானசம்பந்தர் சென்றார். அவரை சோதிக்க எண்ணிய இறைவன் கோவிலுக்கு வரும் வழியில் இருக்கும் காவிரி ஆற்றில் வெள்ளத்தை வரவழைத்தார். கோவிலுக்குள் செல்ல இயலாத திருஞானசம்பந்தர் ஆற்றின் கரையில் இருந்தே இறைவனை பாட ஆரம்பித்தார், அப்போது கோவில் இருக்கும் வினாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து திருஞானசம்பந்தரின் பாடலை கேட்டு ரசித்தார் வினாயகர்.

திருமயம் குடைவரைக்கோவில்

திருமயம் என்ற சொல் திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. சத்ய சேத்திரம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து திருமெய்யம் என்ற பெயர் உருவானது. செங்குத்தான தெற்கு நோக்கிய மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு குடைவரைக் கோவில்களாக சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி உள்ளார்கள். இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. சிவன் மற்றும் பெருமாள் இணைந்த இக்கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது. சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் கோவிலிலுக்குள் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. சிவன் கோவிலையோ பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் இரண்டு மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.

சிவன் கோவிலில் மூலவர் சத்தியகிரீஸ்வரர். கிழக்கு நோக்கிய கருவறையில் சத்தியகிரீஸ்வரரின் லிங்கத் திருமேனி தாய்ப்பாறையில் உள்ளார். லிங்கத்தின் சிறிய கோமுகத்தை சீறும் சிங்கம் தாங்குகிறது. அம்பாள் வேணுவனேஸ்வரி கிழக்குப் பார்த்த தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் கருவறையை ஒட்டி அமைந்துள்ள அர்த்தமண்டபத்தை இரண்டு துவாரபாலகர்கள் காவல்புரிகிறார்கள். தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருவம் எடுத்து இங்கு ஒளிந்து கொண்டு இறைவனை வணங்கி வந்தாள். அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக (மூங்கில் காடாக) இருந்தது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். தீர்த்தம் சத்யபுஷ்கரணி. தலமரம் மூங்கில். சத்தியகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 13ஆம் நூற்றாண்டில் பிற்காலத்து பாண்டியர்களால் கட்டப்பட்டது. கோபுரத்தையொட்டி இடதுபுறம் விநாயகர் சன்னதியைக் காணலாம். முன்மண்டபத்தின் கிழக்கு நோக்கிய சன்னதியில் பானு உமாபதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். விநாயகர் துர்க்கை கஜலக்ஷ்மி முருகன் ராஜராஜேஸ்வரி அம்மன் பைரவர் நவக்கிரகங்கள் சூரியன் சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி திருமேனி உள்ளது. சிவபெருமான் நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியிள்ளார். மண்டபத்தின் சுவர்களிலும் மேல் விதானத்திலும் பழங்கால மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. கிழக்குச் சுவரில் புதுமையான ஆளுயர லிங்கோத்பவர் புடைப்புச் சிற்பமாக உள்ளார். சத்ய மகரிஷி இறைவனுக்கு பூஜை செய்துள்ளார். சிவன் கோவிலுக்குக் கிழக்குப் பக்கம் சத்தியமூர்த்தி வைணவக் கோவில் அமைந்துள்ளது.

திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்தியகிரீஸ்வரரையும் திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்தியகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்கும் திருமெய்யர் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.

திருமயம் என்ற திருமெய்யம் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில் ஆகும். இத்தலத்தில் சத்திய மூர்த்தி திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். தாயார் உஜ்ஜிவனதாயார் (உய்ய வந்த நாச்சியார்). தாயார் வீதி உலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும். தலமரம் ஆலமரம். தீர்த்தம் சத்திய புஷ்கரணி குளம் எண்கோணமாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்தியமூர்த்தி என்ற திருப்பெயர் வந்தது. இக்குடைவரைக் கோவிலின் இன்னொரு மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். யோக சயன மூர்த்தி மலையோடு சேர்த்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். யோக சயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டமாய் கல்லிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது. கோவிலை அடுத்து சத்தியமூர்த்தி விஸ்வக்சேனர் இராமர் ஆகியோரின் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர்கள் இருவரும் பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும் மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்து விடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை பெருமாள் மெச்சிப் புகழ்ந்தார்.

சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன், அழகிய மெய்யன் 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவர் ஆகையால் திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது. திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துள்ளார். சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி அளித்துள்ளார்.