குச்சனூர் சனீஸ்வர பகவான்

சனிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலின் தலமரம் விடத்தை மரம். தலமலர் கருங்குவளை மலர் தல இலை வன்னி இலை. வாகனம் காகம். தானியம் எள். திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான் முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும் நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை தலமரம் உள்ளது. நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் இக்கோவிலில் நடைபெறுகிறது. தினந்தோறும் பூஜை முடிந்த பின் பிரசாதம் முதலில் காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு பிராதத்தை வைப்பார்கள். பிராதத்தை காகம் உண்டபின் தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

குச்சனூர் பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினந்தோறும் இறைவனிடம் வேண்டி வந்தான். ஒரு நாள் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான். இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளாகி மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

சந்திரவதனன் வழிபாட்டில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவரவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழறை நாழிகை, ஏழறை நாட்கள், ஏழறை மாதங்கள், ஏழறை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடித்திருக்கிறார். அவரின் பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன என்றார். சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழறை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழறை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழறை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்த ஏழறை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று சொல்லி மறைந்தார். சந்திரவதனனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சுயம்புவாகத் தோன்றினார். சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் சனி பகவானால் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த செண்பக நல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன் பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது. தினகரன் மான்மியம் என்கிற பழமையான நூலில் இந்த தலத்திற்கான புராண வரலாறு உள்ளது. தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

நிறம் மாறும் அசலேஷ்வர் மஹாதேவ்

சிவ பெருமான் லிங்கவடிவில் இருக்கிறார். இவரது பெயர் அசலேஷ்வர் மஹாதேவ். லிங்கமானது காலை நண்பகல் இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது. சிவலிங்கம் ஒரு நாளைக்கு மூன்று வேலை என காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும் உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப்பூ நிறத்திலும் பொழுது சாய்கையில் சற்று நிறம் மங்கிய நிலையிலும் இந்த லிங்கம் தரிசனம் தருகிறது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலில் கலர் மாறுவது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி பாதாளத்தில் புதைந்து உள்ளது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை இது உணர்த்துகிற ஆலயமாக விளங்குகிறது. அச்சலேஷ்வர் என்பது சமஸ்கிருத வார்த்தை அச்சால் என்ற சமஸ்கிருத வார்த்தையை பிரதிபலிக்கும் ஒரு வார்த்தையாகும். இதற்கு நகரவோ அசையவோ முடியாது என்று பொருள். சிவபெருமானின் அனைத்து கோவில்களிலும் சிவபெருமானை முழு லிங்கமகாகவோ அல்லது சிலை வடிவாகவோ வணங்கப்படுவார். இக்கோவிலில் இருக்கும் லிங்கம் சிவபெருமானின் கட்டைவிரலாக பாவித்து வணங்கப்படுகிறார். இந்த கோயில் 9 ஆம் நூற்றாண்டில் பர்மர் வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர் 1452 ல் மஹாராண கும்பம் என்பவர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பி அதற்கு அச்சல்கர் என்று பெயரிட்டார்.

இங்குள்ள நந்தி சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஐந்து வித்தியாச உலோகங்களின் கலவையால் 4 டன் எடையில் செய்யப்பட்டது. இக்கோவில் வரலாற்றின்படி இங்கிருக்கும் நந்தி முஸ்லீம் படையெடுப்பாளர்களின் படையெடுப்பிலிருந்து பலமுறை கோயிலைப் பாதுகாக்திருக்கிறது. கோவிலை கொள்ளையடிக்க வரும் போது ஒவ்வொரு முறையும் மறைந்திருக்கும் தேனீக்கள் படைகளை கொட்டி கோயிலை பல முறை காப்பாற்றியுள்ளன. இக்கோவில் இருக்கும் இடத்தில் ராஜபுத்திரர்களும் ரிஷிகளும் முனிவர் பெருமக்களும் இங்கு தவம் செய்திருக்கிறார்கள். வசிஷ்ட மகரிஷி தனது மனைவி அருந்ததி மற்றும் தனது காமதேனுப் பசுவுடன் இங்கு தங்கியிருந்து தவம்புரிந்து வேள்விகள் இயற்றியிருக்கிறார். அற்புதா என்ற பெயர் கொண்ட நாகம் ஒன்று சிவபெருமானின் வாகனமான நந்திதேவரின் உயிரைக் காப்பாற்றியது. இச்சம்பவம் நடைபெற்ற இடமான இந்த மலை அற்புதா காடுகள் என்ற பொருளில் அற்புதாரண்யம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தப் பெயர் திரிந்து அபு பர்வதம் என்றும் பின்னர் மவுன்ட் அபு என்றும் மாறிப்போனது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டமான தோல்பூர் ஆக்ராவில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும் ஜெய்பூரில் இருந்து 276 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 60 கிலோ மீட்டர் தூரம் மலைப் பாதை வழியாக மவுன்ட் அபு கடந்து பயணித்தால் அசலேஷ்வர் மஹாதேவ் கோவிலை அடையலாம்.

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி

காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். காசியில் இருக்கும் அதே கால பைரவர் சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்திலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள் காசு இல்லாவிட்டால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் அருளியிருக்கிறார். மூலவர் விடங்கீஸ்வரர். அம்பாள் விசாலாட்சியம்மன். தலவிருட்சம் இலந்தை மரம். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் இக்கோவில் உள்ளது. விடங்கி முனிவர் தவம் இருந்து கட்டிய கோவில் ஆகையால் விடங்கீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இங்குள்ள சுப்ரமண்யர் சிலையில் முருகனின் வாகனமான மயிலின் தலை வழக்கத்துக்கு மாறாக இடப்பக்கம் நோக்கி இருக்கிறது. சூரசம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம் இது

இந்து வனம் அரச மரங்களும் இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லை என்று தவித்த முனிவர் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற விஸ்வநாதர் முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். கோபத்தின் உச்சிக்கே போன வடுக பைரவர் அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன். காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர் மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படும் முன் பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி ஆலயம் எழுப்பினார். எட்டு பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் கொன்ற இடம் என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் குண்டடம் என்று மருவிவிட்டது.

பஞ்ச பாண்டவர்கள் இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது திரெளபதி மேல் அரக்கன் ஒருவன் ஆசை கொண்டதால் கோபப்பட்ட பீமன் அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான். இதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்கள் ரத்தக்காடு சாம்பல் காடு என்று உள்ளது. காலங்கள் கடந்தன. விடங்கி முனிவர் எழுப்பிய கோவில் வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து விட்டது.

பிற்கால மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய் கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர சோழ பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும். கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள் இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு. அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார். அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். ஐயா எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள் என்றார். அந்த வியாபாரி இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு என்று பொய் சொன்னார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர். மறுநாள் வியாபாரி மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு ஏதோ ஒரு சந்தேகம் வந்து பாண்டிய மன்னன் மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள் சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

வியாபாரி கதறினான் பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார். அதையெல்லாம் நம்பும் நிலையில் மன்னன் இல்லை. பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள் என்றான் கோபத்துடன். கதறினான் வியாபாரி. கொங்கு வடுகநாதா என்னை மன்னித்துவிடு என்று புலம்பி அழுதான். நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான். என்னுடைய பெண் பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன் நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன் என்றான் மன்னன். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள் தந்தையே என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும் தந்தையை நோக்கி நடந்து வந்தான். பரவசமடைந்த பாண்டிய மன்னன் என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று துதித்தான். வடுக பைரவர் நானும் விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன் என்று சொல்லி மறைந்தார் பைரவர்.

கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது பயறு பழையபடி மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு குண்டடம் சென்றான் மன்னன். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும் விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.

வடக்குநாதர் கோவில்

கேரள மாநிலம் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் வடக்குநாதர் கோவில் உள்ளது. மூலவர் வடக்குநாதர். மூலவர் முழுவதும் நெய்யினால் ஆனவர். மூலவர் வடக்குநாதர் 12 அடி உயரமும் 25 அடி அகலமுடைய நெய்லிங்கமாக எப்போதும் உருகாமல் பாறை போல் இறுகி உள்ளார். எப்போதாவது நெய் உருகி வெளிப்பட்டால் உடனே காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். பன்னீர் சந்தன அபிஷேகம் செய்தாலும் லிங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கோடையின் வெப்பமோ ஆரத்தி வெப்பமோ இந்த நெய்யை உருகி விழச்செய்யவில்லை. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய்க்கு வாசனை கிடையாது. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. கோவில் நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில் வடக்குநாதர் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார்.

கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர் சங்கரநாராயணர் கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஆலயத்தில் சிவனின் பூதகணமான சிம்மோதரனுக்கும் கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் சங்கு சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து சிவபெருமான் கோவில்களிலும் நந்தி மூலவரை நோக்கியபடி அமர்ந்திருப்பார். திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி சிவனுக்கு எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் இருக்கிறார். பிரதோ‌ஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளுகிறார். அமிர்தம் கிடைக்க தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். கடைந்து முடித்ததும் அந்த பாம்பு கோவில் கருவறை முன்பிருக்கும் வாசலில் மணியாக வந்து அமர்ந்துவிட்டது. இதனால் பிரதோ‌ஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார். வேறு யாரும் தொட அனுமதியில்லை.

ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். சத்ரிய குலத்தவர்கள் மீது கோபம் கொண்ட பரசுராமர் சத்ரிய குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர் சிவபெருமானுக்கு கோவில் நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்ட கடல் பகுதியில் நிலத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று பரசுராமரின் கையிலிருந்த வேள்விக்கான பொருள்கள் இருந்த பையை வீசியெறிய சொன்னார். பரசுராமரின் பையை தூக்கி எறிந்தார். கையை விழுந்த இடம் வரை கடல்நீர் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தார் கடல் அரசர்.
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில் சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைக்க முடிவு செய்தார். சிவபெருமானிடம் இந்த இடத்தில் தங்கியிருந்து அதன் மூலம் இப்பகுதியை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார் பரசுராமர். சிவன் தனது மனைவி பார்வதி அவரது மகன்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியனுடன் பரசுராமரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இக்கோவிலுக்கு வந்தார். சிவன் இப்போதிருக்கும் திருச்சூர் என்ற இடத்தில் நின்றார். பின்னர் அவரும் அவருடன் வந்தவர்களும் ஒளிமயமாகி மறைந்து விட்டனர். ஒளிமயமான இறைவனை பரசுராமர் ஒரு பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் ஒரு பிரகாசமான சிவலிங்கமாக கண்டார். சிவலிங்கமாக மறைந்திருந்த இறைவனை நெய்யால் குளிர்வித்தார். இதனால் இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம் 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது.

பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் பல காலங்கள் இருந்த சிவலிங்கத்தை அந்நாட்டின் அரசன் மிகவும் வசதியான இடத்திற்கு மாற்றி ஒரு கோவிலில் வைத்து வழிபட முடிவு செய்தார். தெய்வத்தை புதிய இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. சிவலிங்கத்தை எடுக்க ஒரு சிரமம் இருந்தது. ஆலமரத்தின் ஒரு பெரிய பகுதியை வெட்டாமல் லிங்கத்தை அகற்ற முடியவில்லை. மரத்தின் கிளைகளை வெட்டும்போது அதன் ஒரு பகுதி சிலை மீது விழுந்து சிலை சேதமடையும் அபாயம் இருந்தது. ஆட்சியாளருக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாதபோது யோகதிரிப்பாடு என்பவர் லிங்கத்தை முழுவதுமாக மூடிமறைக்கும்படி லிங்கத்தின் மீது படுத்துக் கொண்டு மரத்தை வெட்டும்படி ஆட்களிடம் கேட்டுக்கொண்டார். வெட்டுதல் தொடங்கியது. அனைவரும் அதிசயிக்கும்படி மரத்தின் ஒரு துண்டு கூட லிங்கத்தின் அருகே எங்கும் விழவில்லை. சிவலிங்கம் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் நிறுவப்பட்டது, அது இப்போது வரை உள்ளது. பின்னர் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த கோயில் கட்டப்பட்டது.

ஆதிசங்கரரின் தாய் தந்தை இக்கோவிலில் 41 நாட்கள் விரதம் இருந்து பூஜை செய்ததன் பயனாக ஆதிசங்கரர் அவதரித்தார். வடக்குநாதர் கோவில் 7ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பெருந்தச்சன் என்பவரது காலத்தில் கட்டுமானம் சரி செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் யோகதிரிப்பாடு எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது. அதன் பிறகு கி பி 981 க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன் ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங்கினர். மன்னரின் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாக இருக்கிறது அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. காடு அழிக்கப்பட்ட பின் வருடாவருடம் இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழாவை இன்று வரை நடத்த முடியவில்லை. மூலவருக்கு இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் திருப்புகா வழிபாட்டிற்கு தேவலோகத்தினர் பலரும் வருகின்றனர். அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் இருக்ககூடாது என்பதற்காக இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும்.

மதனந்தேஸ்வரர் மதூர் சித்தி விநாயகர்

கேரள மாநிலம் மதூரில் இருக்கிறது மதனந்தேஸ்வரர் கோயில். சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்றாலும் மக்கள் சித்தி விநாயகர் கோவில் என்றே அழைக்கின்றனர்.

ஒருமுறை மதூர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர் தனது பசுக்களுக்காகப் புல் அறுக்க காட்டுக்குச் சென்றார். அங்கு புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்தப் பெண் ஓடி வந்து லிங்கம் வந்த அதிசயத்தை தன் இனத்தின் மூத்தவர்களிடம் கூறினாள். அவர்கள் மதூர் அரசனான மயிபாடி ராமவர்மாவிடம் சொன்னார்கள். சுயம்பு லிங்கம் கிடைத்தது குறித்து சந்தோஷத்தில் ராமவர்மா உடனடியாக அங்கே சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். எந்த இடத்தில் கோவில் கட்டுவதென மன்னர் ஆன்மீக குருக்களையும் ஜோதிடத்தில் அறிந்த பெரியவர்களையும் வரவழைத்து ஆலோசனை கேட்டார். தீவிரமாக ஆலோசித்த பின் கோவில் கட்டுவதற்கான புள்ளியை எப்படித் தீர்மானிப்பதென வாக்குச் சொன்னார்கள். எந்தப் பெண்மணிக்கு முதன்முதலாகச் சுயம்புலிங்க தரிசனம் எங்கு கிடைத்ததோ அங்கு அந்த பெண்மணியை வரவழைத்து வந்து அவரது கையில் புல்லறுக்கும் கதிரறிவாளை கொடுக்கவேண்டும். அங்கிருந்து அதைத் தூரமாக தூக்கி வீசவேண்டும் என்றார்கள். அரசனும் அதன்படி செய்ய உத்தரவிட்டான். அப்பெண்மணி வீசிய கதிரறிவாள் மதுவாணி ஆற்றங்கரையோரம் சென்று விழுந்தது. அந்த இடத்திற்கு அனைவரும் சென்று பார்க்கையில் அங்கு பேரதிசயமாக புலியும் பசுவும் ஒரே இடத்தில் வாய் வைத்து நீரருந்திக் கொண்டிருந்தன. புலிக்கு இரையாகக் கூடிய பசுவுடன் புலி ஒற்றுமையாக நீரருந்தியது என்றால் அந்த இடம் புனிதமானது தான் என்று முடிவெடுத்து அங்கு சிவாலயம் எழுப்பினார்கள். மதனந்தேஸ்வரர் என்ற பெயரில் எழுந்த அந்த சிவாலயத்தில் பூஜை புனஸ்காரங்களைச் செய்விக்க நம்பூதிரி குடும்பத்தார் வரவழைக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் பூஜை செய்ய வந்த நம்பூதிரிமார்களில் பெரியவர்கள் எல்லாம் சிவ வழிபாட்டில் ஆழ்ந்திருந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு பூஜை முடிந்த நேரங்களில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த ஆலயத்தின் வேறொரு இடத்தில் கற்சுவற்றில் விநாயகர் உருவம் ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு தம் வீட்டுப் பெரிய ஆண்கள் சிவனுக்கு வழிபாடு செய்வதைப் போலவே சிறுவர்களும் விநாயகருக்கு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்காகத் தொடங்கிய குழந்தைகளின் பூஜையில் வினாயகரை கண்ட பெரியவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். கற்சுவரில் வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் புடைப்புச் சிற்பம் போல வளர்ந்து பெரிதாக பெரும் சிலை வடிவம் பெற்றிருந்தார். குழந்தைகளின் சித்திரத்தில் இருந்து உருவான சுயம்பு மூர்த்தி என்பதால் அரசன் அவருக்கும் சிவனைப்போலவே பூஜை புனஸ்காரங்கள் நடத்த உத்தரவிட்டார்.

கேரளாவில் கும்பலா என்ற ஊரை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு சென்று வெற்றி வாகை சூடினார். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினார். அதை இன்றும் காணலாம். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து உள்ளது. இந்நாட்டு மன்னர் காசி சென்று வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதரையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒருமுறை மைசூர் மன்னன் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தான். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோவில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். பல ஆயிரம் இந்துக்களை வாள் முனையில் முஸ்லீமாக மாற்றினான். மாறாதவர்களை கொன்று குவித்தான். அவ்வேளையில் இந்தக் கோவிலிலும் நுழைந்து அவன் உபதேவதைகளை எல்லாம் சிதைத்து விட்டு கருவறை விநாயகரை நோக்கி முன்னேறிச் செல்கையில் திடீரென அவருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்திருக்கிறது. உடனே திப்பு கோவில் வளாகத்தில் இருந்த சந்திராசலா என்கிற கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த நீரை அருந்தினான். நீரை சிறிது அருந்தியவுடன் போரை நிறுத்தி விட உத்தரவிட்டு கருவறைச் சிலையை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்று விட்டான். இன்றும் இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் சந்திராசலா கிணற்றுச் சுவரில் திப்பு தன் வாளால் கீறிய தடம் இருக்கிறது. இப்படி இந்தக் கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் கோவிலின் தல புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

மூன்றடுக்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் அந்த அபிஷேக நீர் வெளியேற வழியே இல்லை. இங்கு அபிஷேக நீர் அப்படியே பூமிக்குள் புதையுண்டு செல்ல சுரங்கம் அமைத்திருக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு திடம்பு மூர்த்தி என்று சொல்லப்படக்கூடிய உற்சவ மூர்த்தியின் எடையானது மிக அதிகம். எனவே உற்சவ மூர்த்தி ஊர்வலமென்பது இந்தக் கோவிலுக்கு கிடையாது.

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

திலீபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தார். பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். அம்பு பட்டவுடன் மான் ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினியாக வடிவெடுத்தது. அந்தப்பெண் அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட திலிபச்சக்கரவர்த்தி அவளருகே ஓடிவந்தார். அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும் என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா என்ன செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்தது என்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என அவளை வாழ்த்தினார்.

மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும். இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார்.

மகிழ்ந்த ரிஷிபத்தினி உடனே கிளம்பினாள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி அன்னையே என்னைப் போலவும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும் மீண்டும் திலீபச்சக்கரவர்த்தியை சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் கோவில் கட்டினான். அக்கோவிலே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

காசி விசுவநாதர் ஆலயம்

காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசம் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார் நவாப். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் கிழவரே நீர் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால்தான் எனக்குப் புரியும். என் மொழியில் நாளை வந்து கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரைக் கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார் குமரகுருபரர். அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது கத்தினான் நவாப். நேற்று நீங்கள் எனக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்துவிட்டேன் என்றார் குமரகுருபரர். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா அமரும் ஆசனம் இல்லையே என்று சொல்லி பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.

இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இதுதான் என் ஆசனம் என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் அது பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று சிரித்தார். அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே சென்று நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.

குமரகுருபரர் சிங்கத்தை பார்த்து இங்கே வா என்று கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறாமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே. நான் இப்போது உன் மொழியில்தானே பேசிக்கொண்டிருக்கின்றேன். யாருடைய துணையுமில்லாமல் புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்றார். ஆச்சரியப்பட்ட நவாப் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். இறையருளால் மட்டுமே இது சாத்தியம் என்றார். உங்களுடைய இறைவனா என்னுடைய இறைவனா என்று கேட்டான் நவாப். அதற்கு குமர குருபரர் உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் என்று நவாப் பணிவாகப் பேசினார்.

மகாலக்ஷ்மி கோவில்

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மகாலக்ஷ்மி

சூரியக் கதிர்கள் கோலாப்பூர் மஹாலக்ஷ்மியின் கோவிலின் வாசல் வழியாக மெதுவாகப் பயணித்து மகாலக்ஷ்மியின் கால் முதல் தலை உச்சி வரை அவள் மீது படர்ந்து தனது வழிபாட்டை செய்தது.

ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்

விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் தொற்றுநோய் விஷ கிருமிகளால் மக்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இறை பற்று மிக்க சதாசிவராய மன்னர் இதனைக் கண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜ வைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தணரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார். மன்னரின் ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திர பாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து. கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12 வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கமும் அபிஷேக தீர்த்தமும் பக்தர்களுக்கு அருமருந்தாய் விளங்கி அனைவருக்கும் நன்மை செய்து நோய்களில் இருந்து காத்தது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். சில நாட்கள் கழித்து ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டு இடிபட்டது. இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்து வைத்தார்கள்.

இந்த இடத்தில் 1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானப் பணி நடந்தது. இப்பணி ஒரு கால கட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்து விட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் கோவில் மன்ற நிர்வாகி அகத்தியர் நாடி சோதிடர் திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்களை நாடினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட பாஷாண லிங்கம் பற்றி செய்தி வந்தது. அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு நாடி சோதிடர் பெருமுயற்சியுடன் குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது. திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்கள் தன்னிடம் கிடைத்த அந்த திமிரி பாஷாண லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார். இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.