மதனந்தேஸ்வரர் மதூர் சித்தி விநாயகர்

கேரள மாநிலம் மதூரில் இருக்கிறது மதனந்தேஸ்வரர் கோயில். சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்றாலும் மக்கள் சித்தி விநாயகர் கோவில் என்றே அழைக்கின்றனர்.

ஒருமுறை மதூர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர் தனது பசுக்களுக்காகப் புல் அறுக்க காட்டுக்குச் சென்றார். அங்கு புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு திடீரென சுயம்பு லிங்கம் ஒன்று வெளிப்பட்டது. உடனே அந்தப் பெண் ஓடி வந்து லிங்கம் வந்த அதிசயத்தை தன் இனத்தின் மூத்தவர்களிடம் கூறினாள். அவர்கள் மதூர் அரசனான மயிபாடி ராமவர்மாவிடம் சொன்னார்கள். சுயம்பு லிங்கம் கிடைத்தது குறித்து சந்தோஷத்தில் ராமவர்மா உடனடியாக அங்கே சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டார். எந்த இடத்தில் கோவில் கட்டுவதென மன்னர் ஆன்மீக குருக்களையும் ஜோதிடத்தில் அறிந்த பெரியவர்களையும் வரவழைத்து ஆலோசனை கேட்டார். தீவிரமாக ஆலோசித்த பின் கோவில் கட்டுவதற்கான புள்ளியை எப்படித் தீர்மானிப்பதென வாக்குச் சொன்னார்கள். எந்தப் பெண்மணிக்கு முதன்முதலாகச் சுயம்புலிங்க தரிசனம் எங்கு கிடைத்ததோ அங்கு அந்த பெண்மணியை வரவழைத்து வந்து அவரது கையில் புல்லறுக்கும் கதிரறிவாளை கொடுக்கவேண்டும். அங்கிருந்து அதைத் தூரமாக தூக்கி வீசவேண்டும் என்றார்கள். அரசனும் அதன்படி செய்ய உத்தரவிட்டான். அப்பெண்மணி வீசிய கதிரறிவாள் மதுவாணி ஆற்றங்கரையோரம் சென்று விழுந்தது. அந்த இடத்திற்கு அனைவரும் சென்று பார்க்கையில் அங்கு பேரதிசயமாக புலியும் பசுவும் ஒரே இடத்தில் வாய் வைத்து நீரருந்திக் கொண்டிருந்தன. புலிக்கு இரையாகக் கூடிய பசுவுடன் புலி ஒற்றுமையாக நீரருந்தியது என்றால் அந்த இடம் புனிதமானது தான் என்று முடிவெடுத்து அங்கு சிவாலயம் எழுப்பினார்கள். மதனந்தேஸ்வரர் என்ற பெயரில் எழுந்த அந்த சிவாலயத்தில் பூஜை புனஸ்காரங்களைச் செய்விக்க நம்பூதிரி குடும்பத்தார் வரவழைக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் பூஜை செய்ய வந்த நம்பூதிரிமார்களில் பெரியவர்கள் எல்லாம் சிவ வழிபாட்டில் ஆழ்ந்திருந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு பூஜை முடிந்த நேரங்களில் விளையாட ஆரம்பித்தார்கள். அந்த ஆலயத்தின் வேறொரு இடத்தில் கற்சுவற்றில் விநாயகர் உருவம் ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு தம் வீட்டுப் பெரிய ஆண்கள் சிவனுக்கு வழிபாடு செய்வதைப் போலவே சிறுவர்களும் விநாயகருக்கு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்காகத் தொடங்கிய குழந்தைகளின் பூஜையில் வினாயகரை கண்ட பெரியவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். கற்சுவரில் வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் புடைப்புச் சிற்பம் போல வளர்ந்து பெரிதாக பெரும் சிலை வடிவம் பெற்றிருந்தார். குழந்தைகளின் சித்திரத்தில் இருந்து உருவான சுயம்பு மூர்த்தி என்பதால் அரசன் அவருக்கும் சிவனைப்போலவே பூஜை புனஸ்காரங்கள் நடத்த உத்தரவிட்டார்.

கேரளாவில் கும்பலா என்ற ஊரை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரை வேண்டிக் கொண்டு சென்று வெற்றி வாகை சூடினார். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினார். அதை இன்றும் காணலாம். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து உள்ளது. இந்நாட்டு மன்னர் காசி சென்று வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதரையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒருமுறை மைசூர் மன்னன் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தான். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோவில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். பல ஆயிரம் இந்துக்களை வாள் முனையில் முஸ்லீமாக மாற்றினான். மாறாதவர்களை கொன்று குவித்தான். அவ்வேளையில் இந்தக் கோவிலிலும் நுழைந்து அவன் உபதேவதைகளை எல்லாம் சிதைத்து விட்டு கருவறை விநாயகரை நோக்கி முன்னேறிச் செல்கையில் திடீரென அவருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்திருக்கிறது. உடனே திப்பு கோவில் வளாகத்தில் இருந்த சந்திராசலா என்கிற கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த நீரை அருந்தினான். நீரை சிறிது அருந்தியவுடன் போரை நிறுத்தி விட உத்தரவிட்டு கருவறைச் சிலையை சேதப்படுத்தாமல் அப்படியே விட்டுச்சென்று விட்டான். இன்றும் இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் சந்திராசலா கிணற்றுச் சுவரில் திப்பு தன் வாளால் கீறிய தடம் இருக்கிறது. இப்படி இந்தக் கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் கோவிலின் தல புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

மூன்றடுக்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் அந்த அபிஷேக நீர் வெளியேற வழியே இல்லை. இங்கு அபிஷேக நீர் அப்படியே பூமிக்குள் புதையுண்டு செல்ல சுரங்கம் அமைத்திருக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு திடம்பு மூர்த்தி என்று சொல்லப்படக்கூடிய உற்சவ மூர்த்தியின் எடையானது மிக அதிகம். எனவே உற்சவ மூர்த்தி ஊர்வலமென்பது இந்தக் கோவிலுக்கு கிடையாது.

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

திலீபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தார். பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். அம்பு பட்டவுடன் மான் ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினியாக வடிவெடுத்தது. அந்தப்பெண் அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட திலிபச்சக்கரவர்த்தி அவளருகே ஓடிவந்தார். அம்மா மான் என்று நினைத்தே அம்பெய்தேன். அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும் என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா என்ன செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்தது என்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என அவளை வாழ்த்தினார்.

மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன் தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது நிலைமை புரிந்தது. தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும். இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தார். பெண்ணே காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார்.

மகிழ்ந்த ரிஷிபத்தினி உடனே கிளம்பினாள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும் சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி அன்னையே என்னைப் போலவும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும் முனிவரும் மீண்டும் திலீபச்சக்கரவர்த்தியை சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் கோவில் கட்டினான். அக்கோவிலே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

காசி விசுவநாதர் ஆலயம்

காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசம் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார் நவாப். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் கிழவரே நீர் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால்தான் எனக்குப் புரியும். என் மொழியில் நாளை வந்து கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரைக் கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார் குமரகுருபரர். அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது கத்தினான் நவாப். நேற்று நீங்கள் எனக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்துவிட்டேன் என்றார் குமரகுருபரர். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா அமரும் ஆசனம் இல்லையே என்று சொல்லி பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.

இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இதுதான் என் ஆசனம் என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் அது பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று சிரித்தார். அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே சென்று நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.

குமரகுருபரர் சிங்கத்தை பார்த்து இங்கே வா என்று கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறாமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே. நான் இப்போது உன் மொழியில்தானே பேசிக்கொண்டிருக்கின்றேன். யாருடைய துணையுமில்லாமல் புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்றார். ஆச்சரியப்பட்ட நவாப் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். இறையருளால் மட்டுமே இது சாத்தியம் என்றார். உங்களுடைய இறைவனா என்னுடைய இறைவனா என்று கேட்டான் நவாப். அதற்கு குமர குருபரர் உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் என்று நவாப் பணிவாகப் பேசினார்.

மகாலக்ஷ்மி கோவில்

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மகாலக்ஷ்மி

சூரியக் கதிர்கள் கோலாப்பூர் மஹாலக்ஷ்மியின் கோவிலின் வாசல் வழியாக மெதுவாகப் பயணித்து மகாலக்ஷ்மியின் கால் முதல் தலை உச்சி வரை அவள் மீது படர்ந்து தனது வழிபாட்டை செய்தது.

ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்

விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் தொற்றுநோய் விஷ கிருமிகளால் மக்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இறை பற்று மிக்க சதாசிவராய மன்னர் இதனைக் கண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜ வைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தணரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார். மன்னரின் ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திர பாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து. கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12 வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கமும் அபிஷேக தீர்த்தமும் பக்தர்களுக்கு அருமருந்தாய் விளங்கி அனைவருக்கும் நன்மை செய்து நோய்களில் இருந்து காத்தது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். சில நாட்கள் கழித்து ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டு இடிபட்டது. இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்து வைத்தார்கள்.

இந்த இடத்தில் 1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானப் பணி நடந்தது. இப்பணி ஒரு கால கட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்து விட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் கோவில் மன்ற நிர்வாகி அகத்தியர் நாடி சோதிடர் திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்களை நாடினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட பாஷாண லிங்கம் பற்றி செய்தி வந்தது. அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு நாடி சோதிடர் பெருமுயற்சியுடன் குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது. திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்கள் தன்னிடம் கிடைத்த அந்த திமிரி பாஷாண லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார். இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

விழுப்புரம் மாவட்டம் கூத்தனூர் அடுத்தள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில். மூலவர் அர்த்தநாரீஸ்வரர். அம்பாள் முத்தாம்பிகை. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். இப்பகுதியில் அகத்தியர் பூஜையில் இருக்கும் போது இறைவனின் திருமணக்காட்சியை காண விரும்பி சிவனை வேண்ட சிவன் திருமணக்காட்சியை தந்தருளினார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே இங்கு சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலித்தார்.

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக காடுகளை விவசாய நிலமாக மாற்ற நிலத்தை வெட்டும் போது சிவலிங்கம் தோன்றியது. இவரே அர்த்தநாரீஸ்வரர். மண்வெட்டியில் வெட்டுப்பட்ட கீறலை தழும்பாக இப்போதும் சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இந்த சிவலிங்கம் துவாபரயுகத்தில் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் ராமர், அகத்தியர், குகை நமச்சிவாயர் வந்து வழிபட்டதற்கான சான்றுகள் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. ரிஷிகள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது. குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்பாளிடம் தாயிருக்க பிள்ளை சோறு என்ற செய்யுளை பாடினார். உடனே அம்பாள் அவர் முன் தோன்றி நான் இங்கு ஈசனுடன் பாதிபாகமாக இடம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே மின்னும்படிவந்த சோறு கொண்டு வா என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குருநமச்சிவாயரின் பசியாற்றினாள்.

தேவர்களின் தலைவரான இந்திரன் அன்றாடம் ரிஷிவந்தியம் இறைவனுக்கு 108 பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அத்தலத்தில் இருந்த அம்பாளை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்பாள் இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும் இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்பாளும் சிவனும் தோற்றமளிக்கின்றனர். இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் தேன் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் தினசரி நடக்கும் தேனாபிஷேகத்தில் அம்பாளின் உருவம் தெரியும். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

ஜல நரசிம்மர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில் மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்கலாம். இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருக்கிறது. குகையின் முடிவில் சிவ லிங்கமும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றியவர்.

பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்தார். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் அவன் இந்த குகையில் தான் சிவனை தவம் செய்து வழிபட்டான். நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக (நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்தான். அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்று புராண வரலாறு கூறுகிறது.

லகா மண்டல் சிவாலயம்

உத்தரகண்ட் டெஹ்ராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரியிலிருந்து 75 கி.மீ தூரத்திலும் சக்ரதாவிலிருந்து 68 கி.மீ தூரத்தில் லகா மண்டல் சிவாலயம் அமைத்துள்ளது. இந்த கோயில் வளாகம் தேசிய முக்கியத்துவச் சின்னமாக உள்ளது. இந்த கோயில் அழகிய மலைகள் மற்றும் யமுனா நதியால் சூழப்பட்டுள்ளது. லகா மண்டல் அதன் பெயரை இரண்டு சொற்களிலிருந்து பெறுகிறது. லகா என்பது பல என்னும் பொருளையும் மண்டல் என்பது கோயில்களையம் குறிக்கும். 6 ம் நூற்றாண்டின் கல்வெட்டின் படி லகா மண்டலில் உள்ள சிவன் கோயில் சிங்புராவின் ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. ஜலந்திர மன்னரின் மகனும் தனது மறைந்த கணவர் சந்திரகுப்தரின் ஆன்மீக நலனுக்காக இது இளவரசி ஈஸ்வராவால் கட்டப்பட்டது. நாகரா பாணியில் தற்போதைய கட்டமைப்பு 12 – 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புராணத்தின் படி லகா மண்டல் பாண்டவர்களை துரியோதன் மெழுகினால் ஆன அரக்கு மாளிகையில் தங்க வைத்து எரிக்க முயன்ற இடம். அதிர்ஷ்டவசமாக பாண்டவர்கள் ஒரு குகை வழியாக ஓடி அங்கிருந்து தப்பினர். லகா மண்டல் கோவிலில் இருந்து குகையின் முனையை கோவிலிருந்து 2 கி.மீ தூரத்தில் காணலாம். இந்த இடம் துந்தி ஓடாரி என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சிவலிங்கம் கிராபைட் கல்லால் ஆனவர். தண்ணீர் ஊற்றப்படும்போது அது பிரகாசித்து அதன் சுற்றுப்புறங்களிலும் பிரதிபலிக்கிறது. கோவில் வளாகத்தின் உள்ளே ஒரு பாறையில் பார்வதியின் கால் அடையாளங்களைக் காணலாம். சிவன், பார்வதி, கார்த்திகேயா, விநாயகர், விஷ்ணு மற்றும் பஜ்ரங்பாலி சிலைகள் உள்ளன.

இந்த பகுதி பழங்கால கோவில்கள் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிறைந்துள்ளது. பல சிலைகள் மற்றும் லிங்கங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. தற்போது வரை 150 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 4 -5 ம் நூற்றாண்டு கல்வெட்டுகளாகும்.

கிராபைட் பற்றிய சில செய்திகள் நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில் கிராபைட்டைக் கொண்டு தயாரிக்கப் பட்டதாகும். கிராபோ என்ற சொல்லுக்கு நான் எழுதுகிறேன் என்பது பொருளாகும். கிராபைட் இயற்கையாகப் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கிரீன்லாந்து, பொஹீமியா, சைபீரியா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் கிடைக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் கிராபைட் இயற்கையாகக் கிடைக்கிறது. உலகிலேயே சிறந்த கிராபைட் இலங்கையில் கிடைக்கிறது. கிராபைட்டில் கார்பன் அணுக்கள் தட்டையான அடுக்குகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கும் கார்பன் அணுக்கள் அடங்கிய அறுகோண வளையங்களால் ஆனது. ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கிராபைட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை வலுவிழந்த வாண்டர்வால்ஸ் விசை ஆகும். இந்த அடுக்குகள் ஒன்றின் மீது ஒன்றும் நழுவும் தன்மை உடையது. இதனால் கிராபைட் மென்மையாகவும் வழவழப்பாகவும் காணப்படுகிறது.

பூம்பாறை குழந்தை வேலாயுத சுவாமி

மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டது. நடந்த சம்பவத்தை தனது ஞான திருஷ்டியால் கண்ட அருணகிரிநாதர் குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் முருகரை குழந்தை வேலர் என்று அழைத்தார். இப்போதும் முருகர் குழந்தை வேலப்பராக அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது.

குழந்தை வேலாயுத சுவாமி சித்தர் போகரால் நவபாஷணத்தால் உருவாக்கப்பட்டவர். போகர் பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையை பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். பின்னர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து குருமூப்பு என்ற அருமருந்தால் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு முருகர் சிலையை உருவாக்கினார். அந்த சிலையே இப்போதுள்ள பூம்பாறை மலையுச்சியுள்ள கோவிலில் மூலவராக உள்ளார்.

குழந்தை வேலாயுத சுவாமி கோவிலுக்கு மூன்று ஆயிரம் ஆண்டுகள் புராண வரலாறு உள்ளது. மிகவும் பழமையான சிறிய கோவில். இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் சான்றாக உள்ளது. சங்ககாலத்தில் இந்த மலையின் பெயர் கோடைமலை. இத்தல முருகர் விழாக்காலத்தில் தேரில் வீதி உலாவின் போது மலையில் இருந்து தேர் இறங்கும் போது பின் பக்கம் கயிற்றால் கட்டி இழுத்தும் மலைமீது ஏறும் போது முன் பக்கம் கயிற்றால் கட்டி இழுத்தும் இரண்டு பக்கமும் இயக்கப்படுகிறது. இந்த கோவில் பழனி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பூம்பறை முருகனுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.

புன்னைநல்லூர் ராமர்

தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர் சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். வைஷ்ண சம்பிரதாயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்ராமத்தையும் பெண் வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வந்தனர். இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. சாளக்ராமம் எனும் கல் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுகிறது. நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர் மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார். தங்கமும் வெள்ளியும் வழங்கினார். பட்டாடைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக மிகப்பெரிய சாளக்ராமத்தை வழங்கினார். சிலகாலங்கள் கழிந்தன. மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ் தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங்.

இந்த சாளக்ராமத்தைக் கொண்டு அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்து அழகிய கோயிலும் எழுப்பி அந்தக் கோயிலுக்கு நிலங்களும் பசுக்களும் தானமாக அளித்தார் மன்னர் பிரதாப்சிங். சௌந்தர்யமாக அழகு ததும்ப காட்சி தருவதினால் அவர் குடிகொண்டிருக்கும் கருவறையின் விமானம் செளந்தர்ய விமானம் என்று பெயர் பெற்றது. கோதண்டராமர் ஐந்தடி உயரம் சாளக்ராம மூர்த்தம். மூலவராக நின்ற திருக்கோலத்தில் லட்சுமணர் சீதாதேவி ஆகியோருடன் சுக்ரீவன் உடனிருக்க சேவை சாதிக்கிறார் ஸ்ரீகோதண்டராமர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கி.பி.1739-1763 ல் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.