சோம்நாத் கோயில்

குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சோம்நாத் கோயில். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில். சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதிகாலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது. தனது 27 மனைவியரில் ரோஹினியிடம் மட்டுமே அளவு கடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார். காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக சோமன் என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதான இக்கோயிலில் இருக்கும் சிவலிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது. அதேபோல கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இக்கோயிலின் மீது படையெடுத்து வந்து அடியோடு அழித்திருக்கின்றனர். கி.பி. 1025 டிசம்பர் மாதம் கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன் ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று 20000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள் தங்கம் வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான் கஜினி முகமது. பல முறை அழிக்கப்பட்டாலும் வரலாற்று காலம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்திருக்கிறது இக்கோயில். முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னரால் இக்கோயில் சீரமைத்து கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இறுதியாக சுதந்திர இந்தியாவில் அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் இப்போது நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.

அகோபிலம் நரசிம்மர்

இன்று யாரோடு போய் மோதிவிட்டு வரலாம் என்று தனது படைகளோடு ஆலோசனை நடத்தினான் ராவணன். இறுதியில் பாதாளலோகத்தில் மஹாபலிச்சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறார் அவரோடு இன்று சண்டைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இலங்கையிலிருந்து ராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப் புறப்பட்டது.

மஹாபலிச்சக்கரவர்த்தி பிரஹலாதனின் வழிவந்தவர். நரசிம்மமூர்த்தி இரண்யவதம் நிகழ்த்திய போது அருகிலிருந்த பிரஹலாதனை அழைத்து இனி உன் தலைமுறையில் யாரையும் கொல்லமாட்டேன் என்றே வரம் தந்தார். எனவே எம்பெருமான் வாமன அவதாரம் நிகழ்த்தியபோது பிரஹலாதனின் வழித்தோன்றலான மஹாபலிச்சக்கரவர்த்தியை சம்ஹாரம் செய்யாமல் அவரைப் பாதாளலோகத்துக்கு அரசனாக்கி வைத்தார். மேலும் அந்த பாதாளலோகத்திற்கு நானே காவல் செய்வேன் என்றும் கூறி பாதாளலோகத்தைக் காவல் செய்துவந்தார் எம்பெருமான்.

அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே காவல்காத்து நிற்கும் பாதாளலோகத்துக்கு சண்டை போட வந்தான் இராவணன். வாசலில் காவல்நிற்கும் எம்பெருமானைப்பார்த்து மஹாபலியைக் காண இலங்கேஸ்வரன் வந்திருக்கிறேன் என்று போய்ச்சொல் என்று விரட்டினான் இராவணன். எம்பெருமானும் மஹாபலியிடம் அனுமதி பெற்று இராவணனை உள்ளே அனுப்பினார். இராவணனைப் புன்சிரிப்போடு வரவேற்ற மஹாபலி இராவணா என்னோடு நீ சண்டையிடுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா என்று நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும் முதலில் அதோ அங்கிருக்கும் பொருளைத் தூக்கிக்காட்டு அவ்வாறு அப்பொருளை நீ தூக்கிவிடும் பட்சத்தில் நான் உன்னோடு சண்டைக்கு வரத் தாயாராக இருக்கிறேன் என்றார்.

அப்பொருளில் என்ன இருக்கிறது என ராவணன் கேட்டான். அதற்கு இடிஇடியெனச் சிரித்த மஹாபலிச் சக்கரவர்த்தி இரவணனிடம் கூறினார். முன்பு ஒருமுறை எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ஹ அவதாரம் எடுத்து என்னுடைய பாட்டனாராகிய இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். சம்ஹாரம் செய்யும் முன்பாக இரண்யகசிபுவைத் தன் தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்துப் பலமுறை பலசுற்று சுற்றினார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி அவ்வாறு சுற்றியபோது என் பாட்டானார் தன் காதில் அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதி கீழே தெரித்து விழுந்துவிட்டது. என் பாட்டனார் நினைவாக அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதைத்தான் தற்போது உன்னைத் தூக்கச் சொன்னேன் என்று விலாவாரியாகச் சொன்னார் மஹாபலி. கடுக்கனை தூக்கமுடியாமல் இராவணன் பயத்தில் வெலவெலத்துப் போய் படைகளை கூட்டிக்கொண்டு இலங்கைக்கு ஓட்டம் பிடித்தான்.

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுக்கப் புறப்பட்ட காலத்தில் அவரோடு கூடவே சங்கு சக்கரம் முதலான அவரது திவ்ய ஆயுதங்களும் புறப்பட்டன. அவைகளுக்கெல்லாம் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார் நரசிம்ம மூர்த்தி. நான் புதுமையான அவதாரம் நிகழ்த்தப் போகிறேன். இந்த அவதாரத்தில் எனது நகக்கண்களே எனக்கு ஆயுதம் என்று முடிவெடுத்தார். இரண்யகசிபு அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதியை கைலாய மலையை தூக்க முற்பட்ட உலகத்தை ஆட்சி செய்த இராவணனால் தூக்க இயலவில்லை என்றால் கடுக்கனின் முழு பகுதியின் எடையை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

கடுக்கனின் ஒரு பகுதி பளுவே இப்படி இருந்தால் முழுபகுதி கடுக்கனை காதில் மாட்டியிருந்த இரண்யகசிபுவின் வல்லமை எப்படி பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இரண்யனின் உடலைத் தன் மடியிலே கிடத்தி தன் விரல் நகத்தினாலே அவனை சம்ஹாரம் செய்த நரசிம்ம மூர்த்தியின் பலத்தைக் கண்டு தேவர்களெல்லாம் அகோபலம் அகோபலம் என்று முழங்கினார்கள். அப்பெயரே சற்றே மருவி அகோபிலம் என்னும் ஆந்திர தேசத்திலுள்ள திவ்யதேசத்தின் திருப்பெயராயிற்று. தற்போது அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

பஞ்சநதன நடராஜர்

1.ஆலிங்க நதனம் 2.பஞ்சநதனம் 3.சிங்க நதனம் 4.யானை நதனம் 5.யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அந்த கற்களுக்கு பஞ்சநதன பாறை என்று பெயர். அந்த வகை பாறையில் செய்தவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால் சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. காலையில் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கும். இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.

சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு திருச்சி அருகில் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார். நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரி முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால் ஊற்றத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் ஊட்டத்தூர் என பெயர் மருவி மாறியது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளார். ஆகையால் கோவிலின் நடுவில் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம் அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்

இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை செவிவழிச்செய்தி புராண வரலாறு உள்ளது. இந்த அபூர்வ நடராஜர் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

பசுபதீஸ்வரர்

மூலவர் பசுபதீஸ்வரர். அம்மாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை. புராண பெயர் திருஆமூர் கடலூர் மாவட்டம். பழமையான ஆலயம் தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் நின்ற திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப் பட்டிருக்கிறது. தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது. அப்பரின் குருபூஜை சித்திரை சதய நட்சத்திரத்திலும் அப்பரின் ஜெயந்தி நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு உவர்ப்பு கார்ப்பு என்ற அறு சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிபி 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

திருவாமூர் என்ற இந்த தலத்தில் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார். தாயார் மாதினியார். சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து திருநாவுக்கரசரை சூலை நோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர் சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றதாகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம் 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

கிரிஸ்னேஸ்வரர் கோவில் ஔரங்கபாத்

மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் கோவில் திருத்த வேலைகளைச் செய்வித்தார்.

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் மரைக்காயர் என்ற மீனவர் வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்துவந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி இருந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்து சென்று விட்டது. அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது. ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக இருந்துள்ளது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றேன்று நின்று விட்டது. மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியலை.

மங்களேஸ்வரரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டுப் பலநாள் கடலில் திரிந்து அலைந்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்குப் போன இவர் திரும்பிவரவில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது. படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்த கல் மீது வீட்டுக்குள் போக வர்ற ஆட்கள் நடந்து நடந்து மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னி பச்சை நிறமாக காட்சியளித்தது.

மங்களேஸ்வரர் மரைக்காயரின் வறுமையான காலக் கட்டத்தில் இருந்து விடுபட அளித்த பரிசு என்பதை உணர்ந்து மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தால் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் விவரித்து தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார். சோதித்தவர் ஆச்சரியத்துடன் இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார். இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை அனுப்பினார். சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் மயங்கியே விழுந்துவிட்டார் என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா என்று கூறிவிட்டு இலங்கைக்கு சென்றார்.

மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மரகத நடராஜர் வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் வந்தது. குரல் வந்த திசை நோக்கி மன்னர் மற்றும் பிரஜைகள் அனைவரும் திரும்பியதும் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர். அவர் சித்தர் சண்முக வடிவேலர். மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பால் அபிஷேகத்தின் போது நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பை காணலாம். பின்னர் மன்னரை அழைத்து முதலில் மரகத நடராஜ மூர்த்தியே நிறுவி பின்னர் ஆலயம் அமைக்கும் படி அறிவுறை கூறினார். மன்னர்கள், முகலாயர்கள், அன்னியர்கள் என பல படையைடுப்புகளை தாண்டி இன்று உத்திரகோசமங்கையில் மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திருநடனம் புரிகிறார்.

புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மரகத ...

அருள்மிகு அமிர்தேஸ்வரர் கோவில்

அருள்மிகு அமிர்தேஸ்வரர் கோவில் ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளனின் படைத்தலைவரால் துங்கபத்திரை ஆற்றாங்கரையில் 1196ஆம் ஆண்டில் போசளர் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது. இக்கோவில் ஒரு விமானத்துடன் கூடியது. இது மூடப்பட்ட சிறிய மண்டபம். 29 தூண் இடைவெளிகள் இல்லாமல் மூடிய மண்டபமாக உள்ளது 9 தூண் இடைவெளிகளுடன் உள்ளது. இச்சிறிய மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அருகில் அமைந்துள்ள இன்னொரு சிறு கோயிலுக்குச் செல்வதற்கான வாயில் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோயில் கருவறை சதுர வடிவானது. சிற்ப வேலைப்பாடுகளால் அழகூட்டப்பட்ட பழைய விமானம் இன்றும் உள்ளது.

இக்கோவில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள் ஆகும். மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில் 140 சிற்பப் பலகைகள் காணப்படுகின்றன. இவற்றில் இந்து இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. தென் புறச் சுவரில் 70 கற்பலகைகளில் இராமாயணத்தில் இருந்து காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான முறையில் கதை நகர்வு வலமிருந்து இடமாக அமைந்துள்ளது. வடபுறச் சுவரில் கதைத் தொடர்ச்சி இடமிருந்து வலமாகவே உள்ளது. மீதமுள்ளவற்றில் 25 பலகைகளில் கிருஷ்ணனுடைய வாழ்க்கைக் காட்சிகளும் 25 பலகைகளில் மகாபாரதக் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் தேவகி ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார். உக்கிரசேனரின் மகன் கம்சன். கம்சன் தன் ஒன்று விட்ட தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் தேவகி வசுதேவர் இருவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குக் குழந்தை பிறக்கும் சமயம் ஒரு கழுதையைச் சிறை வாயிலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்ல. கழுதையை நம்பினான் கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம். குழந்தை பிறந்ததும் கத்தத் துவங்கி விடும். கம்சன் வந்து குழந்தையைக் கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன.

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரிக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவர் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து வேண்டினார் .கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரமும் நிகழ்ந்தது. எனவே தான் காரியம் ஆகவேண்டுமா கழுதையானாலும் அதன் காலைப் பிடி என்ற பழமொழியும் வழக்கத்தில் வந்தது. இக்கோவிலின் வெளிச்சுவற்றில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.

பிஜிலி மஹாதேவ் சிவன்கோயில்

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தற்போது இருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் தவத்தின் மூலம் அழிக்கமுடியாத வரத்தை வாங்கிய அசுரன் ஒருவன் பாம்பு வடிவம் எடுத்து அங்குள்ளவர்களை கொடுமை செய்து வந்தான். அனைவரும் சிவனை வேண்ட சிவன் அசுரனை மலையாக மாற்றி இந்திரனை அழைத்து மலையை அழிக்குமாறு பணித்தார். இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதம் மூலம் இடி மின்னலை வரவழைத்து மலையை அழித்தார். அரக்கன் 12 வருடங்களுக்கு ஒருமுறை உயிர்த்தெழுந்து மலைவடிவில் அனைவரையும் துன்புறுத்தினான். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்திரனும் இடி மின்னல் மூலமாக அவனை தாக்க தான் பெற்ற வரத்தால் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டே இருந்தான். இந்திரன் அசுரனை தாக்க அனுப்பிய இடி மின்னல் அசுரனுடன் மக்களையும் தாக்கியது. இதனால் மக்கள் சிவனை வேண்டினர். மலையாக இருக்கும் அசுரன் 12 வருடங்களுக்கு ஒரு முறை உயிர் பெறும் போது இந்திரன் தாக்கும் இடி மின்னலை சிவனே ஏற்றுக்கொண்டு அசுரனை அழித்து இன்றும் மக்களை காப்பாற்றுகிறார்.

தற்போது இமாச்சல் பிரதேசத்தில் குளுமணாலியில் இருக்கும் பிஜிலி மஹாதேவ் கோயில் சிவலிங்கத்தை மட்டும் 12 ஆண்டுக்கு ஒரு முறை இடி மின்னல் தாக்கும். கோவிலுக்கோ கோவிலின் மேற்கூரைக்கோ அதன் சுற்றுப்புறத்திற்கோ ஒன்றும் ஆகாது. இடி மின்னல் தாக்கிய உடன் சிவலிங்கம் தூள் தூளாக நொறுங்கிவிடும். மறுநாள் கோவில் பண்டிட் உடைந்த துகள்களை சிவலிங்கம் இருக்கும் இடத்தில் ஒன்று சேர்ந்து வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்து கோவிலை முடிவிட்டு செல்வார். அடுத்த நாள் உடைந்த துகள்கள் ஒன்று சேர்ந்து சிவலிங்கமாக காட்சி கொடுக்கும். பல ஆண்டுகளாக 12 வருடங்களுக்கு ஒரு முறை இச்சம்பவம் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.

ஓதிமலைமுருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. ஒதிமலையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்புக்கு கவுஞ்சவேதமூர்த்தி என்று பெயர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. புராணபெயர் ஞானமலை. தீர்த்தம் சுனைதீர்த்தம். சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன் இந்த ஓதிமலை தலத்தில் வேதம் ஆகமங்களை உபதேசித்தார். சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை என்றும் சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்ற பெயரும் ஏற்பட்டது. முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இந்த மலைதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது. கைப்பிடி இல்லை. கோயம்புத்தூர் அருகே புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது.

சித்தர்களில் ஒருவரான போகர் முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன் போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால் ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும் இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருக்கின்றார். இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் போகர் பழனி முருகனை காணவேண்டி யாகம் நடத்தியிருக்கின்றார். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும். விபூதிக்காடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது.

படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன் பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கினார். படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி பிரம்மாவையும் விடுவித்தார்.

மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது.