புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தின் அடியில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதி தம்பி நந்தி என்றும் பக்தர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நந்தீஸ்வரருக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுவார்கள். தற்போது இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால் இங்கு இருக்கும் நெய்யை ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. நெய்க்கு ஈ எறும்புகள் வராத இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இக்கோவிலில் சொக்கலிங்கேஸ்வரரும் மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.
அமர்நாத் குகை கோயில் 5,000 ஆண்டு பழமையானது, அமர்நாத் குகையின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் சுயம்புவாக உருவாகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர்பிறை நேரத்தில் வளர்ந்தும் தேய் பிறை காலத்தில் கரைந்தும் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுகிறது இக்குகை 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது.
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வு
1879 ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்திய இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கர்னிலிடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.
ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவளின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவளை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டாள். துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர். கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுப்பித்துத் தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.
ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கர்னலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது. போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து பக்கங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கி கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் வைத்திருந்தார். மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேர் எதிராக மாறி வெற்றியை பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.
இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தன. அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்கு பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது.
கேதாரேஷ்வர் மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்து விட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது தமிழகத்திலும் புகுந்து சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை. இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார்.
கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது. விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாக இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள் தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது எப்படி வளர்ச்சி பெற்றது, யார் யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.
பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணாமலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள் நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும் பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால் இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.
அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4 ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5 ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6, 7, 8 ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817 ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10 ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது.
11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063 ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.
12 ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கியுள்ளார்கள்.
14 ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340 ம் ஆண்டு முதல் 1374 ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.
15 ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணாமலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில் தான்.
16 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு திருவண்ணாமலை கோவில் மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர். அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள் கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.
1529 ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார். இதற்கிடையே குறுநில மன்னர்களும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370 ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590 ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் வர உதவி செய்தது. 14 ம் நூற்றாண்டில் இருந்து 17 ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது. கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179 ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12-06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.
மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும் பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்தது தான். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.
வன்னிமரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்து தான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று தலபராணம் சொல்கிறது. அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் தினசரி காலையில் இருந்து மாலை வரை வேலை பார்த்த வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது தங்கமாக மாறும். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் தங்கமாக மாறாமல் இலையாகவே இருக்கும். கடினமாக வேர்வை சிந்தி அனைத்து வேலைகளையும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறும். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது.