அம்பர்நாத் கோவில் மத்தியப் பிரதேசம்

அம்பர்நாத்தின் ஷிவ் மந்திர் இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பைக்கு அருகில் உள்ள அம்பார்நாதில் 11 ஆம் நூற்றாண்டு இந்து கோவிலாகும். அம்பாரேஸ்வரர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1060 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஹேமத்பந்தியின் பாணியில் கட்டப்பட்ட அழகிய கல். ஷிலஹரா மன்னர் சித்தாரஜால் இது கட்டப்பட்டது, அது அவரது மகன் முமுனிவால் மீண்டும் கட்டப்பட்டது. இறைவன் 20 அடி கீழே தரையில் உள்ளார்

Image may contain: sky and outdoor
Image may contain: drink, plant and indoor
Image may contain: fire, table and indoor

தாரமங்கலம் லிங்கோற்பவர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாரமங்கலம் சேலம் மாவட்டம்.

அடிமுடி தேடிய நிகழ்வு முடிந்தவுடன் சிவபெருமான் திருமாலின் பூசனைக்கு மகிழ்ந்து லிங்க பாண உருவில் அருள் பாலித்தார். அப்போது சிவலிங்கத்திருமேனியைத் திருமால் தழுவி மகிழ்ந்தார். உடன் ஐந்து முகங்களுடன் பிரம்மா.

கழுகுமலை வெட்டுவான் கோயில்

கழுகுமலையின் பின்புறம் அமைந்துள்ளது வெட்டுவான் கோயில். மலையின் பழம்பெயர் அரைமலை. ஊரின் பழம்பெயர் பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையின் ஒரு பகுதியில் 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். இத்தகைய கோயில் தமிழகத்திலேயே இது ஒன்று தான் இருக்கின்றது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல் தற்போது கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் உள்ளது

சங்கரன்கோவில் கோவில்பட்டி சாலையில் இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர். மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். மலையின் நடுவே ஓரிடத்தில் வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக இங்கே சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை.

கோவிலில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில் உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் உள்ளன..விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும் இவற்றுக்குக் கீழே யாளியும் உள்ளன. பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில் கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையில் மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம் கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறை தரை மட்டத்திலிருந்து 15 அடியும் கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால் இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஆபத்தான இடத்தில் கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பிட்சை ஏற்று உண்ணும் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். கோவிலைக்கட்டிய ஆண்டிகள் இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டி புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகள்.

  1. மௌனசுவாமி
  2. காசிசுவாமி
  3. ஆறுமுகசுவாமி இவர் ராஜகோபுரம் கட்டியவர்
  4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
  5. தேசியமூர்த்திசுவாமி.

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே மூவர் சமாதி என்ற பெயருடனே அமைந்துள்ளது.

நான்காவதாக ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலிருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்து ஆழ்வார்தோப்பு என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் உள்ளது.

ஹாசன அம்மாள்

பெங்களுர் அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த சுவாமியின் பெயர் ஹாசன அம்மாள். மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். சுவாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அணையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. சுவாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே சுவாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிக்கு நைவேத்தியம் சுடாக கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று சுவாமிகள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.

புத்தன் சபரிமலை

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம். இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.

சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

யானையை அடக்கிய கோழி

யானை அளவு எதிரியின் பலம் இருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் எதிரியை வென்றிடலாம்

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும் மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன் சிவனே தன்னையும் மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றிய இறைவனுக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது யானையை கோழி அடக்கியது போல அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார்.

திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் கல்தூணில் இந்த இந்த சிற்பம் உள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு. கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முன் இந்த மிதிவண்டி படத்தை தூணில் சிற்பமாக வடித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். மிதிவண்டி தயாரிக்கப்பட்டது ஒரு 200 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக தற்போதைய வரலாறு உள்ளது.

ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில்.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள பனகனப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவில் வளர்ந்து வருகிறது. இது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டது. நந்தியின் அளவு அதிகரித்து வருவதால் கோயில் ஊழியர்கள் ஏற்கனவே ஒரு தூணை அகற்றியுள்ளனர். சிலை ஆரம்பத்தில் அதன் தற்போதைய அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த சிலை மீது சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலை செதுக்கப்பட்ட பாறை வளர்ந்து வரும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் 20 ஆண்டுகளில் 1 அங்குல உயரம் வளர்ந்து வருவதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர் இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனார் என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். தெலுங்கில் நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அது தான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது. இந்த கோவிலை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்கம வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹாரா புக்க ராயாவால் கட்டப்பட்டது. வீரபிரம்மேந்திர ஸ்வாமி சில காலம் இங்கு தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றியுள்ளார். வீர பிரம்மந்திர ஸ்வாமியின் கூற்றின்படி இந்த நந்தி சிலை உயிர் பெற்று வரும்போது இந்தக் கலியுகம் முடியும்.

பழனி மலை

சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.

தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

சாஸ்தா ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அழகிய ஆஸ்ராமம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு சாஸ்தா ஆலயம் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் வரலாறு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.

ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில் அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தர்ம பத்தினி அனுசூயா தேவி. இவர் கற்பில் சிறந்தவர். ஒரு முறை அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில் அடியார்களின் வடிவத்தில் ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று அடியார்களும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க முன்வந்தாள். அதுவரை ஆசனத்தில் அமர்ந்திருந்த அடியார்கள் உடனடியாக எழுந்துவிட்டனர். அதைக் கண்டு மனம் வருந்திய அனுசூயா தேவி நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று மூவரிடமும் கேட்டாள்.

அதற்கு அந்த அடியார்கள் மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள் தற்போது உண்ண வேண்டு மென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது என்று கூறியவர்கள் மேலும் தொடர்ந்து பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பரிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம் என்றனர். இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும் மனதைத் தேற்றிக் கொண்டு கணவனே கடவுள் என்றும் கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் அடியார்கள் கூறியவாறு அமுது படைப்பேன் எனத் தெளிந்து தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு இவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறக்கடவது என அடியாளர்களின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள். முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளானார்கள். பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும் அத்திரி முனிவரின் ஆசிரமம் வந்து அனுசூயா தேவியை வேண்ட அவளும் மீண்டும் அவர்களுக்கு சுயவுருவை அளித்தாள்.

அத்திரி மகரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம் தான் தற்போது ஆஸ்ராமம் என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்திரி மகரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அத்திரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கோவிலின் அருகில் தீர்த்தக்குளமாக இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா என உரக்கக்கூவினார். அது நாளடைவில் மருவி அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தாவாக மாறிவிட்டது. அஞ்சனம் என்றால் மை. எழுதிய என்றால் தீட்டிய என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.

இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். சாஸ்தா கோவில்களில் சபரிமலை ஐயப்பனைப் போலவே சாஸ்தாவின் சிலையும் கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு வலக்கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் சுருளாக தோள்பட்டைக்குக் கீழே இருப்பதோடு நடு உச்சியில் கொண்டையுடன் பூணூலும் அணிந்திருக்கின்றார். கழுத்தில் பதக்கமும் இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும் திருநீற்றுப் பட்டையும் அணிந்துள்ளார். இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது.