பாதாள புவனேஷ்வர்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்த அவர் குளிப்பதற்காக வைத்துயிருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது அந்த உருவத்தை தனது பிள்ளையாக பாவித்த பார்வதிதேவி எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்ககூடாது என்று பிள்ளையாருக்கு சொல்லி விட்டு நீராட சென்றுவிட்டார். அந்த சமயம் சிவன் பார்வதியை பார்க்க அங்கு வந்தார். உள்ளே செல்ல முயற்ச்சிக்கும் போது சிவனை விநாயகர் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை தனது சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி நடந்து முடிந்தவற்றைக்கண்டு மனம் வருந்தினாள். இதைப்பார்த்த சிவபெருமான் பிரம்மனை அழைத்து விநாயகர் தலை இல்லாத உடம்பில் பொருத்துவதற்காக தலையை கொண்டு வரச்சொன்னார். அவர் வெளியில் செல்லும்போது எதிரே வந்த ஒரு யானையின் தலையை வெட்டிக்கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார். சிவபெருமான் விநாயகர் உடல் மேல் வைத்த யானை தலையை எட்டு இதழ்தாமரை மூலம் தண்ணீர் தெளித்து உயிர்பெறச்செய்தார். வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் இந்த குகையில் அப்படியே இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குமாஊன் என்ற இடத்தில் உயர்ந்த மலை சுற்றிலும் பாய்ந்தோடி செல்லும் நதி அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலையில் பாதாள புவனேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் அருள்புரியும் இடம் சுண்ணாம்பு குகை ஆகும். இந்த குகை 100 அடி ஆழமும் 160 அடிநீளமும் கொண்டது. பாதாள புவனேஸ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் பாரி ஜாதப்பூ மேலே இருக்கிறது. அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த நீர் துண்டிக்கப்பட்ட வினாயகர் தலை மேல் விழுகிறது. இந்த குகைகோயில் இந்தியதொல்பொருள் ஆய்வுமையத்தால் பாதுகாக்கப்படுகிறது. பாதாள புவனேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறுகலான குகையின் வாயில் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்கவேண்டும். அனைவரும் ஆக்சிஜனை வைத்துக்கொண்டு தான் குகைக்குள் சென்று பார்க்கமுடியும். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள். இந்தக்குகையில் சிவபெருமானுடன் 33 கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிக்கிறார்.

திரேதா யுகத்தில் ரித்தூபர்ணன் என்ற மன்னன் முதலில் பாதாள புவனேஸ்வர் குகைக்கோயிலை கண்டுபிடித்து வழிபட்டார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார் ஆதிசேஷன் ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச்சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்கவைக்கும் காட்சியைக் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபாரயுகத்தின் போது பாண்டவர்கள் சிவபெருமானை இங்கு பிராத்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்தகுகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும் அதில் இரண்டு கதவுகள் சென்ற யுகத்தில் மூடப்பட்டு விட்டதாகவும் கந்த புராணத்தில் குறிப்பு உள்ளது. படிகளின் நடுவே நரசிம்மனின் உருவம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கிழே இறங்கியவுடன் முதலில் இருப்பவர் ஆதிஷேசன். பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி கொடுக்கிறார். அதைதாண்டி ஒரு யாககுண்டம் உள்ளது. இங்கு தான் ஜனமேஜயன் தன் தந்தை பரிசித்தன் மரணத்துக்கு பழி வாங்குவதற்க்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்பயாகம் செய்தான். காலபைரவர் நீண்ட நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளைகுகை கைலாயமலையை சென்று அடைகின்றது என்று புராணங்கள் கூறுகின்றது. அதன் முன்பாக சிவன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஒட்டுடன் காட்சி தருகிறார். சிவன் தன் சடா முடியை அவிழ்த்து விட்டது போல் குகைக்குள் சடாமுடியை போல் மலையின் ஒரு பகுதி தொங்குகிறது. அதிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே பைரவர் முன்னால் முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலே அன்னப்பட்சி தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் காட்சி. கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டுயிருந்தது. இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. அடுத்து கழுத்தில் பாம்புயை சுற்றியப்படி ஜடாமுடியுடன் சிவன். சிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடுவதுபோல் காட்சி கொடுக்கின்றார். மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஜராவதம். குகையின் ஒரு பகுதியில் கலியுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இதன் மேலிருக்கும் கூம்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது லிங்கத்தின் மேலிருக்கும் மலையை எப்பொழுது தொடுகிறதோ அப்பொழுது கலியுகம் முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.