ஆப்பூர் மலை

ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் உயர்ந்த மலைப் பகுதியில் தான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறார். பெருமாள் சுமார் ஐந்தடி உயரத்தில் மார்பில் தாயாருடன் தனித்திருக்கின்றார். பெருமாளை பக்தர்கள் ஆப்பூரார் என்றும் அழைக்கின்றனர். இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று பெருமாளுக்கான திருமஞ்சனத்துக்கு தங்கு தடையின்றி மூலிகை கலந்த தனிச்சுவையுடன் சுரந்து கொண்டிருக்கிறது. ஒரு பிராகரம் மற்றும் முன் மண்டபத்துடன் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சந்நிதி கிழக்கு நோக்கி காணப்படுகிறது. பெரிய திருவடியான கருடாழ்வார் கருவறைக்கு முன்னால் பெருமாளை நோக்கி கும்பிட்டப்படி மேற்கு நோக்கி காணப்படுகிறார். மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள் மற்றும் அஷ்ட ல‌ட்சுமிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம் காணப்படுகின்றன. இந்த கோயிலில் தாயாருக்கு என்று தனி சந்நிதி கிடையாது. இங்கு பெருமாளும் லட்சுமியும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதாலும் பெருமாள் லட்சுமியின் சொருபமாகவே இருந்து மகா லட்சுமியை தன்னகத்தே கொண்டிருப்பதால் பெருமாளுக்கு புடவையை தவிர வேறு எந்த வஸ்திரங்களும் சாற்றப்படுவதில்லை. அதனால் தான் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற பெயர் வந்தது. அகத்திய முனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வலப்புறம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆப்பூர் கிராமம். இங்குதான் மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி அமைந்திருக்கிறது இந்தப் பெருமாள் கோயில். பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை ஔஷதகிரி எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பியுள்ளன. சுமார் எண்ணூறு வருடத்தில் இருந்து ஆயிரம் வரை பழைமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சிறியதாகவும் அழகாகவும் இருக்கிறது. ஒளஷதகிரி அதாவது மூலிகை மலை இதன் அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவனுக்கு ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற பெயரும் உண்டு. இந்த இருமலைகளும் ஒன்றோடொன்று வரலாற்று தொடர்புடையதாக விளங்குகிறது.

ராமாயணத்தில் இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன் கண் கலங்கினார். ராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால் குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஔஷதகிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால் இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணம்.

மலைப் பாதை துவங்கும் இடத்தில் இருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல் விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 508 படிகள் இம்மலையில் உள்ளது. ஔஷதகிரியின் உச்சியில் ஸ்ரீநித்ய கல்யாண பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் மூலிகைக் காற்றின் வாசம் பரவசமூட்டும். பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய இக்கோவிலில் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெருமாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படுகிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட மகரிஷிகளும் இந்த மலையில் தங்கி இருந்து தவம் செய்து பேறு பெற்றுள்ளார்கள். பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம் ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது.

One thought on “ஆப்பூர் மலை

  1. Senthilkumar M Reply

    மிகவும் அருமை நிறைந்த பதிவுகள் ஆன்மீகதேடலை வழி நடத்தும் பதிவுகள் மிகவும் நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Leave a Reply to Senthilkumar MCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.