மூலவர் சிங்கீஸ்வரர். உற்சவர் பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷநாயர், சந்திரசேகர். அம்பாள் புஷ்பகுஜாம்பாள். மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம். ஊர் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு. ஶ்ரீதேவி பூதேவி ஆதிகேசவபெருமாள் சன்னதி உள்ளது. சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் அவதரிதவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரம். சரஸ்வதி ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரைத் தண்டினால் சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும் உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும் சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது.
சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடிய போது சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது இசை பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால் சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவ நடனத்தைக் காண முடியாமல் போனதால் அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது இசை பக்தியை பாராட்டிய சிவன் பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும் பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால் இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்று அழைக்கப்பட்டத. பின்னர் மெய்ப்பேடு என்று அழைக்கப்பட்டு தற்போது மப்பேடு என அழைக்கப்படுகிறது.
கோயில் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வட கிழக்கு மூலையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கிபி 976 இல் இக்கோயில் கட்டப்பட்டது. இவர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கிபி 1501 இல் கோவில் ராஜ கோபுரம் மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். மேலும் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக் கல்லால் ஆன சன்னதியை புதுப்பித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில்,நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் போது ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில் கிபி 1947 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் இரண்டாம் ஆதித்திய கரிகால சோழனால் கட்டப்பட்டதையும் உறுதி செய்கின்றது. கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சம்ஸ்கிருத மொழி மற்றும் நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. செப்பேடுகளை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெ டுக்கப்பட்டுள்ள செப்பேடுகள் 1513 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறு பெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன.


















