மூலவர் கச்சாலீஸ்வரர் கச்சபேஸ்வரர். அம்பாள் அழகம்மை சௌந்தராம்பிகை. தலவிருட்சம் கல்யாண முருங்கை. தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இடம் சென்னை பாரிமுனை. அம்பாள் அழகம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும் புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்கு 63 நாயன்மார்களுக்கும் தனி மண்டபம் உள்ளது. தத்தாத்ரேயர் துர்க்கை ஆதிசங்கரர் மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளனர். கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன் தனது மனைவியர்களான உஷா பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள் 28 நட்சத்திரங்கள் 60 வருடங்கள் நான்கு யுகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். பாற்கடலை கடைந்த போது மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால் கச்சபேஸ்வரர் என்றும் கச்சாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கச்சபம் என்றால் ஆமை என பொருள். மூலவர் கச்சாலீஸ்வரர் 1. கூர்மாசனம் 2. அஷ்ட நாகாசனம் 3. சிம்மாசனம் 4. யுகாசனம் 5. கமலவிமல ஆசனம் என்ற ஐந்து ஆசனங்களின் மீது அமர்ந்துள்ளார். இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் ஐந்து முகங்களுடன் சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாக மனோன்மணித் தாயாருடன் காட்சி அளிக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும் அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். கோவிந்தராஜ பெருமாள் தனி சன்னதியில் இருக்கிறார்.
ஆங்கிலேயர்களிடம் மொழி பெயர்ப்பாளராக இருந்த துபாஷி தலவாய் செட்டியார் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. என்ன செய்வேன் இறைவா என தவித்து நின்றார். ஆனால் மழையோ ஒரு வாரம் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய மேலும் ஒரு வாரம் பிடித்தது. துபாஷி தலவாய் செட்டியார் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். அதிசயமாக அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப் பட்டிருந்தன தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். இதனை அறிந்த துபாஷி தலவாய் செட்டியார் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பித்தார். பின் தன் துணைவியார் உதவியுடன் இங்கு 1725 இல் கோவில் கட்ட ஆரம்பித்து 3 ஆண்டுகளில் கட்டி முடித்தார் துபாஷி தலவாய் செட்டியார்.
சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயில் 1950ம் வருடம் தீக்கிரையான போது புதிதாக மறுநிர்மாணம் செய்யப்பட்ட போது இப்போது சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைக்கு இக்கோவிலுக்குள் இந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் புதிய ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னை நகரில் அமைந்த முதல் ஐயப்பன் சன்னதி இதுவே. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின் போது இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது.
முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம் ஆகாயம் கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கி வெற்றி பெற்றார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று போரிட்டு திருப்போரூரில் வெற்றி கொண்டார். முருகன் யுத்தம் புரிந்த இடம் ஆகையில் யுத்தபுரி என்று அக்காலத்தில் பெயர் பெற்றது. சமராபுரி போரிநகர் என்ற வேறு பெயர்களும் இந்த இடத்திற்கு உண்டு. அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர் புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும் பைரவரின் துணையோடும் கண்டறிந்த முருகப்பெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மறைந்திருந்த அசுரர்கள் முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது. இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலை நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. பல யுகங்களுக்கு முன்னால் நடந்த பிரளயத்தால் ஆறு முறை இங்கு உள்ள முருகன் கோவில் அழிவைச் சந்தித்து இருக்கிறது என்று கோவில் புராண வரலாறு உள்ளது. தற்போது ஏழாவது முறையாக மீனாட்சி அம்மனின் அருளாலும் முருகனின் அருளாலும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
சிதம்பர சுவாமிகள் சாந்தலிங்க அடிகளின் மாணவர். இவர் மதுரையில் தியானத்தில் இருந்த போது அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது தியானத்தில் மீனாட்சி அம்மன் தோன்றி மதுரைக்கு வடக்கே காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து அழகிய திருக்கோயில் நிர்மாணித்து முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவா. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து தற்போது திருப்போரூர் என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு இருந்த பனை மரக்காட்டிற்குள் ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் இருந்தது. அதன் அருகில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து சிவாயநம என்று ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும் அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் இங்கே கோவில் கட்ட வேண்டும் இது இறைவன் ஆணை என்பதை உணர்ந்தவர் மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
திருப்போரூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது சிதம்பர சுவாமிகள் நவாப் மனைவிக்கு திருநீறு பூச அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். முருகன் அருளால் தனது மனத்திரையில் தோன்றியபடியே அழகிய திருக்கோயிலை கட்டி முடித்தார் சிதம்பர சுவாமிகள். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும். கோவிலின் அருகில் இருந்த ஒடையை குளமாக மாற்றினார். இக்குளத்தில் இருக்கும் நீரானது இது வரை வற்றியது இல்லை. பனை மரத்தடியில் முருகன் இருந்த பனை பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.
கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. பிரதான பூஜைகள் அனைத்தும் ஆமை வடிவத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுப்பிரமணியர் யந்திரத்திற்கே நடைபெறுகிறது. இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கும். பிரம்மாவைப் போல் அவருக்குரிய அட்சர மாலை மற்றும் கண்டிகையும் சிவனைப் போல் வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த முத்திரையும் பெருமாளைப் போல் இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த முத்திரையும் என மும்மூர்த்திகளின் அம்சமாக கந்தசாமி முருகன் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது. இந்த கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும். கோவிலின் தெற்கே உள்ள குளத்தின் பெயர் வள்ளையார் ஓடை என்னும் சரவணப் பொய்கை ஆகும்.
கோவிலில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் உள்ளார். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது. வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில் பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. கையில் வில்லேந்தி மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமிக்கும் இங்கு சிலை உள்ளது. கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சிவலிங்க சன்னதி உள்ளது. இவருக்கு துணைவியான அம்பாள் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இவருக்கான புண்ணிய காரணியம்மன் என்று பெயர். ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில் சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால் முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.
முருகனைப் போற்றி சிதம்பர சுவாமிகள் 726 பாடல்கள் பாடினார். தனது குருவான சாந்தலிங்க அடிகளின் நூல்களுக்கு உரைகள் எழுதி உள்ளார். உபதேச உண்மை உபதேசக் கட்டளை திருப்போரூர் சந்நிதி முறை தோத்திர மாலை திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலியனவும் திருப்போரூர் முருகன் மீது கிளிப்பாட்டு குயில்பாட்டு தாலாட்டு திருப்பள்ளிஎழுச்சி ஊசல்தூது என பல பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு கோவிலுக்குள் சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவம் நடக்கும். கோவிலின் சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்த சிதம்பர சுவாமிகள் அந்த கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்தார்.
அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் பற்றி பாடல் பாடியுள்ளார். அவர் கந்தசுவாமியை சகல வேதங்களின் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாமிக்கு வேதஉச்சியாக சுவாமி என்றும் பெயருண்டு. அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருப்பவர் என்பது இதன்பொருள். கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன் பானுகோபன் சிங்கமுகன் சூரபத்மன் அஜமுகி தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும். முருகன் வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சிலையும் இங்குள்ளது. இவ்வேளையில் மகாவிஷ்ணு விநாயகர் நந்தி பிரம்மா இந்திரன் ஆகியோரும் உடனிருப்பர்கள்.
காளி அம்பாள் எப்போதும் கையில் தமருகம் சூலம் கட்கம் கபாலம் கேடகம் முதலிய ஆயுதங்கள் கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள் வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன் ஆணவத்தை அடக்கும் அங்குசம் ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம் சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை சோமன் சூரியன் அக்னி என்ற மூன்று கண்கள் நவரத்ன மணிமகுடத்துடன் வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திருவடியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சக்கரம் அர்த்த மேருவாக அமைந்துள்ளது. காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம் காஞ்சிபுரத்து காமாட்சி அம்மனாகும். சிவபெருமான் கமடேஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார். இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர் நவக்கிரகங்கள் வள்ளி தெய்வானையுடன் முருகர் ஸ்ரீவீரபகாமங்கர் அவர் சீடர் சித்தையா. கமடேஸ்வரர் துர்கா சண்டிமகேஸ்வரர் பைரவர் பிரம்மா சூரிய சந்திரர்கள் உள்ளனர். வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர் கொடி மரம் வடகதிர்காம முருகன் சித்தி புத்தி விநாயகர் காயத்ரி துர்கா யாகசாலை நடராசர் மகாமேரு வீரபத்திர மகா காளியம்மன் நாகேந்திரர் விஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் ஆஞ்சநேயர் உள்ளார். இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல் குண வாயில் என்றும் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் குட வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது. வடமேற்குப் பகுதியில் சித்திபுத்தி விநாயகரும் அகோர வீரபத்திரசாமியும் மாகாளியும் வடகதிர்காம முருகனும் உள்ளனர்.
காளிகாம்பாள் கோயில் ஆரம்பத்தில் கடற்கரைப் பகுதியில் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பே இருந்தது. காளிகாம்பாள் ஆலயம் சுமார் 3000 ஆண்டு பழமையானது. இதனால் கோட்டையம்மன் என்றும் செந்தூரம் சாத்தி வழிபட்டதால் சென்னியம்மன் என்றும் அம்பாள் அழைக்கப்பட்டாள். இதிலிருந்தே சென்னை என்கிற பெயர் வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கிறது. பின்னர் 1640ம் வருடம் புனித ஜார்ஜ் கோட்டை கட்டத் தொடங்கியதும் கோவிலை அகற்ற அப்போதைய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள். உடனே முத்துமாரி ஆச்சாரி என்பவர் இப்போதுள்ள தம்புச் செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோயிலை நிர்மாணித்தார். ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952 ம் ஆண்டு இந்த வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து உள்ளம் உருகுதடா என்ற பாடலை பாடினார். இதுவே பின்னாளில் உள்ளம் உருகுதைய்யா என டி.எம்.எஸ் குரலில் தமிழகம் முழுவதும் ஒலித்தது. கோயில் கோபுரம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது.
தெற்கு நோக்கி படையெடுத்து வந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 3 அக்டோபர் 1677ம் வருடம் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளார். இதற்கான குறிப்பு இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் வேலை பார்த்த போது தினமும் காளிகாம்பாளை வந்து வணங்குவார். யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடலை அவர் காளிகாம்பாளை மனதில் நினைத்தே எழுதினார். மச்ச புராணம் வாமன புராணம் கூர்ம புராணம் லிங்க புராணம் பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் பூந்தேர் கிண்ணித்தேர் வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்த கோவிலில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும் எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை. பாரதியார் பன்றிமலை சுவாமிகள் காயத்ரி சுவாமிகள் தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள் ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன் குபேரன் விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி வழிபட்டுள்ளனர். நாகலோக கன்னிகளும் தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி வைரவன்பட்டியில் மெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவர் திருமெய்ஞான சுவாமி லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மாள் பாகம்பிரியாள். பெரிய பிரகாரம் நந்தி மண்டபம் உள்பிரகாரம் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என முழுவதும் கற்றளியில் அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் பைரவரே பிரதான மூர்த்தியாக இருக்கிறார்.
கி.பி.985 -1014ல் அரசு புரிந்த முதலாம் இராஜராஜ சோழன் மாமன்னர் வழிபட்டது. பிரபாகரன் என்ற நூலை போதிக்கும் அந்தணர்களுக்கு அறக்கொடை நல்கியது. மாறவர்மன் குலசேகர பாண்டியன் சுந்தரபாண்டியன் விஜய நகர அரசர்கள் புஜபலதேவன் அச்சுத தேவராயன் மதுரை விசுவநாத நாயக்கர் தஞ்சை ரகுநாத நாயக்கர் ஆகியோர் கால கல்வெட்டுகளும் தான சாசனங்களும் இங்குள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலத்தில் சிவபெருமான் ஏகபுஷ்பப் பிரியநாதன் என்னும் திருப்பெயரோடு அருளுகிறார். அம்பாள் தாயினும் நல்லாள். இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் அதிகார நந்தி இறைவனை தரிசிக்கிறார். இங்கு தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். உமா மகேஸ்வரர் பைரவர் மகாலட்சுமி சண்டிகேஸ்வரர் சூரியன் நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளார்கள். இந்த மலையில் வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் மலர் ஒன்று பூக்கும். அந்த மலரின் பெயர் தேவ அர்க்கய வள்ளிப்பூ. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ஆனால் இந்த தேவ அர்க்கய வள்ளிப்பூ என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்கிறார். தேவ அர்க்கய வள்ளிப்ப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால் இந்த சிவபெருமானின் திருப்பெயர் ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. பிருகு முனிவரும் அகத்தியரும் அவரது மனைவி லோபமுத்ராவும் இந்த இறைவனையும் இறைவியையும் தரிசித்துள்ளார்கள். கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் தேவ அர்க்கவல்லி என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். இதனைக் கேட்ட பிருகு மகரிஷி அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்தார். சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை குளக்குடி நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.
திருத்தியமலையில் அப்போது மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தார்கள். பிருகு மகரிஷி அகத்திய முனிவரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்து கொண்டு பல காலம் அங்கு தவமிருந்தார். ஒரு மகாசிவராத்திரி நாளில் மலையின் மீது மிகப்பெரிய மரமும் அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும் பறவைகளும் இல்லையென்றும் எனவே இன்று ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக லோபமாதாவிடமும் பிருகு முனிவரிடமும் கூறினார். அவ்வாறே மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் ஓம் நமச்சிவாய என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர். அகத்திய முனிவர் பறவைகளின் மொழியை அறிந்தவர் ஆதலால் தேவ அர்க்கவல்லி பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாக கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.
அகத்திய முனிவர் பிருகு முனிவரையும் லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது சுனைக்கு அருகே அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள். அப்போது சுனையில் தோன்றிய தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது. இந்த அரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார். அப்போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும் லோபமாதாவுக்கும் பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.
இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர் விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு இறுதியாக கிபி1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது. திருக்கோயில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.
இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஏரான் என்ற இடம். இங்கு விஷ்ணு கோவில் வராக மூர்த்தியுடன் கோவில் உள்ளது. தற்போது சிதிலப்பட்டு காணப்படும் இக்கோவில் கிபி 510 ம் நூற்றாண்டை சேர்ந்த்தாக இந்த கோவில் கருதப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குப்தப் பேரரசின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது. ஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மௌரியர்கள் சுங்கர்கள் சாதவாகனர்கள் சாகர்கள் நாகர்கள் குப்தர்கள் ஹூணர்கள் காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவில் சிதிலமடைந்து விஷ்ணுவின் சிலை உள்ளது. எதிரில் வராக மூர்த்தி சிலை திறந்த வெளியில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சிலை சுமார் 14 அடி நீளம் 5 அடி அகலம் மற்றும் 11 அடி உயரம் கொண்டது. இந்த சிலை இந்தியாவின் மிகப்பெரிய வராக சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சிலை 1185 முனிவர்களின் தலை முதல் கால் வரை முழுமையான உருவங்களை பன்னிரண்டு வரிசைகளில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வரிசை உருவங்கள் யூ வடிவில் வராகத்தின் உடலில் செதுக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வரிசைகளிலும் இரண்டு ஆயுதம் ஏந்திய முனிவர்களின் உருவங்கள் உள்ளன. மற்றவர்கள் ஒரு கையில் தண்ணீர் பாத்திரத்தையும் மற்றொரு கையில் அபய முத்திரை அல்லது விஸ்மயா முத்திரையுடன் உள்ளார்கள். வராக மூர்த்தியின் வலது தந்தத்தில் பூதேவியின் உருவம் உள்ளது. வராக மூர்த்தியின் முகத்தில் சரஸ்வதி சமபங்க தோரணையில் இடுப்பில் கைகளை ஊன்றியபடி நிற்கிறாள். காதுகளில் வித்யாதரர்கள் உள்ளார்கள். வராக மூர்த்தியின் கழுத்தில் இருபத்தெட்டு வட்டங்கள் கொண்ட மாலை உள்ளது. இருபத்தேழு வட்டங்களுக்குள் ஒரு ஆண் மற்றும் பெண் உருவம் உள்ளது. ஒரு வட்டத்தில் மட்டும் தேள் உருவம் உள்ளது. தொண்டை மற்றும் மார்புப் பகுதியில் நான்கு வரிசையில் ஆண் உருவங்கள் உள்ளது. மொத்தம் தொண்ணூற்றாறு வகையான உருவங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கு இடையில் மேலிருந்து நடுவில் தாமரையின் மீது விஷ்ணு நிற்கும் உருவம் உள்ளது. அவர் இரண்டு கைகளுடன் இருந்திருக்கிறார். தற்போது இரண்டு கைகளும் சிதிலமடைந்திருக்கிறது. மார்பின் மூன்றாவது வரிசையில் ஏழு கோள்களைக் குறிக்கும் ஏழு ஆண் உருவங்களும் இடதுபுறம் 2 கோள்களை குறிக்கும் வகையில் இரண்டு உருவங்கள் தாமரைகளை கையில் ஏந்தியவாறும் மீதமுள்ளவர்கள் தண்ணீர் பாத்திரத்தை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கின்றனர்.
வராகத்தின் தோள்களில் துருத்திக் கொண்டு இருப்பது போன்ற ஒரு கட்டை உள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் மேற்கில் வாசுதேவரும் தெற்கில் சிவனும் வடக்கே பிரம்மாவும் கிழக்கில் விஷ்ணுவும் உள்ளார். வராகத்தின் கால்கள் மற்றும் வால் பகுதியிலும் முன்கால்களில் ஆறு வரிசைகளிலும் பின்னங்கால்களில் மூன்று வரிசைகளிலும் முனிவர்கள் வரிசைகளாக உள்ளார்கள். வராகத்தின் கால்களுக்கு இடையில் பாம்புகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செதுக்கப்பட்டுள்ள கடலின் சித்தரிப்பு உள்ளது. வராகத்தின் கழுத்தின் கீழ் சமஸ்கிருதத்தின் 8 வரிகளில் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வராக மூர்த்தி அவதாரம் புனிதர்கள் மற்றும் அறிஞர்களைப் பாதுகாப்பதைக் குறிக்கும் படி சிலை செதுக்கப்பட்டுள்ளது.
மூலவர் கந்தசுவாமி. உற்சவர் முத்துக்குமார சுவாமி. தாயார் வள்ளி தெய்வானை. தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும் புத்தியும் ஒருகாலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும் இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். கந்தசுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும் கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும் பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.
வேளூர் மாரிச்செட்டியார் பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற இரு முருக பக்தர்கள் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் சென்னையில் இருந்து திருப்போரூர் வரை பாத யாத்திரை சென்று கந்தனைத் தரிசித்து வந்தார்கள். கிபி 1673ம் வருடம் மார்கழி மாதம் கிருத்திகை அன்று கந்தனை தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் செங்கண்மால் ஈஸ்வரன் கோயில் (பழைய மாமல்லபுரம் சாலை) அருகேயிருக்கும் குளக்கரையில் ஓய்வு எடுக்க அமர்ந்தவர்கள் அசதியில் தூங்கிவிட்டார்கள். அப்போது கனவில் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள். இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப்பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஓரு போலவே கனவு வந்தபடியால் வந்த சொன்னது முருகனே என்று மகிழ்ந்தவர்கள் சுற்றுலும் தேடிப்பார்த்தார்கள். அருகில் முருகனின் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும் வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள அருளுகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் செங்கல்லினால் கோயில் அமைத்தார்கள். பின்னர் கருங்கல்லால் கோயில் அமைக்க பக்தர்களால் நிச்சயித்து உண்ணாழி அந்தராளம் மகாமண்டபம் ஆகியவை கட்டினார்கள்.
கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.
ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.
இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம்.
கந்தசாமி கோயில் எனப்படும் கந்தகோட்டத்தின் 1858ம் வருட கல்வெட்டின் படி கோயிலின் வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பார்க் டவுனின் ராசப்ப செட்டித் தெருவில் எட்டு ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் கந்தசாமி என்றும் உற்சவர் முத்துக்குமாரசுவாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உள்ளேயே ஒரு தெப்பக்குளமும் உள்ளது. 1869 ஆம் வருடம் வையாபுரி செட்டியார் என்பவர் இக்கோயிலுக்கு 66 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். இவர் கோயிலுக்காக ஒரு தேர் செய்வித்தார். 1880ம் ஆண்டில் அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் நாராயணச் செட்டியார் என்பவருடன் சேர்ந்து கோயிலின் அருகே இருந்த நிலத்தைக் கோயிலுக்கு அளித்தனர். அங்கு தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டது. கோயிலின் ராஜகோபுரம் 1901ம் வருடம் காளிரத்தினச் செட்டியார் அளித்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையைக் கொண்டு எழுப்பப்பட்டது என மதராசபட்டினம் நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நரசய்யா.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நடந்த முகலாயர்கள் படையெடுப்பு ஒன்றில் கோயில்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. அப்போது பக்தர்கள் சிலர் திருப்போரூர் முருகன் சிலையைக் காக்கும் பொருட்டு புற்றுக்குள் மறைத்து வைத்தனர். சில காலத்திற்குப் பிறகு சிலை இருந்த இடம் தெரியாமல் புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டார்கள். இதுவே அந்த இரு முருக பக்தர்களின் கனவிலும் முருகப்பெருமான் சொல்லி சென்னைப் பட்டணத்திற்கு வந்த கதை என்று கோவில் புராண வரலாறு சொல்கிறது. வள்ளலார் கந்தசாமி முருகனை தனது திருவருட்பாவில் உருகி உருகிப் பாடியிருக்கிறார். அவர் சென்னையில் வாழ்ந்த நாட்களில் கந்தகோட்ட முருகனை தினமும் தரிசனம் செய்துள்ளார். ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும் என்ற பாடலில் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம் ஓங்கு கந்தவேளே என்று பாடியிருக்கிறார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகளும் பாம்பன் சுவாமிகளும் கந்தகோட்ட முருகனைப் பற்றி பாடியுள்ளனர்.
நாகபூசணி அம்மன் கோவில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிட்டத்தட்ட 14000 வருங்கள் பழமையானது ஆகும். இந்த கோவில் நாகர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் கட்டும் போது நாகலோகத்து நாகர்களும் தங்களால் இயன்ற வரை உதவி செய்திருக்கிறார்கள் என்று கோவிலின் புராண வரலாற்றில் உள்ளது. நாகபூசணி அம்மன் ஆலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் பரப்பவன் சல்லி என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்பு உருவங்களாகவே உள்ளன. நீள் உருளை வடிவத் திருமேனியில் அம்மன் எழிலாக காட்சி தருகின்றாள். சீறும் ஐந்துத் தலை நாகச்சிலை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்றும் காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள் பக்கம் அமைக்கப்பட்டுள்ளன. ஆலய பூஜைகள் கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. தல மரம் வன்னி தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும். இத்திருத்தலத்தில் 4 கோபுரங்களும் வசந்த மண்டபம் வாகன மண்டபம் கல்யாண மண்டபம் அன்னபூரணனேஸ்வரி அன்னதான மண்டபம் அமுதசுரபி அன்னதான மண்டபம் ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்க மண்டபம் முதலான 6 மண்டபங்களும் அமைந்துள்ளன.
நாகபூசணி அம்மனை நாகபாம்பு பூக்களைக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும் வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் கி.பி 1620 ம் ஆண்டு ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுகிறது. போர்ச்சுக்கீசியர் போர் தொடுக்கும் முன்பாக ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள் பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர். அம்மனை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர்கள் ஆட்சிக்குப் பின்பு ராமலிங்கம் ராமச்சந்திரர் என்பவர்களால் 1788 இல் கல்லுக் கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச ராஜ கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நாகபூசணி அம்மன் கோயில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர் நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்துத்தலை நாகச்சிலை பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்துள்ளார் அதற்கான சான்றுகள் உள்ளது.
நாகபூசணி அம்மனை வழிபட நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது அம்மனுக்கு அர்ச்சனை செய்ய புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம் கடலின் நடுவில் இருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும் நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்ற கருடனிடம் பேசினார். நாகம் அம்மனை வழிபடுவதற்காச் செல்கிறது எனவே அதனை தடுக்க வேண்டாம் என்று வேண்டினான். அதற்கு கருடன் ஐயா அம்மன் மீது உங்களுக்கு பக்தி இருக்குமானால் கப்பலில் உள்ள உங்கள் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர ஒப்புக்கொண்டால் நானும் உங்களுக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன் என்றது. கருடன் கூறியதற்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும் சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது. நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும் கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம்.
நாகபூசணி அம்மனை இந்திரன் சில காலம் பூஜித்து தனது சாபத்தை போக்கிக் கொண்டான். அதன் பின் அம்மனுக்கு சிறிய ஆலயம் கட்டினான். மகாபாரதத்தில் அர்ஜூனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர இங்கு வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றான். இதற்கு சான்றாக அர்ஜூனனின் மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்ற பெயர் உள்ளது. மணிமேகலை காவியத்தில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான் இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டை மண்டலத் தேசத்தவரும் ஆவர்கள். நாகபூசணி அம்மன் கோவிலுக்கு பல பரம்பரைக் கதைகளோடும் பல புராண இதிகாசங்களோடும் பல ஆயிரம் வருடங்களுக்கான வரலாறுகள் இருப்பதை அறியலாம். நாகர்கோயில் நாகதேவன்துறை நாகதீவு போன்ற பெயர்களும் இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் நாக வழிபாட்டு முறையும் இக்கூற்றை உறுதி செய்கின்றது.
இவ்வாலயத்திற்கு 1951 1963 1983 1998 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இப்போதும் அடிக்கடி பல நாகங்கள் கோவிலுக்கு வந்து செய்கிறது. நாகங்கள் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தூரத்திலும் உள்ள நயினா தீவில் இக்கோவில் அமைந்துள்ளது.
நாகபூசணி அம்மன் கோவில் தேர்:
நாகபூசணி கோவிலின் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வுகள் கிருஷ்ணர் அஷ்டலட்சுமி நாகம் புளியந்தீவில் பூப்பறித்து வரும் போது கருடன் சண்டையிட்டது மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் தேரில் நாகபூசணி பவனிவர தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில் எட்டுத் திசைகளிலும் மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.
இலக்கியங்கள்:
யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய மனோன்மணி மாலை மற்றும் அமரசிங்கப்புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல் மற்றும் வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம் மற்றும் வரகவி நாகமணிப்புலவர் எழுதிய நயினை மான்மியம் மற்றும் வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய திருநாக தீபப் பதிகம் மற்றும் க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம் மற்றுப் நயினைத் தீவு சுவாமிகள் கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் நாகபூசணி அம்மனைப் புகழ்கின்றன.
தொன்மைச் சிறப்பு:
ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் நயினா தீவை மணிபல்லவம் என்று குறிப்பிடுகிறது. குலோதர மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும் படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும் பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது.
ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. இங்குள்ள இறைவனின் பெயர் தீர்த்தகிரீஸ்வரர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள தல விருட்சம் பவளமல்லி மரம். இந்த தீர்த்தமலையில் இருந்து பல நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் தீர்த்த மலைக்கு கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. மேற்கே ராம தீர்த்தம் வாயு தீர்த்தம் வருண தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது. மேலும் அக்னி தீர்த்தம் கௌரி தீர்த்தம் குமாரா தீர்த்தம் அகத்தியர் தீர்த்தங்கள் இமய தீர்த்தம் கந்த தீர்த்தம் உள்ளன. இதில் ராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை. தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.
வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினார். இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டு வரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர் தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம் பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர் சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ராம தீர்த்தம் என்று பெயர். இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான் தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால் கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது அனுமந்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ராம தீர்த்தம்
மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. ராமரால் உருவாக்கப்பெற்ற இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ ராம ஜெயம் என்று தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
அனுமன் தீர்த்தம்
அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.
குமார தீர்த்தம்
முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும் என்று புராணம் கூறுகிறது.
கௌரி தீர்த்தம்
இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் வடிவாம்பிகை இறைவனை மணந்து இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றாள் என புராணம் கூறுகிறது. இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டும் பருகியும் இறைவனையும் இறைவியையும் வணங்கினால் சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று புராணம் கூறுகிறது.
அகத்திய தீர்த்தம்
அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் (அல்சர்) நீங்கி வயிற்று வலியும் குணமடையும் என்று புராணம் கூறுகிறது.
அக்னி தீர்த்தம்
அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று புராணம் கூறுகிறது.
தீர்த்தகிரிசுவரர் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்தார் என்று கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். தீர்த்தகிரிசுவரர் கோவில் ஏழாம் நூற்றாண்டில் சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. ராஜேந்திரச் சோழன் தினந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து அவர் கையாலே சிவபூசை செய்வார் என்று கல்வெட்டுகளின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் சிறப்புப் பாயிரம் சாற்றுக்கவி பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன. என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன. கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.