குருவாயூரப்பன் அருள்

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஊர் ஒரே நாமம் மூன்று ஆலயங்கள்

ஒரு ஊர் ஒரே நாமம் மூன்று ஆலயங்கள்

கீழச்செவல் கிராமத்திற்கும் சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி சித்தர் காட்டில் உள்ளது. இங்கு அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால் தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில் 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள் அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது. ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம் ஆதி தலம் ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில் தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரே இடத்தில் ஆற்றின் நடுவிலும் ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கிறது.

கோமதி அம்பாள் சமேத என்ற அங்குண்டீசுரமுடைய நயினார் ஆலயம் தாமிரபரணி ஆற்றங் கரையில் கீழச்செவல் கிராமத்திற்கும் சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி சித்தர் காட்டில் உள்ளது. இறைவனுக்கு கந்தவேஸ்வரர் சித்தீஸ்வரர் அங்குண்டீஸ்வரர் என்ற பெயரும் உள்ளது. பரசுராமர் பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. சித்தபுரி வேதபுரி ரிஷிபுரி சித்தர்காடு சித்தவல்லி சித்தமல்லி சுத்தமல்லி என்று பல பெயர்களைக் கொண்டது இந்த இடம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் பல சித்தர்கள் முனிவர்கள் தேவர்கள் வழிபட்டுள்ளார்கள். பதினெண் சித்தர்களும் இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீசந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக சித்தீஸ்வரரை வணங்கி அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ஆதி மருந்தீஸ்வரர் என்ற பெயரும் கொண்டுள்ளார். தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பார்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்று கொண்டு நான் உம்மை எப்படி வழிபடுவது? என வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில் இங்கும் (வடகரையில்) நான் உண்டு என்று அந்த அசரீரி சொன்னது. எனவே தான் வடகரையில் உள்ள சிவனும் அங்குண்டீஸ்ரமுடையார் என பெயர் பெற்றார்.

கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுய உருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா மலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் விட்டது. கந்தர்வன் கண் விழித்த போது ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது. ரிஷிபத்தினி கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான் கந்தர்வன். அப்போது ஈசன் சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் கந்தவேஸ்வரர் என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன ராசி பரணி நட்சத்திரம் அன்று தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்கிறான்.

ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர் காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். சித்தர் காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு சித்தீஸ்வரர் என்று பெயர். ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகை மலை வந்தார். அங்கு கயிலை நாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து நின்றபடி ஈசனே நான் உம்மை கயிலாய மலையில் உள்ள படியே பூஜிக்க வேண்டும் என்று வேண்டினார். அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன் அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் இறைவா தாங்கள் கயிலாயநாதர். பனி படர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் அதே போல் நீங்கள் தான் தோன்றினீர்களா? என்று கேட்டார். அப்போது அங்கும் நான் உண்டு இங்கும் நான் உண்டு ஒரு அசரீரி வாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு அங்குண்டீஸ்வரர் என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார்.

ஹயக்ரீவரின் சாபத்தால் குதிரை முகம் கொண்ட பெண் இக்கோவிலில் வழிபட்டு சாப விமோசனமும் ஞானமும் பெற்றதால் குரு சாப நிவர்த்தி தலமாகவும் இது திகழ்கிறது. இந்த ஆலயம் திருநெல்வேலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாளையங் கோட்டை சேரன் மகாதேவி சாலையில் மேலச்செவல் என்னும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நயினார் குளம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரின் தாமிர பரணி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் உள்ளது.

சாயா சோமேஸ்வரர் ஆலயம்

மூலவர் சோமேஸ்வரர் லிங்க வடிவில் இருக்கிறார். இங்கு மூன்று கருவறைகள் ஃ வடிவில் அமைந்துள்ளன. சிவன் விஷ்ணு சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இக்கோவிலின் மூன்று கருவறைகளில் ஒன்றுக்கு பிரம்ம கருவறை என்றும் மீதி இரண்டுக்கு லங்க கருவறை என்றும் பெயர் என்று கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. பிரதான கோவிலில் உள்ள சோமேஸ்வரர் லிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் இருப்பதால் இந்த கோவிலுக்கு சாயா சோமேஸ்வரர் கோயில் என்று பெயர் வந்தது. சாயா என்பது நிழலை குறிக்கும். இந்த கோயிலுக்கு எதிரில் ரங்க மண்டபம் என்ற அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தூண்களை கொண்ட ஆச்சர்யமான சிற்ப வேலைப் பாடுகள் உள்ளன. இது நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைந்துள்ளது. இது திரிகூடலாயம் (மூன்று சன்னதி வளாகம்) என்று அழைக்கப்படுகிறது. மூன்று ஆலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம் இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது. இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். அதன் படியே சூரியனுக்கான சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை.

அறிவியலின் படி எந்த ஒரு பொருளின் மீது சூரிய ஒளி பட்டாலும் அந்த பொருளின் நிழல் அதற்கு முன்பு விழும் பின் சூரியன் நகர நகர அந்த நிழலும் நகரும். ஆனால் இந்த கோயிலில் லிங்க கருவறையில் லிங்கத்தின் பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. ஆனால் காலையில் எந்த இடத்தில் இந்த நிழல் இருந்ததோ சூரியன் மறையும் வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த நிழல் சூரியனின் நகர்விற்கேற்ப நகர்வதில்லை. இந்த கருவறைக்கு முன் நான்கு தூண்கள் உள்ளன இதில் எந்த தூணின் நிழல் கருவறைக்குள் விழுகிறது என்றும் தெரியவில்லை. எந்த தூணின் பின் நின்றாலும் நம் நிழல் விழாமல் தூணின் நிழலே விழுகிறது. ஆனால் பிரம்ம கருவறைக்கு முன் நின்று பார்த்தால் பிரம்மனுக்கு நான்கு தலை என்பதை சொல்லும் விதமாக நம் நிழல் நான்காக விழுகிறது அதுவும் எதிர் திசையில் விழுகிறது. இது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

கோவிலின் கிழக்கே வற்றாத திருக்குளம் உள்ளது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும் தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியபடி சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு சூரியன் நந்திகள் அம்பாள் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பின் சிதைவால் அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கருவறை முன்புறம் விநாயகர் முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார். சிவன் விஷ்ணு சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம் ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் விநாயகர் குமாரசுவாமி சாயா சோமேஸ்வரர் மகாவிஷ்ணு சூரியன் யோகினி மாதா நடராஜர் பைரவர் காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தல மரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றி உள்ளார்.

கோவில் ஆலய வளாகத்தில் 7 நந்திகள் முகலாயர்களால் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன. அதில் முதல் நந்தியை கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால் உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று இருக்கும். இது முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயில் முக்கோன வடிவிலும் கருவறை விமானம் பிரமிடு அமைப்பிலும் கட்டப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்களும் குண்டூரு சோழர்களும் காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது. ஐதராபாத்திலிருந்து 100 கிமீ தொலைவில் தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா அருகில் அமைந்துள்ளது சாயா சோமேஸ்வரர் கோயில். பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்.

சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாண்டவர் மலை பைரவேசுவரர்

கர்நாடகாவில் சக்லேஷ்பூர் அருகே உள்ள மேகனகட்டேவில் உள்ள பைரவேஸ்வரா கோவில் பழமையான கோவில். இந்த கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று புராண கதைகள் கூறுகின்றன. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் விளிம்பில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கெம்புஹோல் மற்றும் குமாரதாரா என்ற இரண்டு ஆறுகள் இங்கிருந்து தோன்றுகின்றன. இரண்டு ஆறுகளும் நேத்ராவதி ஆற்றில் இணைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் மலை மீது உள்ள மலை என பல மலைகளால் சூழப்பட்டுள்ளது 2.5 கிமீ மலையேற்றம் மூலம் கோயிலை அடையலாம். வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதம் அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. அப்போது அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு கூடுகிறார்கள். துரியோதனனுடனான பகடை விளையாட்டில் தோற்ற பிறகு பாண்டவர்கள் 12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டனர்.
தலை மறைவாக வாழும் அங்ஞாதவாசத்தில் ஒரு வருடம் வாழ்ந்தார்கள். அந்த இறுதி ஆண்டில் பாண்டவர்கள் இங்கு சில காலம் தங்கியிருந்தார்கள். அப்போது சிவபெருமானை வழிபடுவதற்காக இங்கு ஒரு கோவிலைக் கட்டினார்கள். இந்த கோவிலை சுற்றிலும் இருள் சூழ்ந்ததும் காட்டு விலங்குகள் இங்கு சுற்றித் திரிகின்றன. ஆகையால் கோவிலில் வழிபட செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதிசங்கரர் இங்கு வழிபட்டிருக்கிறார்.

பாதாமி குகைக்கோயில்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதாமி நகரில் பாதாமி குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. கர்நாடகத்தின் இரட்டை நகரங்களான ஹூப்ளி தார்வாடுக்கு வடகிழக்கில் 110 கிமீ தொலைவில் இக்கோயில்கள் உள்ளன. வரலாற்று நூல்களில் வாதாபி வாதாபிபுரி வாதாபிநகரி என்ற பெயரில் பாதாமி சாளுக்கியரின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் விளங்கியது. இரு செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையே அமைந்த பள்ளத்தாக்கின் இறுதிப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. பாதாமி நகரின் தென்கிழக்குப் பகுதியில் செங்குத்தான மலைச் சரிவில் இக்குகைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. இங்கு நான்கு குகைக் கோயில்கள் உள்ளன. முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.

முதல் இரண்டு குகைக் கோயில்களிலும் காணப்படும் கலை வேலைப்பாடுகள் ஆறாம் ஏழாம் நூற்றாண்டின் வடதக்காண பாணியிலும் மூன்றாவது கோயிலில் நாகர மற்றும் திராவிடக்கலை ஆகிய இரு பாணிகளிலும் உள்ளன. மூன்றாம் குகையில் நாகர திராவிட பாணிகளின் கலவையான வேசரா பாணி வேலைப்பாடுகளும் கர்நாடாகத்தின் அதிமுற்கால வரலாற்றுச் சான்றுகளாக அமையும் எந்திர சக்கர வடிவ வேலைப்பாடுகளும் வண்ணச் சுவரோவியங்களும் காணப்படுகின்றன. முதல் மூன்று குகைகள் இந்து சமயம் தொடர்பான சிற்பங்களை குறிப்பாக சிவன் திருமால் குறித்த சிற்பங்களையும் நான்காவது குகை ஜைனத் திருவுருங்களையும் கருத்துக்களையும் சித்தரிக்கின்றன. பாதாமியில் புத்தர் கோயிலமைந்த இயற்கைக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகைக்கோயிலுக்குள் தவழ்ந்துதான் செல்ல முடியும்.

நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும் இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும். முதன்மையான நான்கு குடைவரைக் குகைக்கோயில்கள் வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் 27 சிற்பங்களுடைய மற்றொரு குகையொன்று 2013 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் இக்குகையிலிருந்து நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. விஷ்ணு மற்றும் பிற இந்துக் கடவுளரின் சிற்பங்களுடன் தேவநாகரியில் அமைந்த கல்வெட்டும் இங்குள்ளது. இச்சிற்பங்களின் காலம் அறியப்படவில்லை.

அகத்தியர் கோவில்

அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பிரதான வீதியில் அமைந்துள்ளது கோவில். கிழக்கு பார்த்த தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். கருவறையில் அகத்தியர் நின்ற கோலத்தில் வலக்கை சின்முத்திரை காட்ட இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை ஜடாமகுடம் மார்பில் பூணூல் மீசை தாடியும் அமைந்துள்ளது. இவருக்கு எதிரில் நந்தியும் பிரகாரத்தில் சண்டிகேசுவரரும் இருக்கின்றார்கள். உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் பூச்செண்டு ஏந்தியுள்ளார். நவராத்திரி விழாவின் போது 9 நாட்களும் லோபமுத்திரைக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. ஆலய முகப்பில் நந்தி கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும் மேற்கே அகத்தியர் லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன. அடுத்து நடராஜர் சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. சிவனுக்குரிய பூஜை முறைப்படியே அகத்தியருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜை நடக்கிறது.

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர் பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்து விட்டு பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். அகத்தியர் அவரிடம் தான் ஒரு புளிய மரத்தடியில் காத்திருப்பதாகச் கூறினார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன் பின் சிவபக்தர் சாதமும் அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர் அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில் அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்விற்கு சான்றாக இக்கோவிலில் இன்றும் அன்னம் படைத்தல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொண்டதற்கான சான்றாக இந்த காலடித்தடம் இருக்கிறது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக அகத்தியர் விளங்கினார் என்ற செய்தி கிபி 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில் வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன் என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டிய மன்னருக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளலாம்.

பூதநாதா கோவில்

கர்நாடகாவில் உள்ள பாதாமியில் பழமையான 7 ஆம் நூற்றாண்டு கோவில். பூதநாதர் கோயில் உயர்ந்த விமானத்துடன் உள்ளது. பூதநாதர் என்னும் பெயர் பூதகணங்களின் தலைவன் என்று பொருள்பட்டு சிவனைக் குறிக்கும். இது 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. சாளுக்கியர்கள் இந்த இடத்தில் கட்டிய கோயில்களில் இறுதியானதாக இக்கோவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது ஏனெனில் இக்கோவிலைச் சுற்றியுள்ள கோயில்கள் ராஷ்டிரகூடர் காலத்தவையாக உள்ளது.

துர்கா கோவில்

கர்நாடகாவில் உள்ள ஐஹோலில் அமைந்துள்ளது. அய்கொளெ என்றும் அழைக்கப்படுகிறது. ஐயவோளே மற்றும் ஐயபுரா என்ற பெயர்கள் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில். 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சாளுக்கியர்களின் வம்சத்தால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் பெயர் இடம் பெற்றுள்ளதால் இதன் காலம் 733-746 க்கு இடைப்பட்டதாக இருக்க கூடும் என வரையறுக்கின்றனர். இது ஐஹோளில் சைவம் வைணவம் சக்தி மற்றும் வேத தெய்வங்களின் கலைப்படைப்புகளை சித்தரிக்கும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டுள்ளது. கிழக்குப் பார்த்து கட்டப்பட்ட இக்கோவில் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பின்பக்கத்தின் வெளிச் சுவரும் உட்சுவரும் அரைவட்ட வடிவில் அமைந்து தூங்கும் யானையின் பிருஷ்டம் போல காணப்படுகின்றன.

கர்லா குகைக் கோயில்

பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது. இப்பௌத்தக் குடைவரைக் கோயில்களை மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 160ல் எழுப்பினார். இக்குகைக் கோயில் கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பசால்ட் பாறையை அகற்றி இதுவரை கட்டப்பட்ட பிரமாண்டமான குகைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 148 அடி நீளமும் 46 அடி உயரமும் உடையது. நுழைவாயிலில் சிங்க சிற்பங்களால் முடிசூட்டப்பட்ட இரண்டு 50 அடி உயரமான தூண்கள் உள்ளன. வளாகத்தில் பிரதான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. கர்லா குகைகளின் குடைவரைக் கோயில்களின் வளாகம் ஒளியும் காற்றும் புகும்படியான கற்களால் ஆன ஜன்னல்கள் கொண்டுள்ளது.

இதன் முதன்மைக் குகையில் கிமு முதல் நூற்றாண்டில் பிக்குகள் பிரார்த்தனை செய்ய 14 மீட்டர் உயரம் 45 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண்களில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிங்கம் யானை போன்ற விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. பிக்குகள் தங்குவதற்கான இடங்கள் இக்குகை வளாகத்தில் குடையப்பட்டுள்ளது. குகைகள் வளைவுகளுடன் கூடிய நுழைவு வாயில்கள் கொண்டது. இங்குள்ள தூண்களில் இக்குடைவரைக் குகைகளை எழுப்பதற்கு நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது. குகையின் வெளிமுகப்பில் உள்ள மரச்சிற்ப வளைவுகளில் சிக்கலான விவரங்கள் உள்ளன. குகையின் மையப்பகுதியில் உள்ள பெரிய லாட வடிவ தோரணத்தில் அழகிய பூவணி வேலைபாடுகள் கொண்டுள்ளது. மூடிய கல் முகப்பிற்கும் தோரணத்திற்கும் இடையே அசோகத் தூண் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை தேக்கி வைத்து குடிப்பதற்கு பாறையை குடைந்து கிணறு போன்று வெட்டப்பட்டுள்ளது.

இவ்விகாரை 15 மீட்டர் உயரமுள்ள இரண்டு பெருந்தூபிகளுடன் இருந்தது. அதில் ஒன்று சிதிலமைடந்துள்ளது. நன்குள்ள வேறு ஒரு தூபியில் மும்பைப் பகுதியின் கோலி இன மக்கள் வணங்கும் தெய்வமான இக்வீராவின் சிற்பம் காணப்படுகிறது. ஒரு பெரிய குதிரைவாலி வளைவில் அமைக்கப்பட்ட சூரியன் சாளரத்தில் ஒளிரும் ஒளி அற்புதமாக பரவுகிறது. சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரு காலத்தில் ஓவியங்களும் இருந்தன.