பாதாமி குகைக்கோயில்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதாமி நகரில் பாதாமி குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. கர்நாடகத்தின் இரட்டை நகரங்களான ஹூப்ளி தார்வாடுக்கு வடகிழக்கில் 110 கிமீ தொலைவில் இக்கோயில்கள் உள்ளன. வரலாற்று நூல்களில் வாதாபி வாதாபிபுரி வாதாபிநகரி என்ற பெயரில் பாதாமி சாளுக்கியரின் தலைநகரமாக 6 ஆம் நூற்றாண்டில் விளங்கியது. இரு செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையே அமைந்த பள்ளத்தாக்கின் இறுதிப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. பாதாமி நகரின் தென்கிழக்குப் பகுதியில் செங்குத்தான மலைச் சரிவில் இக்குகைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. இங்கு நான்கு குகைக் கோயில்கள் உள்ளன. முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.

முதல் இரண்டு குகைக் கோயில்களிலும் காணப்படும் கலை வேலைப்பாடுகள் ஆறாம் ஏழாம் நூற்றாண்டின் வடதக்காண பாணியிலும் மூன்றாவது கோயிலில் நாகர மற்றும் திராவிடக்கலை ஆகிய இரு பாணிகளிலும் உள்ளன. மூன்றாம் குகையில் நாகர திராவிட பாணிகளின் கலவையான வேசரா பாணி வேலைப்பாடுகளும் கர்நாடாகத்தின் அதிமுற்கால வரலாற்றுச் சான்றுகளாக அமையும் எந்திர சக்கர வடிவ வேலைப்பாடுகளும் வண்ணச் சுவரோவியங்களும் காணப்படுகின்றன. முதல் மூன்று குகைகள் இந்து சமயம் தொடர்பான சிற்பங்களை குறிப்பாக சிவன் திருமால் குறித்த சிற்பங்களையும் நான்காவது குகை ஜைனத் திருவுருங்களையும் கருத்துக்களையும் சித்தரிக்கின்றன. பாதாமியில் புத்தர் கோயிலமைந்த இயற்கைக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகைக்கோயிலுக்குள் தவழ்ந்துதான் செல்ல முடியும்.

நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும் இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும். முதன்மையான நான்கு குடைவரைக் குகைக்கோயில்கள் வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் 27 சிற்பங்களுடைய மற்றொரு குகையொன்று 2013 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் இக்குகையிலிருந்து நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. விஷ்ணு மற்றும் பிற இந்துக் கடவுளரின் சிற்பங்களுடன் தேவநாகரியில் அமைந்த கல்வெட்டும் இங்குள்ளது. இச்சிற்பங்களின் காலம் அறியப்படவில்லை.

அகத்தியர் கோவில்

அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் திருநெல்வேலியிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பிரதான வீதியில் அமைந்துள்ளது கோவில். கிழக்கு பார்த்த தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். கருவறையில் அகத்தியர் நின்ற கோலத்தில் வலக்கை சின்முத்திரை காட்ட இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை ஜடாமகுடம் மார்பில் பூணூல் மீசை தாடியும் அமைந்துள்ளது. இவருக்கு எதிரில் நந்தியும் பிரகாரத்தில் சண்டிகேசுவரரும் இருக்கின்றார்கள். உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் பூச்செண்டு ஏந்தியுள்ளார். நவராத்திரி விழாவின் போது 9 நாட்களும் லோபமுத்திரைக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. ஆலய முகப்பில் நந்தி கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும் மேற்கே அகத்தியர் லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன. அடுத்து நடராஜர் சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. சிவனுக்குரிய பூஜை முறைப்படியே அகத்தியருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜை நடக்கிறது.

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர் பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்து விட்டு பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். அகத்தியர் அவரிடம் தான் ஒரு புளிய மரத்தடியில் காத்திருப்பதாகச் கூறினார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன் பின் சிவபக்தர் சாதமும் அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர் அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில் அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்விற்கு சான்றாக இக்கோவிலில் இன்றும் அன்னம் படைத்தல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொண்டதற்கான சான்றாக இந்த காலடித்தடம் இருக்கிறது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக அகத்தியர் விளங்கினார் என்ற செய்தி கிபி 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில் வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன் என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டிய மன்னருக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளலாம்.

பூதநாதா கோவில்

கர்நாடகாவில் உள்ள பாதாமியில் பழமையான 7 ஆம் நூற்றாண்டு கோவில். பூதநாதர் கோயில் உயர்ந்த விமானத்துடன் உள்ளது. பூதநாதர் என்னும் பெயர் பூதகணங்களின் தலைவன் என்று பொருள்பட்டு சிவனைக் குறிக்கும். இது 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. சாளுக்கியர்கள் இந்த இடத்தில் கட்டிய கோயில்களில் இறுதியானதாக இக்கோவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது ஏனெனில் இக்கோவிலைச் சுற்றியுள்ள கோயில்கள் ராஷ்டிரகூடர் காலத்தவையாக உள்ளது.

துர்கா கோவில்

கர்நாடகாவில் உள்ள ஐஹோலில் அமைந்துள்ளது. அய்கொளெ என்றும் அழைக்கப்படுகிறது. ஐயவோளே மற்றும் ஐயபுரா என்ற பெயர்கள் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில். 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சாளுக்கியர்களின் வம்சத்தால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் பெயர் இடம் பெற்றுள்ளதால் இதன் காலம் 733-746 க்கு இடைப்பட்டதாக இருக்க கூடும் என வரையறுக்கின்றனர். இது ஐஹோளில் சைவம் வைணவம் சக்தி மற்றும் வேத தெய்வங்களின் கலைப்படைப்புகளை சித்தரிக்கும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டுள்ளது. கிழக்குப் பார்த்து கட்டப்பட்ட இக்கோவில் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பின்பக்கத்தின் வெளிச் சுவரும் உட்சுவரும் அரைவட்ட வடிவில் அமைந்து தூங்கும் யானையின் பிருஷ்டம் போல காணப்படுகின்றன.

கர்லா குகைக் கோயில்

பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது. இப்பௌத்தக் குடைவரைக் கோயில்களை மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 160ல் எழுப்பினார். இக்குகைக் கோயில் கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பசால்ட் பாறையை அகற்றி இதுவரை கட்டப்பட்ட பிரமாண்டமான குகைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 148 அடி நீளமும் 46 அடி உயரமும் உடையது. நுழைவாயிலில் சிங்க சிற்பங்களால் முடிசூட்டப்பட்ட இரண்டு 50 அடி உயரமான தூண்கள் உள்ளன. வளாகத்தில் பிரதான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. கர்லா குகைகளின் குடைவரைக் கோயில்களின் வளாகம் ஒளியும் காற்றும் புகும்படியான கற்களால் ஆன ஜன்னல்கள் கொண்டுள்ளது.

இதன் முதன்மைக் குகையில் கிமு முதல் நூற்றாண்டில் பிக்குகள் பிரார்த்தனை செய்ய 14 மீட்டர் உயரம் 45 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண்களில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிங்கம் யானை போன்ற விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. பிக்குகள் தங்குவதற்கான இடங்கள் இக்குகை வளாகத்தில் குடையப்பட்டுள்ளது. குகைகள் வளைவுகளுடன் கூடிய நுழைவு வாயில்கள் கொண்டது. இங்குள்ள தூண்களில் இக்குடைவரைக் குகைகளை எழுப்பதற்கு நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது. குகையின் வெளிமுகப்பில் உள்ள மரச்சிற்ப வளைவுகளில் சிக்கலான விவரங்கள் உள்ளன. குகையின் மையப்பகுதியில் உள்ள பெரிய லாட வடிவ தோரணத்தில் அழகிய பூவணி வேலைபாடுகள் கொண்டுள்ளது. மூடிய கல் முகப்பிற்கும் தோரணத்திற்கும் இடையே அசோகத் தூண் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை தேக்கி வைத்து குடிப்பதற்கு பாறையை குடைந்து கிணறு போன்று வெட்டப்பட்டுள்ளது.

இவ்விகாரை 15 மீட்டர் உயரமுள்ள இரண்டு பெருந்தூபிகளுடன் இருந்தது. அதில் ஒன்று சிதிலமைடந்துள்ளது. நன்குள்ள வேறு ஒரு தூபியில் மும்பைப் பகுதியின் கோலி இன மக்கள் வணங்கும் தெய்வமான இக்வீராவின் சிற்பம் காணப்படுகிறது. ஒரு பெரிய குதிரைவாலி வளைவில் அமைக்கப்பட்ட சூரியன் சாளரத்தில் ஒளிரும் ஒளி அற்புதமாக பரவுகிறது. சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரு காலத்தில் ஓவியங்களும் இருந்தன.

பரசுராமேசுவரர் கோவில்

ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கிபி 7 ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள் சிவபெருமானுக்காக அர்பணித்த கோவில் இது. இக்கோவில் மணற்கற்களால் கட்டப்பட்டதாகும். பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால் இக்கோவிலுக்கு பரசுராமேசுவரர் கோவில் எனப்பெயர் பெற்றது. சகஸ்ரலிங்கம் என்று சொல்லப்படும் ஒரே லிங்க திருமேனியில் செதுக்கப்பட்ட ஆயிரம் சிறு லிங்கங்கள் கொண்ட லிங்கம் கோவிலின் வெளியே உள்ளது. 40.25 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரங்கள் பல விமானங்களுடன் உள்ளது. கோவில் கோபுரத்தில் பிராம்மி மகேசுவரி கௌமாரி நாராயணி வராகி இந்திராணி சாமுண்டி ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. மகிசாசூரனை வதைத்த ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம் உள்ளது. பிள்ளையார் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களுக்கு இடையே சப்தகன்னியர் சிற்பங்கள் உள்ளது. கோவில் சுவர்களில் எட்டு கைகள் கொண்ட நாட்டியமாடும் அர்த்தநாரீஸ்வரர் கங்கா தேவி யமன் மற்றும் யாமியின் சிற்பங்கள் உள்ளது. கோவிலின் தெற்குச் சுவரில் விஷ்ணு இந்திரன் சூரியன் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. கையிலை மலையை தூக்கிய ராவணனுக்கு அருளும் சிவபெருமான் பார்வதி சிற்பம் மற்றும் தாண்டவமாடும் நடராசர் சிற்பங்களும் உள்ளது. கோவில் மண்டபத் தூண்களில் பூக்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. கோவில் கோபுரத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகளின் சிற்பங்கள் உள்ளது. கிபி 11 – 12ம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர்களின் படையினரால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. 1903 இல் இக்கோவில் மறுசீரமைத்துக் கட்டப்பட்டது.

நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் ஆகும். இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலில் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை.

லிங்க வடிவில் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கிமீட்டரும் உடுமலையில் இருந்து 18 கிமீ துாரத்திலுள்ள கொழுமம் ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள் மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசிய போது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும் வலை வீச அந்த கல் வந்து கொண்டே இருந்தது. பயந்து போன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய அம்பாள் ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான் என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார் மீனவர். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடிய போது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இந்த கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து மாரியம்மன் என பெயர் சூட்டி பூஜைகள் விழாக்கள் நடக்க ஆரம்பித்தன.

குதிரையாறும் அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால் கோட்டை மாரி என்றும் பெயர் உள்ளது. குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் குமணன் நகர் என அழைக்கப்பட்டது. இங்கு வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி கொழுமம் என்று ஆனது.

சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் உள்ள தூணில் உள்ள இந்த சிலையின் ஒரு காதில் 0.5 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குச்சியை செலுத்தினால் மற்றொரு காது வழியாக குச்சியின் மறுமுனை வெளிவருகிறது.