கணபதியின் மடியில் கிருஷ்ணன்

மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர்.  அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.

கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி கோட்டப்பன் என்னும் திருப்பெயரில் ஒரு பீடத்தில் அமர்ந்து ஒரு காலை மற்றொன்றின் மீது ஏற்றி தலையை சிறிது உயர்த்தி சாய்ந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். வசீகரமான பார்வையுடன் நான்கு கைகளிலும் பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. ஒளிரும் வெள்ளிக் கிரீடம் தலையில் உள்ளது. விஷ்ணு சிவலிங்கம் மற்றும் தேவி சிலைகளும் இதே சன்னதியில் செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர்கரா இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முள்ளூர்கர பஞ்சாயத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான இருநிலம்கோட்டில் அமைந்துள்ளது. பிரதான சாலைக்கு மிக அருகில் பழமையான சிவன் கோவில் இது. இது கேரள அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இக்கோவில் குகைக் கோயிலாக விளங்கி வருகின்றது. ஒரு குகைக்குள் ஒரு சிறிய குன்றின் கீழ் விளிம்பில் பாறையில் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை இருக்கும் குன்று 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திடமான பாறைகளுடன் அமைந்துள்ளது.

இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சில கிராமவாசிகள் தற்செயலாக இதைக் கண்டுபிடித்தனர். ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது ஒரு பெண் தொழிலாளி குகைக்குள் சென்றார். அங்கே அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தாள். அப்போது அவள் விரலில் ஒரு சிவப்பு திரவத்தைக் கண்டு தன் கை வெட்டப்பட்டு இரத்தம் வருகிறது என்று பயந்து தன் கையில் காயத்தை தேடினாள். கையில் காயங்கள் ஒன்றும் இல்லை. சிகப்பு திரவம் வரும் இடத்தை தேடினாள். பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்திய பாறைப் பகுதியைக் கவனித்தாள். அந்த திரவம் மெதுவாக துளிதுளியாக பாறையில் இருந்து வெளியேறுவதைக் கண்டாள். அவளின் பதட்டம் அதிகரித்தது. அவள் கிராம மக்களிடம் ஓடிச் சென்று நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னாள். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் பாறைத் தளத்தைக் கண்டு பிடித்து கவனமாகப் பார்த்தார்கள். அதே திரவம் வெளி வருவதைக் கண்டார்கள். புதர்களில் இருந்த புல் மற்றும் புதர்களை மெதுவாகவும் கவனமாகவும் அகற்றத் தொடங்கினார்கள். இறுதியில் தட்சிணாமூர்த்தி தெய்வத்தின் முழு வடிவத்தைக் கண்டதும் திகைத்து பரவசத்தில் ஆழ்ந்தனர். கூப்பிய கரங்களுடன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தி பூஜைகள் செய்தார்கள். பிரதான கோவிலுக்கு மிக அருகில் சிறிய தேவி கோவில் உள்ளது. இங்கு வழிபடப்படும் அம்மன் கந்தன்காளி என்று அழைக்கப்படுகிறார்.

திருமூவலூர் கோவில்

மூலவர் புண்ணாகீஸ்வரர் வேறு பெயர்கள் மார்க்கசகாயேசுவரர் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல். அம்பாள் மங்களநாயகி சவுந்தர நாயகி. இத்தலத்தில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு தனி சன்னிதி உள்ளது. இச்சன்னிதியின் கருவறைச் சுவரில் வெளிப் புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அன்னையுடன் மங்களாம்பிகை என்ற அம்பாளுக்கும் தெற்கு நோக்கிய தனி சன்னிதி அமைந்துள்ளது. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்தரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும் லலிதா திரி சடையும் சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது. ஆலய தல விருட்சம் புன்னை மரம். தீர்த்தம் சந்திர புஷ்கரணி துர்கா புஷ்கரணி மற்றும் உபமன்யு முனிவர் வழிபட்ட உபமன்யு கூபம் என்னும் கிணறு காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்த கட்டம் ஆகியவைகளாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்தில் ராஜகோபுரத்திற்கு வெளிப்புறம் விநாயகர் முருகன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் உயர்ந்த கொடி மரமும் நான்கு திக்குகளை நோக்கும் விதமாக வேத நந்திகளை நான்கு பக்கமும் கொண்ட பலிபீடமும் அமைந்துள்ளது. இதுபோன்ற பலிபீட அமைப்பு வேறெந்த ஆலயத்திலும் இல்லை. இறைவனை நோக்கியவாறு அதிகார நந்தி அருள்பாலிக்கிறார்.

தாரகாசுரனின் மைந்தர்களான தாருகாட்சகன் கமலாட்சகன் வித்யுன்மாலி ஆகிய மூவரும் தந்தையைப் போலவே கடுந்தவம் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றனர். அந்த அசுரர்கள் மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மன் அளித்தார். அந்தரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட அந்த திரிபுரங்களுக்குள்ளும் சோலைகள் சிவாலயங்கள் குளங்கள் போன்ற வசதிகள் இருந்தன. கற்பக விருட்சமும் காமதேனும் அங்கிருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றின. தேவதச்சனான மயனைக் கொண்டு தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும் கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும் வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும் தங்கள் நகரில் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர் களின் மூன்று நகரங்களும் ஒளியுடன் பிரகாசித்தன. ஆயினும் அவை அந்தரத்தில் விரைந்து பறக்கும் போது பல ஜீவராசிகள் அழிந்தன நட்சத்திரங்கள் உதிர்ந்தன. பூமி சொர்க்கம் முதலியவற்றில் இந்த நகரங்கள் நிலைபெறும் போது தேவர்கள் மனிதர்கள் முனிவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளடைவில் அசுரர்கள் தங்கள் பிறவிக் குணத்தை காட்டத் தொடங்கினர். அவர்கள் தங்கள் சக்தியை பயன்படுத்தி தேவர்கள் முனிவர்கள் மனிதர்களுக்கு துன்பங்களை இழைத்தனர். இதனால் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் பிரம்மா விஷ்ணு இருவரிடமும் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவர்கள் தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானை சரணடைந்தனர்.

சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் என்று கூறினார். இதற்கு தேவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி அனைத்து சக்திகளையும் திரட்டி வைதீகத் தேரை உருவாக்கப்பட்டது. அதனை பிரம்மதேவன் ஓட்ட முடிவானது. மேரு மலையை வில்லாக்கி வாசுகி என்ற நாகத்தை நாணாக்கி திருமாலை அம்பின் தண்டாக்கினர். வாயுவை அம்பின் அடிப்பாகமாகவும் அக்னியை அம்பின் நுனிப்பாகமாகவும் செய்தனர். இப்படி சக்தி வாய்ந்த வில் அம்பை தன் கையில் ஏந்திய சிவன் அசுரர்களின் கோட்டையை நோக்கி குறி வைத்தார். அப்போது நம்முடைய பங்களிப்பு இல்லாமல் இது நடக்காது என பிரம்மாவும் விஷ்ணுவும் கர்வம் கொண்டனர். அதை தன் ஞானக் கண்ணால் உணர்ந்த சிவன் சத்தமாக சிரித்தார். அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி எவரது துணையும் இன்றி மூன்று அசுரர்களையும் கோட்டையையும் எரித்து சாம்பலாக்கியது. அசுரர்களும் மாண்டுபோனார்கள். இதைக் கண்ட திருமாலும் பிரம்மனும் தங்கள் கர்வத்தை கைவிட்டனர். இருப்பினும் அவர்கள் செய்த சிவ நிந்தனையால் பாவம் வந்து சேர்ந்தது. அந்த பாவத்தைப் போக்க திருமாலும் பிரம்மாவும் சிவனிடமே வழிகாட்டும்படி வந்து வேண்டி நின்றனர். இருவரையும் பார்த்த சிவன் காவிரிக் கரையில் புன்னாகவனம் எனப்படும் புன்னை மரக்காட்டில் ஒரு மரத்தடியில் லிங்க ரூபமாய் நான் இருக்கிறேன். அங்கு வந்து என்னை பூஜித்து விமோசனம் பெறுங்கள் என்று அருளினார். அதன்படி திருமாலும் பிரம்மனும் இத்தலம் வந்து லிங்கத் திருமேனியைத் தேடினர். அப்போது வேடம் உருவில் வந்த சிவபெருமான் அவர்களை எதிர்கொண்டு புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார்.

பிரம்மனும் விஷ்ணுவும் மீண்டும் ருத்ரமூர்த்தியை வேண்டி தாங்களே லிங்கத்திற்கு பூஜை செய்து காட்டியருள வேண்டும் என்றனர். அதன்படி சிவனே வந்து இத்தல லிங்கத் திருமேனியை பூஜித்து வழிபடுவதற்கான வழியைக் காட்டியருளினார். இப்படி வழி (மார்க்கம்) காட்டி பூஜையையும் உடனிருந்து செய்தமையால் (சகாயம்) மார்க்கசகாயேசுவரர் என்று அழைக்கப்பட்டார். இதையே அழகுத் தமிழில் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல் என்று பெயர் பெற்றார். சிவன் பிரம்மன் திருமால் ஆகிய மூவரும் புண்ணாகீஸ்வரரை பூசித்ததால் இத்தலத்திற்கு மூவரூர் (மூவர் ஊர்) என்று பெயர் வந்தது. அதுவே நாளடைவில் மூவலூர் என்று மாறிப்போனது.

மகிஷாசுரன் என்ற அசுரன் தவம் செய்து பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணத்தால் எந்த ஆண்களாலும் தன் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றான். பின்னர் தேவர்களுக்கும் மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். மகிஷாசுரனை வதம் செய்ய பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்த சிவன் அன்னை பார்வதியிடம் செல்லுமாறு கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும் அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவிமடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம் அழகிய முகமாக மாற மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால் அழகிய முகத்தையும் திருவுருவத்தையும் பெற்றாள். அதோடு மீண்டும் தவம் இயற்றி இறைவனை மணந்தார்.

இக்கோவில் 10 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இத்தலத்தில் 1925 ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம சோழ தேவன் காலம் கிபி1120 மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் கிபி1189 மற்றும் மூன்றாம் ராஜேந்திர சோழன் கிபி 1225 காலக் கல்வெட்டுகளில் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற் காசுகள் இறைவன் இறைவிக்கு வழங்கிய ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறைவன் மூவலூர் உடைய நாயனார் என்று அழைக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் இருக்கிறது.
மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு கிழக்கே திருவிளநகர் துறைகாட்டும் வள்ளல். தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல். மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல். வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் எனப்படும் நான்கு திசை வள்ளல்களில் ஒருவராகவும் இத்தல இறைவன் திகழ்கிறார். இத்தலத்து இறைவனை பிரம்மா விஷ்ணு துர்க்கை சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும் ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர்.

குருவாயூரப்பன்

கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணர் கோவில். மூலவர் உன்னி கிருஷ்ணன். சிறுவனானக இருக்கும் இவருக்கு கண்ணன் உண்ணிக் கண்ணன் (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக் கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் மற்றும் குருவாயூரப்பன் என்று இவருக்கு பல பெயர்கள் உள்ளது. நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் கிருஷ்ணர். மேலிரண்டு கரங்களில் சங்கு சக்கரமும் கீழிரண்டு கரங்களில் கதையும் தாமரையும் கொண்டு துளசி முத்து மாலைகள் கழுத்தில் தவழ கிரீடம் மகர குண்டலம் கேயூரம் கங்கணம் உதர பந்தனம் பூண்டு வலப்பக்க மார்பில் ஸ்ரீவத்ஸம் எனும் சந்தனமும் வைஜயந்தி மாலையும் கௌஸ்துப மணியும் அணிந்து திருக்காட்சி தருகிறார். கருவறைக்கு வடகிழக்கே வருண பகவானால் ஏற்படுத்தப்பட்ட கிணறு அமைந்துள்ளது. இந்த நீர்தான் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பரிவார தேவதைகளுக்கு பூஜை நடப்பது போல் தினமும் இந்த கிணற்றுக்கும் பூஜை நடக்கிறது. இந்தக் கிணற்றில் எந்நாளும் தீர்த்தம் குறைந்ததில்லை. இந்தப் புண்ணிய தீர்த்தத்துக்குள் எண்ணற்ற சாளக்கிராம கற்களும் சிலைகளும் உள்ளன. கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூசை முறைகள் மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி காலம் 1427 ம் ஆண்டு அவர்களால் எழுதி குறிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கு எதிரில் கிருஷ்ண பகவான் மஞ்சுளால் என்ற அரசமர வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசக் கோவில்களில் இக்கோவில் இல்லை என்றாலும் திருமாலை வணங்குபவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வருகிறது இத்திருக்கோயில். கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தரிசனம் கொடுத்துள்ளார் கிருஷ்ணர். இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. குரு பகவானும் வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு + வாயு = குருவாயூர். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இந்த கிருஷ்ணரின் சிலை. இந்த சிலையை கிருஷ்ணரே செய்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது. கோவிலில் கிழக்கு வாசல் மேற்கு வாசல் என்று இரண்டு பிரதான வழிகள் இருந்தாலும் கிழக்கு நோக்கிய வாசல்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் தங்கத் தகடுகள் வேயப்பட்ட 33.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பத்தின் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பம் உள்ளது. இதன் வட்ட அடுக்குகளில் விளக்குகள் ஏற்றப்படும். கருவறையைச் சுற்றி வெளிச்சுவர்களில் மரச் சட்டங்களில் சுமார் 3000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். கொடிக்கம்பத்துக்கு வடமேற்கே கிருஷ்ணனை துவாரகையில் இருந்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்த குரு பகவான் மற்றும் வாயு பகவானின் பலிபீடங்கள் உள்ளன.

கிருஷ்ணர் அவதார காரியம் முடிந்ததும் வைகுந்தம் ஏகுவதற்கு ஆயத்தமானார். அப்போது அவருடைய நண்பரும் சீடருமான உத்தவர் கிருஷ்ணா நீங்கள் இல்லாத உலகைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லையே என்றார். அதற்கு கிருஷ்ணர் உத்தவா அவதார காரியம் பூர்த்தியானது என் இருப்பிடம் திரும்புவதுதானே முறை? என்றார். உடனே உத்தவர் இருந்தாலும் நீங்கள் இல்லாமல் எங்களால் எப்படி இருக்க முடியும்? நாங்கள் என்ன செய்வோம்? என்று கவலையுடன் கிருஷ்ணரிடம் வேண்டினார். கவலையை விடு உத்தவா நான் இல்லாத குறையை இதோ இந்த விக்கிரகம் தீர்த்து வைக்கும் என்று தன்னைத் தானே சிலையாக வடித்த கிருஷ்ணர் இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கொடுத்தார். எனது அவதார முடிவில் ஏழு நாட்களுள் துவாரகையைக் கடலில் மூழ்கி விடும். அப்போது இந்த விக்கிரகம் கடலில் மிதந்து உன்னிடம் வந்து சேரும். அதனை தேவ குரு பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் உத்தவரிடம் கூறினார். கிருஷ்ணர் சொன்னது போலவே அனைத்தும் நடந்தது. வாயு பகவான் புயலாய் மாறினார் மழை கொட்டினார். கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்து உத்தவரிடம் வந்து சேர்ந்தது. அவர் அதனை குரு பகவானிடம் ஒப்படைக்க குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் இவ்விதம் கிருஷ்ணரின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த ஊர் குருவாயூர் என பெயர் பெற்றது.

மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால் பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தார்கள். தற்போது குருவாயூர் கோவில் இருக்கும் இடத்தை பார்த்த இருவரும் இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினர். நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள். இருவரும் பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரசுராமரே இந்த கிருஷ்ணரின் விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். மூவரும் சரியான இடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான் உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து வணங்கி நின்றார்கள். அப்போது சிவபெருமான் இங்கேயே விஸ்வகர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் சேமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார். அதன்படி கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரின் விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தார்கள். கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி மம்மியூர் மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆரம்பித்தார்.

பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து ஜனமேஜயா உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று. குருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். கிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும் அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி ஜனமேஜயா உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகி விடும் என்று கூறினார். நோய் முற்றிலும் நீங்கிய ஜனமேஜயன் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து குருவாயூரப்பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். பின்பு மக்களிடம் உடல் நலம் குன்றியவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடிப் பக்தியுடன் குருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று அறிவித்தார்.

மேப்பத்தூர் ஸ்ரீநாராயண பட்டத்திரிக்கு வந்திருந்த கடுமையான வாத நோயைக் குணப்படுத்தினார் குருவாயூரப்பன். பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. ஒவ்வொரு பாடலையும் எழுதி முடிந்தவுடன் பட்டத்திரி குருவாயூரப்பனிடம் இப்படி லீலை செய்தாயா? என்று கேட்பார். அதற்கு குருவாயூரப்பன் தலை அசைத்துச் சம்மதம் தெரிவிப்பார். ஆலயத்தில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து நாராயணீயம் எழுதினார் நாராயண பட்டத்ரி. அவர் அமர்ந்து எழுதிய இடத்தைப் புனிதமாகக் கருதி அங்கு எவரும் அமர்வதில்லை. நாராயண பட்டத்ரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல்.

பட்டத்ரி: நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனப் பொருள் எது?
குருவாயூரப்பன்: நெய்ப் பாயசம்.
பட்டத்ரி: ஒருவேளை நெய்ப்பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: அவலும் வெல்லமும் போதுமே.
பட்டத்ரி: அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால் என்ன செய்வது?
குருவாயூரப்பன்: வெண்ணெய் வாழைப்பழம் பால் தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு.
பட்டத்ரி: மன்னிக்க வேண்டும் பகவானே இப்போது நீ சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: துளசி இலைகள் அல்லது உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்.
பட்டத்ரி: அதுவும் என்னிடம் இல்லை என்றால்?
குருவாயூரப்பன்: எனக்கு நைவேத்தியம் செய்விக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும். வேறு ஒன்றும் வேண்டாம்.

குருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்ட போது அங்குள்ள மரச்சுவர்கள் தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸன்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். விஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்க ஒரு தூணில் கம்ச வத காட்சியை வடித்திருந்தார் சிற்பி. அந்த தூணை வைக்க தீர்மானித்திருந்து இடத்தில் ஒரு நாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள் என்றான். அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இது வரை வடிக்கவில்லையே என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி திரும்பிப் பார்த்த போது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.

மேல்சாந்தி என்றால் தலைமை குருக்கள் என்று பொருள். முக்கியமான பூஜைகள் அலங்காரங்கள் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்களை செய்பவர் மேல்சாந்தி. இவரைத் தவிர மற்றவர்களுக்கு மூல விக்கிரகத்தைத் தொடும் உரிமை கிடையாது. கோயிலின் மேல்சாந்தி விடியற்காலை இரண்டரை மணிக்கே ஸ்ரீகோயிலின் கருவறைக்குள் நுழைந்து விடுவார். மேலும் உச்சி பூஜை முடியும் 12.30 மணி வரை பொட்டுத் தண்ணீர்கூட அருந்த மாட்டார். அப்படி ஒரு ஆசார முறை இங்கே கடைப் பிடிக்கப்படுகிறது. ஒரு மேல்சாந்தி தொடர்ந்து ஆறு மாத காலமே பணி புரிய வேண்டும். இந்த ஆறு மாத காலமும் குருவாயூர் கோயிலை விட்டு அவர் வெளியே எங்கும் செல்லக்கூடாது. கோவிலின் உள்ளே தங்குவதற்குத் தனி இடம் வழங்கப்படும். இந்த ஆறு மாத காலமும் பிரம்மச்சர்ய விரதம் அவசியம். கீழ்சாந்தி எனப்படுபவர் உதவி அர்ச்சகர். விளக்கு ஏற்றுவது அபிஷேகத்துக்குப் புனித நீர் எடுத்துத் தருவது மலர் மாலைகளை எடுத்துத் தருவது நைவேத்தியம் தயாரிப்பது இவை கீழ்சாந்தியின் வேலை. தந்திரி எனப்படுபவர்கள் வேத மந்திரம் கற்றவர்கள். பூஜைகளைத் தந்திர முறையில் செய்வதால் இவர்கள் தந்திரிகள் ஆனார்கள். பல முக்கியமான நிகழ்வுகளுக்கு ப்ரஸ்னம் பார்த்துத் தீர்மானிப்பது தந்திரிகள்தான்.

குருவாயூரை கிபி 1766 ஆண்டில் மைசூரை சார்ந்த ஹைதர் அலி கோவிலை கைப்பற்றினார். கோவிலை விடுவிக்க அவர் 10000 பானம்ஸ் பணம் அபராதமாக கேட்டார். இந்த அபராதத் தொகை கட்டப்பட்டு மீட்கப்பட்டது. ஆனால் அப்பொழுது நிலவிய சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட அரிசியும் நிறுத்தப்பட்டது. மீண்டும் கிபி 1789 ஆண்டில் திப்பு சுல்தான் சமோரின் நாட்டின் மேல் படையெடுத்தான். கோவிலை அழிவிலிருந்து காப்பாற்ற மூலவர் கிருஷ்ணர் விக்ரஹம் பூமியின் அடியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. கோவிலின் உற்சவர் விக்ரஹம் மல்லிச்சேரி நம்பூதிரி மற்றும் கக்காத் ஒத்திகன் ஆகியோர்களால் அம்பலப்புழை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தான் சிறிய கோவில்களை யாவும் அழித்தான் மேலும் பெரிய கோவிலுக்கும் தீ வைத்தான். ஆனால் இறைவன் அருளால் சரியான வேளையில் மழை பொழிந்து தீ அணைக்கப்பட்டு கோவில் காப்பாற்றப்பட்டது. திப்பு சுல்தான் கிபி 1792 ஆம் ஆண்டில் நடந்த ஆங்கிலேயர்கள் மற்றும் சமொரினுக்கு எதிரான போரில் தோல்வி அடைந்தான். ஆகையால் செப்டம்பர் 17 ம் தேதி 1792 அன்று உற்சவ மூர்த்தி திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. உள்ளநாடு பணிக்கர்மார்கள் 1825 முதல் 1900 வரை சுமார் 75 வருடங்களுக்கு கோவிலை பாதுகாத்து வந்தார்கள். செம்பகேசரி நம்பூதிரி மற்றும் தேஷவர்மன் நம்பூதிரி போலவே பணிக்கர்மார்களும் தமது அனைத்து உடமைகளையும் சொத்து மற்றும் சேவைகள் புரிவது அனைத்தையும் கோவிலுக்கே அற்பணித்தார்கள். அப்படியாக அவர்களுடைய உதவியுடன் நித்ய பூஜைகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் உற்சவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 1859 முதல் 1892 வரை சிற்றம்பலம் விளக்குமடம் கூத்தம்பலம் மற்றும் சாஸ்தா ஆலயம் போன்றவை புதுப்பிக்கப்பட்டு அதன் கூரைகளை செம்பு தகடுகளால் மாற்றியமைக்கப்பெற்றன. 1900 ஆம் ஆண்டில் கொந்தி மேனன் என்ற அதிகாரி கோவிலில் சடங்குகள் மற்றும் வணங்குவதற்கான புராண நியம நிஷ்டைகளை ஏற்பாடு செய்து அதை நன்கு செய்வதற்கும் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர் கோவிலுக்கான பெரிய மணியை கட்ட ஏற்பாடுகள் செய்தார் மேலும் கூலக் களஞ்சியம் என அறியப்படும் சேமிப்பு கிடங்கை புதுப்பித்தார். 1928 ஆம் ஆண்டில் குருவாயூர் கோவிலின் நிர்வாகம் மீண்டும் சமோரின் குடும்பத்தினரிடம் மாற்றப்பட்டது. கொடிக்கம்பம் 1952 ஆம் ஆண்டில் தங்கத்தால் போர்த்தப்பட்டது.

ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பட்டத்திரி குருவாயூரப்பனைப் பற்றி எழுதிய 1036 பாடல்கள் கொண்ட ஸ்ரீநாராயணீயம் கிருஷ்ணரின் லீலைகளை மிகச் சிறப்பாக விளக்குகிறது. பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை நூல் குருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் குருபாவன புர மகாத்மியம் என்ற பகுதியில் குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது. ஞானிகளான மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி பக்த சிரோன்மணி வாசுதேவன் நம்பூதிரி போன்றோர் குருவாயூரப்பனை மகா விஷ்ணுவாக வழிபட்டனர். பூந்தானம் வில்வமங்களன் மானதேவன் குரூர் அம்மையார் ஆகியோர் பாலகிருஷ்ணனாக வழிபட்டனர். 14 ஆம் நூற்றாண்டின் கோகசந்தேசம் என்ற தமிழ் வரலாற்று படைப்பில் குருவாயூரைப் பற்றிய வரலாற்று செய்திகள் உள்ளது.

ஸ்ரீ யந்திர ஆலயம்

ஸ்ரீ யந்திர ஆலயம்

மத்திய பிரதேசம் அமர்கண்டக் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோயிலின் நுழைவாயிலில் 4 தலைகளைக் கொண்ட பிரமாண்டமான சிற்பம் உள்ளது. இந்த 4 தலைகளும் லட்சுமி சரஸ்வதி காளி புவனேஸ்வரி தேவியின் முகங்களைக் குறிக்கின்றன. இவர்களுக்கு கீழே 64 யோகினிகளின் நேர்த்தியான சிற்பங்களும் விநாயகர் மற்றும் முருகனின் சிற்பங்களும் உள்ளன.

குருவாயூரப்பன் அருள்

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஊர் ஒரே நாமம் மூன்று ஆலயங்கள்

ஒரு ஊர் ஒரே நாமம் மூன்று ஆலயங்கள்

கீழச்செவல் கிராமத்திற்கும் சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி சித்தர் காட்டில் உள்ளது. இங்கு அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழையால் தாமிரபரணி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத் சித்தர் காடு பகுதி நீருக்குள் மூழ்கியது. அப்போது கரையில் இருந்த சித்தீஸ்வரமுடையார் என்ற அங்குண்டீஸ்வரர் கோவில் மணலில் புதைந்தது. அந்த இடத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக சுத்தமல்லி பகுதியில் இருந்த தாமிரபரணி தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து அங்கு மணல் அள்ளப்பட்டதால் சுமார் 8 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த சித்தீஸ்வரர் கோவில் 2013 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென்பட்டது. அந்த பகுதி மக்கள் அடியார்களின் நடவடிக்கையால் மணல் குவியல் அகற்றப்பட்டு ஆலயத்தின் முழு வடிவமும் வெளியே தெரிந்தது. ஆலயத்தின் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த நிலை எப்போதுமே கயிலாய மலையில் சிவன் குளிர்ச்சியாக இருப்பது போலவே விளங்குகிறது. இங்கு அம்பாள் இல்லை. ஆற்றில் வெள்ளத்தில் சிலை அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது சுவாமிக்கு மட்டும் தினமும் பூஜை நடக்கிறது. தாமிரபரணி ஆற்றின் உள்ளே இருக்கும் சிவாலயம் ஆதி தலம் ஆகும். இந்த ஆலயம் தண்ணீருக்குள் மூழ்கிய வேளையில் தென் புறத்தில் ஒரு ஆலயம் அமைத்து சிவனை பூஜித்து வந்துள்ளார்கள். அந்த ஆலயம் தற்போதும் உள்ளது. அதே போல் கந்தர்வன் வழிபட்ட ஆலயம் வடகரையில் உள்ளது. ஒரே இடத்தில் ஆற்றின் நடுவிலும் ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கிறது.

கோமதி அம்பாள் சமேத என்ற அங்குண்டீசுரமுடைய நயினார் ஆலயம் தாமிரபரணி ஆற்றங் கரையில் கீழச்செவல் கிராமத்திற்கும் சுத்தமல்லி கிராமத்திற்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதி சித்தர் காட்டில் உள்ளது. இறைவனுக்கு கந்தவேஸ்வரர் சித்தீஸ்வரர் அங்குண்டீஸ்வரர் என்ற பெயரும் உள்ளது. பரசுராமர் பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. சித்தபுரி வேதபுரி ரிஷிபுரி சித்தர்காடு சித்தவல்லி சித்தமல்லி சுத்தமல்லி என்று பல பெயர்களைக் கொண்டது இந்த இடம். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலத்தில் பல சித்தர்கள் முனிவர்கள் தேவர்கள் வழிபட்டுள்ளார்கள். பதினெண் சித்தர்களும் இதற்கு முன் வாழ்ந்த ஸ்ரீசந்தானு மகானு பாவுலு சித்தரும் தங்களது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாக சித்தீஸ்வரரை வணங்கி அந்த சக்தி முழுவதையும் இந்த ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இந்த இறைவன் ஆதி மருந்தீஸ்வரர் என்ற பெயரும் கொண்டுள்ளார். தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு சித்தீஸ்வரரை தரிசிக்க வந்தார். சுத்தமல்லியில் உள்ள தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்றபடியே சிவனை பார்த்தார். இறைவனோ வெள்ளத்துக்குள் மூழ்கி இருக்கிறார். தவணை தீர்த்தக் கட்டத்தில் நின்று கொண்டு நான் உம்மை எப்படி வழிபடுவது? என வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. வடகரையில் கந்தர்வன் அமைத்த ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கி செல். அங்கு (தாமிரபரணி நதிக்குள்) நான் உண்டெனில் இங்கும் (வடகரையில்) நான் உண்டு என்று அந்த அசரீரி சொன்னது. எனவே தான் வடகரையில் உள்ள சிவனும் அங்குண்டீஸ்ரமுடையார் என பெயர் பெற்றார்.

கந்தர்வன் ஒருவன் துர்வாசரின் சாபத்தால் நாரையாக மாறினான். தனக்கு சுய உருவம் கிடைக்க சிவபெருமானை நினைத்து தவம் செய்தான். அசையாமல் சமாதி நிலைக்கு சென்றான். பிரம்மா மலை மேல் இருந்து கசாலிகா தேவியை நதியாக ஓடிவரச் செய்தார். அந்த நதி சமாதி நிலையில் இருந்த கந்தர்வனை வெகு தூரம் அடித்து வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் விட்டது. கந்தர்வன் கண் விழித்த போது ரிஷி பத்தினியான அக்னிசிகாவின் ஆசிரமம் தென்பட்டது. ரிஷிபத்தினி கற்கள் நிறைந்த ஒரு கலசத்தை கந்தர்வனிடம் கொடுத்தார். அதை வைத்து அவன் பூஜித்து வந்தான். சில நாட்களில் கலசத்தில் இருந்த கற்கள் அனைத்தும் சேர்ந்து சிவலிங்கமாக மாறியது. அதை பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி அங்கே பிரதிஷ்டை செய்து வணங்கினான் கந்தர்வன். அப்போது ஈசன் சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் தோன்றி காட்சி தந்தார். அந்த இறைவன் கந்தவேஸ்வரர் என்று பெயர் பெற்றார். கந்தர்வன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான். ஆனாலும் வருடம் தோறும் மீன ராசி பரணி நட்சத்திரம் அன்று தேவர்கள் புடைசூழ இங்கு வந்து சிவபூஜை செய்கிறான்.

ஒரு சமயம் சரஸ்வதி தேவிக்கு துர்வாச முனிவரால் சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க பிரம்மனுடன் சரஸ்வதி தேவி சித்தர் காட்டிற்கு தவம் செய்ய வந்தாள். அவள் பூஜிப்பதற்காக மாணிக்க லிங்கம் ஒன்றை தேவ சிற்பியான விஸ்வகர்மா வடிவமைத்தார். சித்தர் காட்டில் உருவான அந்த லிங்கத்திற்கு சித்தீஸ்வரர் என்று பெயர். ஆரம்ப காலத்தில் இந்த ஈசனை அகத்தியர் வழிபட்டு வந்துள்ளார். அவர் உலகை சமன் செய்ய பொதிகை மலை வந்தார். அங்கு கயிலை நாதனான சிவபெருமானை வணங்க ஆவலாய் இருந்தார். ஒவ்வொரு நாளும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து நின்றபடி ஈசனே நான் உம்மை கயிலாய மலையில் உள்ள படியே பூஜிக்க வேண்டும் என்று வேண்டினார். அப்போது சரஸ்வதிதேவி பூஜை செய்த இறைவன் அகத்தியருக்கு காட்சியளித்தார். உடனே அகத்தியர் இறைவா தாங்கள் கயிலாயநாதர். பனி படர்ந்த மலையில் குளர்ச்சியாக வாழ்பவர். இங்கேயும் அதே போல் நீங்கள் தான் தோன்றினீர்களா? என்று கேட்டார். அப்போது அங்கும் நான் உண்டு இங்கும் நான் உண்டு ஒரு அசரீரி வாக்கு கேட்டது. எனவே இந்த இறைவனுக்கு அங்குண்டீஸ்வரர் என்று அகத்தியர் பெயரிட்டு வணங்கினார்.

ஹயக்ரீவரின் சாபத்தால் குதிரை முகம் கொண்ட பெண் இக்கோவிலில் வழிபட்டு சாப விமோசனமும் ஞானமும் பெற்றதால் குரு சாப நிவர்த்தி தலமாகவும் இது திகழ்கிறது. இந்த ஆலயம் திருநெல்வேலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாளையங் கோட்டை சேரன் மகாதேவி சாலையில் மேலச்செவல் என்னும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நயினார் குளம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரின் தாமிர பரணி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் உள்ளது.

சாயா சோமேஸ்வரர் ஆலயம்

மூலவர் சோமேஸ்வரர் லிங்க வடிவில் இருக்கிறார். இங்கு மூன்று கருவறைகள் ஃ வடிவில் அமைந்துள்ளன. சிவன் விஷ்ணு சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இக்கோவிலின் மூன்று கருவறைகளில் ஒன்றுக்கு பிரம்ம கருவறை என்றும் மீதி இரண்டுக்கு லங்க கருவறை என்றும் பெயர் என்று கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது. பிரதான கோவிலில் உள்ள சோமேஸ்வரர் லிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் இருப்பதால் இந்த கோவிலுக்கு சாயா சோமேஸ்வரர் கோயில் என்று பெயர் வந்தது. சாயா என்பது நிழலை குறிக்கும். இந்த கோயிலுக்கு எதிரில் ரங்க மண்டபம் என்ற அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தூண்களை கொண்ட ஆச்சர்யமான சிற்ப வேலைப் பாடுகள் உள்ளன. இது நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைந்துள்ளது. இது திரிகூடலாயம் (மூன்று சன்னதி வளாகம்) என்று அழைக்கப்படுகிறது. மூன்று ஆலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம் இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது. இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. சாயா என்பதற்கு நிழல் என்று பொருள். அதன் படியே சூரியனுக்கான சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை.

அறிவியலின் படி எந்த ஒரு பொருளின் மீது சூரிய ஒளி பட்டாலும் அந்த பொருளின் நிழல் அதற்கு முன்பு விழும் பின் சூரியன் நகர நகர அந்த நிழலும் நகரும். ஆனால் இந்த கோயிலில் லிங்க கருவறையில் லிங்கத்தின் பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. ஆனால் காலையில் எந்த இடத்தில் இந்த நிழல் இருந்ததோ சூரியன் மறையும் வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த நிழல் சூரியனின் நகர்விற்கேற்ப நகர்வதில்லை. இந்த கருவறைக்கு முன் நான்கு தூண்கள் உள்ளன இதில் எந்த தூணின் நிழல் கருவறைக்குள் விழுகிறது என்றும் தெரியவில்லை. எந்த தூணின் பின் நின்றாலும் நம் நிழல் விழாமல் தூணின் நிழலே விழுகிறது. ஆனால் பிரம்ம கருவறைக்கு முன் நின்று பார்த்தால் பிரம்மனுக்கு நான்கு தலை என்பதை சொல்லும் விதமாக நம் நிழல் நான்காக விழுகிறது அதுவும் எதிர் திசையில் விழுகிறது. இது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

கோவிலின் கிழக்கே வற்றாத திருக்குளம் உள்ளது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும் தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியபடி சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு சூரியன் நந்திகள் அம்பாள் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பின் சிதைவால் அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கருவறை முன்புறம் விநாயகர் முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார். சிவன் விஷ்ணு சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம் ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் விநாயகர் குமாரசுவாமி சாயா சோமேஸ்வரர் மகாவிஷ்ணு சூரியன் யோகினி மாதா நடராஜர் பைரவர் காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தல மரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றி உள்ளார்.

கோவில் ஆலய வளாகத்தில் 7 நந்திகள் முகலாயர்களால் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றன. அதில் முதல் நந்தியை கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால் உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று இருக்கும். இது முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயில் முக்கோன வடிவிலும் கருவறை விமானம் பிரமிடு அமைப்பிலும் கட்டப்பட்டு உள்ளது. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்களும் குண்டூரு சோழர்களும் காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது. ஐதராபாத்திலிருந்து 100 கிமீ தொலைவில் தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா அருகில் அமைந்துள்ளது சாயா சோமேஸ்வரர் கோயில். பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில்.

சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாண்டவர் மலை பைரவேசுவரர்

கர்நாடகாவில் சக்லேஷ்பூர் அருகே உள்ள மேகனகட்டேவில் உள்ள பைரவேஸ்வரா கோவில் பழமையான கோவில். இந்த கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று புராண கதைகள் கூறுகின்றன. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் விளிம்பில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கெம்புஹோல் மற்றும் குமாரதாரா என்ற இரண்டு ஆறுகள் இங்கிருந்து தோன்றுகின்றன. இரண்டு ஆறுகளும் நேத்ராவதி ஆற்றில் இணைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் மலை மீது உள்ள மலை என பல மலைகளால் சூழப்பட்டுள்ளது 2.5 கிமீ மலையேற்றம் மூலம் கோயிலை அடையலாம். வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதம் அபிஷேக பூஜை செய்யப்படுகிறது. அப்போது அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு கூடுகிறார்கள். துரியோதனனுடனான பகடை விளையாட்டில் தோற்ற பிறகு பாண்டவர்கள் 12 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டனர்.
தலை மறைவாக வாழும் அங்ஞாதவாசத்தில் ஒரு வருடம் வாழ்ந்தார்கள். அந்த இறுதி ஆண்டில் பாண்டவர்கள் இங்கு சில காலம் தங்கியிருந்தார்கள். அப்போது சிவபெருமானை வழிபடுவதற்காக இங்கு ஒரு கோவிலைக் கட்டினார்கள். இந்த கோவிலை சுற்றிலும் இருள் சூழ்ந்ததும் காட்டு விலங்குகள் இங்கு சுற்றித் திரிகின்றன. ஆகையால் கோவிலில் வழிபட செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதிசங்கரர் இங்கு வழிபட்டிருக்கிறார்.