ஆயிரம் காளியம்மன்

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தன்நாடு செழிக்கவும் மக்கள் நலமாக இருக்கவும் என்ன வழி என்று சான்றோர்களையும் சாஸ்திர வல்லுநர்களையும் கேட்டான். அன்னை காளி தேவிக்கு ஓர் ஆலயம் அமைத்து தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும். ஒரு நாள் பூ வைத்தால் அடுத்த நாள் பழம். அதற்கு மறு நாள் பலகாரம் இப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டும். ஒரு நாள் வைத்து அதே பொருள் அடுத்த நாள் கூடாது. இப்படி தொடர்ந்து பூஜித்தால் அம்பிகை மனம் இரங்குவாள். நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும். அவர்கள் சொன்னார்கள். அப்படியே அரசன் ஐந்து ஆண்டுகள் பொறுமையாக வழிப்பட்டான். அதற்கு அடுத்த நாள் பூஜைக்கான நேரம் நெருங்கியது. அவசர அவசரமாக ஓடி வந்தார் மந்திரி. மன்னா நேற்று வரை விதவிதமான பொருட்களை காணிக்கையாக வைத்து விட்டோம். ஆனால் இன்று எதை வைத்து பூஜை செய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் முன்பு வைத்த பொருட்களாகவே இருக்கின்றன. பதட்டாமாக அவர் சொன்னது அரண்மனை முழுக்க எதிரொலித்தது. அது நகரம் நாடு என பரவி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறார் மன்னர் என்று எல்லோரும் பதைபதைத்தார்கள். செய்யத் தவறினால் தெய்வ குற்றம் வந்துவிடுமே என்று தவித்தார் அரசர்.

அரசன் முன்னிலையில் மொத்தம் ஆயிரம் பேர் வந்தார்கள். வந்தவர்களில் தலைவர் சொன்னான். வேந்தே கவலைப்பட வேண்டாம். நானும் எங்கள் இனத்தவருமாக மொத்தம் ஆயிரம் பேர் இதோ வந்திருக்கிறோம். எங்களையே காளி தேவிக்கு காணிக்கையாக அர்பணித்து பூஜைசெய்யுங்கள். சிலிர்த்துபோனான் அரசன். பரவசபட்டார்கள் ஊர்மக்கள். நாட்டுக்காக இப்படி ஓர் அர்ப்பணிப்பா ஆச்சரியப்பட்டார்கள். பூஜையை ஆரம்பித்தான் மன்னன். ஆயிரம் பேரும் தயாராக வந்து அம்மன் முன் நின்றார்கள். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. மன்னா உன் வேண்டுதலை ஏற்றேன். உன் நாடு இனி எந்த பஞ்சமும் இல்லாமல் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை உன் இறுதிகாலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு அசரீரியாக அம்மன் வாக்கு வந்தது.

நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்நாள் நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடிவினை அழகான பேழையில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனை சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி உள்ளே ஆனந்தமாக உறங்கியபடி வந்த காளி தங்களையே காணிக்கையாக தர முன் வந்த மக்கள் வசிக்கும் இடத்திற்கு வந்ததும் விழித்தாள். இனத்தவரின் தலைவர் கனவில் தோன்றினால் காளிதேவி. பெட்டிக்குள் தான் இருப்பதை சொன்னாள். உடனே அனைவரும் ஓடினார்கள். அனைவரும் உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வந்தார்கள். என் மக்கள் என்று சொன்ன தாயை தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர்களுடன் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கோயில் கட்டினார்கள். பெட்டியை வைத்து திறக்க போனார்கள். இப்போதும் அசரீரி வாக்காக அம்மன் பேசினாள். ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின் நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னை தொடர்ந்து பூஜிக்கட்டும். அதே சமயம் இங்கே வந்து என்னை யார் வழிப்படாலும் அவர்கள் வேண்டுவன யாவும் கிடைக்கும் என்று அசரீரீயாக கூறினாள். ஐந்து வருடங்கள் கழித்து பேழையைத் திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பைக் கொண்டு அன்னைக்குத் தினமும் பூஜை செய்யும் முறையையும் அன்னைக்குப் படைக்கும் பொருட்கள் ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு பூஜைகளை நடத்தினர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து அதன்படி தற்போது பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

பூஜை செய்து பேழையில் வைக்கப்படும் அம்மன் ஐந்து ஆண்டுகள் கழித்து திறக்கும் போது மஞ்சள் பூச்சி பிடிக்காமல் இருப்பதும் எலுமிச்சை கெடாமல் இருக்கிறது. காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் இருக்கிறது ஆயிரம் காளியம்மன் ஆலயம்.

மிகப்பெரிய அனந்தசயன பெருமாள்

வைணவ ஆலயங்களில் மகாவிஷ்ணுவை நின்ற இருந்த கிடந்த கோலங்களில் நாம் தரிசிக்கலாம். திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களில் 24 தலங்களில் 10 வகையான சயனக் கோலத்திலேயே மகாவிஷ்ணு சேவை சாதிக்கிறார். இத்தகைய சயனங்களில்

  1. ஜல சயனம் என்னும் அனந்த சயனம்
  2. தல சயனம்
  3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
  4. உத்தியோக சயனம்
  5. வீர சயனம்
  6. போக சயனம்
  7. தர்ப்ப சயனம்
  8. பத்ர சயனம்
  9. மாணிக்க சயனம்
  10. உத்தான சயனம் என்று 10 வகைக் கோலங்களில் தரிசனம் கொடுக்கின்றார்.

ஒடிஷா மாநிலத்தில் தென்கானல் மாவட்டத்தில் பிராமணி ஆற்றங்கரையில் சாரங்கா என்ற இடத்தில் 51 அடி நீளம், 23 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்ட மிகப்பெரிய வடிவில் அனந்தசயனக் கோலத்தில் பெருமாள் ஆற்றைத் தொட்டவாறு சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்கும் வகையில் அருள்பாலிக்கிறார். வெட்ட வெளியில் பாறையில் பிரமாண்டமாக அந்த மூர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளார். கோயில் அமைப்பு ஏதும் இன்றி வெட்ட வெளியில் சயனித்திருக்கும் இந்த மூர்த்தியின் பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன் இருகரங்களில் கதையும் தாமரை மலரும் காணப்படுகின்றன. ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க அனந்தசயன மூர்த்தி சயனித்த நிலையில் முன் இடக்கையை இடது தொடை மீது வைத்து பின் இடக்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். வலக்கரங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. வலக்காலை இடக்காலின் மீது மடித்து வைத்திருக்கிறார். அனந்த சயனம் என்பது மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பாற்கடலில் பள்ளி கொண்ட காட்சியைக் காட்டுவதாகும். இவர் 8 முதல் 9 ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவராக இருக்கலாம் என்று ஆய்வலர்கள் கருதுகிறார்கள்.

மொக்கணீஸ்வரர் ஆலயம்

வியாபாரி ஒருவர் தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை தன் நண்பருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த நண்பர் ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். தன் நண்பர் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த நண்பர் ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி சிவலிங்கம் போல் வடிவமைத்து காட்டுப்பூக்களால் அலங்கரித்து ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது. வியாபாரி எழுந்ததும் மாமா நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். உங்கள் பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள் என்றார். எங்கும் சிவமயம் என்று மகிழ்ந்த வியாபாரியும் தன் நண்பர் காட்டிய சிவலிங்கத்தை தரிசித்து பின் சாப்பிட்டார்.

அப்போது நண்பா சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக ஒரு சாக்குப்பையில் மண் நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும் என்றார். என்ன சொல்கிறீர்கள் நண்பரே நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன் என்றார் உறுதியாக. சாக்குப்பையில் மண்ணை போட்டு நட்டு வைத்தது நான் தான் என்ற நண்பர் அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட நண்பர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவரும் சிவபக்தரானார். இந்த லிங்கத்தின் பெருமையை மாணிக்கவாசகர் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி என்று தனது பாடலில் போற்றுகிறார்.

மூலவர் மொக்கணீஸ்வரர். அம்பாள் மீனாட்சி. தலமரம் வில்வம். மிகச்சிறிய கோயில். அம்பாள் மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். கொள்ளு வைக்கும் சாக்குபைக்கு மொக்கணி என்ற பெயர் உண்டு. எனவே சிவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில்

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷமலை அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே கருடனின் வெள்ளித்தூண் உள்ளது. அந்தத் தூணில் கருடன் பொறிக்கப்பட்டுள்ளார். முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் குக்கி சுப்ரமண்யா என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகாரத்தின் ஈசான மூலையில் உள்ளார். கந்தபுராணத்தில் தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் குமாரதாரா நதி ஓடுகிறது. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின் தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.

புராணக்கதைப்படி தாருகாசூரன் சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்ற பின்பு சுப்ரமணியசுவாமி வினாயகருடன் இக்குமாரமலையில் தங்கினார். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்ரமணியசுவாமியை வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை சுப்ரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற சுப்ர மணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம் குமாரமலையில் நடந்தது. பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனாவுடன் சுப்ரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

காசியப முனிவரின் மனைவியரான கத்ரு வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில் யாருடைய கருத்து சரியானதோ அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில் கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும் அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன் நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான் என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன் குக்குட த்வஜ கந்தஸ்வாமி என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் பல யுகம் கண்ட கோயிலாகும்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் மங்களுரிலிருந்து 105 கி.மீ. தூரத்திலும் பெங்களூரிலிருந்து 317 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பெங்களூர் – மங்களூர் ரயில்வண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் குக்கே சுப்ரமணியசுவாமி கோயிலை அடையலாம்.

ஊதியூர் மலை

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை ஊதியூர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார். இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது. இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது. வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும். இந்தக் குகையிலிருந்து பழநி அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்தது. கொங்கணர் தங்கம் பதுக்கி வைத்தருக்குன்றார் என்ற மக்களின் தேடுதலால் மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டு விட்டது. கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனவர் என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலையை காட்டுக்குள் வீசிவிட்டனர். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போனது. பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் அதே சிலையை காட்டில் இருந்து கொண்டு வந்து பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மலையில் சித்தரால் உபயோகிக்கப்பட்ட மண் குழல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாழ்பட்டன. அதனால் சித்தர் உலாவிய அந்த இடங்கள் தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர் முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம். அதற்கும் சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது. பொன்னுருக்கி சித்துகளைச் செய்த கொங்கணவர் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் தாமே சுயம்புவாக ஊதி மலையில் காட்சியளிக்கிறார். இம்மலையின் புராணபெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும். வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர். மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன. இம்மலையிலேயே கொங்கண சித்தருக்கும் தனிக்கோயில் உள்ளது. அருணகிரிநாதர் முருகபெருமானை தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. முருகனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவையின் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

கோவிலின் முதலில் பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது, அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம். 156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார். புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும் கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும் அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.

இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது. அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது. இங்கு கொங்கண சித்தர் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார். சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என்றும் மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார். கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்றார். திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் கோவிலில் உள்ள வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை, கால்களில் வெட்டினான். இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே வெட்டுப்பட்டு இறப்பாய். எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்தார்கள். அதுபோலவே திப்புசுல்தான் இறந்தார். இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார்.

பாதாள புவனேஷ்வர்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்த அவர் குளிப்பதற்காக வைத்துயிருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது அந்த உருவத்தை தனது பிள்ளையாக பாவித்த பார்வதிதேவி எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்ககூடாது என்று பிள்ளையாருக்கு சொல்லி விட்டு நீராட சென்றுவிட்டார். அந்த சமயம் சிவன் பார்வதியை பார்க்க அங்கு வந்தார். உள்ளே செல்ல முயற்ச்சிக்கும் போது சிவனை விநாயகர் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை தனது சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி நடந்து முடிந்தவற்றைக்கண்டு மனம் வருந்தினாள். இதைப்பார்த்த சிவபெருமான் பிரம்மனை அழைத்து விநாயகர் தலை இல்லாத உடம்பில் பொருத்துவதற்காக தலையை கொண்டு வரச்சொன்னார். அவர் வெளியில் செல்லும்போது எதிரே வந்த ஒரு யானையின் தலையை வெட்டிக்கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார். சிவபெருமான் விநாயகர் உடல் மேல் வைத்த யானை தலையை எட்டு இதழ்தாமரை மூலம் தண்ணீர் தெளித்து உயிர்பெறச்செய்தார். வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் இந்த குகையில் அப்படியே இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குமாஊன் என்ற இடத்தில் உயர்ந்த மலை சுற்றிலும் பாய்ந்தோடி செல்லும் நதி அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலையில் பாதாள புவனேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் அருள்புரியும் இடம் சுண்ணாம்பு குகை ஆகும். இந்த குகை 100 அடி ஆழமும் 160 அடிநீளமும் கொண்டது. பாதாள புவனேஸ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் பாரி ஜாதப்பூ மேலே இருக்கிறது. அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த நீர் துண்டிக்கப்பட்ட வினாயகர் தலை மேல் விழுகிறது. இந்த குகைகோயில் இந்தியதொல்பொருள் ஆய்வுமையத்தால் பாதுகாக்கப்படுகிறது. பாதாள புவனேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறுகலான குகையின் வாயில் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்கவேண்டும். அனைவரும் ஆக்சிஜனை வைத்துக்கொண்டு தான் குகைக்குள் சென்று பார்க்கமுடியும். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள். இந்தக்குகையில் சிவபெருமானுடன் 33 கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிக்கிறார்.

திரேதா யுகத்தில் ரித்தூபர்ணன் என்ற மன்னன் முதலில் பாதாள புவனேஸ்வர் குகைக்கோயிலை கண்டுபிடித்து வழிபட்டார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார் ஆதிசேஷன் ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச்சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்கவைக்கும் காட்சியைக் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபாரயுகத்தின் போது பாண்டவர்கள் சிவபெருமானை இங்கு பிராத்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்தகுகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும் அதில் இரண்டு கதவுகள் சென்ற யுகத்தில் மூடப்பட்டு விட்டதாகவும் கந்த புராணத்தில் குறிப்பு உள்ளது. படிகளின் நடுவே நரசிம்மனின் உருவம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கிழே இறங்கியவுடன் முதலில் இருப்பவர் ஆதிஷேசன். பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி கொடுக்கிறார். அதைதாண்டி ஒரு யாககுண்டம் உள்ளது. இங்கு தான் ஜனமேஜயன் தன் தந்தை பரிசித்தன் மரணத்துக்கு பழி வாங்குவதற்க்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்பயாகம் செய்தான். காலபைரவர் நீண்ட நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளைகுகை கைலாயமலையை சென்று அடைகின்றது என்று புராணங்கள் கூறுகின்றது. அதன் முன்பாக சிவன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஒட்டுடன் காட்சி தருகிறார். சிவன் தன் சடா முடியை அவிழ்த்து விட்டது போல் குகைக்குள் சடாமுடியை போல் மலையின் ஒரு பகுதி தொங்குகிறது. அதிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே பைரவர் முன்னால் முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலே அன்னப்பட்சி தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் காட்சி. கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டுயிருந்தது. இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. அடுத்து கழுத்தில் பாம்புயை சுற்றியப்படி ஜடாமுடியுடன் சிவன். சிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடுவதுபோல் காட்சி கொடுக்கின்றார். மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஜராவதம். குகையின் ஒரு பகுதியில் கலியுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இதன் மேலிருக்கும் கூம்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது லிங்கத்தின் மேலிருக்கும் மலையை எப்பொழுது தொடுகிறதோ அப்பொழுது கலியுகம் முடியும்.

சுருட்டப்பள்ளி கொண்டீஸ்வரர்

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார். திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவபெருமானே இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என மன்றாடினர். தேவர்களும் அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.

சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் திரட்டி சிவனிடம் தந்தார். உடனே சிவன் விஷாபகரண மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்பாள் அமுதாம்பிகை ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி என பெயர் கொண்ட இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும் ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இக்கோவிலில் பார்க்கலாம். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் எனப்படுகிறார். இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில் ஆலகால விஷம் உண்டபின்னர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.

சிவன் பள்ளி கொண்ட நிலையில் அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இக்கோவிலில் உள்ளனர். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி. சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி, பதுமநிதி. என்று அனைவரும் மனைவியருடன் உள்ளனர். மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும் பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும் கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

150 ஆண்டுகளாக முதலை காவல் காக்கும் கோவில்

கேரளத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அனந்தபுரா கோவில் உள்ளது. இக்கோவிலில் வில்வமங்கலம் என்ற முனிவர் இக்கோவிலில் தவம் புரிந்த போது அம்முனிவருக்கு சிறுவன் வடிவில் காட்சி தந்த மஹாவிஷ்ணு இக்கோவிலின் குளத்தையொட்டி உள்ள ஒரு குகையில் சென்று மறைந்தார். அத்தகைய புனிதமான குகைக்குள் மற்ற மனிதர்கள் யாரும் செல்லாதவாறு இறைவனின் கட்டளைப்படி இம்முதலை காவல் காக்கிறது.

இக்கோவிலைச் சுற்றி பச்சைப் பசேல் என்று பாசி படிந்திருக்கும் குளத்தில் இந்தமுதலை வாழ்ந்து வருகிறது. முதலைகள் இயற்கையாகவே மாமிசம் உண்ணும் விலங்காகும். ஆனால் இக்குளத்தில் உள்ள இந்த முதலை இக்குளத்திலுள்ள மீன்களைக்கூட உண்டதில்லை. தினம் இருவேளை பூஜைகள் முடிந்து அரிசியால் செய்யப்பட்ட பிரசாதத்தை இக்கோவிலின் அர்ச்சகர் அக்குளத்தின் ஓரம் வந்து அம்முதலையை பபியா என்று பெயர் கூறி அழைக்கிறார் பிரசாதத்தை முதலை வந்து பெற்றுக்கொள்கிறது. அதுவே அதற்கு உணவு. மேலும் இக்குளத்தில் அவ்வப்போது குளித்து வரும் இக்கோவிலின் அர்ச்சகரையோ பக்தர்களையோ இது வரை இம்முதலை அச்சுறுத்தவோ தாக்கவோ செய்தததில்லை. கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் ஒரு முதலை இறந்து விடுமேயானால் மறு தினமே மற்றொரு முதலை குளத்தில் தென்படும். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் இதுவரை எவரும் கண்டதில்லை. முதலைகள் வாழும் பெரிய ஆறுகளோ சதுப்பு நிலங்களோ இக்கோவிலுக்கு அருகாமையில் ஏதுமில்லாத போது இங்கு இந்த முதலை தோன்றுகிறது. இக்கோவில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருவார்பூ கிருஷ்ணர்

ஒவ்வொருநாளும் கோவில் திறந்திருக்கும் நேரம் 23.58 மணிநேரம். கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்கும். நெய்வேத்தியம் நடந்துகொண்டே இருக்கிறது எனவே 23.58 மணி நேரமும் 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்படுகிறது. கோவில் நடை சாத்திய அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியுடன் தயாராக இருக்கிறார். கிருஷ்ணர் பசியோடு இருப்பார் என்பதால் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையிலேயே கிருஷ்ணர் இக்கோவிலில் மூலவராக இருக்கிறார். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை உலர்த்தியபின் முதலில் நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும். பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும். இந்த கோவில் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை. 2 நிமிடங்கள் மட்டுமே. பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணிக்கு ஆலயத்தை மூடுவதற்கு முன்பு பூசாரி சத்தமாக இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா என கேட்டுவிட்டு தான் நடையை சாத்துவார். 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில் இக்கோயில் அமைந்துள்ளது.