பரசுராமேசுவரர் கோவில்

ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கிபி 7 ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள் சிவபெருமானுக்காக அர்பணித்த கோவில் இது. இக்கோவில் மணற்கற்களால் கட்டப்பட்டதாகும். பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால் இக்கோவிலுக்கு பரசுராமேசுவரர் கோவில் எனப்பெயர் பெற்றது. சகஸ்ரலிங்கம் என்று சொல்லப்படும் ஒரே லிங்க திருமேனியில் செதுக்கப்பட்ட ஆயிரம் சிறு லிங்கங்கள் கொண்ட லிங்கம் கோவிலின் வெளியே உள்ளது. 40.25 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரங்கள் பல விமானங்களுடன் உள்ளது. கோவில் கோபுரத்தில் பிராம்மி மகேசுவரி கௌமாரி நாராயணி வராகி இந்திராணி சாமுண்டி ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. மகிசாசூரனை வதைத்த ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம் உள்ளது. பிள்ளையார் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களுக்கு இடையே சப்தகன்னியர் சிற்பங்கள் உள்ளது. கோவில் சுவர்களில் எட்டு கைகள் கொண்ட நாட்டியமாடும் அர்த்தநாரீஸ்வரர் கங்கா தேவி யமன் மற்றும் யாமியின் சிற்பங்கள் உள்ளது. கோவிலின் தெற்குச் சுவரில் விஷ்ணு இந்திரன் சூரியன் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. கையிலை மலையை தூக்கிய ராவணனுக்கு அருளும் சிவபெருமான் பார்வதி சிற்பம் மற்றும் தாண்டவமாடும் நடராசர் சிற்பங்களும் உள்ளது. கோவில் மண்டபத் தூண்களில் பூக்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. கோவில் கோபுரத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகளின் சிற்பங்கள் உள்ளது. கிபி 11 – 12ம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர்களின் படையினரால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. 1903 இல் இக்கோவில் மறுசீரமைத்துக் கட்டப்பட்டது.

நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் ஆகும். இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலில் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை.

லிங்க வடிவில் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கிமீட்டரும் உடுமலையில் இருந்து 18 கிமீ துாரத்திலுள்ள கொழுமம் ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள் மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசிய போது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும் வலை வீச அந்த கல் வந்து கொண்டே இருந்தது. பயந்து போன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய அம்பாள் ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான் என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார் மீனவர். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடிய போது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இந்த கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து மாரியம்மன் என பெயர் சூட்டி பூஜைகள் விழாக்கள் நடக்க ஆரம்பித்தன.

குதிரையாறும் அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால் கோட்டை மாரி என்றும் பெயர் உள்ளது. குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் குமணன் நகர் என அழைக்கப்பட்டது. இங்கு வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி கொழுமம் என்று ஆனது.

சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் உள்ள தூணில் உள்ள இந்த சிலையின் ஒரு காதில் 0.5 மிமீ விட்டம் கொண்ட மெல்லிய குச்சியை செலுத்தினால் மற்றொரு காது வழியாக குச்சியின் மறுமுனை வெளிவருகிறது.

அனுமன்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் இகத்புரி அருகே திரிங்கல்வாடி கோட்டையின் சுவரில் அனுமான் அருள் பாலிக்கிறார்.

மால்யவந்த ரகுநாதசுவாமி

கர்நாடாக ஹம்பி இந்த இடத்திற்கு ராமர் லட்சுமணன் வந்தபோது ராமருக்கு தாகமாக இருந்தது குடிக்க தண்ணீர் இல்லை. எனவே லட்சுமணன் தனது அம்பால் ஒரு பெரிய பாறாங்கல் மீது ஒரு அம்பு எய்தினான். பாறை 2 ஆக பிளவுபட்டு அந்த பாறையின் நடுப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்தது. அதன் இருபுறமும் பிற்காலத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்து மால்யவந்த ரகுநாதசுவாமி கோவில் கட்டப்பட்டது.

அனுமன்

கர்நாடகா ஹம்பி துங்கபத்திரா நதிக்கரையில் காணப்பட்ட அனுமானின் அழகிய மூர்த்தி. ராமாயண காலத்தில் ஹம்பி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டன. இங்கே தான் ராமர் அனுமான் மற்றும் பிற வானராங்களை சந்தித்து தனது படையை உருவாக்கினார்.

சுயம்பு வேலவன்

வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப் பெருமான் அமர்ந்து நித்யம் சிவபூஜை செய்கிறார். 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவே நட்சத்திர கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மலை மீது உள்ள இக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் 300 உள்ளது.

வேல் விளையாட்டில் வல்லவனான வேலவன் வாழைப் பந்தலில் இருந்து எய்த அம்பு பருவத மலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது. எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரை கண்டீஸ்வரரையும் இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாச நாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார். அதே போல் முருகப்பெருமான் செய்நதியின் வலது கரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி கடலாடி மாம்பாக்கம் மாதிமங்கலம் எலத்தூர் குருவிமலை பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு ஓரந்தவாடி நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு மோட்டுப்பாளையம் பழங்கோயில் மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால் மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன் திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்த வேண்டாம் நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன் சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும் நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன. எனவே நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.

கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் விநாயகர்

திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரச மரத்தடியில் இந்த வினாயகரை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தொடங்கும் போது இவரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து கருப்பு நிறத்தை அடைவார். தை மாதம் தொடங்கும் போது மெல்ல மெல்ல வெண்மையாகத் தொடங்கும். தை முதல் ஆனி வரை உள்ள 6 மாதம் வெள்ளை நிறமாகவும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதம் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். விநாயகரின் நிறம் மாறும் போது இவர் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம் மாறுகிறது. இங்கு ஒரு கிணறும் உள்ளது. இந்த விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.