வேலவன் குறிச்சி கொல்லிமலையின் அடிவாரத்தில் உள்ளது. முருகனின் பெயர்களில் ஒன்று வேலவன். வேல் + அவன் = வேலவன். வேலே அவன்தான். முருகனின் ரூபமே வேல்தான் என்பதை இப்பெயர் குறிக்கும். ஒரு காலத்தில் இந்த கோயில் பழனியப்பர் கோயில் என்றும் கூகை மலை என்றும் அழைக்கப்பட்டது. படைப்புக்குரிய மூல மந்திரமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மாவிடம் முருகப்பெருமான் கேட்டார். பிரம்மாவால் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் பிரம்மாவை தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன் பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது.
மூலவர் பழனியாண்டவர். பழனி மூல விக்ரஹத்தை உருவாக்கிய சித்தரான போகர் பழனி விக்ரஹத்தை உருவாக்குவதற்கு முன்பு கொல்லி மலையின் மூலிகைகளைக் கொண்டு ஒரு முருகரின் மூர்த்தியை உருவாக்கி இங்கு பிரதிஷ்டை செய்தார். எனவே இக்கோயில் பழனியை விட பழமையானது. இதனால் முருகர் பழனி அப்பா என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் நுழைவாயிலில் ஒரு சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் இரண்டு பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயற்சிப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகளுக்குக் கீழே ஒரு பச்சை கல் உள்ளது. மேலும் இந்தக் கல்லில் அமர்ந்து தியானம் செய்பவர் தனது பிரார்த்தனைகளில் நினைத்ததைப் பெறுவார்கள். பழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும் எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. தீர்த்தம் யானைப்பாழி தீர்த்தம். மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை உள்ளது. இதற்கு யானைப்பாழி தீர்த்தம் என்று பெயர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது.
முருகன் வள்ளியைத் துரத்திச் சென்று திருமணம் செய்ய வேட்டைக்காரனின் வடிவத்தில் வரும் இடம் இது. மூலஸ்தானத்தில் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய திசையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தலையில் கொண்டை போல் முடி முடிச்சு போடப்பட்டிருக்கிறது. தலையில் கொன்றை மலர்கள் உள்ளன. அவர் தனது கால்களில் காலணிகளை அணிந்துள்ளார். அவரது இடது கை இடுப்பில் இருந்தாலும் ஒரு சேவல் இருக்கிறது. பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும் அவனை முருகர் சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளார். அவரது வலது கை வஜ்ர வேல் வைத்திருக்கிறார். வேலின் உயரம் மூர்த்தியை விட உயரமாக இருக்கிறது. பௌர்ணமி நாட்களில் நள்ளிரவு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நள்ளிரவு நேரத்தில் சித்தர்கள் இங்கு பூஜைகள் செய்ய வருவதால் இரவு 11:50 மணிக்கு அபிஷேகம் பின் அலங்காரம் முடிந்ததும் சன்னதியின் கதவுகள் மூடப்படுகிறது. அனைத்து பக்தர்களும் வெளியே காத்திருப்பார்கள். சிறிது நேரத்திற்கு பின் நள்ளிரவில் கதவுகள் திறக்கப்படும் போது சித்தர்கள் பூஜை செய்த சான்றுகளாக அலங்காரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இருக்கும். இது இன்றும் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் இறைவனின் மூக்கு கன்னம் மற்றும் மார்பின் நுனியிலிருந்து வியர்வை வெளிப்படுகிறது.
கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கியவர் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவறாக விளங்கினார். இவரது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி என பல இடங்களில் சிவாலயங்களில் கட்டியிருக்கிறார். பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலையும் அவர்தான் கட்டினார். ஔவையார் இங்கு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். ஔவையார் தனது எந்தவொரு பயணத்திற்கும் முன் இங்கு பிரார்த்தனை செய்ததாகக் குறிப்புகள் உள்ளது. இந்த முருகப்பெருதான் மீது அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார். அகத்தியர் பூஜை செய்துள்ளார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.





